Saturday 12 June 2021

WHOவில் திருப்பீடத்திற்கு நிரந்தரப் பார்வையாளர் நிலை

 சுவிட்சர்லாந்தில் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமையகம்


WHO நிறுவனம் நடத்தும் கூட்டங்கள், அதன் பணிகள், வரவுசெலவுத் திட்டக் கூட்டங்கள் போன்ற அனைத்திலும் திருப்பீடம் கலந்துகொள்வதற்கு, உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

WHO எனப்படும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் 74வது பொது அமர்வில், அந்நிறுவனத்தில், திருப்பீடம், நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று, மே 31 இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடம், WHO நிறுவனத்தில் உறுப்பினராக இல்லாமல், நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்பதற்கு, அந்நிறுவனத்தின் 74வது பொது அமர்வில், இத்தாலி நாடு முன்வைத்த பரிந்துரைக்கு, இந்தியா, இலங்கை, அரபு ஐக்கிய அமீரகம், ஜப்பான், குவைத், இத்தாலி, ஜெர்மனி உட்பட, எழுபதுக்கு மேற்பட்ட நாடுகள் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்புதலின்படி, WHO நிறுவனம் நடத்தும் கூட்டங்கள், அதன் பணிகள், வரவுசெலவுத் திட்டக் கூட்டங்கள் போன்ற அனைத்திலும் திருப்பீடம் கலந்துகொள்வதற்கு, உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனம் நடத்தும் அனைத்து கூட்டங்களிலும், திருப்பீடம் 1953ம் ஆண்டிலிருந்து பார்வையாளராகப் பங்கேற்றுள்ளது என்றும், 1964ம் ஆண்டிலிருந்து   ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில், நிரந்தரப் பார்வையாளராக உள்ளது என்றும், ஐ.நா.வின் பொது அவையிலும், ஐ.நா.வின் மற்ற கூட்டங்களிலும், திருப்பீடம் பங்கு கொள்ள உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுள்ளது என்றும், WHO நிறுவனத்தின் 74வது பொது அமர்வில் கூறப்பட்டது.

இத்தாலி முன்மொழிந்த இந்த பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்த, அந்நாட்டின்  வெளியுறவு அமைச்சர் Luigi di Maio அவர்கள், WHO நிறுவனத்தில் திருப்பீடம், பிரதிநிதித்துவம் வகிப்பது, அனைவருக்கும் ஒரு தூண்டுதலாக அமையும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...