Thursday, 7 November 2013

செய்திகள் - 06.11.13

 செய்திகள் - 06.11.13
 ------------------------------------------------------------------------------------------------------

11. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமெனில் நமக்குத் துணிச்சல் தேவை

2. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் திருஅவையின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும், வத்திக்கான் அதிகாரிகள்

3. தமாஸ்கு திருப்பீட தூதரகம் தாக்கப்பட்டிருப்பது குறித்து மும்பை கர்தினால் ஆஸ்வால்டு அதிர்ச்சி

4. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவித்ததால் மெக்சிகோ ஆயர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல்

5. தென்னாப்ரிக்காவின் செல்வந்தர்-ஏழை இடைவெளி, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை, பேராயர் டுட்டு எச்சரிக்கை

6. ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் சவுதி அதிகாரிகளால் சித்ரவதை

7. இலங்கையில் காவல்துறையின் சித்ரவதைகள் தொடர்கின்றன, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

8. 1.8 இலட்சம் அமெரிக்க டாலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டினம் ஏலம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமெனில் நமக்குத் துணிச்சல் தேவை

நவ.06,2013. நாம் நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமெனில் நமக்குத் துணிச்சல் அவசியம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய் மாலையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்
மேலும், உற்பத்தியை மேம்படுத்துதல், சமூக அமைப்பில் மாற்றம், ஏழைகள்மீது தோழமை ஆகியவை வழியாக உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்று, ஐ.நாவுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள் கூறியிருப்பதை, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று பிரசுரித்துள்ளது.
இன்னும், கடந்த வாரத்தில் குவைத்தில் மேற்கொண்ட அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணத்தில் குவைத் அதிகாரிகள் தனக்குக் கொடுத்த இனிய வரவேற்புக்கும், திருப்பீடத் தூதரகம் அந்நாட்டில் திறக்கப்பட்டதற்கும் திருப்பீடச் செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேராயர் Giovanni Angelo Becciu அவர்கள் @terzaloggia டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் திருஅவையின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும், வத்திக்கான் அதிகாரிகள்

நவ.06,2013. குடும்பம் குறித்த 2014ம் ஆண்டின் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்புகள், திருஅவையின் போதனைகளுக்கு ஒத்தவகையில் அமையும் கத்தோலிக்கரின் எண்ணங்களின் மதிப்பீடுகளை உள்ளடக்குவதாய் இருந்தாலும், மாமன்றத்தின் பணிகள் கத்தோலிக்கக் கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டிருக்கும் என்று வத்திக்கான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு, பொது மக்களின் தற்போதைய கருத்துக்கள் அல்ல, ஆனால், திருஅவையின் அதிகாரப்பூர்வ கோட்பாடுகளே அடிப்படையாக இருக்கும் என்று, இம்மாமன்றத்தின் பொது விளக்கவுரையாளர் புடாபெஸ்ட் கர்தினால் Péter Erdő, இச்செவ்வாயன்று இம்மாமன்றத்திற்கான தயாரிப்பு ஏட்டை நிருபர் கூட்டத்தில் வெளியிட்டபோது கூறினார்.
மேலும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் பேராயர் Lorenzo Baldisseri, திருமணம், குடும்பம் குறித்த கத்தோலிக்கப் போதனைகளை ஊக்குவித்தல் மற்றும் ஏற்பது, இன்னும், இப்போதனைகள் சந்திக்கும் கலாச்சார, சமூகச் சவால்கள் பற்றிய 39 கேள்விகளை இத்தயாரிப்பு ஏடு கொண்டுள்ளது என்றும் விளக்கினார்.
திருமணமுறிவு, மறுதிருமணம், திருமணமாகாமலே சேர்ந்து வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கைத் திருமணங்கள், கருத்தடை சாதனங்கள் போன்ற தலைப்புகளும்  இக்கேள்விகளில் இடம்பெற்றிருப்பதாக பேராயர் Baldisseri கூறினார். 
"நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி சவால்கள்" என்ற தலைப்பில் 2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 19 வரை உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திக்கானில் நடைபெறும்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

3. தமாஸ்கு திருப்பீட தூதரகம் தாக்கப்பட்டிருப்பது குறித்து மும்பை கர்தினால் ஆஸ்வால்டு அதிர்ச்சி

நவ.06,2013. சிரியாவின் தமாஸ்கு திருப்பீட தூதரகம் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து இந்தியத் திருஅவை ஆழ்ந்த கவலையும் வருத்தமும் அடைந்திருப்பதாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒரு கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கர் சார்பாக, தமாஸ்கு திருப்பீட தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்களுக்கு, ஒருமைப்பாட்டுணர்வுச் செய்தியை அனுப்பியுள்ள மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு, பேராயர் செனாரி அவர்கள் தொடர்ந்து அத்தூதரகத்தில் தங்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து வியப்படைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கானின் தூதரக இல்லம் திருத்தந்தையின் இல்லம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ஆஸ்வால்டு, சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பையும், திருத்தந்தையின் அழைப்பின்பேரில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலக அளவில் சிரியாவுக்காக நடத்தப்பட்ட செபத்தையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
இச்செவ்வாய் காலையில் தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வாழும் திருப்பீட தூதரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும் திருப்பீட தூதரின் செயலர் அருள்பணி ஜார்ஜோ கூறினார்.
இந்த வன்முறையில் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லையென்றும், அக்கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது என்றும் அருள்பணி ஜார்ஜோ மேலும் கூறினார்.
மேலும், இத்தாக்குதலையொட்டி திருப்பீட தூதரோ, திருப்பீட தூதரகத்தின் பணியாளர்களோ, யாரும் அவ்விடத்தைவிட்டுச் செல்லமாட்டார்கள் என்றும் அக்குரு தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews              

4. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவித்ததால் மெக்சிகோ ஆயர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல்

நவ.06,2013. மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துவரும்வேளை, போதைப்பொருள் வியாபாரத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மறைமாவட்டங்களில் மறைப்பணியாற்றுவது கடினமாக மாறி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
தென் மெக்சிகோவின் Michoacan மாநிலத்தில் Apatzingan மறைமாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகளால் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அச்சம் மற்றும் வன்முறைகளைக் கண்டித்து அண்மையில் கடிதம் எழுதிய அம்மறைமாவட்ட ஆயர் Miguel Patiño Velasquez அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் மேலும் கூறுகின்றன
திட்டமிட்டக் குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் ஆள்கடத்தல்கள், பிணையல்கைதிகள், கொலைகள், இலஞ்சம் வாங்குதல் போன்றவை தனது மறைமாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் ஆயர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Michoacan மாநில அரசின் ஊழலையும் கண்டித்துள்ள ஆயர் Patiño Velasquez, அம்மாநிலம் திறமையற்ற மாநிலம் எனவும் குறைகூறியுள்ளார்.
இதற்கிடையே, எங்களுக்கு அமைதி வேண்டும் என்ற சுலோகத்துடன் கடந்த ஞாயிறன்று பேரணி ஒன்றையும் முன்னின்று நடத்தியுள்ளார் ஆயர் Patiño Velasquez.

ஆதாரம் : Fides                        
5. தென்னாப்ரிக்காவின் செல்வந்தர்-ஏழை இடைவெளி, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை, பேராயர் டுட்டு எச்சரிக்கை

நவ.06,2013. தென்னாப்ரிக்காவில் விரிவடைந்துவரும் செல்வந்தர்-ஏழை இடைவெளி சரிசெய்யப்படாவிட்டால், அந்நாடு அடைந்துவரும் வளர்ச்சி தடை செய்யப்படும் என எச்சரித்துள்ளார் நொபெல் அமைதி விருது பெற்றவரான ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு.
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இச்செவ்வாய் மாலை எல்.சி.ஜெயின் நினைவு சொற்பொழிவை துவக்கிவைத்து ஆற்றிய உரையில், தென்னாப்ரிக்காவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகி வருகிறது, இது ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் நல்லதல்ல என்று கூறினார்.
எல்.சி.ஜெயின் போன்ற மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கு உழைத்தவர்களைப் பாராட்டும் விதமாக பேராயர் டுட்டுவின் இடம்பெற்றது.
ஏழைகள் மாண்புடன் நடத்தப்படவும், தங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் மனிதர்களோடு அவர்கள் ஒத்துழைக்க விரும்புவதாகவும், தாங்கள் பரிதாபமாக நோக்கப்படுவதற்கு ஏழைகள் விரும்பவில்லையெனவும் கூறினார் பேராயர் டுட்டு.
எல்.சி.ஜெயின் ஒரு காந்தியவாதி மற்றும் சுதந்திரப் போராட்டக்காரர். 1994ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு முடிவடைந்த பின்னர் அந்நாட்டுக்கான இந்தியாவின் முதல் தூதரக அதிகாரியாக, இவர் பணியாற்றியவர். 

ஆதாரம் : IANS                      

6. ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் சவுதி அதிகாரிகளால் சித்ரவதை

நவ.06,2013. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்களில் பலர் விலங்குகள் போன்று, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைகளில் பல நாள்களுக்கு அடைத்து வைக்கப்பட்டனர் என, சவுதி அரசால் வெளியேற்றப்பட்ட 30   பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
சரியான ஆவணங்கள் இன்றி வேலைசெய்துவந்த வெளிநாட்டவர்க்கு சவுதி அரசு அளித்திருந்த மன்னிப்புக் காலம் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்ததையொட்டி பிலிப்பீன்ஸ் திரும்பியுள்ள குடியேற்றதாரர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
தகுந்த ஆவணங்கள் இன்றி வேலைசெய்துவந்த குறைந்தது 6,700 பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள், சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமாகிய Jeddahவிலும், அந்நாட்டின் பிற நகரங்களிலும் சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர் என்று பிலிப்பீன்ஸ் அரசு கணக்கிட்டுள்ளது.
தாங்கள் விலங்குகள் போன்று நடத்தப்பட்டதாக 46 வயதான வீட்டுப்பணியாளர் Amor Roxas கூறியிருக்க, தாங்கள் தப்பித்துவிடுவோம் என்ற அச்சத்தில், சவுதி அதிகாரிகள் தங்கள் கால்களைச் சங்கிலியால் கட்டிப் பூட்டுப்போட்டு வைத்திருந்தனர் என, 32 வயதான Yvonne Montefeo என்பவர் கூறியுள்ளார்.
ஏறக்குறைய 3 இலட்சம் பிலிப்பீன்ஸ் மக்கள், சவுதி அரேபியாவில் வேலை செய்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews

7. இலங்கையில் காவல்துறையின் சித்ரவதைகள் தொடர்கின்றன, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

நவ.06,2013. இலங்கையில் காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சித்ரவதைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டம் Bandaragama காவல் நிலையத்தில் 27 வயதான D.A. Ruwan Kumara  என்ற கைதி சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார்.
காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரின் மனைவி Chinthini Nadeesaவும், Ruwan Kumaraவின் சகோதரரும் காவல் நிலையத்தில் அவரைப் பார்வையிட சென்றிருந்த போது காவல் நிலையத்திற்குப் பின்னால் வைத்து சில காவல்துறையினர் Ruwan Kumaraவை அடித்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அவரது மனைவி தொலைபேசி ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் காவல்துறை தலைவருக்கு புகார் செய்தார். எனினும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்பதுடன் அவரது கணவர் தொடர்ந்தும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். இதனைத் தடுத்து நிறுத்த அவர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : தமிழ்வின்

8. 1.8 இலட்சம் அமெரிக்க டாலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டினம் ஏலம் 

நவ.07,2013. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய  கை நெசவு இராட்டினம் இச்செவ்வாயன்று பிரிட்டனில் ஏலம் விடப்பட்டது.
இந்த இராட்டினமே காந்தியின் சுதேசி இயக்கக் குறியீடாகவும், மிகவும் உன்னதமான பொக்கிஷமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்டதாகும். இது 1.8 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது 1.11 கோடி இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏலம் போயிருக்கிறது. இந்தக் கை இராட்டினத்தை, 1935ம் ஆண்டில் அமெரிக்க மெத்தடிஸ்ட் கிறித்தவப் போதகரான Floyd A Puffer என்பவருக்கு காந்தி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியின் உயில் மற்றும் அரிதான சில கடிதங்கள் உட்பட ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட அவரது அரும் பொருட்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...