Sunday, 17 November 2013

செய்திகள் - 16.11.13

செய்திகள் - 16.11.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் ஒரே பலவீனம், மனிதரின் செபமே

2. புதிய ஆயரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : பொறுப்பிலுள்ள பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் காட்ட வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்களில் நாம் அவரின் கருணையை அனுபவிக்கிறோம்

4. ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செப நாளைக் கடைப்பிடிக்க மனிலா கர்தினால் வேண்டுகோள்

5. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் குடிமக்கள் அனைவரும் ஒன்றித்திருக்க வேண்டும்,இஸ்லாமபாத் ஆயர்

6. இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு மேலும் அதிக நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும், பிரிட்டன் பிரதமர்

7. சாலை விபத்துக்களில் இறப்பவர்களை நினைவுகூரும் உலக நாள் நவம்பர் மூன்றாம் ஞாயிறு

8. இந்தியாவில் சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை

9. ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்த சீன முடிவு



1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் ஒரே பலவீனம், மனிதரின் செபமே

நவ.16,2103. இறைவன் தம் மக்களைப் பாதுகாப்பதில் அஞ்சா நெஞ்சம்கொண்ட போர்வீரனைப் போல் செயல்படுகிறார், அவரது மக்களின் செபம் அவரின் ஒரே பலவீனம் என, இச்சனிக்கிழமையன்று காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம் மக்களை மீட்பதில் ஆண்டவரின் பலம், அவரது மக்கள் செபத்தில் கண்டடையக்கூடிய பலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனக்கு நீதி வேண்டுமென நேர்மையற்ற நடுவனுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த கைம்பெண் பற்றிய உவமையில் இயேசு, மனந்தளராமல் இறைவனிடம் மன்றாட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். இந்த உவமை குறித்த இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இரவும் பகலும் தம்மிடம் மன்றாடும் தேர்ந்துகொண்டவர்களுக்கு இறைவன் நீதி வழங்குகிறார் மற்றும் வழங்குவார் என்று சொன்னார்.
இறைவன் மோசேயை அழைத்தபோது, தம் மக்களின் அழுகுரலைத் தான் கேட்டதாகச் சொன்னார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளைய முதல் வாசகத்திலும் விண்ணகம், அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப் போல் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது, இறைவன் தம் மக்களின் பாதுகாப்புக்காகச் செயல்படும்போது இத்தகைய போர்வீரனைப் போல் செயல்பட்டு தம் மக்களைப் பாதுகாக்கிறார் என்றார்.
நம் ஆண்டவர் தம் மக்களின் செபங்களைக் கேட்கும்போது அவர் தமது இதயத்தில் தாம்  தேர்ந்துகொண்டவர்கள் துன்புறுவதாக உணருகிறார் மற்றும் அவர்களை மிகவும் வல்லமையுள்ள வழியில் காப்பாற்றுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 
இறைவனின் பலம் இவ்வாறு இருக்கும்போது நமது பலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, இந்தக் கைம்பெண் போன்று இறைவனின் இதயத்தை ஒவ்வொரு நாளும் தட்ட வேண்டும், அவரிடம் செபிக்க வேண்டும், அவரிடம் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புதிய ஆயரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : பொறுப்பிலுள்ள பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் காட்ட வேண்டும்

நவ.16,2103. தனது பொறுப்பில் பணிசெய்யும் வத்திக்கான் பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் காட்டுமாறு, பேரருள்திரு Fernando Vérgez Alzaga அவர்களை ஆயராகத் திருநிலைப்படுத்திய திருப்பலி மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆயர் திருநிலைப்பாட்டுத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், புதிய ஆயர் Vérgez Alzaga, கிறிஸ்துவின் பணியை இவ்வுலகில் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வத்திக்கான் பணியாளர்களிடம் உண்மையான அன்பும் கனிவும் கொண்டு அவர்களுக்குத் தந்தையாகவும் சகோதரராகவும் செயல்படுமாறு புதிய ஆயர் Vérgez Alzagaஐக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
உண்மையில், ஆயரின் பணி வழியாக, மீட்பின் செய்தியைத் தொடர்ந்து போதிப்பவரும், விசுவாசத்தின் திருவருள்சாதனங்கள் மூலமாக விசுவாசிகளைத் தூய்மைப்படுத்துபவரும் கிறிஸ்துவே என்றும் திருத்தந்தை இம்மறையுரையில் கூறினார்.
மறைந்த அர்ஜென்டீனா கர்தினால் எத்வார்தோ பிரோனியோ அவர்களுக்கு, தனிப்பட்ட செயலராகவும், உதவியாளராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தாழ்மையுடனும் ஆரவாரமின்றியும் பணியாற்றிய புதிய ஆயர் Vérgez Alzaga அவர்களுக்கு, அகிலத் திருஅவையின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் Vérgez Alzaga, வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகப் பொதுச் செயலராக இவ்வாண்டு ஆகஸ்ட் 30ம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிறிஸ்துவின் சேனைகள் சபையைச் சேர்ந்தவர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் காயங்களில் நாம் அவரின் கருணையை அனுபவிக்கிறோம்

நவ.16,2103. இயேசுவின் கருணையை நாம் அனுபவிக்கும்பொருட்டு அவர் தம்  காயங்களைப் பாதுகாத்து வைக்க ஆவல் கொண்டிருந்தார். இதுவே நமது பலம் மற்றும் நமது நம்பிக்கை என, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன், அரபு உட்பட தினமும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் @Pontifex என்ற தனது டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் கருணையை தனது உரைகளிலும் டுவிட்டரிலும் அடிக்கடி நமக்கு நினைவுபடுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செப நாளைக் கடைப்பிடிக்க மனிலா கர்தினால் வேண்டுகோள் 

நவ.16,2103. பிலிப்பீன்சில் ஹையான் கடும் சூறாவளிப் புயல்காற்றில் இறந்தவர்களால் துயருறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, செபம் மற்றும் உண்ணாநோன்பு நாளைக் கடைப்பிடிக்குமாறு மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தனது மனிலா உயர்மறைமாவட்ட குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர்க்கென கர்தினால் தாக்லே அவர்கள் விடுத்துள்ள செய்தியில், இந்த இயற்கைப் பேரிடரின் பின்விளைவுகளால் துன்புறும் மக்களுடன் ஒன்றித்திருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, தபம், செபம் மற்றும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கும் துக்கம் மற்றும் நம்பிக்கை நாளை அனுசரிக்குமாறு கேட்டுள்ளார்.
மனிலா கர்தினாலின் வேண்டுகோளின்பேரில் அவ்வுயர்மறைமாவட்டத்தில் இச்சனிக்கிழமையன்று செபம் மற்றும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், பிலிப்பீன்சில், இம்மாதம் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாடு தழுவிய நவநாள் செபங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிலிப்பீன்சில் ஹையான் புயலில் ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் குடிமக்கள் அனைவரும் ஒன்றித்திருக்க வேண்டும்,இஸ்லாமபாத் ஆயர்

நவ.16,2103. பயங்கரவாத வன்முறைக்குப் பலியாகிவரும் பாகிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கு குடிமக்கள் அனைவரும் ஒன்றித்திருக்க வேண்டும் மற்றும் நாட்டுக்காகத் தொடர்ந்து செபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் அந்நாட்டின் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி.
பாகிஸ்தான் நாடு, பயங்கரவாத வன்முறைக்குப் பலியாகிவருவதால் நாட்டின் மக்கள் அனைவரும் அரசோடும், நாட்டின் ஆயுதம் தாங்கிய சக்திகளோடும் மிக நெருக்கமாக இருந்து செயல்பட வேண்டுமெனவும் கூறினார் ஆயர் ரூஃபின்.
தனியாள்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வு காவு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், தலிபான்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் பேஷ்வாரில் கடந்த செப்டம்பரில் கிறிஸ்தவர்கள் கொடுல்லப்பட்டுள்ளனர் எனவும் இஸ்லாமபாத் ஆயர் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தாக்குதலில் இம்மாதம் முதல் தேதி, பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் Mashud Hakim Ullah கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும், இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கும் இடையே இடம்பெறுவதாய் இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின்.

ஆதாரம் : AsiaNews

6. இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு மேலும் அதிக நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும், பிரிட்டன் பிரதமர்

நவ.16,2103. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை அரசு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்க வேண்டும் அல்லது இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் விசாரணையை அந்நாடு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன்.
இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியை பார்வையிட்ட பின்னர் இலங்கை அரசுத்தலைவரைச் சந்தித்த கேமரூன் இந்த எச்சரிப்பை முன்வைத்தார்.
போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு இலங்கை அரசு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்காவிடில், இது குறித்து விசாரிப்பதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைக்குமாறு, வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் தான் வலியுறுத்தவிருப்பதாகக் கூறினார் கேமரூன்.
மேலும், ஏறக்குறைய 30 ஆண்டுகள் இடம்பெற்ற போருக்குப் பின்னர் இலங்கையை அதில் இருந்து மீட்டெடுக்க காலம் அவசியம். இலங்கையின் மறுவாழ்வுப் பணிகளுக்கு பிரித்தானிய தனது உதவிகளை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர்.
இதற்கிடையே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. மேலும், இது குறித்து பதில் அளித்துள்ள இலங்கை அமைச்சர் பன்சில் ராஜபக்சே, 'நாங்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும். எந்த விசாரணையையும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை,' என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : BBC         
7. சாலை விபத்துக்களில் இறப்பவர்களை நினைவுகூரும் உலக நாள் நவம்பர் மூன்றாம் ஞாயிறு

நவ.16,2103. 2015ம் ஆண்டுக்குள் மில்லென்யம் வளர்ச்சித் திட்ட இலக்குகளை எட்டுவதற்கு அனைத்துலக சமுதாயம் முயற்சித்துவரும் இவ்வேளையில், வருங்கால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்புகளுக்கு மேலும் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று சாலை விபத்துக்களில் இறப்பவர்களை நினைவுகூரும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களால் உலகில் 12 கோடியே 40 இலட்சம் பேர் இறக்கின்றனர்; மேலும் ஏறக்குறைய 5 கோடிப் பேர் காயமடைகின்றனர்; இவர்களில் சிலர் நிரந்தரமாகவே மாற்றுத்திறனாளிகளாக ஆகிவிடுகின்றனர் என்ற உண்மையை இந்நாளில் அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுனர்கள், இன்னும் சாலைகளைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் பாதுகாப்பான நடைபாதைகளை அமைக்கவும், குடிகார ஓட்டுனர்களையும், அதிவேக ஓட்டுனர்களையும், வாகனம் ஓட்டும்போதே கைபேசிகளைப் பயன்படுத்துவோரையும், வாகனத்தில் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் இத்தகையவர்களைத் தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.
சாலை விளக்குகள், வாகன நிறுத்த விளக்குகள் போன்றவை ஒழுங்குபடுத்தப்படவும் பான் கி மூன் அச்செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு இந்நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் சாலை விபத்துக்களில் தினமும் பலியாகுவோர், காயமடைவோர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இந்நாளில் நினைவுகூரப்படுகின்றனர். அத்துடன், இப்படிப் பலியோகுவோருக்கு உதவும் காவல்துறை, அவசர மருத்துவ வாகனங்கள் மற்றும் மருத்துவத் துறையினரும் இந்நாளில் நன்றியோடு நினைவுகூரப்படுகின்றனர்.
இந்தியாவில் 2011ம் ஆண்டில் மட்டும் 44 இலட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் 9,571 ஆக இருந்த எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 16,175 ஆக அதிகரித்தது.

ஆதாரம் : UN

8. இந்தியாவில் சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை

நவ.16,2103. ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் தடுத்துநிறுத்தக்கூடிய நோய்களால் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான சிறார் இறக்கும்வேளை, சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்று அன்னை தெரேசா சிறார் அமைப்பின் தலைவர் Sajan George Kavinkalath தெரிவித்தார்.
சமூக நீதியின் முதல் பணி சிறாரின் வாழ்வைப் பாதுகாத்தல் என்றுரைத்த Kavinkalath, இளம் பிச்சைக்காரர்கள், நிலையான இருப்பிடமின்றி தெருவில் திரிபவர்கள், கால் ஊனமுற்றோர், திட்டமிட்ட குற்ற நிறுவனங்களுக்கு அடிக்கடி பலியாகுவோர் போன்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதாகவும் கூறினார்.
சமுதாயத்தின் இந்நிலையை தடுப்பதற்கும், சிறாரைப் பாதுகாப்பதற்கும் தவறும் ஒரு சமுதாயம் குற்றவாளியே என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய Kavinkalath, நம் வருங்காலக் கண்ணோட்டம், புதிய தலைமுறைகளுக்கு நாம் கொடுக்கும் அக்கறை மற்றும் மதிப்பீட்டைப் பொருத்தது என்றும் கூறினார்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வியே இந்தியா எதிர்நோக்கும் முதல் சவால் என்றும், மற்றவை சிறாரின் நலவாழ்வு மற்றும் வளர்ச்சி என்றும் Kavinkalath கூறினார்.

ஆதாரம் : Fides

9. ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்த சீனா முடிவு

நவ.16,2103. சீனாவில், மனித உரிமை மீறல்களை அகற்ற முயற்சிக்காமல், அந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் இருக்கும், ஒரு குழந்தை திட்டத்தைத் தளர்த்தத் திட்டமிடுவது சரியான வழிகாட்டுதலாக அமையாது என ஒரு முக்கிய பெண்ணுரிமை ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் ஆணிவேரே கட்டாயப்படுத்துவதாக உள்ளது என CNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த எல்லைகளற்ற பெண்ணுரிமை அமைப்பின் தலைவர் Reggie Littlejohn, எத்தனை குழந்தைகளை ஒருவர் கொண்டிருக்கலாம் என்பதை அரசே தீர்மானிக்கின்றது எனக் கூறினார்.
சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, கடந்த 1970ம் ஆண்டில், ஒரு குழந்தை திட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.
இதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். சீனாவின் இந்த முடிவு காரணமாக, தற்போது அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் ஒரு குழந்தை திட்டத்தைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தின்படி பிறந்தவர்கள், தற்போது இரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : CNA

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...