1. புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ்
2.
திருத்தந்தை பிரான்சிஸ் தோன்றிய முதல் மணித்துளிகளிலேயே ஒரு சில
மாற்றங்களை மக்கள் அனைவரும் அறிய முடிந்தது - திருப்பீடப் பேச்சாளர்
3. மார்ச் 19, புனித யோசேப்புப் பெருவிழாவின்போது புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பொறுப்பேற்கிறார்
4. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் தலைசிறந்த மனிதர் - கர்தினால் Tagle
5. புதியத் திருத்தந்தைக்கு இயேசு சபையின் அகில உலக தலைவர் வாழ்த்து
6. வருகிற ஞாயிறன்று Argentina தலத்திருஅவையில் அனைத்து கோவில்களிலும் நன்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்
7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 195 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும், மக்களும் திருத்தந்தை முழு ஆதரவு அளிப்பர் - கர்தினால் Timothy Dolan
8. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், நமக்குச் சிறந்ததோர் வழிகாட்டி கிடைத்துள்ளார் - இந்தியத் திருஅவை
9. புதியத் திருத்தந்தைக்கு Argentina அரசுத் தலைவரின் வாழ்த்துத் தந்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,14,2013. திருஅவையின் 266வது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வியாழன்
காலை 8 மணி அளவில் உரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப்
பேராலயத்திற்குச் சென்று அரை மணி நேரம் செபத்தில் மூழ்கினார்.
இயேசு
சபையை நிறுவிய புனித லயோலா இஞ்ஞாசியார் குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டபின் தன் முதல் திருப்பலியை ஆற்றிய பீடம் புனித மேரி
மேஜர் பசிலிக்காவில் அமைந்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் இந்த
பீடத்திற்கு அருகிலும் சில மணித்துளிகள் செபத்தில் ஈடுபட்டார்.
திருத்தந்தையர் உரோம் நகருக்குள் செல்லும்போது வழக்கமாகச் செல்லும் பல வாகனங்கள் அடங்கிய ஊர்வலம் ஏதுமில்லாமல், திருத்தந்தையர் பயன்படுத்தும் சிறப்பு வாகனத்தையும் பயன்படுத்தாமல், திருத்தந்தை பிரான்சிஸ் வேறு ஒரு சாதாரண வாகனத்தையே பயன்படுத்தினார்.
தனிப்பட்ட முறையில் அமைந்த இந்த பயணத்தில், திருத்தந்தை இல்லத்தின் நிர்வாகி பேராயர் George Gaenswein அவர்களும், உதவி நிர்வாகி பேரருள் தந்தை Leonardo Sapienza அவர்களும் மட்டுமே உடன் சென்றனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தப் பயணம் அமைந்திருந்தும், பசிலிக்காவின் முன்பக்கத்தில் மக்கள் கூடியிருந்தனர் என்றும், திருத்தந்தை
பேராலயத்தின் முன்புறம் அமைந்திருந்த பள்ளியின் மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கையசைத்தபடியே சென்றார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi குறிப்பிட்டார்.
2.
திருத்தந்தை பிரான்சிஸ் தோன்றிய முதல் மணித்துளிகளிலேயே ஒரு சில
மாற்றங்களை மக்கள் அனைவரும் அறிய முடிந்தது - திருப்பீடப் பேச்சாளர்
மார்ச்,14,2013. புனித
பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தோன்றிய முதல்
மணித்துளிகளிலேயே ஒரு சில மாற்றங்களை மக்கள் அனைவரும் அறிய முடிந்தது என்ற
கூற்றுடன் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தை ஆரம்பித்தார்.
சிஸ்டின் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அங்கு நிலவிய இரகசிய காப்பு உறுதிகள் தளர்த்தப்பட்டன என்பதால், அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விழைகிறேன் என்று அருள்தந்தை Lombardi தெரிவித்தார்.
அதாவது, தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கர்தினால், திருத்தந்தைக்கென
அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமர்வார். அவருக்கு முன் ஏனைய
கர்தினால்கள் அனைவரும் வணங்கி தங்கள் கீழ்ப்படிதலைத் தெரிவிப்பர்.
இம்முறையோ, கர்தினால் Bergoglio தலைமைப் பொறுப்பை ஏற்றபின், திருத்தந்தைக்கென அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்வதற்குப் பதிலாக, நின்றபடியே ஏனைய கர்தினால்களின் வணக்கத்தைப் பெற்றார் என்பதை அருள்தந்தை Lombardi சிறப்பாகக் குறிப்பிட்டார்.
புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றுக் கொண்டதும், பல்வேறு ஊடகங்கள் இவரை முதலாம் பிரான்சிஸ் என்று அழைக்கின்றனர். இது தற்போது தேவையில்லை என்றும், பின்னொரு காலத்தில் மற்றொருவர் திருத்தந்தையாகும்போது, பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றால், அப்போது இந்தத் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் என்றும், அடுத்தவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றும் அழைக்கப்படுவர் என்றும் விளக்கமளித்தார் அருள்தந்தை Lombardi.
மார்ச் 1ம் தேதி முதல், திருத்தந்தை
இல்லத்தில் மூடப்பட்ட கதவுகளின் மீது இதுவரை வைக்கப்பட்டிருந்த
முத்திரைகளை இவ்வியாழன் மாலை சிஸ்டின் சிற்றாலயத்தில் கதினால்களுடன்
நடைபெற்ற திருப்பலிக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் நீக்கினார்.
3. மார்ச் 19, புனித யோசேப்புப் பெருவிழாவின்போது புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பொறுப்பேற்கிறார்
மார்ச்,14,2013. புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் மார்ச் 19, வருகிற செவ்வாயன்று கொண்டாடப்படும் புனித யோசேப்புப் பெருவிழாவின்போது தலைமைப் பொறுப்பேற்கும் திருப்பலியை நிறைவேற்றுவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடுத்த சில நாட்கள் நிகழ்வுகளை வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
இவ்வியாழன்
காலை 8 மணியளவில் உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப்
பேராலயத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்று செபம் செய்த திருத்தந்தை, மாலை 5 மணிக்கு சிஸ்டின் சிற்றாலயத்தில் ஏனைய கர்தினால்கள் அனைவருடனும் திருப்பலியை நிறைவேற்றினார்.
இவ்வெள்ளியன்று காலை கர்தினால்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடும் திருத்தந்தை, சனிக்கிழமையன்று ஊடகத் துறையினர் அனைவரையும் திருத்தந்தை 6 பவுல் மன்றத்தில் காலை 11 மணிக்குச் சந்திப்பார்.
மார்ச் 17, வருகிற ஞாயிறன்று மதியம் திருத்தந்தையின் மூவேளை செப உரை வழக்கமான இடத்தில் நடைபெறும்.
மார்ச் 19, காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியில், தலைமைப் பொறுப்பைக் குறிக்கும் 'பாலியம்' திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்படும்.
மார்ச் 20, வருகிற புதனன்று வழக்கமாக நடைபெறும் புதன் பொது மறைபோதகத்திற்குப் பதில், கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்கும் வகையில், பல்வேறு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளை திருத்தந்தை சந்திப்பார்.
4. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் தலை சிறந்த மனிதர் - கர்தினால் Tagle
மார்ச்,14,2013. பிலிப்பின்ஸ் நாட்டின்மீது தனக்கு அதிக நம்பிக்கை உள்ளதென்றும், பிலிப்பின்ஸ் மக்கள் அன்னை மரியாவிடம் கொண்டுள்ள சிறப்பு பக்தியும், அந்நாட்டுத் திருஅவை ஏழைகளுக்கு ஆற்றும் பணியும் வளர வாழ்த்துவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் என்று கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
இப்புதன் மாலை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் தலை சிறந்த மனிதர் என்று கூறிய கர்தினால் Tagle, கான்கிளேவ் அவை நடைபெற்ற நேரம் முழுமையிலும் மக்கள் அனைவரின் செபங்களால் தாங்கள் சூழப்பட்டிருந்ததை உணர முடிந்தது என்று கூறினார்.
திருஅவையின் பாரம்பரிய கோட்பாடுகளை உறுதியாகக் காக்கும் ஒருவரை, திருஅவையின் தலைவராகப் பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று கூறினார் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Jose Palma.
விவிலியத்தின் அடிப்படை உண்மைகளை எடுத்துரைக்கும் ஒரு குரலாகவும், நீதி, அமைதி
ஆகியவற்றை நிலை நாட்டும் குரலாகவும் திருஅவையின் புதியத் தலைவர் திகழ்வார்
என்று தான் எதிர்பார்ப்பதாக பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் Benigno Aquino கூறினார்.
5. புதியத் திருத்தந்தைக்கு இயேசு சபையின் அகில உலகத் தலைவர் வாழ்த்து
மார்ச்,14,2013. இயேசு சபையைச் சேர்ந்த கர்தினால் Jorge Mario Bergoglio அவர்கள், திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதற்காக, அனைத்துலக இயேசு சபையின் சார்பில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று அகில உலக இயேசு சபையின் தலைவர் Adolfo Nicolás செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருஅவை தற்போது கடந்து கொண்டிருக்கும் கடினமான பயணத்தின்போது, அதனை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள எங்கள் சகோதரரின் தாராள மனதை நாங்கள் பாராட்டுவதோடு, அவருடன் இந்தப் பயணத்தில் உடனிருப்போம் என்றும் அருள்பணியாளர் Nicolás கூறினார்.
இறைமக்கள் அனைவரின் முன்னிலையில் திருத்தந்தையாக அவர் தோன்றிய கணமே அவரது எளிமையும், தாழ்ச்சியும், ஆன்மீக ஆழமும் புலனானது என்று கூறிய அருள்பணியாளர் Nicolás, அவர் 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தெரிவு செய்தது, வறியோருடன் அவர் கொண்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியது என்று சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தைக்குச்
சிறப்பான முறையில் பணிந்து அவர் பணிகளை மேற்கொள்வதே இயேசு சபையினரின்
சிறப்பான அழைப்பு என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள இயேசு சபைத்
தலைவர் Adolfo Nicolás, புதியத் திருத்தந்தையின் கீழ் மீண்டும் எங்கள் சபையினர் அனைவரின் பணிவையும் தெரிவிக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்.
6. வருகிற ஞாயிறன்று Argentina தலத்திருஅவையில் அனைத்து கோவில்களிலும் நன்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்
மார்ச்,14,2013. அன்புள்ள சகோதரர் ஜார்ஜ், வரலாற்றின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை திருஅவைத் தலைவராக இன்றையக் காலக்கட்டத்தில் தேர்ந்தெடுத்திருப்பது, Argentina மக்களுக்குப் பேருவகையைத் தருகிறது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் José Maria Arancedo திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
வருகிற ஞாயிறன்று Argentina தலத்திருஅவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் நன்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுமாறு பேராயர் Arancedo அனைத்து ஆயர்களுக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் 13 ஆண்டுகள் பணியாற்றிய Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வர், பேரருள்தந்தை Joaquín Sucunza, வயது முதிர்ந்தோர், ஏழைகள், குருக்கள் ஆகியோருக்கு மிக நெருங்கியவராக வாழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்கத் திருஅவைக்கும், Argentina தலத் திருஅவைக்கும் கிடைத்துள்ள மிகப் பெரும் கொடை என்று கூறியுள்ளார்.
7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 195 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும், மக்களும் திருத்தந்தை முழு ஆதரவு அளிப்பர் - கர்தினால் Timothy Dolan
மார்ச்,14,2013. புதியத் திருத்தந்தை 'பிரான்சிஸ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது, திருஅவை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைத்துள்ளது என்று அமெரிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர் கர்தினால் Timothy Dolan கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் ஒற்றுமைக்குச் சிறந்ததோர் அடையாளம் என்று தன் செய்தியில் கூறிய கர்தினால் Dolan, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 195 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும், மக்களும் திருத்தந்தை முழு ஆதரவு அளிப்பர் என்ற உறுதியையும் வெளியிட்டார்.
உரோமையின் ஆயராகவும், அகில
உலக திருஅவையின் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் கத்தோலிக்கச்
சமுதாயம் அனைத்தும் தன் செபங்களையும் ஆதரவையும் கூறுவதாக, இப்பேரவையின் தலைவர் பேராயர் Vincent Nichols செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவின் முதல் திருத்தந்தை, இயேசு சபையின் முதல் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ் என்று பல வழிகளிலும் முதன்மை இடத்தை பிடித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், சமுதாய நீதி என்ற பின்னணியிலிருந்து வந்திருப்பது நம்பிக்கை தருகிறது என்று ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் தலைவர் Philip Tartaglia செய்தி அனுப்பியுள்ளார்.
8. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், நமக்குச் சிறந்ததோர் வழிகாட்டி கிடைத்துள்ளார் - இந்தியத் திருஅவை
மார்ச்,14,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், நமக்குச் சிறந்ததோர் வழிகாட்டி கிடைத்துள்ளார், இந்தியத் திருஅவை மகிழ்வில் நிறைந்துள்ளது என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் பேராயர் Albert D'Souza கூறினார்.
ஆசியாவின்
பல்வேறு நாடுகளிலும் புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகைப்படம்
தாங்கிய செய்திகள் ஏறத்தாழ அனைத்து செய்தித் தாள்களிலும் முதல்
பக்கத்தில் பதிவாகியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இயேசு சபையைச் சார்ந்த ஒரு துறவி, பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றிருப்பது மிக அழகான ஒரு வெளிப்பாடு, தூய ஆவியாரின் வழிகள் புதுமையானவை என்றும், புனித
பிரான்சிஸ் காட்டிய எளிமை வழிகளை மேற்கொள்ளும் திருத்தந்தை திருஅவையில்
நல்ல மாற்றங்களைக் கொணர முடியும் என்று தென் கொரியாவின் ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
கடந்த
ஈராண்டுகள் போரில் மூழ்கியிருக்கும் சிரியாவுக்கு முன்னாள் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவ்வப்போது விடுத்த செய்திகள் நம்பிக்கையைத் தந்ததுபோல், புதிதாகப்
பொறுப்பேற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமும் அமைதிச்
செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று தமஸ்குவின் திருப்பீடத்
தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவின்போது நமக்குக் கிடைத்துள்ள புதியத் திருத்தந்தை, அகில உலகத் திருஅவையை புதிய வழிகளில் நடத்துவார் என்ற நம்பிக்கையை வெளியிட்ட, மனித உரிமை ஆர்வலர் இயேசு சபை அருள்தந்தை Cedric Prakash, அமைதிக்கும் நீதிக்கும் உழைக்கும் ஒரு திருத்தந்தை கிடைத்துள்ளார் என்றும் கூறினார்.
9. புதியத் திருத்தந்தைக்கு Argentina அரசுத் தலைவரின் வாழ்த்துத் தந்தி
மார்ச்,14,2013. உலகனைத்திலும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களின் தலைவராகத் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதற்கு , Argentina அரசு மற்றும் மக்களின் சார்பில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று Argentina அரசுத் தலைவர் Cristina Fernandez de Kirchner, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
புதியத் திருத்தந்தை அறிவிக்கப்பட்ட 90 நிமிடங்களில் வத்திக்கானை அடைந்த இந்தத் தந்தியில், நீதி, சமத்துவம், அமைதி ஆகிய வழிகளில் உலகமனைத்தையும் வழிநடத்த திருத்தந்தைக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அரசுத் தலைவர் Kirchner.
அமெரிக்க மக்கள் சார்பாகவும், தன்
குடும்பத்தின் சார்பாகவும் புதியத் திருத்தந்தைக்குத் தன் வாழ்த்துக்களைத்
தெரிவிப்பதாக அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா செய்தி ஒன்றை
அனுப்பியுள்ளார்.
உலக அமைதி, பாதுகாப்பு, மனித மாண்பு ஆகியவற்றை நிலைநாட்ட, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் தான் உழைத்ததைக் குறிப்பிட்டுள்ள ஒபாமா, புதியத் திருத்தந்தையின் பணிகாலத்திலும் இந்த முயற்சிகள் தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
துணை அரசுத் தலைவர் Joe Biden, மார்ச் 19ம் தேதி நடைபெறவிருக்கும் திருத்தந்தை பணி ஏற்பு விழாவிற்கு, அமெரிக்க அரசின் சார்பில் இன்னும் பல தலைவர்களுடன் வரவிருப்பதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment