செய்திகள் - 04.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்காக திருத்தந்தை செபம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியோடு வரவேற்போம்
3. மறைபோதகர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி
4. கல்வி மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து கர்தினால் டர்க்சன்
5. சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களைத் திரும்பி அழைப்பதற்கு இலங்கை அரசு முயற்சி
6. ஆசிய-ஐரோப்பாவை இணைக்கும் கடலடி இரயில் சுரங்கப்பாதை துருக்கியில் திறப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறந்த கர்தினால்கள், ஆயர்களுக்காக திருத்தந்தை செபம்
நவ.04,2013. நல்ல, அதேவேளை நம்பிக்கையுள்ள ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வெகுமதியை இறைவன், கடந்த
12 மாதகாலத்தில் திருஅவையில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கு
வழங்கவேண்டும் என செபிப்போம் என இத்திங்கள் காலை தூய பேதுரு பேராலயத்தில்
நிறைவேற்றிய திருப்பலியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப்
படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின்
அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை"
என தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8ம் அதிகாரத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இறை அன்பே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மற்றும் ஆழமான நோக்கம் எனவும் எடுத்துரைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இறுதி வாரம் முதல் 12 மாதங்களில்
உயிரிழந்த திருஅவைத் தலைவர்களுக்காக நவம்பர் முதல் வாரத்தில் தூய பேதுரு
பசிலிக்காவில் திருத்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றும் பழக்கத்தையொட்டி, இத்திங்களன்று அவ்வான்மாக்களின் இளைப்பாற்றிக்காகத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேயான அன்புப்பிணைப்பை பாவம் ஒன்றே முறிக்க முடியும் எனினும், இறைவன் அப்பிணைப்பை மீண்டும் உருவாக்க மனிதரின் மரணத்திற்குப் பின்னரும் அவரைப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கிறா ர் என்றார்.
நம்மால் அன்புகூரப்பட்டவர்கள் அல்லது நமக்கு மிக நன்றாகத் தெரிந்தவ்ர்கள் உயிரிழக்கும்போது ' இவர்களின்
வாழ்வும் இவர்களின் பணியும் இவர்கள் திருஅவைக்கு ஆற்றிவந்துள்ள சேவையும்
என்னவாகும் என்ற கேள்வி நமக்குள் எழும்புவது இயல்பே என்ற திருத்தந்தை, உயிரிழந்தவர்கள்
அனைவரும் இறைவனின் கைகளில் தங்கள் அடைக்கலத்தைப் பெற்றுள்ளனர் என்றார்
அவர். இறைவன் தம் காயமுற்ற கைகளால் நமக்கு ஆறுதலையும் கருணையையும்
வழங்குகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். முடிவற்ற
வாழ்வுக்கான உயிர்ப்பின் மீதான நம் நம்பிக்கை குறித்தும் தன் மறையுரையில்
எடுத்தியம்பிய திருத்தந்தை, கடந்த 12 மாத காலத்தில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காகச் செபிக்க வேண்டிய நம் கடமையையும் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியோடு வரவேற்போம்
நவ.04,2013. கடவுளின் ஒரு குழந்தையைக்கூட அவரது இதயத்திலிருந்தும் நினைவிலிருந்தும் அழிக்கக்கூடிய எந்தத் தொழிலோ அல்லது சமூக நிலையோ, எந்தப் பாவமோ அல்லது குற்றமோ கிடையாது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு, சக்கேயுவின் மனமாற்றத்தை விளக்கும் நற்செய்தி வாசகத்தை(லூக். 19:1-10) மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதே இல்லை, அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டே இருக்கிறார் என்று கூறினார்
சக்கேயு, உரோமையப் பேரரசுக்கு வரி வசூலித்துக் கொடுப்பவராக, வெறுக்கப்பட்ட உரோமைய ஆக்ரமிப்பாளர்க்கு நண்பராய், காணாமற்போன ஆடாய், ஒதுக்கி வைக்கப்பட்டவராய் இருந்தார், இவர் தனது மோசமான நிலையால் இயேசுவை நெருங்க இயலாதவராய் இருந்திருக்கக்கூடும், இவர் குள்ளமாக இருந்ததால் மரத்தின்மேல் ஏறி அந்தப் பக்கம் சென்ற இயேசுவைப் பார்க்க விரும்பினார் என்று, சக்கேயுவைப் பற்றி விளக்கினார் திருத்தந்தை.
சக்கேயு செய்த இச்செயல் சிரிப்புக்குரியதாய் இருந்ததாலும், பெருங்கூட்டத்தில் இயேசுவைச் சந்திப்பதற்கு இவர் மேற்கொண்ட இவரின் உள்ளார்ந்த செயலை இது வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, உருவத்தில் சிறியவராய், எல்லாராலும் ஒதுக்கப்பட்டவராய் இருந்த சக்கேயுவை இயேசு அழைத்து அவரது வீட்டில் உணவருந்தச் சென்றார் என்றும் கூறினார்.
சக்கேயு என்பதற்கு கடவுள் நினைக்கிறார் என்று பொருள், அந்த எரிக்கோ நகரத்தில் அத்தனை நல்ல மனிதர்கள் இருக்க, இயேசு இந்த வரி தண்டுபவரின் வீட்டுக்குச் சென்று, இன்று இவ்வீட்டுக்கு மீட்பு வந்தது என்று சொன்னார், ஏனெனில் இவர் காணாமற்போன ஆடு என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரத்தின்மீது இருந்த சக்கேயுவை இன்று நோக்குவோம், நமது மனச்சான்றை எதுவும் அழுத்திக்கொண்டிருந்தால் அதனை இறக்கி வைத்துவிட்டு, பல காரியங்கள் செய்திருந்தால் அவற்றை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, மன்னிக்கப்படுவோம் என்ற உணர்வில், ஒருவர்
நமக்காகக் காத்திருக்கிறார் என நினைப்போம். மன்னிப்பதில் இயேசு ஒருபோதும்
சோர்வடைவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு நம்மையும் பெயர் சொல்லி அழைக்கிறார், நான் இன்று உன் வீட்டில் தங்க வேண்டும் என்று நம் இதயத்தின் ஆழத்தில் சொல்வதை நாம் உற்று கேட்போம். அவரை மகிழ்வோடு வரவேற்போம், அவர் நம் வாழ்வை மாற்றுவார், கல்லான
நம் இதயங்களை மாற்றி உணர்ச்சியுள்ள இதயங்களை நமக்கு அளிப்பார்.
தன்னலத்தினின்று விடுதலையளித்து நமது வாழ்வை அன்பின் கொடையாக மாற்றுவார், இயேசுவால் இதைச் செய்யமுடியும், இயேசுவை உற்றுநோக்குவோம் என, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மறைபோதகர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி
நவ.04,2013. இறைவனுக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கும் அமைதியாக, அதேவேளை, கடினமாக
உழைக்கும் ஆண் பெண் மறைபோதகர்கள் அனைவருக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன் என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில் திருப்பீடச்செயலகமும், ஏழ்மையின் அனைத்து வடிவங்களைப்போல், பசியும்
முன்னேற்றத் திட்டஙகளிலிருந்து மக்களைப் புறந்தள்ளிவைப்பதால் உருவாகிறது.
முன்னேற்றத் திட்டங்களில் மக்களையும் உள்ளடக்குவதை ஊக்குவிப்பது ஏழ்மையை
ஒழிக்க உதவும் என ஐ.நாவிற்கான திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர்
பிரான்சிஸ் சுள்ளிக்காட், ஐ.நா. அவையில் உரைத்ததை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கல்வி மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்து கர்தினால் டர்க்சன்
நவ.04,2013. கல்வி
மற்றும் உணவுப் பற்றாக்குறை இன்றையக் குழந்தைகளில் ஏற்படுத்தியுள்ள
பாதிப்புகள் குறித்து திருப்பீடத்தின் அறிவியல் கழகம் இத்திங்கள் முதல்
புதன் வரை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் பீட்டர்
டர்க்சன்.
திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவரான கர்தினால் டர்க்சன், திருப்பீட அறிவியல் கழகத்தின் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுகையில், பசியும் ஏழ்மையும் கல்வியோடு மிக நெருங்கியத் தொடர்புடையவைகளாக இருப்பதை மனதில்கொண்டு, இன்றைய
உலகில் பல இலட்சக்கணக்கான சிறார்கள் போதிய உணவின்றியும் கல்வி
வசதியின்றியும் துன்புறுவது குறித்து நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்
என்றார்.
'ரொட்டியும் மூளையும், கல்வியும் ஏழ்மையும்’ என்ற தலைப்பில் திருப்பீட அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கு, சத்துணவிற்கும் மூளை வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி நிற்கிறது எனவும் கூறிய கர்தினால் டர்க்சன், மூளையின் உதவி கொண்டு கண்டுபிடிக்கப்படும் அறிவியல் முன்னேற்றங்கள், ஏழ்மையை விரட்ட உதவுவதாக இருக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
மக்களிடையேயான
சகோதரத்துவ ஒருமைப்பாட்டின் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார் திருப்பீடத்தின்
நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களைத் திரும்பி அழைப்பதற்கு இலங்கை அரசு முயற்சி
நவ.04,2013.
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் மக்களை அந்நாட்டில்
இருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் முடிவடைந்த
நிலையில், இந்தப்
பொதுமன்னிப்புக் காலத்தில் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஏறக்குறைய
10 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
ஏற்கனவே ஏறக்குறைய 16,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத் தகவல்கள் கூறும்வேளை, இன்னுமிருக்கின்ற 4,000 பேரை இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பணியகம் மேலும் தெரிவித்தது.
சவுதியில்
சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் இந்தக்
காலப் பகுதியில் அங்கு இலங்கை தூதரகத்தில் தங்களைப் பதிவுசெய்து
கொண்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதிவரை இந்தப் பொது மன்னிப்புக் காலம் அந்நாட்டு அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்துக்குள் அதனைப் பெற தகுதியுடைய ஏறக்குறைய 10,000 பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டு விட்டதாகக் கூறிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்தின் மங்கள ரன்தெனிய, பெண்கள் உட்பட இன்னும் 6,000
பேரைப் பொருத்தவரையில் சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும் சவுதி அரேபிய
அரசின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந்நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது ஏறக்குறைய 10,000 சவுதி ரியால் தண்டனைப் பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறுகின்றது.
ஆதாரம் : ColomboPage
6. ஆசிய-ஐரோப்பாவை இணைக்கும் கடலடி இரயில் சுரங்கப்பாதை துருக்கியில் திறப்பு
நவ.04,2013. ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் விதமாக, துருக்கியில், கடலுக்கடியில் செல்லும், இரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில், 'Marmaray' என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த இரயில், இரண்டு தீவுகளை இணைக்கிறது; இந்த இரயில் சேவைமூலம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 75 ஆயிரம் பயணிகள் செல்ல முடியும். நாள் முழுவதும், 10 இலட்சம் பேர் பயணிக்க முடியும்.
கடந்த வாரம் நடந்த துவக்க விழாவில் பங்கேற்ற, துருக்கி அதிபர் அப்துல்லா குல், பிரதமர் ரீசேப் தயீப் எர்டோகன், ஜப்பான் பிரதமர் ஷிங்ஜோ அபே உள்ளிட்டோர், இந்தச் சுரங்க இரயிலில் பயணித்தனர்.
துருக்கி குடியரசாகி, 90 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், இந்த இரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியிலான இரயில் சேவையால், இஸ்தான்புல்லில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க முடியும் என்றும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு, 4 நிமிடத்தில் சென்றடைய முடியும், என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடலுக்கடியில் 13.6 கி.மீ., நீளம், 1.4 கி.மீ. ஆழம், 55 மீட்டர் சுற்றளவு கொண்ட இரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 2004ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால், அகழ்வாராய்ச்சி காரணமாக, இப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இரயில் பாதை அமைப்பதற்கான மொத்தச் செலவில், நான்கில் ஒரு பகுதி நிதியை, ஜப்பான் வழங்கியுள்ளது.
இந்த இரயில் பாதை அமைப்பு, முதன் முதலில் 1860ம் ஆண்டு ஒட்டமான் அரசின் சுல்தானால் திட்டமிடப்பட்டது.
No comments:
Post a Comment