செய்திகள் - 05.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
2. 2014ம் ஆண்டு உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏடு
3. மனித வியாபாரம் குறித்த வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கு
4. மனித வியாபாரத்துக்கெதிரான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் உருவாக்கப்பட திருத்தந்தையிடம் பரிந்துரை
5. தொழிலாளருக்கு நீதி வழங்கப்படுமாறு CBCI தொழில் பணிக்குழு வலியுறுத்தல்
6. அஜர்பைஜானுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு Caucasus முஸ்லீம்கள் அழைப்பு
7. தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் பீரங்கித் தாக்குதல்
8. 40 விழுக்காட்டு சிரியா நாட்டினருக்கு உதவிகள் தேவை, ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் அமைப்பின் தலைவர்
9. செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
நவ.05,2013. திருஅவையின் அங்கமாக மாறுவது திருவருளாகும், இது, நல்லவர்க்கும்
தீயவர்க்கும் என அனைவருக்கும் கடவுள் விரும்பும் கொண்டாட்டத்திற்கான
அழைப்பாகும் என்று இச்செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் புனித மார்த்தா
இல்ல சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இந்த அழைப்பு, கட்டணம் செலுத்தாத இலவச அழைப்பாகும், கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, மீட்பின் மகிழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்கப்பட்டவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை, இயேசுவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்குக் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று உரைத்தார்.
கிறிஸ்தவர்கள்
விருந்தாளிகள் பட்டியலில் இருப்பதில் நிறைவு கண்டுவிடாமல் நம் ஆண்டவரின்
கொண்டாட்டத்தில் முழுமையாய்ப் பங்கெடுக்க வேண்டுமென்று கூறிய திருத்தந்தை
பிரான்சிஸ், இதில் முழுமையாய்ப் பங்கெடுக்காவிட்டால் ஒதுக்கப்பட்டவர்கள்போன்று உணருவோம் என்றும் கூறினார்.
புனித
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் இந்நாளைய முதல் வாசகம் மற்றும்
இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் சாரமே அழைப்பு எனவும், நாம் அழைக்கப்பட்டால்மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறுவோம் எனவும், இதில் நுழைவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறினார்.
இந்தக் கொண்டாட்டம் ஒன்றிப்பின் கொண்டாட்டம் என்றும், நம் ஆண்டவர் தாராளத்தில் எல்லையில்லாதவர், அவர் எல்லாக் கதவுகளையும் திறக்கிறார், ஆண்டவரே, நான் உம்மிடம் வரமாட்டேன் என்று சொல்பவர்களைக்கூட புரிந்துகொண்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறார், ஏனெனில் அவர் கருணையுள்ளவர், ஆனால்
உள்ளொன்றும் புறமொன்றும் வைத்துப் பாசாங்கு செய்பவர்களை அவர்
விரும்புவதில்லை என்றும் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. 2014ம் ஆண்டு உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏடு
நவ.05,2013.
2014ம் ஆண்டு அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக
ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏட்டை
இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்
"நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்தின் மேய்ப்புப்பணி சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏடு, குடும்பமும் நற்செய்தியும்; குடும்பம் பற்றி திருஅவையும் நற்செய்தியும்; குடும்பம் குறித்த திருஅவையின் போதனைகள் போன்ற தலைப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும், திருமறை நூல்களிலும் திருஅவையின் ஆசிரிய வெளியீடுகளிலும் திருமணம் குறித்து சொல்லப்பட்டிருப்பவை; இயற்கைச் சட்டத்தின்படி திருமணம்; நற்செய்தி அறிவிப்பில் மேய்ப்புப்பணி அக்கறை; ஒரே பாலினச் சேர்க்கையாளர்கள்; முறைகேடான திருமணங்களில் குழந்தைகளின் கல்வி; திருமணமான தம்பதியர் வாழ்வுக்குத் திறந்தமனதுடையவர்களாய் இருத்தல்; சில இக்கட்டான சூழல்கள் போன்ற தலைப்புக்களில் கேள்விகளும் இவ்வேட்டில் உள்ளன.
பிற சவால்கள் மற்றும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுவதாக இத்தயாரிப்பு ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கானத் தயாரிப்பு ஏட்டை, இம்மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர் புடாபெஸ்ட் கர்தினால் Péter Erdő அவர்களின் தலைமையிலான குழு இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மனித வியாபாரம் குறித்த வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கு
நவ.05,2013. மனித வியாபாரம் என்ற வடிவில் இடம்பெறும் நவீன அடிமைத்தனம் குறித்து இம்மாதம் 2,3 தேதிகளில் வத்திக்கானில் அனைத்துலக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளனர் வல்லுனர்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் திருப்பீட அறிவியல் கழகமும், உலக கத்தோலிக்க மருத்துவக் கழக கூட்டமைப்பும் இணைந்து இந்த அனைத்துலக கருத்தரங்கை நடத்தியுள்ளன.
உலகெங்கிலுமிருந்து
60 வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த அனைத்துலக கருத்தரங்கு குறித்து
பத்திரிகையாளர்களிடம் பேசிய திருப்பீட அறிவியல் கழகத் தலைவர் ஆயர் Marcelo Sanchez Sorondo, இக்கருத்தரங்கில் பேசப்படும் கருத்துக்கள் இவ்விவகாரம் குறித்து தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைக்கு இன்றியமையாதவை என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனோஸ் ஐரெஸ் பேராயராகப் பணியாற்றியபோது, மனித வியாபாரத்துக்கெதிராய் பணிசெய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் எனவும் ஆயர் Sanchez Sorondo கூறினார்.
மனித வியாபாரம், இக்காலத்தில் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2012ம் ஆண்டின் ஐ.நா. தொழில் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2002ம் ஆண்டுக்கும், 2011ம்
ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 2 கோடியே 90 இலட்சம் பேர்
கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் எனத் தெரிகிறது. எனினும் சரியான
எண்ணிக்கை தெரியவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. மனித வியாபாரத்துக்கெதிரான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் உருவாக்கப்பட திருத்தந்தையிடம் பரிந்துரை
நவ.05,2013.
மனித வியாபாரத்துக்கெதிரான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள்
உருவாக்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பரிந்துரை
செய்துள்ளனர் அருள்சகோதரிகள்.
மனித வியாபாரம் குறித்து வத்திக்கான் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்ட அருள்சகோதரிகள் இந்தத் தங்களது ஆவலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பரிந்துரைத்தபோது அதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும், அதற்குரிய ஒரு நாளைக் கூறும்படியாக அவர் கேட்டதாகவும் தெரிவித்தார் அருள்சகோதரி யூஜெனியா பொனெத்தி.
அடிமையாகிய
புனித ஜோஸ்பின் பக்கித்தா விழாவான பிப்ரவரி 8ம் தேதியை தாங்கள்
திருத்தந்தையிடம் பரிந்துரைத்ததாகக் கூறிய அருள்சகோதரி பொனெத்தி, மனித
வியாபாரம் குறித்த உலகளாவிய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அனைத்துலக செபம்
மற்றும் உண்ணா நோன்பு நாளைப் பரிந்துரை செய்ததாகக் கூறினார்.
மனித வியாபாரம் குறித்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சில மறைமாவட்டங்களும் சில பங்குகளுமே தற்போது ஆர்வத்தோடு இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டார் அருள்சகோதரி பொனெத்தி.
19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்த சூடான் நாட்டு அடிமைப்பெண்ணாகிய பக்கித்தா இத்தாலியில் சுதந்திரமான வாழ்வை மேற்கொண்டு, திருமுழுக்குப் பெற்று துறவு சபையில் சேர்ந்து புனித வாழ்வு நடத்தியவர்.
ஆதாரம் : CNS
5. தொழிலாளருக்கு நீதி வழங்கப்படுமாறு CBCI தொழில் பணிக்குழு வலியுறுத்தல்
நவ.05,2013.
ஒரு நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் மாண்புநிறைந்த வேலை செய்வதற்கு
உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று இந்திய ஆயர் பேரவையின் தொழில்
பணிக்குழு அறிவித்துள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் தொழில் பணிக்குழு அண்மையில் புதுடெல்லியில் நடத்திய தேசிய மாநாட்டின் இறுதியில் அப்பணிக்குழுத் தலைவர் ஆயர் Oswald Lewis, Faridabad பேராயர் Kuriakose Bhranikulankara ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் மாண்புடன்கூடிய வேலை செய்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
1998ம்
ஆண்டில் நடைபெற்ற 86வது அனைத்துலக தொழில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
தொழில் குறித்த அடிப்படை கோட்பாடுகளையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டும்
இவ்வறிக்கை, அனைத்துலக
தொழில் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இக்கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டிய
கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதுடெல்லியில்
அமைப்புமுறை சாராத் தொழிலாளர்களுக்கு நீதி வழங்கப்படுமாறும் இந்திய ஆயர்
பேரவையின் தொழில் பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஆதாரம் : CBCI
6. அஜர்பைஜானுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு Caucasus முஸ்லீம்கள் அழைப்பு
நவ.05,2013. அஜர்பைஜான் நாட்டின் Caucasus இசுலாமியத் துறைத் தலைவர் Sheikh Hadji Allahchukur Pachazade அவர்கள், தங்கள் நாட்டுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
வத்திக்கான்
அருங்காட்சியகத்தில் அஜர்பைஜான் நாட்டுக் கலைகளை வைப்பது தொடர்பாக
அந்நாட்டுக்கு அதிகார்ப்பூர்வச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீட
கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்களிடம் இவ்வழைப்பை முன்வைத்தார் Pachazade.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து தாங்கள் மகிழ்வதாகவும், அவரை நேரிடையாகச் சந்திப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் Pachazade மேலும் கூறினார்.
ஏறக்குறைய ஒரு கோடி மக்களைக் கொண்ட அஜர்பைஜான், ஒரு முஸ்லீம் நாடாகும். இந்நாட்டில் முஸ்லீம்கள் 93.4 விழுக்காடும், கிறிஸ்தவர்கள் 4.6 விழுக்காடும் உள்ளனர். இவர்களில் கத்தோலிக்கர் ஏறக்குறைய 400 பேரே. இவர்களும் பெரும்பாலும் வெளிநாட்டவரே.
ஆதாரம் : AsiaNews
7. தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் பீரங்கித் தாக்குதல்
நவ.05,2013. சிரியாவின் தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் இச்செவ்வாய் காலை பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த வன்முறை,
அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வாழும் திருப்பீட தூதரைக் குறிவைத்து
நடத்தப்பட்டுள்ளது என்றும் தமாஸ்கு திருப்பீட தூதர் பேராயர் மாரியோ செனாரி
அவர்களின் செயலர் அருள்பணி ஜார்ஜோ கூறினார்.
இந்த வன்முறையில் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லையென்றும், அக்கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது என்றும் அருள்பணி ஜார்ஜோ மேலும் கூறினார்.
இத்தாக்குதலையொட்டி திருப்பீட தூதரோ, திருப்பீட தூதரகத்தின் பணியாளர்களோ, யாரும் அவ்விடத்தைவிட்டுச் செல்லமாட்டார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் சண்டையில் அந்நாட்டைவிட்டுச் செல்லாதவர்களில் பேராயர் செனாரி அவர்களும் ஒருவர்.
ஆதாரம் : AsiaNews
8. 40 விழுக்காட்டு சிரியா நாட்டினருக்கு உதவிகள் தேவை, ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் அமைப்பின் தலைவர்
நவ.05,2013. சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் ஏறக்குறைய 93 இலட்சம் மக்களுக்கு, அதாவது
அந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்கு
வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள்
அமைப்பின் தலைவர் வலேரி ஆமோஸ் கூறினார்.
வெளிநாடுகளின் உதவிகளை எதிர்நோக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 68 இலட்சமாக இருந்தது, இது தற்போது 93 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் ஆமோஸ் தெரிவித்தார்.
சிரியாவில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் தெரிவித்தார் ஆமோஸ்.
இதற்கிடையே, சிரியா
அரசும் எதிர்தரப்புகளும் பேச்சுவார்த்தைகளை எப்படி அமைப்பது எனபதில்
கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல்-அசாத்
பதவி விலக வேண்டுமென்று எதிர்தரப்புகள் வலியுறுத்திவரும்வேளை, பேச்சுவார்த்தைகளுக்கு எந்த முன்நிபந்தனையும் வைக்கக் கூடாது என்று சிரியா அரசு கூறி வருகிறது.
சிரியாவில்
2011ம் ஆண்டு மார்ச்சில் சண்டை தொடங்கியதிலிருந்து ஒரு இலட்சத்துக்கு
மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20 இலட்சத்துக்கு மேற்பட்டோர்
நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஆதாரம் : UN
9. செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்
நவ.05,2013.
செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும்
சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2.38 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி. விண்கலம் மூலம் ஏவப்பட்டது.
450
கோடி ரூபாய் செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் இதனை
உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ. பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி
ஏவப்பட்டதால் வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு
செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தைத் துவக்கும்.
இந்த மங்கள்யான்' செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இது செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காகச் சிறப்பாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை 15 கிலோ.
மேலும், செவ்வாய்க்
கிரகத்தின் மேல் பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில்
பொருத்தப்பட்டுள்ள கருவி தெரிவிக்கும். உலக அளவில் இது மிக முக்கிய
சோதனையாகும்.
செவ்வாய்க்
கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்று உலக சாதனைப்
பட்டியலில் இந்தியா 4வது நாடு என்ற இடத்தை பிடித்துள்ளது. இது வரை இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய
விண்வெளி கழகம் ஆகியன வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலம்
அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே
வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment