நான்கு நாட்களாக மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நடிகர் குள்ளமணி : திரும்பியும் பார்க்காத திரையுலகம்
சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகரில், நடிகர் குள்ளமணி, 61, வசித்து வருகிறார். இவர், ஐந்து தினங்களுக்கு முன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மயங்கிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால், ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மதியம், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில், இவரது மனைவி ராணி உடனிருந்து கவனித்து வருகிறார். இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரசிகர்கள் சிலர், நேற்று மருத்துவமனைக்கு வந்து, குள்ளமணியின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். சிலர், பணம் கொடுக்கவும் முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுத்த பணத்தை வாங்க, ராணி மறுத்து விட்டார். அப்போது அவர் கூறியதாவது:
என் கணவர், பல படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையினர் பலருடன் நல்லவிதமாக பழகி உள்ளார். கவலைக்கிடமான நிலையில், நான்கு நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் இதுவரை சினிமா துறையினர் யாரும் வந்து பார்க்கவில்லை. இரண்டு முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு, கண் விழித்து பார்க்கிறார்; கை கால்களை அசைக்கிறார்; ஏதேதோ புலம்புகிறார். நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து, நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் வந்து, என் கணவரை பார்த்தால், ஆறுதலாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment