Friday 18 June 2021

மீண்டும் திறக்கப்படும் லெபனான் புனித யோசேப்பு ஆலயம்

 பெய்ருட் வெடிகுண்டுத் தாக்குதலில் சேதமடைந்த புனித யோசேப்பு ஆலயம்


பெய்ரூட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தினால் பெருமளவு சேதமடைந்த புனித யோசேப்பு ஆலயம், முற்றிலும் சீரமைக்கப்பட்டு, இவ்வாண்டு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தினால் பெருமளவு சேதமடைந்த புனித யோசேப்பு ஆலயம், முற்றிலும் சீரமைக்கப்பட்டு, இவ்வாண்டு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இயேசு சபையினரின் கண்காணிப்பில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயம், 1875ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்பகுதியில் வாழும் பல்வேறு மக்களுக்கு பங்கு ஆலயமாக இருந்துவந்தது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட்டில் நிகழ்ந்த மிகப்பெரும் வெடி விபத்தின் காரணமாக இவ்வாலயம் அழிவுக்கு உள்ளானது.

தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவி என்ற பெயருடன் செயலாற்றிவரும், Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு வழங்கிய நிதி உதவியுடன் இவ்வாலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும், வருகிற ஜூலை மாதம், இவ்வாலயம், மீண்டும் மக்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்படும் என்றும், இயேசு சபை அருள்பணியாளர் Salah Aboujaoude அவர்கள் கூறினார்.

இவ்வாலயத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு, ACN அமைப்பு 4 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது என்றும், அத்துடன், லெபனான் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக, ACN அமைப்பு இதுவரை, 60 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது என்றும் ACN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

பல்வேறு மொழி பேசுவோருக்காக பணியாற்றும் புனித யோசேப்பு ஆலயத்தில், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் திருப்பலியும், அரபு மொழியில், மாரனைட் வழிபாட்டு முறையில் திருப்பலியும் நடைபெறுகிறது என்று, அருள்பணி Aboujaoude அவர்கள் கூறினார்.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் அமைந்திருந்த ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரைட், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, தீப்பிடித்து வெடித்ததால், 207 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 7,500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...