Thursday 10 October 2024

ஏமன் திருஅவையை உயிர்துடிப்புடன் துவக்குவது அவசியம்

 

ஏமன் திருஅவையை உயிர்துடிப்புடன் துவக்குவது அவசியம்


ஏமனில் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு தொடர்ந்து சான்றுபகர்ந்து வரும் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகம் இருக்கிறது என்பதற்கான அடையாளத்தை வெளிப்படுத்தல் அவசியம்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

போர்களாலும் வன்முறைகளாலும் துன்புறுத்தப்பட்ட, மற்றும் பத்தாண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போரால் பிளவுபட்டுள்ள நாட்டில் மீண்டும்  திருஅவையின் இருப்பை உயிர்துடிப்புள்ளதாகத் துவக்குவது மிகவும் அவசியமான ஒன்று என ஆயர் Paolo Martinelli  தெரிவித்துள்ளார்.

அரபு ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன் ஆகியவைகளை உள்ளடக்கிய தெற்கு அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Martinelli அவர்கள் உரைக்கையில், அண்மையில் காசா பகுதியில் துவங்கிய மோதல்களால் அது குறித்த செய்திகளே உலக மக்களின் பார்வையில் முதலிடம் பிடித்து, ஏமன் நாட்டின் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என கவலையை வெளியிட்டார்.

மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் நிலையை நன்கு மதிப்பீடு செய்து, புரிந்து கொண்டு, அங்கு பணியை மீண்டும் தொடங்கவேண்டியது தலத்திருஅவையின் கடமையாகிறது என்றும் கூறினார் ஆயர்.

அந்நாட்டில் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு தொடர்ந்து சான்றுபகர்ந்து வரும்  ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகம் இருக்கிறது என்பதற்கான அடையாளத்தை அமைதியுடனும், பணிவுடனும்  வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார் ஆயர் Martinelli.

இந்த போரினால்  பலர் வெளியேறிவிட்டனர் என்றும் கூறியதுடன், குறிப்பாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ள புலம்பெயர்ந்தோர் பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்த ஆயர் Martinelli அவர்கள், வடக்கு ஏமனில், போலந்து காரித்தாஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும், தற்போதைய சூழலில் ஏமன் நாடு தாக்குதல்களின் இலக்குகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டுப் போரால் ஏமன் நாட்டிலுள்ள 4  தேவாலயங்களும்  கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும், தங்கள் மறைப்பணிக்கு எவ்வாறு புதிய பாதையை வழங்குவது என்பது குறித்து நேரில் சென்று  பார்க்க விரும்புவதாகவும் செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர். 

ஏமனில் அன்னைத் தெரசா சகோதரிகளின் பிறரன்புப் பணிகளையும், காரித்தாஸ் அமைப்பினரின் மனிதாபிமானத் திட்டங்களையும் ஆதரிப்பதும், மேம்படுத்துவதும் நாம் மேற்கொள்ள வேண்டிய பணி என்றும் கூறிய ஆயர், வன்முறைகள்  முடிவுக்கு வரவும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலருக்காகவும், நாட்டில் அமைதி நிலவவும்  ஒவ்வொரு நாளும் திருப்பலியில் இறைவேண்டல் செய்கிறோம்  என்றும் கூறினார். 

துபாய் முதல் அபுதாபி வரை, ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் போர் பற்றிய செய்திகள் வருகின்றன, ஆனால் எந்தவித அரசியல் நிலைப்பாடும் தலைவர்களால் எடுக்கப்படுவதில்லை எனவும் கவலையை அவர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...