Friday, 7 February 2014

தலைவர்கள் தவறினால் – மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: கோபி அன்னன்

தலைவர்கள் தவறினால் – மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: கோபி அன்னன்

Source: Tamil CNN
 _Kofi-Annan_2149424b
தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தலைமை பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த வேண்டும் எனவும், தலைவர்கள் மக்களின் வழியில் செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தெரிவித்துள்ளார்.
தட்பவெப்ப நிலை, புவி வெப்பமயமாதல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது கோபி அன்னன் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிக்காவிலும் அமைதி திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் குறித்தும், அவற்றின் நிலை குறித்தும் பேசிய கோபி அன்னன், தனது பேட்டியில் கூறியதாவது : நெல்சன் மண்டேலா போன்ற மூத்த தலைவர்கள் ஏழைகளின் நலன் காக்க பெரிதும் குரல் கொடுத்தனர்; நாங்கள் தனித்து நின்று எங்கள் பங்கினை அளித்து வருகிறோம்; நாங்கள் எந்த ஒரு அரசின் அங்கமும் அல்ல; இருப்பினும் ஒன்ற கூடி உலக நாடுகளின் பிரச்னைகள் மற்றும் அரசுகள் செய்யும் அல்லது செய்ய தவறிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவோம்;
நாம் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதன் விளைவு, இன்று தட்பவெப்ப நிலையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன; ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சி; குடிநீர், உணவு ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ளது. தட்டுபாடு மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது; படிவ எரிபொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி நாம் சுற்றுசூழலை மாசுபடுத்தி வருகிறோம்; படிவ எரிபொருட்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும்; புவியை காக்க இந்தியா, கானா, சீனா உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன.
ஏழை நாடுகள் நிதி:
நாம் தற்போது தான் நிதி நெருக்கடியில் இருந்து வெளிவர துவங்கி உள்ளோம்; நாம் நிதியை திரட்ட கடுமையான பாடுபட்டு, மக்கள் தங்களை காத்து கொள்ள மட்டுமே உழைக்கின்றனர்; ஆனால் இந்த பூமியை நமது குழந்தைகள், பேர குழந்தைகள் வாழ தகுதியில்லாததாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்; நமது வசதிக்காக நாம் பயன்படுத்தும் எரிபொருட்கள் பல நமது பொருளாதாரத்தை மட்டுமின்றி, இயற்கை சக்தியையும் அழித்து வருகின்றன; புவி வெப்பமயமாதலுக்கு நாம் செய்யும் சிறிய காரியத்திற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி உள்ளது; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் பூர்வமாக பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புவியை காக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது; ஏழை நாடுகள் கூட புவியை காக்க நிதி திரட்டி வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது;
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி : மக்கள் தொகை பெருக்கத்தால் நமக்கு கூடுதல் உணவு தேவைப்படுகிறது; மக்கள் நீர் ஆதாரங்களை இழந்து வெகு தூரம் சென்று விட்டனர்; தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பல்வேறு உடல்ரீதியான பிரச்வைகளை நாம் எதிர்கொள்கிறோம்; இந்த நிலையை மாற்ற வேண்டிய பணிகளில் அரசாங்கங்கள் இறங்க வேண்டும் என நினைக்கிறேன்; சமூகமும் மனிதர்களும் இதற்கான கொள்கைகளை வகுக்குமாறு அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்; தலைவர்களாகிய நாம் தான் கொள்கைகளை ஏற்படுத்தி, செயல்படுத்த வேண்டும்; சில அரசுகள் மட்டுமே மக்கள்தொகை, இயற்கை வளங்கள் மீது அக்கறை செலுத்தி வருகின்றன; பெரும்பாலான நாடுகள் பணவீக்கம், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன;
தலைவர்கள் சரியான முறையில் மக்களை வழிநடத்தினாலே பல முக்கிய பிரச்னைகளுக்கு சரியான தீர்வை காணலாம் என நான் நம்புகிறேன்; தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தான் சமூகத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும்; அத்தகைய நிலையில் மக்கள் தான் தலைமை ஏற்க வேண்டும்; தலைவர்கள் அவர்களை பின்பற்ற வேண்டும்; சுற்றுசூழல் மாற்ற பிரச்னைகளில் மக்கள் ஒன்றுபட்டு சுற்றுசூழல் குறித்த திட்டங்களை வகுத்து, அரசியல் தலைவர்களை இதன்படி நடக்க செய்ய வேண்டும்; தலைவர்கள் மக்களை சரியாக வழி நடத்தாத நிலை உலகின் பல பகுதிகளில் நடக்கிறது; பொறுப்பான தலைமையை மக்கள் விரும்புகின்றனர்; மக்கள் தங்களை நல்வழிப்படுத்தி, அரசையும் அவ்வழியில் தொடர வலியுறுத்த வேண்டும்; அவ்வாறு செய்தால் மட்டுமே நமது குழந்தைகளும், பேர குழந்தைகளும் இவ்வுலகில் வாழ முடியும்;
நமக்காக, நமது சந்ததிகளுக்காகவும் போராட வேண்டிய சமயம் வந்து விட்டது; மக்கள் சேவைகளால் மிகப் பெரிய சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியும்; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 10 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது; அவர்களுக்கு அமைதியும், அரசியல் நிலைத்தன்மையும் தேவை; பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் அங்கு போர்கள் முடிவுக்கு வரும்; அந்த நாடுகள் அண்டைய நாடுகளுடன் விரும்பும் நல்லுறவை ஏற்படுத்த நாங்கள் நிச்சயம் உதவி செய்வோம். இவ்வாறு அன்னன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...