செய்திகள் - 11.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உண்மையிலேயே மனம் மாறாமல் கிறிஸ்தவராக நடிப்பவர் திருஅவையை சேதப்படுத்துகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்
2. கர்தினால் Bartolucciயின் இறப்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல்
3. நித்திய வாழ்வு என்பது மற்றொரு வாழ்வு, இறப்பு நமது தோளுக்குப் பின்னால் இருக்கின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்
4. பிலிப்பைன்சில் கடும் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்
5. பிலிப்பீன்ஸில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுச் செய்தி
6. பிலிப்பீன்ஸில் பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இத்தாலிய ஆயர் பேரவை உதவி
7. கொழும்புவில் நடைபெறவுள்ள கான்வெல்த் நாடுகளின் கூட்டத்தை காமன்வெல்த் தலைவர்கள் புறக்கணிக்கவேண்டும், பேராயர் டுட்டு வேண்டுகோள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உண்மையிலேயே மனம் மாறாமல் கிறிஸ்தவராக நடிப்பவர் திருஅவையை சேதப்படுத்துகின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.11,2013. ஒருகையால் திருடிக்கொண்டு, மறுகையால் கோவிலுக்கு காணிக்கைச் செலுத்தி தன்னை நல்லவராகக் காண்பித்து, இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருப்பவர்கள் அநீதியான வாழ்வை மேற்கொள்பவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டையும் ஏழைகளையும் சுரண்டி திருடிக்கொண்டே நல்லவர்களாக இரட்டை வேடம்போடுபவர்கள், கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளப்படவேண்டியவர்கள் என இயேசு கூறுகிறார் என்றார்.
ஊழல் புரிபவர்களாக கிறிஸ்தவர்களும், குருக்களும் மாறும்போது திருஅவையும் ஊழல் நிறைந்ததாக மாறுகின்றது என்ற திருத்தந்தை, நாமெல்லாம், உள்ளே எலும்புகளையும் அழுகிய நிலைகளையும் கொண்டு, வெளியே அழகாய்த் தோற்றமளிக்கும் வெள்ளயடிக்கப்பட்ட கல்லறைகளாக மாறுகிறோம் எனவும் கூறினார்.
இரட்டை வாழ்வைக்கொண்டிருக்கும் சூழலிலும் நாம் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டாலும், நம் வாழ்வு கிறிஸ்தவ வாழ்வாக இருக்காது எனவும் கூறினார் திருத்தந்தை.
நாம்
ஒவ்வொருவரும் பாவிகள் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் அருளைத் தருமாறு
தூய ஆவியிடம் வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவு
செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கர்தினால் Bartolucciயின் இறப்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல்
நவ.11,2013. கர்தினால் Domenico Bartolucciயின்
மரணத்தை முன்னிட்டு தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை
கர்தினாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
திருஅவையில் இசையின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, வத்திக்கானின்
சிஸ்டைன் இசைக்குழுவின் இயக்குனராகவும் சிறந்த சேவையாற்றியுள்ள
கர்தினாலின் பணிகளை தன் இரங்கற்தந்தியில் பாராட்டியுள்ள திருத்தந்தை
பிரான்சிஸ், கர்தினால் Bartolucciயின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் தன் ஆறுதலையும் செப உறுதிப்பாட்டையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகருக்கு அருகே 1917ம் ஆண்டு பிறந்த கர்தினால் Bartolucci, 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 96வயதில் இத்திங்கள் காலை உயிரிழந்த கர்தினால் Bartolucciயின் அடக்கத் திருப்பலி இப்புதனன்று பிற்பகலில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும். கர்தினால் Bartolucciயின் மரணத்துடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 200 ஆகக் குறைந்துள்ளது. இதில் 109 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள், அதாவது 80 வயதிற்குட்பட்டவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. நித்திய வாழ்வு என்பது மற்றொரு வாழ்வு, இறப்பு நமது தோளுக்குப் பின்னால் இருக்கின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.11,2013.
நித்திய வாழ்வு நம் ஒவ்வொருவரின் இவ்வுலக வாழ்வை ஒளிர்வித்து அதற்கு
நம்பிக்கையை அளிக்கின்றது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறப்புக்குப்
பின்னர் உயிர்ப்பு உண்டு என்பதை மறுக்கும் சதுசேயர்களின் எண்ணங்களுக்கு
இயேசு பதில் கூறியதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்திப் பகுதியை மையமாக
வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நித்திய வாழ்வு குறித்துப் பேசினார்.
நித்திய வாழ்வு என்பது மற்றொரு கூறில் மற்றொரு வாழ்வு, நம் இவ்வுலக வாழ்வோடு தொடர்புடைய திருமணம் நித்திய வாழ்வில் இருக்காது என்றும், உயிர்த்தெழுந்தவர்கள் வானதூதர்களைப் போல மற்றொரு நிலையில் இருப்பார்கள், அந்நிலையை நாம் கற்பனை செய்யவும் அனுபவிக்கவும் முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியத்தை, “மோசேயும் எரியும் புதரும்” என்ற நிகழ்வில் கண்டார் எனவும், மோசேக்கு, எரியும் புதரில் கடவுள் தன்னை ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என வெளிப்படுத்தினார், கடவுளின் பெயர் அவரோடு ஒன்றிணைந்துள்ள மனிதர்களின் பெயர்களோடு தொடர்பு கொண்டுள்ளது எனவும், இந்தப் பிணைப்பு, மரணத்தைவிட உறுதியானது எனவும் கூறினார் திருத்தந்தை.
இதனாலே இயேசு, தம்மை இறந்தோரின் கடவுள் அல்ல, ஆனால் வாழும் கடவுள் என்று சொன்னார், இந்த உறுதியான, அடிப்படை உடன்படிக்கை இயேசுவுக்கு உரியது, இயேசுவே உடன்படிக்கை, அவரே வாழ்வும் உயிர்ப்பும், கடவுள், இயேசு வழியாக நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார், கடவுள் நமக்கென அமைத்துள்ள வாழ்வு நமது கற்பனைக்கு எட்டாதது, ஏனெனில்
கடவுள் தம் அன்பாலும் கருணையாலும் நம்மைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி
வருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுள்மீது கொண்டுள்ள அன்பு மற்றும் விசுவாச அனுபவம், நம் இதயங்களில் தீ போல் பற்றி எரிந்து, உயிர்ப்பின்மீதான நமது நம்பிக்கையை அதிகரிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளின் அன்பு எல்லையற்றது, அவர் நமக்காகக் காத்திருக்கிறார், இந்த நித்திய உறுதிபாட்டுடன் நம் ஒவ்வொருவருடனும் வருகிறார் என மூவேளை செப உரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பிலிப்பைன்சில் கடும் சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை செபம்
நவ.11,2013. பிலிப்பைன்ஸ் நாட்டில், ஹையான் எனப்படும் கடும் சூறாவளியில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபித்த அதேவேளை, அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிலிப்பைன்சில் கடும் சூறாவளியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்த அதேவேளை, இதில் பெருமளவில் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறித்த தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் இதனைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 50 ஆயிரம் பயணிகளை
அமைதியாகச் செபிக்கச் சொல்லித் தானும் அவர்களோடு சேர்ந்து அமைதியாகச்
செபித்த பின்னர் அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தையும் சொன்னார்.
கடந்த வெள்ளியன்று பிலிப்பைன்சின் மத்திய பகுதியிலுள்ள Leyte, Cebu ஆகிய மாநிலங்களை, மணிக்கு
300 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய ஹையான் கடும் சூறாவளியில் 10 ஆயிரம்
பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 6,30,000 பேர் வரை புலம் பெயர்ந்துள்ளனர்.
மேலும், “உடைக்கப்பட கண்ணாடியின் இரவு” என்ற யூதஇன அழிப்பு நடந்ததன் 75ம் ஆண்டையொட்டி, இதில்
பாதிக்கப்பட்ட நமது மூத்த சகோதரர்களான யூதர்களுடனான நமது தோழமையுணர்வைத்
தெரிவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம்
ஆண்டு நவம்பர் 9க்கும் 10க்கும் இடைப்பட்ட இரவில் யூதர்களுக்கு எதிராக
இடம்பெற்ற வன்முறையில் யூதர்களின் கடைகளும் வீடுகளும் தொழுகைக்கூடங்களும்
எரிக்கப்பட்டன.
இன்னும், ஜெர்மனியின் Paderbornல் இஞ்ஞாயிறு மாலையில் இறையடியார் Maria Theresia Bonzel, முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இவர், தனது பிறரன்புக்குத் தேவையான வல்லமையை திருநற்கருணை மூலம் பெற்றார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. பிலிப்பீன்ஸில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுச் செய்தி
நவ.11,2013.
பிலிப்பீன்ஸின் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் திருத்தந்தை பிரான்சிஸ்
தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாக திருத்தந்தையின் பெயரால் பிலிப்பீன்ஸ்
அரசுத்தலைவருக்கு இரங்கல் தந்திச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்
திருப்பீடச்செயலர் பேராயர் Pietro Parolin.
தங்களுக்கு மிக நெருக்கமானவர்களை இழந்து துடிக்கும் மக்களுக்கும், உறைவிடங்களை இழந்துள்ள ம்க்களுக்கும் திருத்தந்தை தன் ஆழந்த அனுதாபங்களை வெளியிடுவதாகக் கூறும் திருப்பீடச் செயலரின் செய்தி, பிலிப்பீன்ஸ்
மக்களுக்காக திருத்தந்தை தொடர்ந்து செபித்துவருவதாகவும் தெரிவிக்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவரும் அரசு அதிகாரிகளுக்கும், துயர்துடைப்புப் பணியாளர்களுக்கும் திருத்தந்தை தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. பிலிப்பீன்ஸில் பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இத்தாலிய ஆயர் பேரவை உதவி
நவ.11,2013.
பிலிப்பீன்ஸில் பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தைத்
தொடர்ந்து, அந்நாட்டின் துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கென, முதல் தவணையாக 30இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளது இத்தாலிய ஆயர் பேரவை.
பிலிப்பீன்ஸில்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை ஆற்றவேண்டும் என
விண்ணப்பித்துள்ள இத்தாலிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அண்மையில்
பிலிப்பீன்ஸைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள வியட்நாம்
மற்றும் லாவோஸ் நாடுகளுக்கும் என ஒரு இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ளது.
இத்தாலியில்
வாழும் பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்களும் தங்கள் நாட்டு மக்களுடன் செபம்
மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வுகளை வெளியிட்டு செய்தி ஒன்றை
வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட
பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. கொழும்புவில் நடைபெறவுள்ள கான்வெல்த் நாடுகளின் கூட்டத்தை காமன்வெல்த் தலைவர்கள் புறக்கணிக்கவேண்டும், பேராயர் டுட்டு வேண்டுகோள்
நவ.11,2013.
இலங்கைத் தலைநகரில் இவ்வாரம் இடம்பெறவுள்ள கான்வெல்த் நாடுகளின் கூட்டத்தை
காமன்வெல்த் தலைவர்கள் புறக்கணிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
நொபெல் அமைதி விருது பெற்ற ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு.
கட்டாயமாக மக்கள் கடத்தப்படல், தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், பத்திரிகை
சுதந்திரம் மீதான அடக்குமுறை போன்றவை குறித்து விசாரிக்க இலங்கை அரசையும்
அரசுத்தலைவரையும் நிர்ப்பந்திக்க இத்தகைய புறக்கணிப்புகள் உதவும்
எனக்கூறியுள்ளார் தென்னாப்ரிக்கப் பேராயர் டுட்டு.
ஏற்கனவே, கானடா பிரதமரும், பாரதப் பிரதமரும் இம்மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
No comments:
Post a Comment