Tuesday, 12 March 2013

Catholic News in Tamil - 12/03/13

1. கர்தினால் சொதானோ : திருஅவையின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்

2. பேராயர் மரினி : அகிலத் திருஅவையும் செபத்தில் கான்கிளேவ் அவையோடு ஒன்றித்திருக்க அழைப்பு

3. கான்கிளேவின் திருவழிபாட்டு முறைகள்

4. வாகன ஓட்டுனர்கள், பூ வைப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 90 பேர் உறுதிமொழி

5. பாஸ்டன் கர்தினால் : கத்தோலிக்க நலப்பணிகளுக்கு மனச்சான்றின் உரிமைகள் தேவை

6. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 50 ஆயிர்த்துக்கும் மேற்பட்ட செய்திகள்

7. பாகிஸ்தான் ஆயர் : கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை அரசு தடை செய்திருக்கலாம்

8. நோய்எதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத தன்மை அதிகரிக்கிறது

9. மனிதர் 150 ஆண்டுகள் வாழ்வதற்கான மருந்து கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் சொதானோ : திருஅவையின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்

மார்ச்,12,2013. பிறரன்பின் உன்னதப் பணியைத் தாராள உள்ளத்துடன் செய்யக்கூடிய ஒரு திருத்தந்தையை நம் ஆண்டவர் நமக்கு அருளுமாறு செபிப்போம் என, கர்தினால் ஆஞ்சலோ சொதானோ கூறினார்.
அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெறும் "pro eligendo pontifice" என்ற திருப்பலியை இச்செவ்வாய் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் அனைத்துக் கர்தினால்களுடன் இணைந்து நிகழ்த்தி மறையுரையாற்றிய, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் சொதானோ இவ்வாறு கூறினார்.
பிறரன்பின் உன்னதப் பணியை உலக அளவில் சோர்வின்றி தொடர்ந்து செய்யும் வருங்காலத் திருத்தந்தைக்காகச் செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் சொதானோ, தனது மந்தைக்காக தனது வாழ்வைக் கொடுப்பதே ஒவ்வோர் ஆயரின் அடிப்படைப் பண்பாகும் என்றும் கூறினார்.
அன்பின் செய்தி, ஒற்றுமையின் செய்தி, திருத்தந்தையின் பணி ஆகிய மூன்று தலைப்புக்களில் இத்திருப்பலியின் வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய கர்தினால் சொதானோ, புதிய திருத்தந்தைமீது நாம் காட்ட வேண்டிய அன்பு குறித்தும் விளக்கினார்.
மக்களுக்காகவும் அனைத்துலக சமூகத்துக்காகவும் நீதியையும் அமைதியையும் சோர்வின்றி ஊக்குவித்து, பல நல்ல முயற்சிகளைக் கட்டி எழுப்புவர்களாக முன்னாள் திருத்தந்தையர் இருந்தனர் என்பதையும் குறிப்பிட்ட அவர், பேதுருவின் வழிவந்தவராகிய 265வது  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சிறந்த பாப்பிறை பணிக்காக நன்றி தெரிவிப்போம் என்றும் கூறினார்.
பிறரன்பின் மாபெரும் பணி நற்செய்தி அறிவித்தல் என்றும், திருஅவையின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் கர்தினால் சொதானோ கேட்டுக்கொண்டார்
கான்கிளேவ் அவை குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு 5,600 ஊடகவியலாளர் திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வழிவருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை, இச்செவ்வாய் மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது.


2. பேராயர் மரினி : அகிலத் திருஅவையும் செபத்தில் கான்கிளேவ் அவையோடு ஒன்றித்திருக்க அழைப்பு

மார்ச்12,2013. சிஸ்டின் சிற்றாலயத்தில் அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் 115 கர்தினால்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தாலும், அகிலத் திருஅவையும் செபம் மற்றும் எதிர்பார்ப்புடன் அக்கர்தினால்களுடன் இணைந்துள்ளது என்று, அனைத்துலக திருநற்கருணை மாநாடுகளுக்கானத் திருப்பீடக் குழுவின் தலைவர் பேராயர் பியரோ மரினி கூறினார்.
இச்செவ்வாய் மாலை தொடங்கிய  கான்கிளேவ் அவைக்கான செபங்கள் மற்றும் திருப்பலிகளுக்கு உதவியவரும், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நிகழ்த்திய திருவழிபாடுகளுக்குப் பொறுப்பானவருமான பேராயர் மரினி, கான்கிளேவ் அவைக்காக அனைவரும் செபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
கான்கிளேவ் நிகழ்வு, அதில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட கர்தினால்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல, ஆனால், அது, ஒரு திருஅவை நிகழ்வாகும், அனைத்துக் கத்தோலிக்கரும் ஆன்மீகமுறையில் சிஸ்டின் சிற்றாலயத்தில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் பேராயர் மரினி கூறினார்.


3. கான்கிளேவின் திருவழிபாட்டு முறைகள்

மார்ச்,12,2013. புதிய திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் இடம்பெறும் நடைமுறைகள், தனிப்பட்ட ஒருவரின் கருத்தாகவோ அல்லது ஆர்வக் கோளாரினால் திடீரென சொல்லப்பட்டவைகளாகவோ இருக்கவில்லை, ஆனால் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் திருவழிபாட்டுச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட திருவழிபாட்டு மரபைத் துல்லியமாகப் பின்பற்றுவதாக இருக்கின்றன.
கான்கிளேவின் திருவழிபாட்டுமுறைகள் என்ற நூலில் காணப்படும் இந்நடைமுறைகள் குறித்து விளக்கியுள்ள வத்திக்கான் ஊடகம் ஒன்று இவ்வாறு கூறியுள்ளது.
உரோமன் கத்தோலிக்கத் தலைவரான திருத்தந்தையின் தேர்தலை உள்ளடக்கிய கான்கிளேவின் முக்கியத்துவத்தை இந்நூல் முதலில் கோடிட்டுக் காட்டுவதாகவும், பின்னர், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் குறித்தும், இவ்வவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெறும் "pro eligendo pontifice" என்ற திருப்பலியிலும் இந்நூல் கவனம் செலுத்துகின்றது எனவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நூலின் இரண்டாவது பிரிவு, கான்கிளேவின் முக்கிய நேரங்கள், கர்தினால்கள் எடுக்கும் உறுதிமொழி, வாக்குப்பதிவு போன்றவை பற்றியும், 5வது பிரிவு புதிய திருத்தந்தையை அறிவிப்பது, அவரின் ஊருக்கும் உலகுக்குமான, ஊர்பி எத் ஓர்பி ஆசிர் போன்றவை பற்றியும் விவரிக்கின்றன எனவும் வத்திக்கான் ஊடகம் கூறியுள்ளது.
இம்முறை புதிய திருத்தந்தையை அறிவிக்கவிருப்பவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான்.


4. வாகன ஓட்டுனர்கள், பூ வைப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 90 பேர் உறுதிமொழி

மார்ச்,12,2013. கான்கிளேவ் அவைக்குப் பல்வேறு வகைகளில் உதவி செய்யும் வாகன ஓட்டுனர்கள், பூ வைப்பவர்கள், திருவழிபாட்டுக்கு உதவுபவர்கள், ஒப்புரவு திருவருள்சாதனத்தைக் கேட்பவர்கள், தாதியர்,  மருத்துவர்கள், உணவு தயாரிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 90 பேர், இரகசியம் காப்பது குறித்த உறுதிமொழியை இத்திங்கள் மாலை எடுத்தனர்.
வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருக்கும் 115 கர்தினால்களுக்கும் பணி செய்யும் இவர்கள் இத்திங்கள் மாலை 5.30 மணிக்கு Pauline சிற்றாலயத்தில் அளித்த உறுதிமொழி நிகழ்வு, கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் இடம்பெற்றது.


5. பாஸ்டன் கர்தினால் : கத்தோலிக்க நலப்பணிகளுக்கு மனச்சான்றின் உரிமைகள் தேவை

மார்ச்,12,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நலவாழ்வு சார்ந்த கூறுகளில் சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு உறுதியான ஆதரவு வழங்குமாறு அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பாஸ்டன் கர்தினால் Sean O’Malley.
வத்திக்கானில் இச்செவ்வாய் மாலை தொடங்கியுள்ள கான்கிளேவில் கலந்து கொள்ளும் கர்தினால் O’Malley உரோமையிலிருந்து எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனச்சான்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தவறுவது, அமெரிக்கர்களுக்குத் தரமான நலவாழ்வு கிடைப்பதற்கு இடையூறாக இருக்கும் என்றும் பாஸ்டன் கர்தினால் கூறியுள்ளார்.
நலவாழ்வு மனச்சான்றின் 2013 என்ற விதிமுறைஎண் அங்கீகரிக்கப்பட்டால், கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்து மருத்துவர்களைக் காப்பாற்ற முடியும் எனவும், அமெரிக்க ஆயர்களின் வாழ்வுக்கு ஆதரவான ஆணைக்குழுத் தலைவர் கர்தினால் O’Malley அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


6. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள்

மார்ச்,12,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள் கொண்ட நூல் ஒன்று இஸ்பெயினிலுள்ள திருப்பீடத் தூதரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
HazteOir என்ற இஸ்பானிய குடியுரிமை இணையத்தளத்தின் தலைவர் Ignacio Arsuaga, இஸ்பெயினுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Renzo Fratiniடம் இந்நூலைக் கொடுத்துள்ளார்.
ஒரு பொது மக்கள் சமுதாயத்தில் மனித மாண்புக்கு ஆதரவாகப் பணி செய்வதற்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் எண்ணங்கள் உதவிசெய்வதற்கு நன்றியாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என Arsuaga தெரிவித்தார்.   
இந்நூல் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


7. பாகிஸ்தான் ஆயர் : கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை அரசு தடை செய்திருக்கலாம்

மார்ச்,12,2013. பாகிஸ்தானின் நலிந்த சிறுபான்மை கிறிஸ்தவச் சமூகத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அரசு அதிகாரிகள் தவறியுள்ளனர் என, லாகூர் உயர்மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் செபஸ்தியான் ஷா குறை கூறினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு மனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறை தாக்குதலுக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும், இதனால் கடந்த சனிக்கிழமையன்று மூவாயிரம் பேர் கொண்ட கும்பல் ஒன்று, கிறிஸ்தவர்களின் ஜோசப் காலனியைச், சூறையாடி, அங்கிருந்த 180 வீடுகளுக்கும் இரண்டு ஆலயங்களுக்கும் தீ வைத்துள்ளது எனவும் ஆயர் ஷா கூறினார்.
கிறிஸ்தவர்கள், தங்களின் குடியிருப்புக்கள் தீயினால் கொளுத்தப்பட்டதைத் தடைசெய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றுரைத்த ஆயர் ஷா, இத்தாக்குதல்களை அரசு தடை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுவது உட்பட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக அளிக்கப்படும் என, பாகிஸ்தான், அரசுத்தலைவர் Asif Ali Zardari அறிவித்துள்ளார், இந்தப் பணம் மக்களின் காயங்களையும், அவர்களின் மனபயத்தையும் குணப்படுத்தாது என்றும் ஆயர் ஷா கூறினார்.


8. நோய்எதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத தன்மை அதிகரிக்கிறது

மார்ச்,12,2013. Antibiotic எனப்படும் நோய்எதிர்ப்புச் சக்தி மருந்துகளுக்கு, நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி Sally Davies எச்சரித்துள்ளார்.
புதிய நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள்கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக்கூடும் என்று Davies கூறினார்.
புதிய நோய்க்கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.


9. மனிதர் 150 ஆண்டுகள் வாழ்வதற்கான மருந்து கண்டுபிடிப்பு

மார்ச்,12,2013. மனிதர் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம், மறதி, முகச்சுருக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இளமையை நீட்டிக்கச் செய்யும் மருந்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவப்பு திராட்சை இரசத்தில் காணப்படும் Resveratrol என்ற வேதிப்பொருள் இதற்கு நல்ல மாற்றாக இருக்கமுடியும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதரின் உடலிலுள்ள மூப்பை நீக்கக்கூடிய ஒருவித செரிமானப்பொருள், இந்த வேதிப்பொருளிலுள்ள மாத்திரைகள் கொண்டு தூண்டிவிடுவதன் மூலம், மனிதர் வயதாகும் தன்மையை நீக்கி 150 ஆண்டுகாலம் வாழமுடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மருந்துகள் சாதாரண மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது, 20க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும், இன்னும் 5 ஆண்டுகளில் இது சாத்தியப்படலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதுமை நீக்கும் வழிமுறைகளில் செய்யப்படும் இரத்தப் பரிசோதனையில் ஒருவருக்கு ஏற்படும் மறதிகூட ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...