Saturday, 9 November 2013

செய்திகள் - 09.11.13

செய்திகள் - 09.11.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் திருஅவையின் வளங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

2. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய திருப்பயணிகளிடம் : ஆண்டவரின் இதயத்தைத் தட்டுங்கள்

3. திருஅவை எப்பொழுதும் அருளின் நீரைப் பொழிந்து கொண்டிருக்குமாறு செபிப்போம், திருத்தந்தை பிரான்சிஸ்

4. ஆண்டவரே, நற்செய்தியை நாங்கள் கவனமாய் உள்வாங்குவதற்கு எமக்கு உதவி செய்யும், திருத்தந்தை பிரான்சிஸ்

5. புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும், பேராயர் Fisichella

6. இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்

7. 334வது பிறந்தநாள்: வீரமாமுனிவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை

8. பெனின் நாட்டில் பல சிறார், வன்முறை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர், ஐ.நா. அதிகாரி

9. செயற்கையான குரல்வளையை உருவாக்கி ஜப்பான் அறிவியலாளர்கள் சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1. நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் திருஅவையின் வளங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.09,2013. நோயாளிச் சகோதர சகோதரிகள் தாங்கள், பிறரன்பும் தோழமையுணர்வும் மட்டுமே பெறவேண்டியவர்கள் என்று கருதாமல், தாங்கள் திருஅவையின் வாழ்விலும் பணியிலும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளவர்கள் என்று உணருமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லூர்து நகருக்கும், பல்வேறு பன்னாட்டுத் திருத்தலங்களுக்கும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் UNITALSI என்ற இத்தாலிய பிறரன்பு அமைப்பு தொடங்கப்பட்டதன் 110வது ஆண்டு நிறைவையொட்டி, அவ்வமைப்பினர் மற்றும் நோயாளிகள் என ஏறக்குறைய ஏழாயிரம் பேர் இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவேளை அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
UNITALSI அமைப்பின் உறுப்பினர்கள் கிறிஸ்துவின் மீதான அன்பினால் இந்தப் பணியைச் செய்கின்றனர் எனப் பாராட்டி ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ், நோயாளிகள் மத்தியில் செய்யும் இப்பிறரன்புப் பணியில் எதிர்நோக்கும் இன்னல்களைக் கண்டு சோர்வடைய வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.
நோயாளிகள், UNITALSI உறுப்பினர்களின் முகங்களில் இயேசுவின் திருமுகத்தைக் காண வேண்டும், அதேநேரம், UNITALSI உறுப்பினர்கள், துன்புறும் மனிதரில் கிறிஸ்துவின் திருமுகத்தைக் கண்டுணர வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பங்குத் தளங்கள் மற்றும் கத்தோலிக்கக் கழகங்களின் பணிகளில் நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்துமாறும், அதன்மூலம் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தில் தங்களின் இருப்பை ஆழமாக உணருவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
UNITALSI அமைப்பினர், நோயாளிகள் பல்வேறு மரியா திருத்தலங்களுக்கு, சிறப்பாக லூர்து திருத்தலத்துக்கு அழைத்துச் செல்வது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், அன்னை மரியின் தாய்மையைப் பின்பற்றுமாறும், துன்ப நேரங்களில்   அன்னை மரியின் உதவியை நாடுமாறும் பரிந்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய திருப்பயணிகளிடம் : ஆண்டவரின் இதயத்தைத் தட்டுங்கள்

நவ.09,2013. திருப்பயணம் என்பது, நமது பல தேவைகளுக்காக ஆண்டவரின் இதயத்தைத் தட்டுவதற்கான தருணம், ஆண்டவர் செவிசாய்க்கிறார், அவர் எப்பொழுதும்  செவிசாய்க்கிறார் என்று இச்சனிக்கிழமை காலையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் லிகூரியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உரோம் நகரில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்துக்கு வந்து திருப்பலியில் கலந்து கொள்வது எவ்வளவு அழகானது என்று கூறினார்.
திருப்பயணம் என்பது, எப்பொழுதும் ஆண்டவரை மையப்படுத்தி, அவரைச் சந்தித்து விசுவாசத்தில் வளரும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆன்மீகச் சந்திப்பு நமது வாழ்வுப் பயணத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு உதவுகின்றது என்றும் கூறினார்.
திருப்பயணிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆவல், ஒரு பிரச்சனை, ஒரு துன்பம்.. இப்படி ஏதாவது ஒன்றை ஆண்டவரிடம் சொல்வதற்கு இதயத்தில் வைத்திருப்பீர்கள், இந்தத் திருப்பயண நாள்களில் இவற்றுக்குத் தீர்வு கண்டு ஆண்டவரில் மிக நெருக்கமாக வளருங்கள், ஆண்டவர் உங்களுக்காக எப்பொழுதும் காத்திருக்கிறார், நம் எல்லாருக்காகவும் காத்திருக்கிறார், நமக்காகக் காத்திருப்பதில் அவர் சோர்வடைய மாட்டார், அவர் எப்பொழுதும் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் செபத்தில் கேட்பதற்கு நம் ஆண்டவர் எப்பொழுதும் தீர்வு வழங்கமாட்டார், ஆயினும் அவர் எப்பொழுதும் செவிசாய்க்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவர்கள் பகுதியிலுள்ள சிறார், முதியோர் மற்றும் நோயாளிகளை, தனது பெயரால் வாழ்த்துமாறும் இச்சனிக்கிழமை காலையில் லிகூரியா திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
  
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருஅவை எப்பொழுதும் அருளின் நீரைப் பொழிந்து கொண்டிருக்குமாறு செபிப்போம், திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.08,2013.  திருஅவை எப்பொழுதும் கிறிஸ்துவின்மீது கட்டப்பட்டதாய், அது  எப்பொழுதும் அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்து அருளின் நீரை எப்பொழுதும் பொழிந்து கொண்டிருக்குமாறும், திருஅவையின் உறுப்பினர்கள் இயேசுவிடம் மனமாறிச் செல்வதற்குத் தங்களை எப்பொழுதும் கையளிக்க வேண்டுமென்றும் செபிப்போம் என இச்சனிக்கிழமை காலையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவாகிய இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இவ்விழா குறித்து சிறிய மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு விசுவாசிகள் அனைவரையும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உரோம் பேராலயமாகவும், உரோம் நகர் மற்றும் உலகின் அனைத்து ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாகவும் விளங்கும் இலாத்தரன் பசிலிக்கா நேர்ந்தளிப்பு விழாவாகிய இந்நாளைய விழா, உரோம் நகரின் விழா, உரோம் திருஅவையின் விழா, அகிலத் திருஅவையின் விழா என்று இச்சிறிய மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை.
இத்திருப்பலியின் மூன்று வாசகங்களில் திருஅவை பற்றிக் கூறும் மூன்று அடையாளங்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ள பாறை என்பது இயேசு கிறிஸ்துவே, இவரின் மீதே திருஅவை கட்டப்பட்டுள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் தலைகள் வெள்ளிப் பேழைகளில் புனிதமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், புடென்ஸ் என்பவரின் வீட்டில் புனித பேதுரு திருப்பலி நிகழ்த்தப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் மரத்தாலான பீடமும், இறுதி இரவு உணவின்போது ஆண்டவர் இயேசு பயன்படுத்திய மேஜையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிப்போம், திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.09,2013. பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன்னோடு சேர்ந்து அனைவரும் செபிக்குமாறு, குறிப்பாக, Yolanda தீவில் இப்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நமது வாழ்வுக்கு முக்கியமான இயேசு கிறிஸ்துவை மையம் கொண்டதாக அவ்வாழ்வு இருக்க வேண்டும். மற்ற அனைத்தும் இரண்டாம்பட்சமே என்ற மற்றொரு செய்தியையும் @pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம்பிக்கை ஆண்டு நிறைவடையவிருக்கிறது. இந்த அருள்நிறைந்த தருணத்தில், ஆண்டவரே, நற்செய்தியை நாங்கள் கவனமாய் உள்வாங்குவதற்கு எமக்கு உதவி செய்யும் என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளி மாலையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் குறுஞ்செய்திகளை பதித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியை நாம் வாழ்வாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தென் அமெரிக்க நாடான பரகுவாயில் இம்மாதம் 15ம் தேதி இடம்பெறவிருக்கும் தேசிய திருப்பயண நிறைவுக் கொண்டாட்டத்துக்கு, தனது பிரதிநிதியாக, திருப்பீட குருக்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Cláudio Hummes அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைசாட்சிகள் புனித Roque González de Santa Cruz மற்றும் அவரின் உடன் பணியாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி அவர்களின் புனிதப்பொருள்கள் பரகுவாய் நாட்டில் தேசிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும், பேராயர் Fisichella

நவ.09,2013. கத்தோலிக்கத் திருஅவையில் நம்பிக்கை ஆண்டு நிறைவுறவிருக்கும்வேளையில் உரோமின் முதல் ஆயராகிய புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்துள்ளார். 
முதல் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை இக்காலத்திய விசுவாசிகள் மத்தியில் மீண்டும் உயிர்பெறச் செய்யும் நோக்கத்தில் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என லொசெர்வாத்தோரே ரொமானோ நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் பேராயர் Fisichella.
நம் ஆண்டவருக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த திருத்தூதர் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் என பாரம்பரியமாக நம்பப்பட்டுவரும் அவற்றை, நம்பிக்கை ஆண்டை நிறைவு செய்யும் உச்ச நிகழ்வாக, முதன்முறையாக இவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மேலும் கூறியுள்ளார் பேராயர் Fisichella
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கப்பட்ட நம்பிக்கை ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : Oss.Romano                        

6. இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்

நவ.09,2013. இம்மாதம் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அவ்வாறு இலங்கை வரும்போது மன்னார் உட்பட வடமாநிலத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவே இந்தப் போரை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதமர் இங்கு வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வடமாநிலத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் போரினால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, தமிழர்களின் தாயின் நிலையில் இருப்பதனால் இந்தியா விழித்தெழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : தமிழ்வின்

7. 334வது பிறந்தநாள்: வீரமாமுனிவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
நவ.09,2013. தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 334வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வீரமாமுனிவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இவ்வெள்ளியன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப்பு பெஸ்கி என்பவர், இயேசு சபையில் சேர்ந்து 1709ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
மறைபரப்பும் நோக்கத்தில் 1710ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த இவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கைத் தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். இவர் தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என இவர் மாற்றிக் கொண்டார்

ஆதாரம் : Ind.Sec

8. பெனின் நாட்டில் பல சிறார், வன்முறை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர், ஐ.நா. அதிகாரி

நவ.09,2013. ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் இடம்பெறும் சிறார்க்கெதிரான வன்முறையும் சுரண்டலும் அந்நாட்டில் சகித்துக் கொள்ளப்படுகின்றன, பல சூழல்களில் அவை நியாயப்படுத்தப்படுகின்றன மற்றும் இவற்றில் ஈடுபடும் பலர் தங்களின் வன்முறைச் செயல்கள் குறித்து மகிழ்கின்றனர் என்றுஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
பெனின் நாட்டில் பல சிறார், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் அல்லது ஏழ்மை என்ற பெயரில் வன்முறை, சுரண்டல், தவறாகப் பயன்படுத்தப்படல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று சிறார் குறித்த ஐ.நா. சிறப்புத் தொடர்பாளர் Najat Maalla M’jid இவ்வெள்ளியன்று கூறினார்.
கடந்த அக்டோபர் 28 முதல் இம்மாதம் 8 வரை பெனின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து சிறாரின் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விளக்கி, அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் Maalla M’jid.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

9. செயற்கையான குரல்வளையை உருவாக்கி ஜப்பான் அறிவியலாளர்கள் சாதனை

நவ.09,2013. மனிதர் பேசும்போது குரல்வளையிலுள்ள குரல் நாண்கள் அதிர்வதன் மூலம் ஒலி பிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே.
இந்த இயற்கையின் விந்தையை தற்போது செயற்கையாக நிகழ்த்திக் காட்டியுள்ளனர் ஜப்பான் அறிவியலாளர்கள்.
அதாவது மனிதரின் குரல் வளைக்கு ஒத்த செயற்கையான குரல்வளையினை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் குரல்வளையிலிருந்து எவ்வாறு ஒலி பிறப்பிக்கப்படுகின்றது என்பதை துல்லியமாக விவரிக்க இயலுவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தமிழ்வின்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...