Wednesday, 22 January 2014

செய்திகள் - 21.01.14

செய்திகள் - 21.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம் ஆண்டவரின் மகத்துவத்தோடு உரையாடுவதற்கு நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாக்கவேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ்: அன்றாட வாழ்வில் நமது விசுவாசத்தை வாழ அழைப்பு

3. சிரியாவுக்காகச் செபிக்குமாறு இங்கிலாந்து பேராயர் வேண்டுகோள்

4. கர்தினால் Wako :  தென் சூடானில் அமைதிக்கு அழைப்பு

5. மியான்மாரில் கிறிஸ்தவர்களின் நிலங்களும் பள்ளிகளும் திருப்பி வழங்கப்படுமாறு அரசுக்கு கோரிக்கை

6. மலேசியாவில் சமய சுதந்திரத்துக்காகப் போராடும் அருள்பணி லாரன்சுக்கு ஆதரவாக கோலாலம்பூர் பேராயர்

7. தென் கொரியாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தலத்திருஅவையோடு அரசு ஒத்துழைக்கும், பிரதமர்

8. உலகின் செல்வத்தில் பாதி 85 பேரிடம் உள்ளது, ஆக்ஸ்ஃபாம்

9. சுற்றுலாக்கள் எதிர்பார்த்ததைவிட 2013ம் ஆண்டில் அதிகம், ஐ.நா.

10. 6,000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம் ஆண்டவரின் மகத்துவத்தோடு உரையாடுவதற்கு நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாக்கவேண்டும்

சன.21,2014. நாம் கடவுளோடு உரையாடுவதற்கு சிறியவர்களாகவும் தாழ்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், அதேசமயம், சிறியவர்களையும் தாழ்மையான இடத்தைக் கொண்டிருப்பவர்களையும் கடவுள் எப்போதும் தேர்ந்து கொள்கின்றார் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், கடவுளுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையே இருக்கும் தனியுறவு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
நம் ஆண்டவரின் மகத்துவத்தோடு உரையாடுவதற்கு நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும், கடவுள் எப்போதும் நம் பெயர்களைச் சொல்லி நம் நிலைக்கு வந்து நம்முடன் பேசுகிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
நாம் எப்பொழுதும் வெளித்தோற்றத்தை அல்லது மக்களின் வல்லமையைப் பார்க்கத் தூண்டப்படுகிறோம், ஆனால் கடவுள் வித்தியாசமான கூறைக் கொண்டிருக்கிறார், இவ்வுலகில் வல்லமையுடையவர்களைக் குழப்பும் பலவீனமான மற்றும் மென்மையானவர்களை அவர் தேர்ந்து கொள்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, கடவுள் தாவீதைத் தேர்ந்துகொண்டது என்றுரைத்த திருத்தந்தை, குடும்பத்தில் சிறிய மகனாக இருந்த தாவீதைக் கடவுள் தேர்ந்துகொண்டார், அவர் தனது தந்தையால் ஆடுகளைப் பராமரிப்பதற்கு அனுப்பப்பட்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் தாவீது அரசரானபோது இரு கடுமையான பாவங்கள் புரிந்தார், ஆயினும், அவர் தன்னைத் தாழ்த்தி, தனது சிறுமையை உணர்ந்து, தனது பாவத்தைக் கடவுளிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டி தவமும் செய்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு தாழ்ச்சியும், கருணையும் அவசியம், ஏனெனில் இவை நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாத்து கடவுளைப் பிரியப்படுத்துகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ்: அன்றாட வாழ்வில் நமது விசுவாசத்தை வாழ அழைப்பு

சன.21,2014. நம் அன்றாட வாழ்வில் நமது கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்ந்தால், நம் வேலையும் நாம் கிறிஸ்தவராய் இருப்பதன் மகிழ்வைப் பரப்புவதற்கு ஒரு வாய்ப்பாக மாறும் என, இச்செவ்வாய் Twitter செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், புனித ஆக்னஸ் விழாவை முன்னிட்டு இச்செவ்வாய் பகல் 12.30 மணிக்கு வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இரண்டு செம்மறி ஆடுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கொடுக்கப்பட்டன.
இந்த ஆடுகளிலிருந்து எடுக்கப்படும் உரோமங்களினால், பேராயர்கள் அணியும் பால்யம் என்ற கழுத்துப்பட்டைத் தயாரிக்கப்படுகின்றது.
இந்தப் பால்யங்கள், வத்திக்கான் பசிலிக்காவில் புனித பேதுரு கல்லறைப் பீடத்தில் ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்படுகின்றன.
ஜூன் 29ம் தேதி தூயவர்கள் பேதுரு பவுல் விழாவன்று இப்பெட்டியிலுள்ள பால்யங்களைப் புதிய பேராயர்களுக்குத் திருத்தந்தையர் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. சிரியாவுக்காகச் செபிக்குமாறு இங்கிலாந்து பேராயர் வேண்டுகோள்

சன.21,2014. சிரியாவில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இப்புதனன்று தொடங்கும் உலக நாடுகளின் பேச்சுவார்த்தை வெற்றியடையச் செபிக்குமாறு கேட்டுள்ளார் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் நிக்கோல்ஸ், பத்துப் பேருக்கு நால்வர் வீதம் நாட்டைவிட்டு வெளியேறக் காரணமாகியுள்ள சிரியாவின் சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு செபிக்க விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில் போரிடும் குழுக்கள் மத்தியில் அமைதி நிலவுமாறு அந்நாட்டு ஆயர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருவதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.
மேலும், சிரியாவின் அமைதி குறித்து இம்மாதம் 22, இப்புதனன்று ஜெனீவாவில் தொடங்கும் பேச்சுவார்த்தையையொட்டி கூட்டம் நடத்திய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், சிரியாவில் இடம்பெறும் சண்டைக்கு இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வு அல்ல என்றும், அப்பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு மனிதாபிமான உதவிகளுக்கு உறுதியளிக்குமாறு கேட்டுள்ளது.
இன்னும், சிரியாவில் ஏறக்குறைய மூன்றாண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையில் ஏறக்குறைய 11 ஆயிரம் கைதிகள் சித்ரவதைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாய் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் Wako :  தென் சூடானில் அமைதிக்கு அழைப்பு

சன.21,2014. தென் சூடான் அரசியல் தலைவர்கள் தங்களின் சொந்த நலன்களைப் பின்னுக்குத் தள்ளி, அந்நாடு தற்போது எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளைக் களைவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளார் Khartoum பேராயர் கர்தினால் Zubeir Wako.
சூடான் மற்றும் தென் சூடான் ஆயர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு, தென் சூடான் தலைநகர் ஜூபா வந்துள்ள கர்தினால் Wako, நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றும், நாம் ஒருவர் ஒருவரைக் கொலை செய்யக்கூடாது என்றும் கூறினார்.
தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir ன் ஆதரவாளர்களுக்கும், அந்நாட்டின் முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Macharன் ஆதரவாளர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கு எத்தியோப்பியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேசமயம், தென் சூடானில் தொடர்ந்து நடந்துவரும் கடும் சண்டையில் ஐ.நா. நிவாரணப்பணி மையத்தில் தஞ்சம் தேடியிருக்கும் மக்களில் 34 பேர் காயமடைந்துள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

5. மியான்மாரில் கிறிஸ்தவர்களின் நிலங்களும் பள்ளிகளும் திருப்பி வழங்கப்படுமாறு அரசுக்கு கோரிக்கை

சன.21,2014. மியான்மாரின் கடந்தகால இராணுவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சபைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும் பள்ளிகளும் திருப்பி வழங்கப்படுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் சார்லஸ் போ.
தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்குமென இக்கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளார் பேராயர் போ.
மியான்மாரில் பல கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்களால் தொடங்கப்பட்டவை என்றும், கல்வி மற்றும் நலவாழ்வுத் துறைகளில் கிறிஸ்தவர்கள் நாட்டுக்குச் செய்யும் சேவைகளை அங்கீகரிக்காமல் அந்நாட்டின் முந்தைய இராணுவ அரசு கிறிஸ்தவர்களின் நிலங்களையும், பள்ளிகளையும் பறிமுதல் செய்தது என்றும் உரைக்கும் பேராயரின் அறிக்கை, கிறிஸ்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் திருப்பி வழங்கப்படுமாறு அரசைக் கேட்டுள்ளார்.
மியான்மாரில் மதங்களுக்கிடையே, குறிப்பாக, பெரும்பான்மை புத்த மதத்தவருக்கும், சிறுபான்மை முஸ்லிம் மதத்தவருக்கிடையே ஆழமான பிரிவினைகள் காணப்படும்வேளை, அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் போ.

ஆதாரம் : Fides

6. மலேசியாவில் சமய சுதந்திரத்துக்காகப் போராடும் அருள்பணி லாரன்சுக்கு ஆதரவாக கோலாலம்பூர் பேராயர்

சன.21,2014.  மலேசியாவில் சமய சுதந்திரத்துக்காகப் போராடும் அருள்பணியாளர் லாரன்சுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இந்த அருள்பணியாளர்க்கு எதிரானச் செயல்பாடுகள் அந்நாட்டின் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்று கூறியுள்ளார் கோலாலம்பூர் பேராயர் மர்ஃபி பாக்யம்.
கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தலாம் என்பதற்காகப் போராடிவரும் ஹெரால்டு மலேசியா இதழின் ஆசிரியர் அருள்பணி லாரன்சின் உருவப்படம் எரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவ்வருள்பணியாளர் கொலை மிரட்டல்களை எதிர்நோக்கியிருப்பது குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் பாக்யம், அவ்வருள்பணியாளரின் உரிமைப் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் உள்ளூர் மொழி விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு, 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலத்தீன்-மலாய் அகராதியில் சான்றுகள் உள்ளன. இந்த அகராதி சில ஆண்டுகளுக்கு முன்னர் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
60 விழுக்காட்டினர் முஸ்லிம்களாக வாழும் மலேசியாவில் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சேலாங்கூரில் அண்மையில் நூற்றுக்கணக்கான விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews

7. தென் கொரியாவுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தலத்திருஅவையோடு அரசு ஒத்துழைக்கும், பிரதமர்

சன.21,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியத் தீபகற்பத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தலத்திருஅவையோடு சேர்ந்து அந்நாட்டு அரசும் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என தென் கொரிய பிரதமர் Hong Chung –won கூறியுள்ளார்.
புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும் செயோல் பேராயர் Andrew Yeom Soo- jung அவர்களை வாழ்த்துவதற்காக பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார் பிரதமர் Hong Chung –won.
2014ம் ஆண்டில் தென்கொரியாவில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன எனவும்,  இவ்வாண்டு ஆகஸ்டில் தென் கொரியாவின் Daejeon மறைமாவட்டத்தில் ஆசிய இளையோர் மாநாடும், 124 தென் கொரிய மறைசாட்சிகளை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் நிகழ்வும் நடைபெறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews

8. உலகின் செல்வத்தில் பாதி 85 பேரிடம் உள்ளது, ஆக்ஸ்ஃபாம்

சன.21,2014. உலகில் ஏழைகளுக்கும், செல்வந்தருக்குமிடையே சமத்துவமின்மை கட்டுப்பாடின்றி அதிகரித்துவரும்வேளை, உலகின் செல்வத்தில் பாதி 85 பேரிடம் உள்ளது என ஆக்ஸ்ஃபாம் பிறரன்பு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோசில் தொடங்கியுள்ள உலகப் பொருளாதார உச்சி மாநாட்டையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஆக்ஸ்ஃபாம் பிறரன்பு நிறுவனம், உலகின் பணக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களைக் கொண்டிருப்பது சனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனவும் கூறியுள்ளது.
உலகில் ஏழைகளுக்கும், செல்வந்தருக்குமிடையே அதிகரித்துவரும் இடைவெளி 2014ம் ஆண்டில் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கும் எனவும் இவ்வறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த உலக உச்சி மாநாட்டுக்கு இச்செவ்வாய் மாலை ஒலி-ஒளிச் செய்தி வழங்குவது இம்மாநாட்டின் நிகழ்ச்சிக் குறிப்பில் உள்ளது.

ஆதாரம் : Al Jazeera

9. சுற்றுலாக்கள் எதிர்பார்த்ததைவிட 2013ம் ஆண்டில் அதிகம், ஐ.நா.

சன.21,2014. இந்த உலகம் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுவந்தாலும், 2013ம் ஆண்டில் பன்னாட்டு அளவில் இடம்பெற்ற சுற்றுலாக்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததெனவும், 2012ம் ஆண்டைவிட 2013ம் ஆண்டில் மேலும் 5 கோடியே 20 இலட்சம் பேர் சுற்றுலா மேற்கொண்டனர் எனவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இத்திங்களன்று அறிவித்தது.   
2013ம் ஆண்டில் பன்னாட்டு அளவில் இடம்பெற்ற சுற்றுலாக்கள் 5 விழுக்காடு அதிகரித்து, சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை நூறு கோடிக்குமேல்  உயர்ந்துள்ளது என, ஐ.நா. உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) கூறியது.
சுற்றுலாக்கள் பல நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவியுள்ளன என்றும், ஆசியா, பசிபிக், ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர் என்றும் உலக சுற்றுலா நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN                         

10. 6,000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் கண்டுபிடிப்பு

சன.21,2014. பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள, பாண்டு பகுதியின் நாகரிகம், 6,000 ஆண்டுகள் பழமையானது என்பதை, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பகுதியில் கிடைத்த தாவரங்கள் மற்றும் எலும்புக்கூடுகளை, "கார்பன் டேட்டிங்' முறைப்படி ஆய்வு செய்ததில், இவற்றின் காலம் தெரியவந்துள்ளது. இப்பகுதியில், தானியங்கள், கோதுமை மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், எலும்பினால் செய்யப்பட்ட, அம்பு, கூர்மையான ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களும், இங்கு கிடைத்துள்ளன. பேனா முனைபோன்று, கூர்மையாகச் செதுக்கப்பட்ட, இரண்டரை அங்குல நீளமுள்ள, மான் கொம்பு கிடைத்துள்ளது. நுட்பமாகச் செதுக்குவதில், இப்பகுதி மக்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...