900 வருடங்கள் பழைமையான கோயில் வழக்கு: கம்போடியாவுக்கு சொந்தமென ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பு
900 வருடங்கள் பழைமையான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமானது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை ஐ.நா உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கியுள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் எல்லையில் இக் கோயில் அமைந்துள்ளது. இதனால் இக்கோயிலுக்காக இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தன.தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் கோயிலைச் சுற்றியிருந்த பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.
இந்நிலையில், இக்கோயிலும் அதனைச் சுற்றியுள்ள குறித்தவொரு பகுதியும் கம்போடிய அரசின் அதிகாரத்துக்குட்பட்டது என ஐ.நா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எனவே கோயிலை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த தாய்லாந்தின் இராணுவம், பொலிஸ், காவற்படை, பாதுகாவலர்கள் அனைவரையும் அங்கிருந்து அகற்ற வேண்டிய கடப்பாட்டினை தாய்லாந்து கொண்டுள்ளது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இவ்விரு நாடுகளுக்குமான புதிய வரைபடம் எதனையும் நீதிமன்றம் அளிக்கவில்லை. தற்போது இத்தீர்ப்பினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்து கம்போடிய வெளிநாட்டு அமைச்சர் நம்ஹொங் கூறுகையில், கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் எமக்கு வழங்கவில்லையென்றாலும் இத்தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சர் சுரபொங் கருத்து வெளியிடுகையில், இத்தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தியளித்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
1962ஆம் ஆண்டில் இக்கோயில் உரிமை தொடர்பாக இவ்விரு நாடுகளும் முட்டிக்கொண்டன. இதன்போது இக்கோயில் கம்போடியாவுக்கு சொந்தம் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் 2008ஆம் ஆண்டில் மீண்டும் இது தொடர்பில் சர்ச்சை தோன்றியது. 2011ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டு 28 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து கம்போடிய அரசு ஐ.நா நீதிமன்றினை நாடியது. இந்நிலையில் அக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தமானது என ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment