தென் ஆப்பிரிக்காவில் கடந்த இரு தினங்களாக பெருமழை: 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
தென் ஆப்பிரிக்காவில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட பெருமழையினைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கினால் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசர நிர்வாக அதிகாரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாலைகளில் பெருக்கெடுத்தோடிய நீரினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், மின்தடைகளும், சாய்வான பகுதிகளில் நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஜோஹன்னஸ்பர்க் நகரின் பேரழிவு மேலாண்மை செய்தித் தொடர்பாளரான வில்ப்ரெட் சாலமன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வடக்கு சோமர்செட் பகுதியில் பாய்ந்துகொண்டிருந்த நதியில் நீர்வரத்து அதிகமாகி கரைகள் உடைத்துக் கொண்டன.
இதனால் கரையோரம் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 129 நோயாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக மாகாணப் பேரழிவு நிர்வாக மேலாண்மை அதிகாரி சார்லட் போவெல் தகவல் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 18,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பல்வேறு அரங்குகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொறியியல் நிபுணர்கள் குழு நேற்றே மீட்பு நிவாரணப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் இன்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேப் டவுனிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டெலன்போஷ் அருகில் இரண்டு பெண்கள் ஒரு காரில் தேவாலயத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது.இதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றவரைக் காணவில்லை என்றும் காவல்துறை செய்தியாளர் தெம்பின்கோசி கினானா தெரிவித்தார். இறந்தவரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment