Tuesday 12 February 2019

படைப்பின் மீது பாசம் கொண்ட புனிதர்

படைப்பின் மீது பாசம் கொண்ட புனிதர் படைப்பின் மீது பாசம் கொண்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ்

படைப்பின்மீது புனித பிரான்சிஸ் ஆழ்ந்த காதல் கொண்டதால், கதிரவனையும், நிலவையும் காணும்போது, பாடல்கள் பாடினார்; ஏனைய படைப்புக்களையும் தன்னோடு இணைந்து பாடும்படி அழைத்தார்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை 2015ம் ஆண்டு வெளியிட்டார். படைப்பனைத்தும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாக, அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய ஒரு புகழ்பாடலில் காணப்படும் 'இறைவா உமக்கே புகழ்' என்ற சொற்களை, இத்திருமடலின் தலைப்பாக திருத்தந்தை தெரிவு செய்தார். இத்திருமடலின் அறிமுகப் பகுதியில், இப்புனிதரைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள ஒரு சில எண்ணங்களின் சுருக்கம் இதோ: (காண்க. எண்கள் - 10,11,12)
நான் உரோமை ஆயராகத் தெரிவுசெய்யப்பட்ட வேளையில், என் வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் நான் தேர்ந்தெடுத்த புனிதரைப்பற்றி குறிப்பிடாமல் இந்த திருமடலை எழத விரும்பவில்லை. சுற்றுச்சூழல் என்ற துறையில் பயில்வோர், மற்றும் பணியாற்றுவோர் அனைவருக்கும் பாதுகாவலராக, அசிசி நகர் புனித பிரான்சிஸ் விளங்குகிறார். படைப்பின்மீது இப்புனிதர் ஆழ்ந்த காதல் கொண்டதால், கதிரவனையும், நிலவையும் காணும்போது, பாடல்கள் பாடினார்; ஏனைய படைப்புக்களையும் தன்னோடு இணைந்து பாடும்படி அழைத்தார். படைப்பை, அறிவுசார்ந்த கருத்தாகவும், பொருளாதார எண்ணிக்கையாகவும் காண்பதற்குப் பதில், தன் உடன்பிறப்பாகக் கண்டார், இப்புனிதர்.
இத்தகையதொரு வியப்புணர்வு இல்லாமல், இத்தகைய உடன்பிறந்த உணர்வு இல்லாமல், இயற்கையை நாம் அணுகும்போது, அதனை ஆள்பவர்களாக, நுகர்பவர்களாக, பரிவின்றி பறிப்பவர்களாக மாறிவிடுகிறோம். இதற்கு மாறாக, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் அனைத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களாக மாறினால், அவற்றைப் பாதுகாக்கும் வகையில், நம் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம்.
புனித பிரான்சிஸ், தன் வாழ்வில் பின்பற்றிய வறுமையும், கட்டுப்பாடும், பிறர் காண்பதற்கென அவர் உருவாக்கிக்கொண்ட காட்சிப் பொருள்கள் அல்ல; மாறாக, படைப்பின்மீது அவர் கொண்டிருந்த தீவிரமான அக்கறையும், ஏனைய உயிர்களை பொருள்களாக அல்லாமல், உறவுகளாகக் கருதும் மனநிலையும், அவரது வறுமையாக, கட்டுப்பாடான வாழ்வாக வெளிப்பட்டது.
துறவு இல்லத் தோட்டத்தின் ஒரு பகுதியில், மலர்களும், புதர்களும், இயற்கையாக வளர்வதற்கு விட்டுவிடும்படி, புனித பிரான்சிஸ், தன் சபையின் ஒவ்வொரு இல்லத்திலும் வாழும் துறவியரிடம் கேட்டுக்கொண்டார். மனித குறுக்கீடு ஏதுமின்றி, இயற்கையாகவே வளரும் அப்பகுதியைக் காண்போர், இறைவனை நோக்கி தங்கள் உள்ளத்தைத் திருப்பமுடியும் என்பது, புனிதரின் விருப்பமாக இருந்தது.
இவ்வுலகமும், படைப்பும், நமது தீர்வுகளுக்காகக் காத்திருக்கும் பிரச்சனைகள் அல்ல; மாறாக, அவை, மகிழ்ந்து, புகழ்ந்து, தியானிப்பதற்கென்று, இறைவன் வழங்கிய மறைப்பொருள்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...