Tuesday 25 February 2014

மோஸர் லைட்! ஏழை எளியவர்களுக்காக

மோஸர் லைட்! ஏழை எளியவர்களுக்காக

குடித்துவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டிலைக் கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்? இவர் செய்திருப்பது ஓர் அசாத்தியக் கண்டுபிடிப்பு. உலகின் பல கோடி ஏழைகளை, ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் ஆல்பிரட் மோஸர். ‘நவீன உலகின் தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று கொண்டாடப்படும் இவரது கண்டுபிடிப்பின் பெயர், ‘சோலார் பாட்டில் லைட்’.
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, வீட்டுக் கூரையின் மேல் ஒரு துளையிட்டு, வீட்டுக்குள் மாட்டிவிட்டால் பகல் முழுக்க மின்சாரம் இல்லாமலேயே வெளிச்சம் தயார். உலகின் கோடிக்கணக்கான ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கு, நோபல் பரிசு தர வேண்டும் என்ற குரல்களும் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளன.
பிரேசில் நாட்டைச் ஆல்பிரட் மோஸர் ஒரு மெக்கானிக். பெரிதாகப் படித்தவரோ, பணம் படைத்தவரோ அல்ல. 2002-ம் ஆண்டு பிரேசிலில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ‘தொழிற்சாலைகளுக்கு மட்டுமே மின்சாரம்’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏழை மக்கள் மின்சாரம் இல்லாமல் தடுமாறினார்கள். அப்போதுதான் மோஸருக்கு தன் முதலாளி ஞாபகம் வந்தார்.
மோஸர் வேலைப்பார்த்த மெக்கானிக் ஷெட்டின் முதலாளி, ஒருமுறை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, அதில் சூரிய ஒளியை குவியச்செய்து, அந்த ஒளியில் கிடைத்த வெப்பத்தின் மூலம் காய்ந்துபோன புதர்களை எரித்திருக்கிறார். இது மோஸரின் மூளைக்குள் மின்னல் அடிக்கச் செய்ய… அதே அறிவியலை சற்று மாற்றி யோசித்தார்.
இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலில், சுத்தமான தண்ணீரை நிரப்பிக்கொண்டார். தண்ணீர், பாசி பிடிக்காமல் வெண்மை நிறத்துடன் இருப்பதற்கு, இரண்டு மூடிகள் குளோரின் கலந்தார். பாட்டிலை மூடினார். (பாட்டிலின் மூடி கறுப்பு நிறத்தில் இருந்தால் கூடுதல் வெளிச்சம் வரும்). வீட்டு மேற்கூரையில் ஏறி, பாட்டில் இறுக்கமாக நுழையும் அளவுக்கு கூரையில் ஒரு துளை அமைத்தார்.
பாட்டிலை உள்ளே செருகினால், கால்வாசி கூரையின் வெளியே தெரியும்; முக்கால்வாசி வீட்டுக்குள் இருக்கும். பாட்டிலைச் சுற்றி ஒரு பசையைக் கொண்டு அடைத்துவிட்டால் மழைத் தண்ணீர் உள்ளே வராது. வீட்டுக்குள் வந்துப் பார்த்தால் 60 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் வீடு பிரகாசித்தது. உண்மையில் தான் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம் என்ற உணர்வு மோஸருக்கு ஏற்படவில்லை. ‘ஏதோ நாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக’ நினைத்து மகிழ்ந்தார். இவரது சூரிய விளக்கைக் கண்ட அக்கம் பக்கத்து வீட்டினர் கேட்க… ஓரிரு டாலர்கள் வாங்கிக்கொண்டு அவர்களுக்கும் செய்து தந்தார்.
இந்த சோலார் பாட்டில் விளக்கு 24 மணி நேரமும் வெளிச்சம் தருவது இல்லை. பகலில், சூரிய ஒளியின் அளவுக்கு ஏற்ப வீட்டுக்குள் வெளிச்சத்தைக் கொண்டு வரும். ஆனால் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் இருண்ட தகரத் தடுப்புக்குள் வாழும் ஏழை மக்களுக்கு பகற்பொழுது முழுக்க, எந்த செலவும் இல்லாமல் வெளிச்சம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? அதுவே மின்சார விளக்கு எனில், இணைப்புக்குப் பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம் கட்ட வேண்டும். இதில் அந்த செலவுகள் எதுவும் இல்லை. இதைப் பொருத்துவதற்கு எந்த தொழில்நுட்ப வல்லுனரும் தேவை இல்லை. ஒரு புரட்சியைப் போல மளமளவென சோலார் பாட்டில் விளக்குகள் பிரேசில் முழுவதும் பரவின. மக்கள் ‘மோஸர் லைட்’ என்றே அதை அழைத்தனர்.

இந்த விளக்கின் அறிவியல் அடிப்படை, மிக எளிமையான இயற்பியல் சூத்திரத்தின்படி அமைந்தது. ஒளியானது, ஏதோ ஓர் ஊடகத்தின் வழியே (காற்று, தண்ணீர்… போன்றவை) பயணிக்கும்போது, அந்த ஊடகத்தின் தன்மைக்கேற்ப சிதறடிக்கப்படுகிறது. இதற்கு ‘ஒளி விலகல்’ என்று பெயர். இந்த வகையில் தூய வெண்மை நிற நீரின் வழியே ஒளி சிதறடிக்கப்படும்போது ஒளிவிலகல் ஏற்பட்டு, வெளிச்சம் கிடைக்கிறது. ஒருவேளை, பாட்டிலில் நிரப்படும் நீரில் குளோரின் சேர்க்காமல் அதில் பாசி பிடித்துவிட்டால், வீட்டுக்குள் வரும் வெளிச்சம் பச்சையாக இருக்கும், அவ்வளவுதான்.
இது எளிய தொழில்நுட்பம்தான்… ஆனால், இதுவரை யாரும் இதை கண்டறியவில்லை. எனினும், 2002-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விளக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் ஊடகங்களில் பேசப்படுகின்றது. ஆனால் ஏழை மக்களோ பல கோடி பேர் மோஸர் விளக்கைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.
மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மட்டுமல்ல.. மின் இணைப்பு உள்ள வீடுகளிலும் பாட்டில் வெளிச்சம் பளிச்சிடுகிறது. காரணம், பல நாடுகளின் மின் கட்டணம், ஏழைகள் கட்ட முடியாத அளவுக்கு மிக, மிக அதிகம். அவர்களுக்கு இந்த விளக்கு பெரிய அளவுக்கான பணத்தை மிச்சப்படுத்தித் தருகிறது. வெளிச்சம் அதிகம் தேவைப்பட்டால் நான்கைந்து பாட்டில்களை செருகி வைத்துக்கொள்கிறார்கள்.
இதனால் பிரேசில், கென்யா, தான்சானியா, பங்களாதேஷ், பிஜி, இந்தியா என உலக ஏழைகளின் சின்னம் போல இந்த விளக்கு பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 2 லட்சம் வீடுகளில் மோஸர் விளக்குகள் எரிகின்றன. சதுர வடிவிலான சிறிய தகரத்தில் திருத்தமாக துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்தி விற்பனை செய்யும் அளவுக்கு, இது ஒரு சிறு வணிகமாகவும் அங்கு மாறியிருக்கிறது.
பங்களாதேஷை பொருத்தவரை, அங்கு ஏராளமான ஜவுளித் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதில் பணிபுரியும் மக்களின் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகர வீடுகளில் மின்சார வசதி துளியும் இல்லை. மண்ணெண்ணை விளக்கு ஒளியில் வாழ்க்கையை ஓட்டிய அவர்களின் பகற்பொழுதுக்கு இப்போது மோஸர் விளக்குகள் ஒளியூட்டுகின்றன.
இப்படி உலம் முழுவதும் சுமார் 25 லட்சம் வீடுகளில் மோஸர் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு இது 40 லட்சமாகும் என கணிக்கப்படுகிறது. எந்தவித ஊடக விளம்பரங்களும், பெரும் நிறுவனங்களின் வர்த்தக நுணுக்கங்களும் இல்லாமல் இந்த விளக்கின் ஒளி பரவிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மறைமுகமான பொருள் என்னவெனில், ‘பகலில் மட்டுமேனும் வெளிச்சம் கிடைக்காதா?’ என ஏங்கித் தவிக்கும் கோடிக் கணக்கான ஏழை மக்கள் உலகம் எங்கும் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள் என்பதே.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் மருத்துவம், எலெக்ட்ரானிக் கருவிகள் போன்ற பணம் கொழிக்கும் துறைகளிலேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து வைக்கும் கண்டுபிடிப்புகள் மிகவும் குறைந்து வருகின்றன. சோலார் பாட்டில் விளக்கை கண்டறிந்துள்ள ஆல்பிரட் மோஸர் இப்போதும் வறுமையான மெக்கானிக்காகவே வாழ்ந்து வருகிறார். இருந்தபோதிலும் இந்த விளக்கை வைத்து பணம் பண்ணுவதற்கு அவர் எண்ணவில்லை.
‘‘இத்தனை லட்சம் மக்கள் சோலார் பாட்டில் விளக்கை பயன்படுத்துவதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்கு நான் சொந்தம் கொண்டாட மாட்டேன். ஏனெனில் சூரிய ஒளி தெய்வீகமானது. அதை நான் தயாரிக்கவில்லை. அதனால் அதற்கு நான் உரிமை கோரவும் முடியாது”.
இந்த இடத்தில் இன்னொரு தகவலை பொருத்தி புரிந்துகொண்டால் இது முழுமை அடையும். உலகம் முழுவதும் மக்களால் பாடப்படும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ பாடலுக்கு 1998-ம் ஆண்டு வார்னர் மியூசிக் நிறுவனம், காப்புரிமை பெற்றது. இந்தப் பாடலை ஒரு திரைப்படத்திலோ, தொலைகாட்சியிலோ பயன்படுத்த வேண்டும் எனில், அதற்கு இந்திய மதிப்பில் 90 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் இல்லாமல் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 90 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கிறார்கள்.
இத்தனைக்கும் ‘ஹேப்பி பர்த் டே’ என்ற பாடல் வரிகளையோ, இசையையோ ‘வார்னர் மியூசிக்’ நிறுவனம் உருவாக்கவில்லை. 125 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்ட பாடல் இது. இப்படி யாரோ உருவாக்கியப் பாட்டுக்கு காப்புரிமை பெற்றிருக்கும் வார்னர் மியூசிக், இதன்மூலம் இதுவரை 900 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏழைகளின் குடிசையில் ஒளியேற்றிவிட்டு ‘அது தெய்வீக ஒளி’ என்று புன்னகையுடன் கடந்து செல்லும் ஆல்பிரட் மோஸர் எங்கே? காப்புரிமை விதிகளுக்குள் புகுந்து பணம் பறிக்கும் ‘வார்னர் மியூசிக்’எங்கே?
பாரதி தம்பி -
Thanks to: Tamil CNN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...