செய்திகள் - 17.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் கொடையை கைவிடக் கூடாது
2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்
3. திருத்தந்தை:ஆண்டவரே உமது அமைதியைத் தாரும் என்று இறைஞ்சுவதில் துணிச்சலை இழக்கக் கூடாது
4. பாக்தாத் நகரில் அனைத்து மதத்தினருக்கும் கிறிஸ்தவ மருத்துவமனை
5. பயங்கரவாதிகளுடன் பலனற்ற பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடக் கூடாது, பாகிஸ்தான் ஆர்வலர்கள்
6. யூத-கத்தோலிக்க உறவுகள் விழா சனவரி 17
7. எல் சால்வதோர் நாட்டில் பேராயர் ரொமேரோ அவர்களைக் கவுரவிக்கும் புதிய நடவடிக்கைகள்
8. தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின்னடைவு, ஓர் ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் கொடையை கைவிடக் கூடாது
சன.17,2014. தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களாகிய கிறிஸ்தவர்கள், பிற நாடுகளைப்போல சாதாரணமானவர்களாக உணரும்பொருட்டு, தாங்கள் கடவுளின் குழந்தைகளாய் இருப்பதை விற்பதற்கு அடிக்கடி சோதிக்கப்படுகின்றனர், இவ்வாறு இறைவார்த்தையை மறந்து தங்களின் சொந்த ஆசைகளைப் பின்செல்லுகின்றனர் என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, பிற நாடுகளைப் போன்று தங்களுக்கும் ஓர் அரசர் வேண்டும் என, யூத
மக்கள் இறைமனிதர் சாமுவேலிடம் கேட்டது பற்றிக் கூறும் இந்நாளின் முதல்
வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றியபோது இவ்வாறு எச்சரித்தார்.
இந்த மக்கள் அன்பின் ஆண்டவரையும், தாங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதையும் புறக்கணித்து உலகப்போக்கின் பாதையைத் தேடினர், இன்றும் பல கிறிஸ்தவர்கள் இவ்வாறே நட்க்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சோதனைகள் நம் இதயங்களைக் கடினப்படுத்துகின்றன, இதயம் கடினமாக, திறக்காமல் இருக்கும்போது இறைவார்த்தையால் அங்கே நுழைய முடியாது என்று விளக்கிய திருத்தந்தை, நம் இதயங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற உணர்விலிருந்து விலகிச்செல்லாதிருக்க, இறைவார்த்தையை வரவேற்போம் எனவும் கூறினார்.
நாம் விரும்பும் வழியில், விரும்புவதைச்
செய்யத் தூண்டும் தன்னலத்தை வெற்றிகொள்ள ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்
என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்
சன.17,2014. இக்காலத்தில் பலர் கிறிஸ்தவ ஒன்றிப்பில் நம்பிக்கையில்லாதிருந்தாலும், கிறிஸ்தவ
ஒன்றிப்பு நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென ஃபின்லாந்து
கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித ஹென்றியின் விழாவையொட்டி, ஃபின்லாந்து லூத்தரன் சபை பேராயர் Kari Makinen
அவர்கள் தலைமையில் வந்த அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவின்
பத்துப் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
கடவுள்
பற்றியே பேசப்படாத சமூக மற்றும் கலாச்சாரச் சூழல்களில் நம் விசுவாசத்தை
அறிக்கையிட வேண்டியிருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தம் மகனாகிய கிறிஸ்துவில் வெளிப்படுத்திய தமது அன்புக்குச் சான்றுகளாய் நாம் வாழ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஃபின்லாந்து
நாட்டின் பாதுகாவலராகிய புனித ஹென்றியின் விழாவையொட்டி அந்நாட்டின்
கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு ஆண்டுதோறும் வத்திக்கானில் திருத்தந்தையைச்
சந்திப்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை:ஆண்டவரே உமது அமைதியைத் தாரும் என்று இறைஞ்சுவதில் துணிச்சலை இழக்கக் கூடாது
சன.17,2014.
செபம் எத்துணை வலிமை வாய்ந்தது! ஆண்டவரே உமது அமைதியை எங்களுக்கு
அளித்தருளும் என்று இறைஞ்சுவதில் நாம் ஒருபோதும் துணிச்சலை
இழக்காதிருப்போம் என்று இவ்வெள்ளியன்று Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், Floreria என்ற பணியாளர் குழுவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் பசிலிக்கா, வத்திக்கான் தூய பேதுரு வளாகம், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கம், அப்போஸ்தலிக்க மாளிகை, உரோம் நகரின் பாப்பிறை பசிலிக்காக்கள் போன்றவற்றில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், இன்னும், திருத்தந்தையரின் பொது நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு இவர்கள் ஆற்றும் பணிகளுக்குத்
தனது நன்றியையும் தெரிவித்தார்.
இப்பணிக்கு நிறைய பொறுமையும், தியாக உணர்வும் தேவை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணியாளர்கள் வெளிப்படுத்தும் பொறுமை, நன்மைத்தனம், நிதானம் போன்ற பண்புகளில் தொடர்ந்து வளருமாறும் கேட்டுக்கொண்டார்.
Floreria என்ற பணியாளர்கள், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை உட்பட, திருத்தந்தையர் நடத்தும் நிகழ்வுகளில் இருக்கைகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பாக்தாத் நகரில் அனைத்து மதத்தினருக்கும் கிறிஸ்தவ மருத்துவமனை
சன.17,2014. பாக்தாத் நகரில் எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்து மதத்தினருக்குமெனத் திறக்கப்பட்டுள்ள ஒரு கத்தோலிக்க மருத்துவமனையின் மூலம், தாங்கள் ஈராக்கின் உண்மையான குடிமக்கள் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்த்த விரும்புகின்றனர் என, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
ஷியா
முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பாக்தாத் நகரின் கிழக்கே
திறக்கப்பட்டுள்ள புனித வளன் மருத்துவமனை பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம்
பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தினர்மீதும், குறிப்பாக, இஸ்லாமியர்மீதும் கொண்டுள்ள நல்லுணர்வை முஸ்லிம் மதத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர் எனக் கூறினார்.
ஈராக் கத்தோலிக்கத் திருஅவை எல்லா மதத்தினருக்கும் பணிபுரிவதில் திறந்த மனதாய் இருக்கின்றது என்பதை, இப்புதிய முயற்சியின்மூலம் காட்ட விரும்புகின்றது எனவும் முதுபெரும் தந்தை சாக்கோ தெரிவித்தார்.
மேலும், புனித
வளன் மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்கள்
கிறிஸ்தவர்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர் என ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews
5. பயங்கரவாதிகளுடன் பலனற்ற பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடக் கூடாது, பாகிஸ்தான் ஆர்வலர்கள்
சன.17,2014. பயங்கரவாதிகளுடன் பலனற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நாடெங்கும்
பயத்தையும் வன்முறையையும் பரப்பும் பயங்கரவாதத்துக்கு ஏதிராக உறுதியான
நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் பாகிஸ்தான் கிறிஸ்தவ மற்றும்
முஸ்லிம் சமூக ஆர்வலர்கள்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இளம் மாணவர் Aitzaz Hassan, இரகசிய காவல்துறை அதிகாரி Chaudhry Aslam Khan ஆகிய இருவரின் நினைவாக இடம்பெற்ற மெழுகுதிரி வழிபாட்டில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள், பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்குச் சரியான யுக்திகளைக் கையாளுமாறு அரசை வற்புறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான்
முழுவதும் பல தன்னார்வ அமைப்புகள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டு
அந்நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்குக் குரல் கொடுத்தனர்.
Hanguவைச் சேர்ந்த இளம் மாணவர் Aitzaz Hassan பயங்கரவாதத்துக்கு ஏதிராகப் போராடியவர்.
ஆதாரம் : AsiaNews
6. யூத-கத்தோலிக்க உறவுகள் விழா சனவரி 17
சன.17,2014.
பல ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் சனவரி 17ம் தேதியன்று யூத-கத்தோலிக்க
மதத்தவரின் உறவுகள் சிறப்பிக்கப்படுவதையொட்டி அர்ஜென்டீனா நாட்டு யூதமதப்
பிரதிநிதிகள் குழு ஒன்று வத்திக்கானுக்கு வந்துள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தின் யூதமத மூலங்களை நினைவுகூரவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்னர் இவ்விரு மதங்களுக்கிடையே இடம்பெறும் உரையாடலைக் கொண்டாடவும், நடைமுறைச்
செயல்கள் வழியாக இத்தகைய உரையாடலை ஊக்குவிக்கவுமென சனவரி 17ம் தேதியன்று
இத்தகைய நிகழ்வு 1990ம் ஆண்டில் இத்தாலியில் முதன்முறையாக நடத்தப்பட்டது.
இலத்தீன் அமெரிக்க யூதமத குருத்துவக் கல்லூரி அதிபர் ராபி Abraham Skorka அவர்களின் தலைமையில் இந்த யூதமதக்குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற
மே 24 முதல் 26 வரை புனிதபூமிக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தைத்
தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ராபி Skorka, இத்திருப்பயணம், இஸ்ரேல் மற்றும் அப்பகுதியின் அனைத்து மக்களுக்கும் ஆழமான நட்பு மற்றும் அமைதியின் செய்தியைக் கொண்டுவரும் எனக் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ராபி Skorka அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNA
7. எல் சால்வதோர் நாட்டில் பேராயர் ரொமேரோ அவர்களைக் கவுரவிக்கும் புதிய நடவடிக்கைகள்
சன.17,2014.
எல் சால்வதோர் நாட்டின் முன்னாள் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ அவர்களைக்
கவுரவிக்கும் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் அந்நாட்டு
அரசுத்தலைவர் Mauricio Funes.
பேராயர்
ரொமேரோ அவர்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள்
கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பேராயரைக் கவுரவிக்கும் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ள அரசுத்தலைவர் Funes, பேராயர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோரின் ஆன்மீகத் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சான்
சால்வதோரில் 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி
நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் ரொமேரோவின்
பெயரை அரசுத்தலைவர் மாளிகையிலுள்ள முக்கிய அறைக்குப் வைத்துள்ளதோடு, அந்நாட்டின் பன்னாட்டு விமானநிலையத்துக்கும் பேராயர் ரொமேரோவின் பெயரை வைப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் அரசுத்தலைவர் Funes.
1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி பிறந்த பேராயர் ரொமேரோ அவர்களின் நூற்றாண்டு விழா 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும்வேளை, பேராயர்
ரொமேரோ அவர்கள் விரைவில் புனிதராக அறிவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையை
வெளியிட்டுள்ளார் திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia.
ஆதாரம் : ICN
8. தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின்னடைவு, ஓர் ஆய்வு
சன.17,2014. தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அவர்களில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரைப் படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்குத்தான் தாய்மொழியில், முதல் வகுப்புப் பாடப் புத்தகங்களையே படிக்க முடிகிறது என்றும் ASER என்ற கல்வியின் தரம் குறித்த ஆண்டறிக்கை கூறுகிறது.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 26 ஆயிரம் மாணவர்களிடம் எடுத்த ஆய்வில், ஆறிலிருந்து
எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31 விழுக்காட்டினருக்கு
மட்டுமே வகுத்தல் கணக்குத் தெரிந்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்விக்கான உரிமை என்ற சட்டத்தின் கீழ், பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடங்களை முடிப்பதில் கவனம் செலுத்துவதைவிட, குழந்தைகள் கற்பதற்கான இலக்குகளை எட்ட ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
இதற்கிடையே, இந்த அறிக்கை முடிவுகள் சரியனவை அல்ல என்று கூறும் தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் டி.கண்ணன், கடந்த காலங்களைவிட இக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்தே இருக்கிறது, அரசுகளும் கல்வித்துறையில், கட்டமைப்பு
வசதிகளைப் போதிய அளவு தந்திருக்கின்றன. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை
இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment