சீனா-தைவான் நாடுகளிடையே வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை
ஒரு கொடூரமான உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து கடந்த 65 வருடங்களுக்கு முன்னால் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது.
அதன்பின்னர், இரு நாட்டு அரசாங்கங்களும் இன்று தங்களது முதல் பேச்சுவார்த்தையை மேற்கொண்டன. தைவானின் சீனக் கொள்கை மேற்பார்வையாளரான வாங்-யூ-சி தன்னுடைய நான்கு நாட்கள் பயணத் திட்டத்தின் முதல் நாளான இன்று சீனாவின் சக அதிகாரியான சங் சிஜுன்னை நான்ஜிங்கில் சந்தித்தார்.
தனிப்பட்ட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் சந்திப்பு நடந்த அறையில் இரு நாட்டுக் கொடிகளும் இல்லாமல் வெறும் பெயர்ப் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு எளிதாக நடந்ததல்ல; பல வருட முயற்சிக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது என வாங் தெரிவித்தார்.
20ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் நான்ஜிங்கைத் தலைநகராகக் கொண்டு குயோமிண்டாங் என்ற தேசியக் கட்சி ஆட்சி செய்து வந்தது. கடந்த 1949ஆம் ஆண்டில் இந்த அரசு, சீனாவின் உள்நாட்டு யுத்தத்தில் தோற்றபோது இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் தைவானுக்குக் குடியேறினர்.
அன்று முதல் இரண்டு அரசுகளுமே தங்களை உண்மையான சீன அரசு என்று கூறிக்கொண்டு தனித்தனியாக ஆட்சி புரிந்து வருகின்றன. கடந்த 1990ஆம் ஆண்டில்தான் அரசுசாரா உத்தியோகபூர்வ அமைப்புகள்மூலம் இரு பகுதிகளுக்குள்ளும் உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.
இன்றைய சந்திப்பு இத்தனை ஆண்டுகாலமாக உறவுகளை மேம்படுத்தச் செய்த முயற்சியின் விளைவு என்றே குறிப்பிடப்படுகின்றது.
ஆயினும், பீஜிங்கின் கம்யூனிச அதிகாரிகள் தைவான் உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகின்றனர்.
தேவைப்பட்டால் இதற்காக படைபலத்தையும் பிரயோகிக்க அவர்கள் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment