1. கான்கிளேவ் அவையில் நிலவும் ஆன்மீகச் சூழலைப்பற்றி அருள்தந்தை Federico Lombardi
2. புதியத் தொடர்புக் கருவிகள் வழியே தகவல்களை அறிந்துகொள்ளும் அனுபவத்தைவிட, புகை, ஆலய மணி ஆகிய அடையாளங்கள் தரும் அனுபவம் நிறைவானது
3. Boko Haram என்ற குழுவின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன - நைஜீரியப் பேராயர்
4. தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குழுக்களை அடக்க, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்
5. பாகிஸ்தான் லாகூரில் Sant'Egidio பிறரன்பு அமைப்பினர் ஈடுபட்டுள்ள துயர் துடைப்புப் பணிகள்
6. துபாயில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகள்
7. "பாதையை ஒளிரச் செய்யும் விவிலியம்" - முகநூலில் (Facebook) ஒரு புதிய விளையாட்டு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கான்கிளேவ் அவையில் நிலவும் ஆன்மீகச் சூழலைப்பற்றி அருள்தந்தை Federico Lombardi
மார்ச்,13,2013. இச்செவ்வாயன்று மாலை 7.42 மணிக்கும், இப்புதன் காலை 11.40 மணிக்கும் சிஸ்டின் சிற்றாலயத்திலிருந்து, கறுப்புப் புகை வெளியானபோதும், மக்கள்
அதைக் காண ஆயிரக்கணக்கில் காத்திருந்தது அவர்களுக்குள்ள ஆர்வத்தைக்
காட்டுகிறது என்ற வார்த்தைகளுடன் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை
அருள்தந்தை Federico Lombardi இப்புதன் மதியம் செய்தியாளர்கள் கூட்டத்தை ஆரம்பித்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கான்கிளேவ் அவை நடைபெற்ற நாட்களில், வத்திக்கானைச் சுற்றி பேருந்துகள் மற்றும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டபோதிலும், மக்கள்
நடந்தே வந்து புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியது உரோம்
மக்களின் ஈடுபாட்டை உணர்த்துகிறது என்றும் அருள்தந்தை Lombardi சுட்டிக்காட்டினார்.
இப்புதன் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், கான்கிளேவ் அவையில் நிலவும் ஆன்மீகச் சூழலையும், பங்கேற்கும் கர்தினால்களின் நல்ல உடல் நிலை ஆகியவை குறித்தும் அருள்தந்தை Lombardi விளக்கிக் கூறினார்.
கறுப்பு, வெள்ளை
ஆகிய புகைகளை வெளியிடும் புகைப்போக்கிக் கருவியில் பயன்படுத்தப்படும்
பல்வேறு வேதிப் பொருள்கள் பற்றியும் எடுத்துரைத்த அருள்தந்தை Lombardi, இந்தப் புகைகள் சிஸ்டின் சிற்றாலயத்திற்குள் நுழையும் வாய்ப்பில்லாததால், அங்குள்ள கர்தினால்களையோ அல்லது அக்கோவிலில் உள்ள புகழ்பெற்ற ஓவியங்களையோ எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
வாக்களிக்கச்
செல்லும் ஒவ்வொரு கர்தினாலும் மேற்கொள்ளும் சடங்குகள் குறித்து அண்மையில்
வத்திக்கான் வானொலியில் பேட்டியளித்த 80 வயதுக்கும் மேற்பட்ட ஜெர்மன்
கர்தினால் Karl Lehmann அவர்கள் விளக்கம் அளித்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய அருள்தந்தை Lombardi, கான்கிளேவ் அவை மிகவும் உன்னதமான ஓர் ஆன்மீகச் சூழலில் நடைபெறுவதை கர்தினால் அவர்களின் பேட்டி விளக்குகிறது என்று கூறினார்.
முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கான்கிளேவ் அவை தொடர்பான அனைத்து
நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மூலம் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார் என்றும், அவர் கர்தினால்கள் அனைவருடனும், கத்தோலிக்கத் திருஅவையுடனும் இந்த முக்கியமான நேரத்தில் செபத்தில் ஒன்றியுள்ளார் என்றும் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Lombardi.
2. புதியத் தொடர்புக் கருவிகள் வழியே தகவல்களை அறிந்துகொள்ளும் அனுபவத்தைவிட, புகை, ஆலய மணி ஆகிய அடையாளங்கள் தரும் அனுபவம் நிறைவானது
மார்ச்,13,2013. கணணி அடிப்படையில் வளர்ந்துள்ள பல்வேறு தொடர்பு பரிமாற்றங்களில் திருஅவை வளர்ந்திருந்தாலும், புதியத்
திருத்தந்தையின் தேர்வு அறிவிப்பையொட்டி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான
வழிகளைப் பயன்படுத்துவதையே திருஅவை இன்னும் விரும்புகிறது என்று
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் Federico Lombardi செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட, அண்மையத் திருத்தந்தையர்கள் மற்றும் திருஅவை தலைவர்கள் பலரும் Facebook, Twitter ஆகிய வழிகளைப் பயன்படுத்தினாலும், புதியத்
திருத்தந்தை தேர்வின் முடிவை அறிய கருப்பு அல்லது வெள்ளைப் புகை என்ற
அடையாளங்களையே திருஅவை இன்னும் விரும்புகிறது என்று அருள் தந்தை Lombardi கூறினார்.
புதியத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, வெள்ளைப் புகை வெளிவரும் நேரத்திற்கும், அவர் யார் என்பதை மக்கள் தெரிந்துகொள்வதற்கும் இடையே ஏறத்தாழ 45 நிமிடங்கள் கடக்கும் என்பதையும் கூறிய அருள்தந்தை Lombardi, அந்த 45 நிமிடங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியுள்ள மக்கள் ஒன்றாக இணைந்து அடையும் அனுபவம், உடனடித் தொடர்புகள் மூலம் குலையாமல் அமைவதும் ஒருவித அழகு என்று எடுத்துரைத்தார்.
வெளி வரும் புகை கருப்பா, வெள்ளையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுவதால், வெள்ளைப் புகை வெளிவரும்போது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய மணிகளும் ஒலிக்கும் என்று தெளிவுபடுத்திய அருள்தந்தை Lombardi, நமது புதியத் தொடர்பு கருவிகள் வழியே தகவல்களை அறிந்துகொள்ளும் அனுபவத்தைவிட, புகை, ஆலய மணி ஆகிய அடையாளங்கள் தரும் அனுபவம் நிறைவானது என்று கூறினார்.
3. Boko Haram என்ற குழுவின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன - நைஜீரியப் பேராயர்
மார்ச்,13,2013. நைஜீரியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் Boko Haram என்ற குழுவின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama தெரிவித்தார்.
லெபனான், கிரீஸ், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஏழுபேரை அண்மையில் கடத்தி, கொலை செய்த Ansaru என்ற குழுவைக் குறித்துப் பேசிய Jos பேராயர் Kaigama இவ்வாறு கூறினார்.
Boko Haram என்ற குழுவின் பெயரால் வன்முறைச் செயல்கள் தற்போது நைஜீரியாவில் மட்டுமல்லாமல், Cameroon, Mali போன்ற பல்வேறு ஆப்ரிக்க நாடுகளிலும் பரவியுள்ளதைக் காண முடிகிறது என்று பேராயர் Kaigama சுட்டிக்காட்டினார்.
வன்முறையாளர்களின் கொடுமைகளை நிறுத்த ஆப்ரிக்க நாடுகளின் பல்வேறு அரசுகளும், வெளிநாட்டு அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் Kaigama அழைப்பு விடுத்தார்.
4. தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குழுக்களை அடக்க, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்
மார்ச்,13,2013. தேவநிந்தனை என்ற கொடுமையான சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குழுக்களை அடக்க, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழு விண்ணப்பித்துள்ளது.
தேவநிந்தனை புரிந்தனர் என்ற பொய் குற்றம் சுமத்தி, கடந்த வாரம் லாகூரில் 178 கிறிஸ்தவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி, அமைதிப் பணிக்குழு இந்த விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளதாக பணிக்குழுவின் இயக்குனர் அருள் பணியாளர் Emmanuel Yousaf கூறினார்.
2009ம் ஆண்டு Gojra எனுமிடத்தில் தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆறு கிறிஸ்தவர்கள் எரித்து கொல்லப்பட்டதையும், 140 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதையும் தொடர்ந்து, நீதி மன்றங்கள் கூறிய பரிந்துரைகள் இன்னும் செயலாக்கப்படவில்லை என்று அருள்தந்தை Yousaf எடுத்துரைத்தார்.
லாகூரின்
புனித யோசேப்பு காலனியில் கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்ட வழக்கு
இத்திங்களன்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் துவங்கியுள்ளதையடுத்து, இந்த வழக்கு, நேரிய, தெளிவான முறையில் நடத்தப்படவேண்டும் என்று பல மதத் தலைவர்களும், அரசுத் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான்
நீதி மன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 80 விழுக்காடு
வழக்குகள் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள்
என்பது குறிப்பிடத்தக்கது.
5. பாகிஸ்தான் லாகூரில் Sant'Egidio பிறரன்பு அமைப்பினர் ஈடுபட்டுள்ள துயர் துடைப்புப் பணிகள்
மார்ச்,13,2013. பாகிஸ்தான் லாகூரில் உள்ள புனித யோசேப்பு கிறிஸ்தவ காலனியின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள Sant'Egidio பிறரன்பு அமைப்பினர் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வன்முறை நடப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னர் இக்குடும்பங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால், உயிர்ச் சேதம் ஏதுமின்றி இவர்கள் தப்பித்தனர் என்றும், இருப்பினும் இவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் என்றும் Sant'Egidio அமைப்பினர் கூறினர்.
பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே எளிய தொழிலாளிகள் என்றும், இந்த வன்முறைகளால் அச்சத்திற்குள்ளாகி இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவது மிகவும் அவசியம் என்றும் இவ்வமைப்பினர் எடுத்துரைத்தனர்.
தங்கள்
வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இழந்து தவிக்கும் இவர்களுடன் அனைத்து
கிறிஸ்தவ உலகும் செபத்தில் ஒன்றியிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தாங்கள்
வழங்கி வருவதாக Sant'Egidio அமைப்பினர் கூறினர்.
6. துபாயில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகள்
மார்ச்,13,2013. துபாயில் உள்ள மூவொரு இறைவன் கோவில் அதிகாரிகளும், இலங்கை தூதரகத் தலைமை அதிகாரியும் இணைந்து, துபாயில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் அமைந்துள்ள மூவொரு இறைவன் கோவில் ஆங்கிலிக்கன் சபையின் நேரடி கண்காணிப்பில் இருந்தாலும், 120க்கும் மேற்பட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் இக்கோவிலைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று இக்கோவிலின் நிர்வாகியான Ruwan Palapathwala என்ற போதகர் கூறினார்.
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை நாட்டவர் 2,75,000 பேர் என்றும், இவர்களில் 50 விழுக்காட்டினர் வீடுகளில் பணிபுரிபவகள் என்றும் போதகர் Palapathwala சுட்டிக்காட்டினார்.
மூவொரு இறைவன் கோவில் ஒவ்வொரு வாரமும் 11000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்றும், இவர்களில் 6000 பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றும் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.
7. "பாதையை ஒளிரச் செய்யும் விவிலியம்" - முகநூலில் (Facebook) ஒரு புதிய விளையாட்டு
மார்ச்,13,2013. “Light the Way: The Bible” அதாவது, "பாதையை ஒளிரச் செய்யும் விவிலியம்" என்ற பெயரில் முகநூலில் (Facebook) ஒரு புதிய விளையாட்டு இச்செவ்வாயன்று துவக்கப்பட்டுள்ளது.
வரலாற்று அலைவரிசையில் (History Channel) ஒளிபரப்பான 'விவிலியம்' என்ற குறுந்தொடரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, விவிலியத்தின் மீது இளையோருக்கு ஆர்வத்தைத் தூண்டும் என்று இந்த விளையாட்டை வடிவமைத்த Lightside Games என்ற நிறுவனத்தின் இயக்குனர் Brent Dusing, CNA என்ற கத்தோலிக்கச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
ஐந்து பாகங்களைக் கொண்டு, 10 மணி நேரம் நீடித்த 'விவிலியம்' தொடர், வரலாற்று அலைவரிசையில் மார்ச் 3ம் தேதி ஒளிபரப்பானபோது, 2013ம் ஆண்டு ஒளிபரப்பான பல தொடர்களில் இது பார்வையாளர் எண்ணிக்கையில் முன்னிலை வகித்தது.
இத்தொடர் உருவாக்கிய ஆர்வத்தின் அடிப்படையில், தற்போது இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது iPad மூலம் மக்களை அடையும் இந்த விளையாட்டு, ஏப்ரல் மாதத்திற்குள் iPhone வழியாகவும் கிடைக்கும் என்று இயக்குனர் Brent Dusing கூறினார்.
மோசேயின் வாழ்வு, இயேசுவின் வாழ்வு என்ற இரு முகநூல் விளையாட்டுக்களை Lightside Games நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment