Thursday, 16 January 2014

செய்திகள் - 15.01.14

செய்திகள் - 15.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடச் செயலருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் இடையே வத்திக்கானில் இடம்பெற்ற சந்திப்பு

2. ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள சீரோ மலபார் மறைமாவட்டம் புலம்பெயர்ந்தோருக்கு முதன்மை இடம் - கர்தினால் Mar George Alencherry

3. சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் பல அவசர உதவிகள் தேவை - பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை

4. திருஅவை வரலாற்றில் தனித்துவம் - கர்தினாலாக உயர்த்தப்படும் பேராயர் Capovilla 98 வயதானவர்

5. ஏழைகளுக்குப் பணியாற்றுவது திருஅவையின் பணி என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை - அமலமரி தியாகிகள் சபையின் அகில உலகத் தலைவர்

6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Haiti நாட்டை அனைவரின் கவனத்திற்கும் கொணர்ந்துள்ளார் - ஆயர் Chibly Langlois

7. புலம்பெயரும் மக்கள், புள்ளிவிவரங்கள் அல்ல, உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்கள் - Los Angeles பேராயர்

8. Haiyan சூறாவளியில் சிக்கிய குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வகுப்பறைகளில்

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடச் செயலருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் இடையே வத்திக்கானில் இடம்பெற்ற சந்திப்பு

சன.15,2014. திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்களுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
சனவரி 14, இச்செவ்வாயன்று பேராயர் Parolin அவர்களுக்கும், அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அவர்களுக்கும் இடையே திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்பு ஏறத்தாழ 100 நிமிடங்கள் நீடித்தது என்றும், சிரியாவில் அமைதி நிலவ, ஜெனீவாவில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, இச்சந்திப்பிலும் சிரியாவின் அமைதி முன்னிலை வகித்தது என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், பன்னாட்டுத் தூதர்களுக்கு வழங்கிய உரையில், மனிதாபிமான எண்ணங்களுடன் மனிதர்களுக்கு உதவிகள் செய்வதே உலகில் அமைதியைக் கொணரும் என்று கூறியது, இந்தச் சந்திப்பிலும் பேசப்பட்டது என்று திருப்பீடப் பேச்சாளர் எடுத்துரைத்தார்.
மேலும், அமைதிக்காகப் போராடும் பல்வேறு ஆப்ரிக்க நாடுகள் குறித்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் வெளியான நலவாழ்வு குறித்த சட்டம், மத உரிமைகளுக்கும், ஒருவரின் மனசாட்சிக்கும் இடையூறாக இருக்கக்கூடாது என்ற கருத்தும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அருள் பணியாளர் Lombardi அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஜான் கெர்ரி அவர்கள், திருப்பீடச் செயலருடன் மேற்கொண்ட இச்சந்திப்பில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள சீரோ மலபார் மறைமாவட்டம் புலம்பெயர்ந்தோருக்கு முதன்மை இடம் - கர்தினால் Mar George Alencherry

சன.15,2014. ஆஸ்திரேலியாவில் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள சீரோ மலபார் வழிபாட்டு முறை கத்தோலிக்க மறைமாவட்டம் பல நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்வதில் முதன்மை கவனம் செலுத்தவேண்டும் என்று சீரோ மலபார் வழிபாட்டு முறை தலைமை ஆயர் கர்தினால் Mar George Alencherry அவர்கள் கூறினார்.
சனவரி 11, கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மெல்பர்ன் நகரில் உருவாக்கப்பட்ட சீரோ மலபார் வழிபாட்டு முறை மறைமாவட்டம், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள 35,000க்கும் அதிகமான சீரோ மலபார் கத்தோலிக்கர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட மறைமாவட்டம் என்று கர்தினால் Alencherry அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு பணிகள் புரிவது, கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் முக்கியப் பணியாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Alencherry அவர்கள், இன்றையச் சூழலில், புலம்பெயர்ந்தோருக்கு அதிக கவனம் செலுத்துவது திருஅவையின் முக்கியப் பணி என்பதையும் வலியுறுத்தினார்.
உலகெங்கும் 36 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட சீரோ மலபார் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் மறைமாவட்டங்களில் ஒன்று, 2001ம் ஆண்டு, முதன் முறையாக இந்தியாவுக்கு வெளியே, சிகாகோ நகரில் அமைக்கப்பட்டது. அதற்குப் பின், இரண்டாவது முறையாக, மெல்பர்ன் நகரில் இப்புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக போஸ்கோ புதூர் அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார். இம்மறைமாவட்டத்தின் பேராலயம், இறைவனின் தாயான மரியாவுக்கு அர்ப்பணம் செய்யப்படவுள்ளது.

ஆதாரம் : AsiaNews

3. சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் பல அவசர உதவிகள் தேவை - பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை

சன.15,2014. சிரியாவில் அரசியல் வழியில் தீர்வுகள் கிடைப்பதற்கு முன், அங்கு மனிதாபிமான அடிப்படையில் பல அவசர உதவிகள் தேவை என்று பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை விண்ணப்பித்துள்ளது.
வருகிற 22ம் தேதி, சிரியாவின் அமைதி குறித்து ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கூட்டத்தையொட்டி, உரோம் நகரில் பாப்பிறை அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஒரு கருத்தரங்கில் இந்த விண்ணப்பம் வெளியிடப்பட்டது.
130,000 பேருக்கும் மேலாக உயிர்களைப் பலிவாங்கியுள்ள சிரியாவின் உள்நாட்டுப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் எனவும், அதற்கு, அந்நாட்டில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் முற்றிலுமாகக் களையப்படவேண்டும் என்றும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டது.
அரசியல் தீர்வுகள் கிடைக்கும்வரை காத்திருந்தால், அங்கு வாழும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளையோர் தங்கள் எதிர்காலத்தை முற்றிலும் இழந்துவிடும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உலக நாடுகள் செய்வதற்கு முன்வருவது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருஅவை வரலாற்றில் தனித்துவம் - கர்தினாலாக உயர்த்தப்படும் பேராயர் Capovilla 98 வயதானவர்

சன.15,2014. குடும்பங்களின் மகிழ்வுக்காக அமைதியில், மறைவில் செபித்துவரும் பல்லாயிரம் அருள் பணியாளர்களில் ஒருவர் என்ற நிலையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கர்தினால் பொறுப்பை தான் மிகுந்த மன அமைதியோடு ஏற்றுக் கொள்வதாக பேராயர் Loris Francesco Capovilla அவர்கள் கூறினார்.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பைக் குறித்து பேராயர் Capovilla அவர்கள், Zenit செய்திக்கு அளித்த பேட்டியில், தன்னால் தற்போது திருஅவைக்கு ஆற்றக்கூடிய பணி இறைமக்களுக்காகச் செபிக்கும் பணி ஒன்றே என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, கடந்த ஞாயிறன்று அறிவித்த 19 புதிய கர்தினால்களில் வயதில் மிகவும் அதிகமானவர், Mesembria என்ற மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Capovilla அவர்கள்.
98 வயதை நிறைவு செய்துள்ள பேராயர் Capovilla அவர்கள், முன்னாள் திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களுக்கு செயலராகப் பணியாற்றியவர் என்பதும், திருஅவை வரலாற்றில் இத்தனை முதுமையான வயதில் கர்தினாலாக உயர்த்தப்படுபவர் இவராகத்தான் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit

5. ஏழைகளுக்குப் பணியாற்றுவது திருஅவையின் பணி என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை - அமலமரி தியாகிகள் சபையின் அகில உலகத் தலைவர்

சன.15,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டுப் பேராயர் Orlando Beltran Quevedo அவர்களுக்கு, கர்தினால் பொறுப்பை வழங்கியதன் மூலம், ஏழைகளுக்குப் பணியாற்றுவது திருஅவையின் முக்கியமான பணி என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார் என்று அமலமரி தியாகிகள் துறவுச்சபையின் அகில உலகத் தலைவர், அருள் பணியாளர் Louis Lougen அவர்கள் கூறினார்.
அமலமரி தியாகிகள் துறவுச் சபையின் உறுப்பினரும், பிலிப்பின்ஸ் நாட்டின் Cotabato உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Quevedo அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய கர்தினாலாகத் தேர்ந்துள்ளதைக் குறித்து, அருள் பணியாளர் Lougen அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கர்தினால் என்ற சொல்லுக்கு, "திருஅவையின் இளவரசர்" என்ற அடைமொழியும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அருள் பணியாளர் Lougen அவர்கள், திருஅவையில் தலைமைப் பொறுப்பு என்பது பணியாற்றுவதற்கே என்பதை, திருத்தந்தையின் இந்தத் தெரிவு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.
ஏழைகள் மத்தியில் உழைப்பதிலும், Mindanao தீவில் இஸ்லாமியருடன் உரையாடல்களை மேற்கொள்வதிலும் தயக்கமின்றி உழைத்த பேராயர் Quevedo அவர்களைத் தெரிவு செய்ததன் வழியாக, திருத்தந்தை சரியானதொரு செய்தியை நமக்கு அளித்துள்ளார் என்று அமலமரி தியாகிகள் துறவுச்சபையின் அகில உலகத் தலைவர் அருள் பணியாளர் Lougen எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides

6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Haiti நாட்டை அனைவரின் கவனத்திற்கும் கொணர்ந்துள்ளார் - ஆயர் Chibly Langlois

சன.15,2014. கர்தினால்களில் ஒருவராகத் தன்னை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்ததால், Haiti நாட்டை அனைவரின் கவனத்திற்கும் கொணர்ந்துள்ளார் என்று Haiti ஆயர்கள் பேரவைத் தலைவரான ஆயர் Chibly Langlois அவர்கள் கூறினார்.
65 வயது நிறைந்த ஆயர் Langlois அவர்கள், 2010ம் ஆண்டு Haiti நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அரும்பணியாற்றிவர் என்றும், அதனைத் தொடர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் என்றும் CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்து, அறிவித்துள்ள 19 கர்தினால்களில், 18 பேர் தற்போது பேராயர்களாகவும், முன்னாள் பேராயர்களாகவும் பணியாற்றிவர்கள் என்பதும், ஆயர் Langlois ஒருவர் மட்டுமே ஆயராக உள்ள நிலையில் இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயர் Langlois அவர்களே, Haiti நாட்டில், முதன் முறையாக கர்தினால் பொறுப்பை ஏற்கும் ஆயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA/EWTN

7. புலம்பெயரும் மக்கள், புள்ளிவிவரங்கள் அல்ல, உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்கள் - Los Angeles பேராயர்

சன.15,2014. நாடுவிட்டு நாடு செல்லும் மக்களை, வெறும் புள்ளிவிவரங்களாகவும், எண்ணிக்கைகளாகவும் கருதாமல், அவர்கள் உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டும் என்று அமெரிக்காவின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் Los Angeles நகரில் அண்மையில் நடைபெற்ற தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்தின் ஓர் அமர்வில் உரையாற்றிய Los Angeles பேராயர் Jose Gomez அவர்கள் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, சிரியா நாட்டில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினால் இல்லங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள இலட்சக்கணக்கான மக்களில் ஒரு சிலருக்காகிலும் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டும் என்று பிரித்தானிய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சனவரி 19, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கபடவிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் அகில உலக நாளையொட்டி, பிரித்தானிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Patrick Lynch அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides / ICN

8. Haiyan சூறாவளியில் சிக்கிய குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வகுப்பறைகளில்

சன.15,2014. பிலிப்பின்ஸ் நாட்டில், Haiyan என்ற கொடும் சூறாவளியில் சிக்கிய San Roque என்ற பகுதியில் குழந்தைகள் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வகுப்பறைகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் அந்நாட்டில் பெருமளவு அழிவுகளை உருவாக்கிய Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட 5 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்பது முக்கியம் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட "Back to School" என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன.
வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் வாழும் குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தால், அவர்கள் வேறு பல வழிகளில் தங்கள் எதிர்காலத்தை பாழாக்கும் வழிகள் உள்ளன என்பதால், அவர்களுக்கு இந்த ஏற்பாடுகளை பன்னாட்டு பிறரன்பு அமைப்புக்கள் உருவாக்கித் தந்துள்ளன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...