செய்திகள் - 07.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : யாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்
2. பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி
3. நாடோடி இனத்தவர் மற்றும் ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுமாறு ப்ரெஞ்ச் பேராயர் வலியுறுத்தல்
4. புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
5. அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்
6. வத்திக்கான் மற்றும் Ciad நாட்டிடையே புதிய ஒப்பந்தம்
7.CRI எனும் இந்திய துறவுசபைகளின் அமைப்பின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டம்
8. அமெரிக்க ஆயர்கள் : பொதுநலனுக்கான அர்ப்பணத்துடன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்
9. சிரியா அகதிகளுக்கு இணையதளம் மூலம் உயர்கல்வி, JRS திட்டம்
10. மன்னாரில் காணாமல் போனோர் குறித்து புகார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : யாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்
நவ.07,2013. காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிப்பது இறைவனுக்கு மகிழ்ச்சி தருவது,
ஏனெனில் அவர் காணாமற்போன ஆடுகள்மீது அன்புடன்கூடிய பலவீனத்தைக்
கொண்டிருக்கிறார் என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை
திருப்பலி நிறைவேற்றி காணாமற்போன ஆடு மற்றும் காணாமற்போன நாணயம் பற்றிய
உவமையை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் யாரும் காணாமற்போவதை விரும்பாததால், அவர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மந்தைக்குக் கொண்டு வருகிறார், அப்படிக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி காண்கிறார் என்றும் கூறினார்.
இயேசு செய்தவைகள் குறித்து புண்பட்டு, இந்த மனிதர் ஆபத்தானவர், வரிதண்டுவோரோடும் பாவிகளோடும் உணவருந்துகிறார், இறைவனைப் புண்படுத்துகிறார்,
இறைவாக்கினரின் திருப்பணியை அவமானப்படுத்துகிறார் என்றெல்லாம் அவர் பற்றி
புகார் செய்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் மனநிலையை இந்நாளைய
நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும், இது வெளிவேடத்தின் இசை என்று சொல்லி, அவர்களின் இந்த முணுமுணுப்பு வெளிவேடத்துக்கு இயேசு மகிழ்வான உவமையால் பதில் சொன்னார் என்று விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தச் சிறிய உவமைப் பகுதியில் மகிழ்ச்சி என்ற சொல் மூன்று முறைகளும், அகமகிழ் என்ற சொல் ஒரு முறையும் இடம்பெற்றுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, பரிசேயர்கள் இது குறித்து துர்மாதிரிகை அடைந்தனர், ஆனால் வானகத்தந்தை அகமகிழ்ந்தார், இந்த உவமையில் இது மிகவும் ஆழமான செய்தி என்றும் கூறினார்.
இறைவன் இழப்பவர் அல்ல, அதனால்தான் எதையும் இழந்துபோகாமலிருக்க அவரே சென்று தேடுகிறார், அவர் தேடும் இறைவன், தம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கும் எல்லாரையும் அவர் தேடுகிறார்,
ஆயன் காணாமற்போன ஆட்டைத் தேடுவதுபோல் இறைவன் தம்மைவிட்டு வெகு தூரமாய்
இருப்பவர்களைத் தேடுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம்மவர்களில் யாரும் காணாமற்போவதை இறைவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும், இழந்த ஆட்டைக் கண்டுபிடித்த கண்டுபிடித்தபோது அதை மர்றவர்களோடு கொண்டுவந்து சேர்க்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தவர்கள் அவருக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள் என்றும், இறைவனின் மகிழ்ச்சி, பாவியின் இறப்பில் அல்ல, பாவியின் வாழ்வில் உள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் ஒரு பாவி, நான் இதை அதைச் செய்தேன் என்று நாம் சொல்லும்போதும்கூட, உன்னை அன்பு செய்கிறேன், உன்னைத் தேடிக் கண்டுபிடித்து எனது இல்லத்துக்கு அழைத்து வரப்போகிறேன் என இறைவன் சொல்கிறார் திருப்பலி மறையுரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி
நவ.,07,2013.
இம்மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிரான்சின் லூர்து நகரில் தங்கள்
ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு தன்
சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் பேரவையின் இக்கூட்டத்தில், குருத்துவப் பயிற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு
கிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களிடையேயும் அச்சமின்றிச் சென்று அவர்
செய்தியை அறிவிக்கும் குருக்களை உருவாக்க வேண்டியத் தேவையை
வலியுறுத்தியுள்ளார்.
ஏழை
மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பிரச்சனைகள் குறித்து ஆயர்கள்
விவாதித்து வருவதற்கும் தன் முழு ஆதரவையும் அச்செய்தியில் வழங்கியுள்ளார்
திருத்தந்தை. மனிதர்கள் மீதான திருஅவையின் அக்கறை, ஒவ்வொரு மனிதர் மீதும் இறைவன் காட்டும் இரக்கத்தின் சாட்சியாக உள்ளது எனவும் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. நாடோடி இனத்தவர் மற்றும் ஏழைகளுக்கு நீதி வழங்கப்படுமாறு ப்ரெஞ்ச் பேராயர் வலியுறுத்தல்
நவ.07,2013. நாடோடி இனத்தவர் மற்றும் குடியேற்றதாரர் குறித்த ப்ரெஞ்ச் அரசின் அணுகுமுறைகளைக் குறைகூறியுள்ள அதேவேளை, ஏழைகளுடனான ஒருமைப்பாடு,
சகோதரத்துவம் மற்றும் அவர்களுக்கான நீதியில் கத்தோலிக்கத் திருஅவை
எடுத்துக்காட்டாகச் செயல்பட வேண்டுமென அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவர்
பேராயர் Georges Pontier அழைப்பு விடுத்துள்ளார்.
பல
காலமாக பிரான்ஸ் நாட்டுக்குள் வாழும் பல்கேரிய மற்றும் ருமேனிய மக்களுக்கு
உதவும் நோக்கத்தில் சரியான கொள்கைகளை பிரான்ஸ் அரசு இன்னும்
வடிவமைக்கவில்லை என குறைகூறிய பேராயர் Pontier, நலவாழவுக் காரணங்களைக் காட்டி சில குடியிருப்புக்களை இடிப்பது நியாயமே எனினும், அங்குக் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடங்களை வழங்காமல் தெருவில் விடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கவலையை வெளியிட்டார்.
சகோதரத்துவத்தையும்,
ஒருமைப்பாட்டையும் விட்டு விலகி ஓடும் ஒரு சமுதாயத்தால் ஒரு நாளும்
முன்னேற முடியாது என உரைத்த பிரான்ஸ் நாட்டுஆயர்பேரவைத் தலைவர் பேராயர் Pontier, சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களுக்குத் தலத்திருஅவை தனது நடவடிக்கைகள் மூலம் வழிகாட்ட முயல்கிறது எனவும் தெரிவித்தார்.
ஆதாரம் : CNS
4. புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.07,2013. இறைவனுக்கு முழுவதும் சொந்தமான மக்களே புனிதர்கள். கேலி செய்யப்படுதல், தவறாகப் புரிந்துகொள்ளப்படல், ஓரங்கட்டப்படல் போன்றவை குறித்து அவர்கள் அஞ்சுவதில்லை என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் குறுஞ்செய்திகளை பதித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நாமும் புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்
நவ.07,2013.
2016ம் ஆண்டு ஜூலையில் போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது
உலக இளையோர் தினத்துக்கான மூன்றாண்டுகள் ஆன்மீகத் தயாரிப்பாக, அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்களை இவ்வியாழனன்று அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 29வது உலக இளையோர் தினத்துக்கு, “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” (மத். 5:3) என்பதும், 2015ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 30வது உலக இளையோர் தினத்துக்கு, “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்”(மத்.5:8) என்பதும், 2016ம் ஆண்டு போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கு, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத். 5:7)என்பதும் தலைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 25ம் தேதியன்று ரியோ தெ ஜனெய்ரோவின்
புனித செபஸ்தியார் பேராலயத்தில் இளையோரைச் சந்தித்தபோது, இயேசுவின்
மலைப்பொழிவுப் போதகத்தில் கூறிய நற்பேறுபெற்றோர் பகுதியை உள்ளார்ந்து
வாசித்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. வத்திக்கான் மற்றும் Ciad நாட்டிடையே புதிய ஒப்பந்தம்
நவ.,07,2013. நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வத்திக்கான் மற்றும் Ciad நாட்டின் ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையேயான பழைய ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொணர்ந்து கையெழுத்திடப்பட்டுள்ள இப்புதிய ஒப்பந்தம், Ciad தலத்திருஅவையின் அதிகார வரம்பு, அதன் திருஅவைக் கட்டிடங்கள், இரு நாடுகளுக்கிடையேயான உறவு போன்றவைகளையும் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
திருப்பீடத்தின் சார்பில் Ciad நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Jude Thaddeus Okoloவும் Ciad நாட்டின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Moussa Faki Mahamatம் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7.CRI எனும் இந்திய துறவுசபைகளின் அமைப்பின் 50ம் ஆண்டுக் கொண்டாட்டம்
நவ.,07,2013. CRI எனும் இந்திய துறவுசபைகளின் அமைப்பு இவ்வியாழன் முதல் சனிக்கிழமைவரை தன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை அஸ்ஸாம் மாநிலத்தின் Guwahatiயில் சிறப்பித்து வருகின்றது.
டான்போஸ்கோ இல்லத்தில் இடம்பெற்றுவரும் இந்தப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் இந்திய துறவுசபைகளின் பிரதிநிதிகளாக ஏறத்தாழ 500 பேர் கலந்துகொள்கின்றனர்.
'கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்டு, வருங்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நடத்தப்படும் இந்த மூன்று நாள் கொண்டாட்டம் மற்றும் கலந்துரையாடல்களில், துறவற வாழ்வின் அர்த்தம், அதன் முதன்மை நோக்கங்கள், இன்றைய உலகில் துறவற வாழ்வு எதிர்நோக்கும் சவால்கள், திருஅவைத் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு போன்றவை குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராயர் தாமஸ் மேனாம்பரம்பில் உட்பட பல்வெறு இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உரை வழங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் Salvatore Pennachioயுடன் ஆயர்கள் பலர் இணைந்து நிறைவேற்றும் திருப்பலியும் இடம்பெறவுள்ள இக்கொண்டாட்டங்களின்போது, திருஅவையின் சமூகப்பணிகள் குறித்த புத்தகங்களும் வெளியிடப்படும்.
ஆதாரம் : UCAN
8. அமெரிக்க ஆயர்கள் : பொதுநலனுக்கான அர்ப்பணத்துடன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்
நவ.,07,2013.
ஏழைகள் மற்றும் பசியால் வாடுவோருக்கு முதன்மை இடத்தை வழங்கும் வகையில்
பொதுநலனுக்கான அர்ப்பணத்துடன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்
என அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு
அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க தலைவர்கள்.
பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்றுவரும் இன்றையக் காலக்கட்டத்தில் பழமையான விவசாயக் கொள்கைகளைப் புறந்தள்ளி, மக்களுக்கு உதவும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதாக புதிய சட்டங்கள் இருக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்றோர், முதியோர், குழந்தைகள்
ஆகியோரைப் பாதிக்கும் வகையிலான எந்தவோர் அமைப்புமுறை மாற்றங்களுக்கும்
மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் வேண்டுகோள்
விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவைத் தலைவர்கள்.
ஆதாரம் : CNS
9. சிரியா அகதிகளுக்கு இணையதளம் மூலம் உயர்கல்வி, JRS திட்டம்
நவ.,07,2013. ஜோர்டனில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் வாழும் நிலையில், அவர்களுக்கான உயர்கல்வியை இணையதளம் மூலம் வழங்கத் திட்டமிட்டுள்ளது இயேசு சபை.
கடந்த
ஜூலை மாதம் துவக்கப்பட்ட இந்த இணையதள உயர்கல்வித் திட்டம்
குடியேற்றதாரர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக இயேசு சபையினரின்
புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பான JRS அறிவித்துள்ளது.
அமெரிக்க
ஐக்கிய நாட்டின் கொலராடோவிலிருந்து இயங்கும் ரேஜிஸ் பல்கலைக்கழகத்தின்
அங்கீகாரம் பெற்றுள்ள இந்த உயர்கல்வித் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சட்டம், நலவாழ்வுக் கல்வி, சமூகப்பணி போன்றவைகளுக்கான படிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
போரால் தங்கள் கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பெரும் கொடையாக நோக்கப்படுகிறது.
ஆதாரம் : Fides
10. மன்னாரில் காணாமல் போனோர் குறித்து புகார்
நவ.,07,2013. இலங்கையில் போர்க் காலத்தில் காணாமல்போனவர்களின் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட அரசுத்தலைவர் ஆணைக்குழுவிடம் மன்னார் மாவட்டத்தில் காணாமல்போன ஏறக்குறைய 2301பேர் குறித்த புகார்கள் அருள்பணி செபமாலை அவர்களின் தலைமையில் வந்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
கிருலப்பனையில் உள்ள தலைமையகத்தில் வைத்து ஆணையர்களைச் சந்தித்த மன்னார்
குடிமக்கள் குழுவின் தலைவரான அருள்பணி செபமாலை அவர்களின் தலைமையிலான
குழுவினர், ஏற்கனவே
இவை குறித்து தாம் பல இடங்களில் புகார் செய்தும் எந்த விதமான பலனும்
கிடைக்காத காரணத்தால் இந்த ஆணைக்குழுவிலும் தாங்கள் முழுமையாக நம்பிக்கை
வைக்க முடியாத நிலையே இருப்பதாகக் கூறியுள்ளனர்.
வேறுவழி இல்லாத காரணத்தால் இந்தப் புகார்களை தாம் இப்போது செய்ய வந்துள்ளதாகவும், அத்துடன் இன்னமும் பலர் நம்பிக்கை இழந்த நிலையில் புகார்கூடச் செய்ய முன்வாராத நிலையில் இருப்பதாகவும் அருள்பணி செபமாலை கூறினார்.
இவர்களுக்கு பதிலளித்துப் பேசிய ஆணையர்களில் ஒருவரான மனோ இராமநாதன் அவர்கள், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க, தன்னாலான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார். அத்துடன், புகார்கள் செய்வது குறித்து மிரட்டல் எதுவும் வந்தால், அதனையும் தன்னிடம் கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு 6 மாதங்களுக்குள் புகார்களைப் பெற்று, விசாரணைகளை நடத்தி, அரசுத்தலைவருக்கு அறிக்கை வழங்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment