Friday, 8 November 2013

செய்திகள் - 08.11.13

செய்திகள் - 08.11.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. கடவுள் உணர்வற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபம்

2. கோஸ்தா ரிக்கா நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையில் நீதிக்குப் பணிசெய்பவர்கள் காணாமல்போன ஆட்டின்மீது அக்கறை காட்டும் நல்ல ஆயர்களாக இருக்க வேண்டும்

4. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் திருநற்கருணை வாங்கக் கூடாது, நேப்பிள்ஸ் கர்தினால்

5. கொலம்பியாவில் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதற்குத் தலத்திருஅவைக்கு அரசு நன்றி

6. கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்பட்ட மாசுக்கேடு 2012ம் ஆண்டில் அதிகம்

7. ஐரோப்பாவில் யூதமத விரோதப்போக்கு அதிகரிப்பு

8. பிலிப்பீன்சில் கடும் புயல்

------------------------------------------------------------------------------------------------------

1. கடவுள் உணர்வற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபம்

நவ.08,2013.  இலஞ்சம், ஊழல் ஆகியவற்றினால் கிடைக்கும் பணத்தால் தங்கள் பெற்றோரிடமிருந்து அழுக்கான உணவுஉண்ணும் பல இளையோருக்காக இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விளையோர் தங்கள் மாண்புக்காகப் பசியோடு இருக்கின்றனர், ஏனெனில் நேர்மையற்ற வேலை மாண்பை பறித்து விடுகின்றது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலஞ்சக் கடவுளை வணங்கும் பக்தர்களின் இதயங்களை ஆண்டவர் மாற்றுவாராக என்றும், ஒவ்வொரு நாளைய மாண்புடன்கூடிய, நேர்மையான வேலையிலிருந்து மாண்பு வருகின்றது என்பதையும், ஊழல்மிக்க எளிதான பாதைகள் இறுதியில் மனித மாண்பையும், அனைத்தையும் கிழித்தெறியும் என்பதையும் இவர்கள் உணரவேண்டுமென்றும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் உவமை குறித்த இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகின் போக்கு, உலகப்பற்று எவ்வளவு ஆபத்தானது என்று விளக்கி, தமது சீடர்கள் இந்த ஆபத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசு தமது தந்தையிடம் செபித்தார் என்றும் கூறினார்.
இந்த உலகப்பற்றுநிறைந்த வழிகள் எதிரி என்றும், நாம் நமது பகைவர்களை நினைக்கும்போது நாம் உண்மையிலேயே முதலில் சாத்தானை நினைக்கிறோம், அது நம்மை வருத்துகின்றது என்றும், இவ்வுலகப்பற்றுமிக்க சூழலும், அத்தகைய வாழ்வும் சாத்தானை அதிகமாகப் பிரியப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை,   நற்செய்தி வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் உலகப்பற்றுக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.
இலஞ்சம் வாங்கும் பழக்கம் உலகப்போக்கானது, இது மிகவும் பாவமான பழக்கமாகும், இது கடவுளின் பழக்கமல்ல, நேர்மையான வழிகளில் உழைத்து நாம் நம் வீட்டுக்கு உணவு கொண்டுவரவேண்டுமென்று கடவுள் ஆணையிடுகிறார், ஆனால் இந்த நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் நேர்மையற்ற உழைப்பில் சேகரித்த அழுக்கான உணவை, தனது குழந்தைகளுக்கு வழங்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தங்கள் பெற்றோரிடமிருந்து அழுக்கான உணவுஉண்ணும் பல சிறார் மற்றும் இளையோருக்காக இன்று செபிப்போம், இவர்கள் தங்கள் மாண்புக்காகப் பசியாயிருக்கிறார்கள், இத்தகைய பெற்றோரின் இதயங்களை ஆண்டவர் மாற்றுவாராக என்று இத்திருப்பலியில் செபிப்போம் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கோஸ்தா ரிக்கா நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு

நவ.08,2013. மத்திய அமெரிக்க நாடான கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் Laura Chinchilla Miranda அவர்கள் இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில்  சந்தித்து தனது நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பர்த்தி அவர்களையும் சந்தித்தார் கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் Laura Chinchilla.
கோஸ்தா ரிக்கா நாடு எதிர்கொள்ளும் சில சமூக மற்றும் பிற பொதுவான விவகாரங்களில், குறிப்பாக, மனித வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில், அரசுக்கும், திருஅவைக்கும் இடையேயான ஒத்துழைப்பு இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் கூறியது.
கோஸ்தா ரிக்கா நாட்டின் பொது நலன் மற்றும் வளர்ச்சியையொட்டி திருப்பீடத்துக்கும் அந்நாட்டுக்கும் இடையே உறவுகளை உறுதிப்படுத்த வருங்காலத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வருவது குறித்தும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையில் நீதிக்குப் பணிசெய்பவர்கள் காணாமல்போன ஆட்டின்மீது அக்கறை காட்டும் நல்ல ஆயர்களாக இருக்க வேண்டும்

நவ.08,2013. கத்தோலிக்கத் திருஅவையில் நீதிக்குப் பணிசெய்பவர்கள் அதிகார மனப்பான்மை கொண்டவர்களாகச் செயல்படாமல், காணாமல்போன ஆட்டின்மீது அக்கறையாய் இருக்கும் நல்ல ஆயர்களாகப் பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் Supreme Tribunal of the Apostolic Signatura என்ற அருள், நீதி அமைச்சகம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 55 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருமணத்தைச் செல்லாததாக ஆக்குவது, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கும் வழக்குகளில் திருமணப்பிணைப்புக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞரின் பங்கு போன்ற தலைப்புகளில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
திருஅவையில் நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல ஆயராம் இயேசுவின் திருவுருவம் எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமெனக் கூறிய திருத்தந்தை, இப்பணியாளர்கள் தலையாட்டும் பொம்மைகளாக, குறிப்பாக, திருமணத்தைச் செல்லாததாக ஆக்கும் நடைமுறைகளில் வெறும் சட்டங்களை மட்டும் பின்செல்பவர்களாக இருத்தல் கூடாது எனக் கூறினார்.
திருமணப்பிணைப்புக்கு ஆதரவாக வாதிடுவோரின் பணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய திருத்தந்தை, இப்பணி செய்வோர் நற்பணி செய்ய வேண்டுமெனில் சட்டங்களை மட்டும் வேகமாக வாசித்தோ அல்லது அதிகரா மனப்பான்மையோடோ செயல்படக் கூடாது, மாறாக, திருஅவை மற்றும் சமூகத்தின் தெளிவான சூழலில் திருஅவைச் சட்டங்களோடு ஒத்திணங்கிச் செல்லும் விதத்தில் தீர்ப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதிக்குச் சேவை செய்வது அப்போஸ்தலிக்க வாழ்வின் அர்ப்பணம் எனவும், இப்பணி செய்பவர்கள், காணாமல்போன மற்றும் காயமடைந்த ஆட்டின்மீது அக்கறைகாட்டும் நல்ல ஆயரின் திருவுருவத்தின்மீது தங்கள் கண்களைப் பதித்து பணி செய்யுமாறும் கூறிய திருத்தந்தை, நீதியின் கண்ணாடியாகிய மரியின் பாதுகாவலில் வைத்து அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையில் மிக உயரிய நீதி அதிகாரத்தைக் கொண்டுள்ள,  இந்த அருள் மற்றும் நீதி அமைச்சகம், திருஅவையில் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் திருநற்கருணை வாங்கக் கூடாது, நேப்பிள்ஸ் கர்தினால்

நவ.08,2013. இப்பூமியின் சுற்றுச்சூழலுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மாபெரும் பாவத்தைச் செய்பவர்கள் என்றும், அவர்கள் திருநற்கருணை வாங்கக் கூடாது என்றும் தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் கர்தினால் கிரெசென்சியோ சேப்பே எச்சரித்துள்ளார்.
Greenaccord என்ற கிறிஸ்தவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்பு Castel dell'Ovo என்ற இடத்தில் நடத்திய கருத்தரங்கில் இவ்வாறு உரையாற்றிய கர்தினால் சேப்பே, இப்பூமியை வேண்டுமென்றே அசுத்தம் செய்பவர்கள் கடவுளின் அருள் நிலையில் இல்லையெனவும், அவர்கள் திருநற்கருணை உட்கொள்ளக் கூடாது எனவும் கூறினார்.
புற்றுநோய்களை வருவிக்கும் நச்சுகலந்த கழிவுகளை உள்ளூர் மாஃபியா குற்றக் கும்பல்கள் அண்மையில் நேப்பிள்ஸ் நகரத்துக்கு அருகில் புதைத்துள்ளன என்ற செய்திகள் தினத்தாள்களில் வெளியானதையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார் கர்தினால் சேப்பே.
பொதுவான ஒழுக்கநெறிக் கூறுகளில் திருஅவையின் பங்கு குறித்து உள்ளூர் அருள்பணியாளர்களும், தியாக்கோன்களும், பொதுநிலை சகோதரர்களும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார் கர்தினால் சேப்பே.

ஆதாரம் : AKI

5. கொலம்பியாவில் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதற்குத் தலத்திருஅவைக்கு அரசு நன்றி

நவ.08,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் FARC புரட்சிக்குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதற்குத் தலத்திருஅவைக்கு நன்றி தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC பெரிய புரட்சிக் குழுவுக்கும் இடையே கியூபாவில் இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தையில், புரட்சிக் குழுவின் வருங்கால அரசியல் மற்றும் புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவகாரத்துக்கு இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பிய அரசுக்கும், FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதன் மூலம் அந்நாட்டில் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த உள்நாட்டுச் சண்டை முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கியூபாவில் இடம்பெற்றுவரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கென எட்டு அடிப்படை கூறுகளைச் சுட்டிக்காட்டும் 92 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் ரூபன் சலசார் கோமெஸ்.
கொலம்பியாவின் உள்நாட்டுச் சண்டையில், ஏறக்குறைய 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
1984ம் ஆண்டிலிருந்து கொலம்பிய கத்தோலிக்கத் திருஅவையின் 83 அருள்பணியாளர்கள், 5 அருள்சகோதரிகள், 3 துறவற அருள்பணியாளர்கள், இன்னும் பெருமெண்ணிக்கையிலான வேதியர்கள் இச்சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CWN                       

6. கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்பட்ட மாசுக்கேடு 2012ம் ஆண்டில் அதிகம்

நவ.08,2013.  வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்பட்ட மாசுக்கேடு 2012ம் ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக, ஐ.நா. வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாகனங்கள், புகைபோக்கிகள் போன்றவை வழியாக காற்றில் வெளியேற்றப்பட்ட வெப்ப வாயுவின் அளவு கடந்த ஆண்டில் 393.1 ppm, அதாவது இலட்சத்து 393.1 என்ற அளவில் இருந்ததாகவும், இந்நிலை 2011ம் ஆண்டில் 2.2 ppm ஆக இருந்ததாகவும்  ஜெனீவாவை மையமாகக் கொண்ட உலக வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் இப்புவி மண்டலம் அதிகஅளவில் வெப்பமடைந்ததற்கு கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் வெளியேற்றமே காரணமாக என்றுரைக்கும் இந்நிறுவனம், இந்நிலை நீடித்தால், 2016ம் ஆண்டில் வளிமண்டலத்தின் மாசுக்கேடு அளவு 400ppm ஆக உயரும் எனவும் கூறியுள்ளது.
சில இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்மட்டங்கள் அதிகரித்தபோது, இப்பூமியின் வளிமண்டலம் இந்த அளவுக்கு கார்பன்டை ஆக்ஸைடால் பாதிக்கப்பட்டது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு 280 ppm ஆக இருந்தது.

ஆதாரம் : UN                            

7. ஐரோப்பாவில் யூதமத விரோதப்போக்கு அதிகரிப்பு

நவ.08,2013. ஐரோப்பாவில் யூதமத விரோதப்போக்கு அதிகரித்து வருவதாக, குறிப்பாக, இணையதளத்தில் இப்போக்கு அதிகரித்து வருவதாக ஐரோப்பாவில் பல யூதர்கள் கூறுகின்றனர்.
5,847 யூதர்களிடம் எடுத்த ஆய்வில், ஐரோப்பாவில் யூதமத விரோதப்போக்கு நிலவுவதாக 66 விழுக்காட்டினரும், கடந்த ஐந்தாண்டுகளில் இப்போக்கு, அதிகரித்துள்ளதாக 76 விழுக்காட்டினர் நம்புவதாகவும் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் ஏறக்குறைய 90 விழுக்காட்டு யூதர்கள் வாழும் எட்டு நாடுகளில் கடந்த ஆண்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆதாரம் : BBC

8. பிலிப்பீன்சில் கடும் புயல்

நவ.08,2013.  இவ்வெள்ளியன்று ஹையான் என்ற இராட்சதப் புயல் பிலிப்பீன்சின் மத்திய பகுதியை மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளதில் அந்நாட்டின் 20 மாநிலங்களிலுள்ள ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்குக் குடியிருப்புகள் தேவைப்படுகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இதுவரை, காலத்தில் இல்லாத அளவுக்கு பெரியதான புயலொன்று பிலிப்பீன்ஸ் தீவுகளின் மையப்பகுதிகளைத் தாக்கியுள்ளது.
வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், தெருக்களில் உள்ள மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை முதலில் மணிக்கு 235 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் தாக்கிய சூப்பர் தைப்பூன் ஹையான் என்னும் இந்தப் புயல், பல கடற்கரை கிராமங்களை நீரில் மூழ்கடித்துவிட்டது.
புயல் கடந்த வழியில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டனர். பல இடங்களில் பெருத்த வெள்ளமும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புக்கள் மற்றும் பிற சேதங்கள் பற்றி கணக்கிட பல நாட்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...