செய்திகள் - 02.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் மீதான நம்பிக்கையில் நமது வாழ்வின் அந்திவேளையை நினைத்துப் பார்ப்போம்
2. தீமைக்கு எதிராகப் போராடுவதற்கு, பொறுமையுடன் இடைவிடாமல் செபிக்கவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்
3. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கம் வனம் போல வளர்ந்து வருகின்றது, கர்தினால் மாராதியாகா
4. விசுவாசிகள் ஒவ்வொருவருமே புனிதராவதற்கான வேட்பாளர்
5. அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளைப் பல்வேறு மதத்தவரும் நினைவுகூருகின்றனர்
6. எகிப்தின் ஆலயங்களில் மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்
7. வயதான எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன, ஐ.நா.
8. கடற்கொள்ளையர்கள், ஏழாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் 33 கோடியே 90 இலட்சம் டாலருக்கு அதிகமான பணம் பெற்றுள்ளனர், ஐ.நா.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் மீதான நம்பிக்கையில் நமது வாழ்வின் அந்திவேளையை நினைத்துப் பார்ப்போம்
நவ.02,2013.
நமது இதயத்தை இயேசுவின் மீதான நம்பிக்கையில் நிலைநிறுத்தி நமது வாழ்வின்
இறுதிநேரத்தை நினைத்துப் பார்ப்போம் என்று இவ்வெள்ளி மாலை கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப்
புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை மாலையில் உரோம் வெரானோ
கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ், கதிரவன் மறையும் இவ்வேளையில் நமது வருங்காலத்தைப் பற்றியும், நமக்குமுன்
வாழ்ந்து இறந்து ஆண்டவரில் இளைப்பாறும் அனைவரையும் நினைத்துப்
பார்ப்பதற்கு இக்கல்லறைத் தோட்டத்தில் நாம் கூடியுள்ளோம் என்று கூறினார்.
நம்பிக்கை, நிலைநிறுத்து, இயேசு ஆகிய மூன்று வார்த்தைகளை மையமாகக் கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரை, நம் ஒவ்வொருவரின் இறுதிக்காலம், இறப்பு ஆகியவற்றில் மேலோங்கவேண்டிய கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி விளக்குவதாக இருந்தது.
அத்திருப்பலியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கென ஏற்கனவே தயார் செய்திருந்த மறையுரைத் தாளை வைத்துவிட்டு, உருக்கமான தொனியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்று நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பார்க்கின்றோமென்றால், இவர்கள் நமது நம்பிக்கையும், நம்மை ஒருபோதும் ஏமாற்றாதவருமான கிறிஸ்துவின் குருதியால் சுத்தப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்காகவே என்றும் கூறினார்.
இந்நாளைய திருப்பலி வாசகங்களை வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இறந்த
அனைத்து ஆன்மாக்களையும் நினைவுகூரும் நாளுக்கு முன்னர் நாம் சிறப்பிக்கும்
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவாகிய இந்நாளில் நம் வாழ்வோடு
தொடர்ந்துவரும் நம்பிக்கை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை, இறைவனின் வாழ்வில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த, நங்கூரத்தை அடையாளமாகப் பயன்படுத்தினர், நாமும் நமது வாழ்வை இயேசு கிறிஸ்துவில், இறைவனில் நிலைநிறுத்த வேண்டும், நங்கூரமிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை, தூய்மைப்படுத்துகின்றது, ஒளிர்விக்கின்றது, துரிதமாகச் செல்ல வைக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கதிரவன் மறையும் இவ்வேளையில் நமது இறுதிநேரத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்போம், நமது இதயம் எதில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அது இயேசுவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் அவர் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார் என்று உரைத்தார்.
நல்வாழ்வைத் தேடி வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பாலைவனத்திலும், கடலிலும்
இறப்பவர்களை இத்திருப்பலியில் சிறப்பாக நினைவுகூர்ந்து செபிப்பதாகவும்
மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. தீமைக்கு எதிராகப் போராடுவதற்கு, பொறுமையுடன் இடைவிடாமல் செபிக்கவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.02,2013. தீமைக்கு எதிரான போராட்டம் நீண்டது மற்றும் கடினமானது. எனவே, பொறுமையுடன்
இடைவிடாமல் செபிக்கவேண்டியது இன்றியமையாதது என்று தன் டுவிட்டர்
பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன், அராபியம் உட்பட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி ஏறத்தாழ தினமும் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படுகின்றது.
மேலும், 2012ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து 2013ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரம்வரை இறந்த அனைத்துக் கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, நவம்பர் 4, வருகிற திங்களன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2013ம்
ஆண்டு ஜூலை 19ம் தேதி இறந்த மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் சைமன்
பிமென்ட்டா உட்பட 9 கர்தினால்கள் இவ்வாண்டில் இறந்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கம் வனம் போல வளர்ந்து வருகின்றது, கர்தினால் மாராதியாகா
நவ.02,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வளர்ந்து வரும் கத்தோலிக்கத் திருஅவை, வாழ்வதன்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நற்செய்தி அறிவிக்க வேண்டும் மற்றும் ஏழைகளின்
திருஅவையாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஹொண்டூராஸ் கர்தினால்
ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா.
நற்செய்தியை புதிய முறையில் அறிவிப்பதன் முக்கியம் குறித்து, டல்லஸ் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அண்மையில் உரையாற்றிய கர்தினால் மாராதியாகா, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கத் திருஅவை, வனம் போன்று சப்தம் போடாமல் வளர்ந்து வருகின்றது என்று கூறினார்.
மரம் விழும்போது அதிக சப்தம் கேட்கிறது, ஆயினும், வளர்ந்துவரும் முழுக் காடும் சப்தம் எழுப்புவதில்லை, அமெரிக்கத் திருஅவையின் நிலையும் இதுதான் என்றும் உரைத்தார், திருப்பீடத்தின் சீர்திருத்தத்துக்குத் திருத்தந்தைக்கு உதவும் எட்டு கர்தினால்களில் ஒருவராகிய கர்தினால் மாராதியாகா.
2002ம் ஆண்டில் இரண்டு இலட்சம் அமெரிக்கர்கள் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் மாராதியாகா, எல்லாமே சுடர்விடுவதில்லை, எல்லாமே துர்மாதிரிகையும் பாவமும் அல்ல, இந்நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தி உயிரோட்டமாக இருக்கின்றது என்றும் பாராட்டினார்.
ஆதாரம் : CNA
4. விசுவாசிகள் ஒவ்வொருவருமே புனிதராவதற்கான வேட்பாளர்
நவ.02,2013. விசுவாசிகள் ஒவ்வொருவரும் புனிதராவதற்கான வேட்பாளர்கள் என்று, திருஅவையின் தூயவர்கள் விழா நாளன்று கூறினார் பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர் ஒருவர்.
தூயவர்கள் இந்நிலையை அடைவதற்கு முன்னர் அவர்கள் சாதாரண மனிதர்களாகப் பிறந்தவர்கள் என்றும், சுருங்கச்சொல்லின் நாம் அனைவருமே தூயவர்களாக மாறுவதற்கான வேட்பாளர்கள் என்றும் Antipolo பங்குத் தந்தை அருள்பணி Jun Meneses கூறினார்.
தூயவர்கள், உண்டார்கள், சிரித்தார்கள், பிரச்சனைகள் குறித்து கவலைப்பட்டார்கள், சாதாரண மக்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் அனுபவித்தார்கள் என்று மறையுரையாற்றிய அருள்பணி Jun Meneses, துறவு இல்லங்களைச் சுத்தம் செய்தவர்கள், கோழிகளையும் பன்றிகளையும் பராமரித்தவர்கள்.. இப்படி சாதாரண வேலை செய்த அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் தூயவர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்
இத்தூயவர்கள் கடவுளை அடைவதற்கு இன்னல்நிறைந்த குறுகிய பாதையைத் தெரிவு செய்தனர், இதனை நாமும் செய்யலாம், புனித வாழ்வுக்கான கடவுளின் அழைப்புக்கு முதலில் நாம் பதில் சொல்ல வேண்டுமென்றும் அக்குரு கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : CBCP
5. அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளைப் பல்வேறு மதத்தவரும் நினைவுகூருகின்றனர்
நவ.02,2013. கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பல்வேறு மதத்தவரும் இறந்த அனைத்து ஆன்மாக்களை நினைவுகூருகின்றனர் என்று விளக்குகிறார் இந்திய ஊடகவியலாளர் ஒருவர்.
முஸ்லீம்கள் Shab-e-Baratயும், இந்துக்கள் Pithru Pakshaவையும் சிறப்பிக்கும்போது இறந்தவர்களை நினைவுகூருகின்றனர் என்று விளக்கும் பத்திரிகையாளர் Ivan Fernandes, புத்த மதத்தினரும், பார்சி மதத்தினரும் இறந்தவர்களை நினைவுகூர்கின்றனர் என்று கூறுகிறார்.
கிறிஸ்தவர்கள் போன்று, முஸ்லீம்களும்
சமாதிகளுக்குச் சென்று மலர்களை வைத்து விளக்குகளை ஏற்றிச் செபிக்கின்றனர்.
இந்துக்களும் தங்கள் முன்னோர்களின் நிறைசாந்திக்காகச் செபிக்கின்றனர்.
புத்த மதத்தினரும் அனைத்துப் புனிதர்கள் நாளையும், அனைத்து ஆன்மாக்கள் நாளையும் நினைவுகூருகின்றனர் என்று விளக்குகிறார் Ivan Fernandes.
கி.பி.844ம் ஆண்டில் இறந்த திருத்தந்தை 4ம் கிரகரி, நவம்பர் முதல் தேதியை அனைத்துப் புனிதர்கள் விழாவாகவும், 1748ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட், நவம்பர் இரண்டாம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆதாரம் : UCAN
6. எகிப்தின் ஆலயங்களில் மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்
நவ.02,2013. எகிப்தின் ஆலயங்கள், இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு மீண்டும் இவ்வெள்ளியன்று உள்ளாகியிருப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வெள்ளி மாலை செபத்துக்குப் பின்னர் ஊர்வலமாக வந்து சில கிறிஸ்தவ இளைஞர்களுடன் மோதி, கெய்ரோவின் கிழக்குப் பகுதியிலுள்ள, அன்னைமரியா காட்சி கொடுத்த புகழ்பெற்ற Zaytoun கன்னிமரி ஆலயத்தைத் தாக்கியுள்ளனர்.
அவ்வழியே சென்றவர்கள் சிலரின் தலையீட்டால் இம்மோதல் அதிகமாகாமல் தடுக்கப்பட்டுள்ளது என அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.
கடந்த அக்டோபர் 20ம் தேதி Al- Warraq அன்னிமரி ஆலயத்தில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
7. வயதான எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன, ஐ.நா.
நவ.02,2013. எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வயதான குடிமக்களுக்கும் அந்நோய்க்கான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று UNAIDS என்ற ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
தற்போது உலகிலுள்ள 3 கோடியே 53 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகளில் ஏறக்குறைய 36 இலட்சம் பேர் 50ம், அதற்கு மேற்பட்ட வயதையும் கொண்டவர்கள் என்று கூறியுள்ளது UNAIDS அமைப்பின் புதிய அறிக்கை.
50ம், அதற்கு மேற்பட்ட வயதுடைய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அந்நோய்க்கான சிகிச்சைகள் எப்போதும் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள UNAIDS அமைப்பின் இயக்குனர் Michel Sidibé, இந்த வயதினருக்கு இன்னும் அதிகக் கவனம் கொடுக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளார்.
அண்மை ஆய்வின்படி, அதிக வருமானம் வரும் நாடுகளில் வாழும் எய்ட்ஸ் நோயாளிகளில், இந்த மூத்த வயதுடைய நோயாளிகள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி எனத் தெரியவந்துள்ளது.
ஆதாரம் : UN
8. கடற்கொள்ளையர்கள், ஏழாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் 33 கோடியே 90 இலட்சம் டாலருக்கு அதிகமான பணம் பெற்றுள்ளனர், ஐ.நா.
நவ.02,2013. சொமாலிய மற்றும் ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதிக் கடற்கொள்ளையர்கள், ஏழாண்டுகளுக்கு
மேற்பட்ட காலத்தில் பிணையல்தொகையாக பெற்றதில் 33 கோடியே 90 இலட்சம் டாலர்
முதல் 41 கோடியே 30 இலட்சம் டாலர்வரை ஆதாயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா.
ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
UNODC என்ற போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு ஐ.நா. அமைப்பு, உலக வங்கி, INTERPOL என்ற அனைத்துலக குற்றப்புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் இணைந்து முன்னாள் கடற்கொள்ளையர்கள், அரசு அதிகாரிகள், வங்கிகள், கடற்கொள்ளையரோடு தொடர்புடைய மற்றும்பிற நிறுவனங்களோடு நடத்திய நேர்காணல்களில் இவ்விபரங்கள் தெரியவந்துள்ளன.
கடற்கொள்ளையர்கள் பெற்றுள்ள பெருமளவான பிணையல்தொகைகள், நிலத்திலும் அவர்களின் நடவடிக்கைகளை வளர்ப்பதற்கு உதவியுள்ளன என்று UNODC அமைப்பின் அதிகாரி Tofik Murshudlu தெரிவித்தார்.
இந்தக் குற்றக் கும்பல்கள், ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதியின் உறுதியான தன்மைக்குத் தொடர் அச்சுறுத்தலாக இருந்துவருவதாகவும், இதனால் சுற்றுலாவும், மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன, உலகளாவியப் பொருளாதாரத்தில், ஆண்டுக்கு ஏறக்குறைய 180 கோடி டாலர் இழப்பையும் இக்கும்பல்கள் ஏற்படுத்துகின்றன எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கின்றது.
No comments:
Post a Comment