Thursday, 21 November 2013

செய்திகள் - 20.11.13

செய்திகள் - 20.11.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. தியானயோக துறவு சபையினருக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள்

2. அனைத்துலக குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து

3. மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் 2007ம் ஆண்டின் உலக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட திருப்பீடம் அழைப்பு

4. ஜப்பான் கத்தோலிக்கருக்கு நம்பிக்கை ஆண்டு நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது, நாகசாகி பேராயர்

5. அமெரிக்காவில் வாழும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு TPS தங்கும் அனுமதி வழங்கப்படுமாறு அமெரிக்க ஆயர் வேண்டுகோள்

6. திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி அபூர்வ வகை தோல் நோயாளி ஒருவரின் பகிர்வு

7. சிறார் சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுமாறு வல்லுனர்கள் அழைப்பு

8. நச்சுக்கலந்த கழிவுப்பொருள்கள் உலக அளவில் பெரும் அச்சுறுத்தல்

------------------------------------------------------------------------------------------------------

1. தியானயோக துறவு சபையினருக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள்

நவ.20,2013. சமுதாயத்தில் வெளிப்படையாக மறைப்பணி செய்யாமல், நான்கு சுவர்களுக்குள் எப்பொழுதும் வாழ்ந்து, செபத்திலும், மௌனமான பணியிலும் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இருபால் துறவுசபையினருக்கு ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னைமரியா ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான நவம்பர் 21ம் தேதியன்று தியானயோக துறவு சபையினரின் நாள் சிறப்பிக்கப்படுவதை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இச்சபைகளின் உறுப்பினர்களின் சாட்சிய வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் எனவும் கூறினார்.
மேலும், இவ்விழா நாளான இவ்வியாழன் மாலை, உரோம் Aventine குன்றிலுள்ள Camaldolese தியானயோக துறவு இல்லம் சென்று அத்துறவியருடன் சேர்ந்து மாலை திருப்புகழ்மாலை செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று கத்தோலிக்கத் திருஅவையில் 105 ஆண் தியானயோக துறவு இல்லங்களில்   12,876 துறவியரும், 3,520 பெண் தியானயோக துறவு இல்லங்களில் 48,493 துறவியரும் உள்ளனர். இந்த இல்லங்களில் மூன்றில் இரண்டு ஐரோப்பாவில் உள்ளன என வத்திக்கானில் வெளியிடப்பட்ட அண்மை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அனைத்துலக குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டுக்குத் திருத்தந்தை வாழ்த்து

நவ.20,2013. நவம்பர் 22, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கவிருக்கும் அனைத்துலக குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டு பற்றியும் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும், படைப்பை மதிப்பதற்கும், முழு மனித சமுதாயத்தின் அறநெறி அமைப்புக்கும் குடும்ப வேளாண்மைத் தொழிலால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களைச் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் முயற்சியால் ஊக்குவிக்கப்படும், குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டு, வேளாண்தொழில் செய்யும் குடும்பங்களின் வேளாண் அமைப்புகள் முன்னேறுவதற்குச் செயல்திறமிக்க கொள்கைகள் உருவாக்கப்பட உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
இன்னும், பூர்வீக இனக் குழுக்கள், மீனவக் குடும்பங்கள், கூட்டுறவு அமைப்புகள், சிறு குழுக்கள் ஆகியவற்றின் உறுதியான வளர்ச்சிக்கும் இவ்வாண்டு உதவும் என்றும்   கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐ.நா.பொது அவையின் 66வது அமர்வில், 2014ம் ஆண்டை, அனைத்துலக குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குடும்ப வேளாண்மைத் தொழில் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 22, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தில் தொடங்கவுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் 2007ம் ஆண்டின் உலக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட திருப்பீடம் அழைப்பு

நவ.20,2013. மீன்பிடித்தொழிலாளரின் பாதுகாப்பு, அவர்களுக்குரிய மருத்துவப் பராமரிப்பு, போதுமான ஓய்வு நேரம், வேலை ஒப்பந்தப் பாதுகாப்பு மற்றும் மீன்வளத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்க்குரிய சமூகநல உதவிகள் ஆகியவற்றுக்கு உறுதியளிக்கும் 2007ம் ஆண்டின் ஒப்பந்தம் விரைவில் செயல்படுத்தப்படுமாறு அனைத்து அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது திருப்பீடம்.
நவம்பர் 21, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் உலக மீன்வள நாளையொட்டி திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவை வெளியிட்டுள்ள செய்தியில், அண்மை ஆண்டுகளாக மீன்பிடித் தொழில், இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது என்றும், மீன்வளங்கள் மற்றும் மீன்கள் இனப்பெருக்கக் காலம் குறித்து மிகச்சிறிதளவே அக்கறை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகப் பணத்தை ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில், அனைத்து மீன்வளத் துறைகளும் தங்கள் தொழிலாளர்களை, மோசமான காலநிலையிலும்கூட சிலநேரங்களில் நீண்டநேரம் மீன்பிடிக்க வைப்பது உட்பட்ட செயல்கள் தொழிலாளருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பையும் இச்செய்தி கோடிட்டுக் காட்டியுள்ளது.
பிலிப்பீன்சில் ஹையான் புயலில் இறந்தவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் மீனவர்கள் என்றும், இப்புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென சிறப்பு நிதி சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இச்செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அவ்வவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஜப்பான் கத்தோலிக்கருக்கு நம்பிக்கை ஆண்டு நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது, நாகசாகி பேராயர்

நவ.20,2013. ஜப்பானில்  கத்தோலிக்கருக்கு நம்பிக்கை ஆண்டு நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும் போதனைகளும் பல கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மீண்டும் கண்டுணர உதவியுள்ளன எனவும் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami கூறினார்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Takami, திருத்தந்தை ஜப்பானுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைப்புவிடுத்ததாகவும் கூறினார்.
இந்நம்பிக்கை ஆண்டில் தனது மறைமாவட்ட மக்கள் திருவருள்சாதனங்களை, குறிப்பாக, ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறவும், நீசேயா விசுவாச அறிக்கையை அடிக்கடிச் சொல்லவும் அழைப்புவிடுத்ததாகவும் கூறினார் பேராயர் Takami.
ஒசாகாவில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன எனவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்நம்பிக்கை ஆண்டுக்கானச் சிறப்பு செபம் சொல்லப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் மறைமாவட்ட பேரவைக்குத் தயாரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார் பேராயர் Takami.
பிரான்சில் பிறந்த அருள்பணியாளரும், பின்னாளில் ஜப்பானின் ஆயருமாகப் பணியாற்றிய Thadée Bernard Petitjean என்பவருக்கும், ஜப்பானிய பேரரசரின் அடக்குமுறைக்குப் பயந்து 200 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்து வாழ்ந்த ஜப்பானிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றதன் 150ம் ஆண்டு நிறைவு, 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருப்பதையும் பேராயர் Takami விளக்கியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

5. அமெரிக்காவில் வாழும் பிலிப்பீன்ஸ் மக்களுக்கு TPS தங்கும் அனுமதி வழங்கப்படுமாறு அமெரிக்க ஆயர் வேண்டுகோள்

நவ.20,2013. பிலிப்பீன்சை அண்மையில் தாக்கிய ஹையான் கடும் புயலில் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் பொருள்சேதங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பிலிப்பீன்ஸ் குடிமக்களுக்கு TPS எனப்படும் தற்காலிக பாதுகாப்புச் சமூகநிலை வழங்கப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் அரசு அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவின் தலைவர் Seattle துணை ஆயர் Eusebio Elizondo அந்நாட்டு அரசுக்கு இத்திங்களன்று எழுதிய கடிதத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைக்கு உறுதியளிக்கும் சட்டரீதியான தங்கும் அனுமதியை பிலிப்பீன்ஸ் நாட்டுக் குடிமக்களுக்கு வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள், அரசியல் பதட்டநிலை, சுற்றுச்சூழல் பேரிடர் மற்றும் பிற அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறும் நாடுகளின் குடிமக்களுக்கு இத்தகைய தங்கும் அனுமதியை அமெரிக்க அரசு வழங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அண்மை விபரங்களின்படி, பிலிப்பீன்சைத் தாக்கிய ஹையான் கடும் புயலில் ஏறக்குறைய நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் மொத்தத்தில் ஒரு கோடியே நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.    

ஆதாரம் : CNS

6. திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி அபூர்வ வகை தோல் நோயாளி ஒருவரின் பகிர்வு

நவ.20,2013. நியுரோபிப்ரோமேடோசிஸ்(neurofibromatosis) என்ற அபூர்வ வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட இத்தாலியர் ஒருவர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கட்டித்தழுவி முத்தமிடப்பட்டபோது விண்ணகத்தில் இருந்ததாக உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
வட இத்தாலியின் விச்சென்சா நகருக்கு அருகில் சிறிய கிராமம் ஒன்றில் வாழும் 53 வயது Vinicio Riva என்ற இந்நோயாளி இந்த தனது அனுபவத்தை Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உடம்பெல்லாம் கட்டியாக இருக்கும் இந்நோயாளியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித தயக்கமுமின்றி வாரி அணைத்து முத்தமிட்டு, முகத்தைத் தடவிக்கொடுத்தபோது தான் அவரது அன்பை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Vinicio Riva போலவே இவரது தங்கையும் இதே நோயால் தாக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : ICN

7. சிறார் சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுமாறு வல்லுனர்கள் அழைப்பு

நவ.20,2013. தங்கள் பெற்றோர் தங்களது வயதில் இருக்கும்போது ஓடிய அளவுக்கு ஓட முடியாமல் பல சிறார் உள்ளனர் என்று சொல்லி, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபடுமாறு சிறாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் வல்லுனர்கள்.
28 நாடுகளில் 2 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரிடம் ஆய்வு நடத்தி அமெரிக்க இதயக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ள வல்லுனர்கள், ஒரு மைல் தூரத்தைக் கடப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் சிறாரின் பெற்றோர் எடுத்த நேரத்தைவிட தற்போது அவர்கள் 90 வினாடிகள் குறைவாகவே எடுக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
சிறாரின் உடல்தகுதியின் தற்போதைய நிலை, அவர்கள் எதிர்காலத்தில் இதய நோயால் பாதிக்கப்படும் ஆபத்தை முன்வைப்பதாக, இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவர் மருத்துவர் Grant Tomkinson எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்சனை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளிலும், தென் கொரியா, சீனா, ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும் காணப்படுவதாக மருத்துவர் Tomkinson மேலும் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்களில், 58 விழுக்காட்டினருக்கு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC

8. நச்சுக்கலந்த கழிவுப்பொருள்கள் உலக அளவில் பெரும் அச்சுறுத்தல்

நவ.20,2013. நச்சுக்கலந்த கழிவுப்பொருள்களால் உலகில் 20 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஐ.நா.வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை எச்சரிக்கின்றது.
49 நாடுகளுக்கு மேற்பட்ட மூவாயிரத்துக்கு அதிகமான இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நச்சுக்கலந்த கழிவுப்பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மலேரியா, காசநோய் போன்ற நலவாழ்வு அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவின் Agbobloshie எலெக்ட்ரானிக் கழிவுப்பொருள்கள் குப்பைமேடு பகுதியின் நிலத்தில் மிகுந்த அளவு ஈயம் கலந்திருப்பதாகவும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கேடு அப்பகுதியின் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் நலவாழ்வுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் பத்து முக்கிய எலெக்ட்ரானிக் கழிவுப்பொருள்கள் குப்பைமேடுகளில் ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் மூன்று முக்கிய இடங்களையும், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடத்தையும் பெரும் ஆபத்தான இடங்களாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...