1. கர்தினால்களின் கான்கிளேவ் அவை இச்செவ்வாயன்று துவங்குகிறது
2. பாகிஸ்தானில் கிறிஸ்தவ வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன
3. கர்நாடகாவில் இவ்வாண்டில் ஆறாவது முறையாக கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
4. இரத்தம் மற்றும் உறுப்பு தானம் குறித்து தமிழகத் திருஅவையில் கருத்தரங்குகள்
5. இலங்கையில் கடந்த ஆண்டில் 1800 சிறுவர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
6. இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் 14 இலட்சம் கையெழுத்துக்கள் கையளிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால்களின் கான்கிளேவ் அவை இச்செவ்வாயன்று துவங்குகிறது
மார்ச்,11, 2013. புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கர்தினால்களின் கான்கிளேவ் அவை மார்ச், 12, இச்செவ்வாயன்று காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழும் திருப்பலியுடன் துவங்குகிறது.
இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 30 நிமிடங்களுக்குத் துவங்கும் இத்திருப்பலியில், கர்தினால்கள் அவை தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ தலைமையில் அனைத்து கர்தினால்களும் கலந்துகொள்வர்.
இச்செவ்வாய்
மாலை உள்ளூர் நேரம் 4 மணி 30 நிமிடங்களுக்கு 80 வயதிற்குட்பட்ட 115
கர்தினால்களும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி செபம் மற்றும் தியானத்தில்
ஈடுபட்டபின்னர் வாக்குப்பதிவிலும் கலந்துகொள்வர். இதற்கு முன்னதாக, கர்தினால்களுக்கு தியானச் சிந்தனைகளை அகுஸ்தீன் துறவு சபைக் கர்தினால் Prospero Grech வழங்குவார்.
இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 115 கர்தினால்களுள் 28 இத்தாலியர்கள் உட்பட 60 பேர் ஐரோப்பியர்கள்; 19 பேர் இலத்தீன் அமெரிக்கர்கள்; 14 பேர் வட அமெரிக்கர்கள்; 11 பேர் ஆப்ரிக்கர்கள்; 5 இந்தியர்கள், ஓர் இலங்கையர் உட்பட 10 பேர் ஆசியர்கள்; ஒருவர் ஓசியானியாவைச் சேர்ந்தவர்.
இதில்
பங்கெடுக்கும் கர்தினால்களின் சராசரி வயது 71. இந்த 115 கர்தினால்களுள் 67
பேர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக் அவர்களால் கர்தினால்களாக
உயர்த்தப்பட்டவர்கள்.
2. பாகிஸ்தானில் கிறிஸ்தவ வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன
மார்ச்,11, 2013.
தேவநிந்தனை குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தானின் லாகூர் பகுதியில்
நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வீடுகள் தாக்கப்பட்டு
தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறித்து, தன் வன்மையான கண்டனத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய ஆயர்கள் பேரவை.
இத்தகைய வன்செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதுடன், அச்சத்துடன்
வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு
வழங்கவேண்டிய பாகிஸ்தான் அரசின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர் இந்திய
ஆயர்கள்.
தேவநிந்தனை
என்ற பொய்க்குற்றச்சாட்டின் பேரில் தீவிரவாதக் குழுக்கள் கிறிஸ்தவர்களைத்
தாக்குவதும் அவர்களின் உடமைகளைச் சேதப்படுத்துவதும் பாகிஸ்தானில்
அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகக் கூறும் இந்திய ஆயர்கள், பாகிஸ்தான் அரசு இதில் நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சனிக்கிழமையன்று லாகூரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 178 வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில்,. இத்தாக்குதலைத்
தடுத்து நிறுத்த காவல்துறை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என
மனித உரிமைகளுக்காக உழைக்கும் இஸ்லாமிய நடவடிக்கையாளர்களும்
குற்றஞ்சாட்டியுள்ளனர்.
3. கர்நாடகாவில் இவ்வாண்டில் ஆறாவது முறையாக கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
மார்ச்,11, 2013.
கர்நாடகாவின் உடுப்பி அருகே மூடுபெல்லே எனுமிடத்தில் இரவு
செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த பெந்தகோஸ்தே கிறிஸ்தவக்குழு
ஒன்றின் மீது சில மத தீவிரவாதிகள் தாக்கியதில் எட்டுபேர் வரை பலத்தக்
காயமுற்றுள்ளனர்.
கிறிஸ்தவப்
போதகர் இராபர்ட் லோபோவின் வீட்டினுள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள்
அமைப்புகளைச் சார்ந்த ஏறத்தாழ 30 அங்கத்தினர்கள் நுழைந்து, அங்கு
செபிக்கக் கூடியிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டுள்ளவர்களுள்
எட்டுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர் என்ற பொய்யானக் குற்றச்சாட்டின்பேரில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, 16 மதத் தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடக
மாநிலத்தில் 2013ம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் இதுவரை
கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆறு முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
4. இரத்தம் மற்றும் உறுப்பு தானம் குறித்து தமிழகத் திருஅவையில் கருத்தரங்குகள்
மார்ச்,11, 2013. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் இரத்தம் மற்றும் உறுப்பு தானம் வழங்குவதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என, தமிழகக் கத்தோலிக்கத் திருஅவை இத்தவக்காலத்தில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது..
சுயநலமாக வாழாமல் மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு தவக்காலமே சிறந்த ஒரு காலம் என்றும், இதுவே உண்மையான தியாகமாக இருக்கமுடியும் என்றும் இயேசு சபை அருள்பணியாளர் ஜெரி ரொசாரியோ கூறினார்.
தன் மரணத்திற்குப் பின், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக எழுதி வைத்துள்ள அருள்பணியாளர் ஜெரி ரொசாரியோ, சென்னை நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தவக்காலத்தின்
வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் திருப்பலிக்குப்பின் இரத்த மற்றும்
உறுப்புதானத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தின் பல பங்குதளங்கள்
விழிப்புணர்வு கருத்தங்குகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
5. இலங்கையில் கடந்த ஆண்டில் 1800 சிறுவர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
மார்ச்,11, 2013. இலங்கையில் கடந்த ஆண்டு சிறார் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 1800 பதிவாகி இருப்பதாகவும், அவற்றில்
1600க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி தீர்வு
வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
இதில்
900க்கும் அதிகமான சம்பவங்கள் மிகவும் கொடுமையான பாலியல் வன்கொடுமையாக
உள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இவ்வாறான நிகழ்வுகளில், சிறுவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பெண்களுக்கு
எதிரான தீவிர வன்முறை சம்பவங்களாக கடந்த ஆண்டில் 28 குற்றச்சாட்டுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் 14 இலட்சம் கையெழுத்துக்கள் கையளிப்பு
மார்ச்,11, 2013.
இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும்
அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 இலட்சம் கையெழுத்துக்கள்
அடங்கிய விண்ணப்பம் இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியப்
பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித
உரிமைகள் அமைப்பின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன், புதுடெல்லியில் இவ்விண்ணப்பத்தை ஓப்படைத்தார்.
இந்தச் சந்திப்பின்போது தங்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் நாராயணசாமி பொறுமையாக கேட்டுக்கொண்டதாகவும், ஜெனீவாவில்
உரிய நேரத்தில் இந்தியா உரிய முடிவை எடுக்கும் என்று அவர்களுக்கு
உறுதியளித்ததாகவும் தெரிவித்தார் அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை
நிர்வாகி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 இலட்சம் பேர் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இரண்டுலட்சம் பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அனந்தபத்மனாபன்.
இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகத் தெரிவித்த அனந்தபத்மநாபன், இதில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்தைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment