Friday 29 March 2013

சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்

சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய்
 நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகின்றன. அதேசமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. குளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி. இது இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாகவே சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத்தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்திலேயே தங்கி விடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய் அல்லது, நீரழிவு நோய் என்று சொல்லப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  பரம்பரை மரபணுக்களில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு.
மக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை நோயால் உலகம் முழுவதிலும் 28 கோடியே 50 இலட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 5 கோடியே 8 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.


 

No comments:

Post a Comment