சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு இடமளிக்க ஐரோப்பிய நாடுகள் தயக்கம் : கிளம்புகிறது புதுப் பிரச்சினை
சுமார் 1,000 மெட்ரிக் டன் எடை கொண்ட சிரியா நாட்டின் ரசாயன ஆயுதங்களைத் தங்களது நாட்டில் அழிக்க இதுவரை எந்த ஐரோப்பிய யூனியன் நாடுகளும் முன்வரவில்லை.
கடுகு வாயு மற்றும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் சரின் போன்ற ரசாயன வாயுக்கள் நிரம்பிய இந்தக் குவியலைத் தங்கள் நாட்டிற்கு வெளியில் வைத்து அழித்து விடும்படி சிரியா கேட்டுக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை அல்பேனியா இந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் நாடு இத்திட்டத்தை நிறைவேற்ற தகுதியான இடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான பீட்டர் டி கிரேம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது ஒரு சவாலான பணியாகும் என்றும், நீண்ட காலஅவகாசத்திலும் இதனைத் தங்கள் நாட்டில் நிறைவேற்ற இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இந்த ரசாயன ஆயுதங்களை அழிப்பதில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இருக்கும் தயக்கம் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எந்த உறுப்பினர் நாடும் இதுவரை முன்வரவில்லை என்று ஹாலந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரான பிரான்ஸ் டிம்மர்மான்ஸ் தெரிவித்தார்.
அல்பேனியா, பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து ஜெர்மனியும் இந்தத் திட்டத்தைத் தவிர்த்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான கைடோ வெஸ்டர்வெல்லே தங்களது நாட்டின் புவியியல் தொழில்நுட்பக் கூறுகளை கருதி இந்த முடிவை ஏற்பதற்கில்லை என்று அறிவித்து விட்டார்.இதனால் ரசாயன் ஆயுதங்களை வெளியே எடுத்துச் சென்று அழிப்பதற்கு பதிலாக அவை இருக்கும் இடத்திலேயே அழிப்பதற்கு முயற்சி செய்யப்படலாம் என்று டிம்மர்மான்ஸ் ஆலோசனை அளித்தார்.
வரும் 2014 ஆம் ஆண்டின் மத்திக்குள் இந்த ஆயுதங்கள் அழிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஓபிசிடபிள்யு இதுவரை அந்தப் பணியைச் செய்யவிருக்கும் எந்த நாட்டின் பெயரையும் அறிவிக்கவில்லை.
ஆயினும், இந்த நடவடிக்கை எங்கு மேற்கொள்ளப்பட்டாலும், விஷவாயு அழிப்பு குறித்து நோபல் பரிசு பெற்ற ஓபிசிடபிள்யு நிபுணர்கள் குழு அதனை நேரிடையாகக் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment