Tuesday, 18 February 2014

செய்திகள் - 18.02.14

செய்திகள் - 18.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் அருள்வாக்கு மட்டுமே நம்மைச் சோதனையிலிருந்து விடுதலையளிக்கின்றது

2. செபிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வோம்,  திருத்தந்தை பிரான்சிஸ்

3. திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைப்பு செய்வது குறித்த கர்தினால்கள் அவையின் மூன்றாவது கூட்டம்

4. வேட்பாளர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும், இந்திய ஆயர்கள்

5. கொரியத் திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்

6. நைஜீரிய அரசு குடிமக்களைப் பாதுகாக்கவில்லை, ஆயர் பேரவைத் தலைவர் கவலை

7. பிரேசிலில் மனித வியாபாரத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான துறவியர்

8. பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகம் மூன்றாவது இடம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் அருள்வாக்கு மட்டுமே நம்மைச் சோதனையிலிருந்து விடுதலையளிக்கின்றது

பிப்.18,2014. சோதனை, தன்னிலே வளர்ந்து, பரவித் தொற்றி அது தன்னையே நியாயப்படுத்துகின்றது, இது கடவுளிடமிருந்து வருவதில்லை, ஆனால் அது நம் தீய நாட்டத்திலிருந்து வருகின்றது, இயேசுவின் அருள்வாக்குக்குச் செவிசாய்ப்பதால் மட்டுமே அதிலிருந்து நாம் விடுதலைபெறுகிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை 7 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு நமக்கு எப்போதும் நம்பிக்கை அளிக்கிறார் என்றும், நம் வரையறைகளைவிட பரந்த அளவிலான எல்லைகளை நமக்குத் திறந்து விடுகிறார் என்றும் கூறினார்.
புனித யாக்கோபின் திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் எவரையும் சோதிப்பதில்லை, நாம் நம் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகிறோம் என்பதே உண்மை என்றும் கூறினார்.
சோதனை எங்கிருந்து வருகிறது, அது நம்மில் எப்படிச் செயல்படுகின்றது என்பதை விளக்கிய திருத்தூதர் யாக்கோபு, அது கடவுளிடமிருந்து வருவதில்லை, மாறாக, அது நம் ஆசைகளிலிருந்து, நம் அகவாழ்வின் பலவீனங்களிலிருந்து, ஆதிப்பாவத்தின் காயங்களிலிருந்து வருகின்றது என்று நமக்குச் சொல்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சோதனை, வளர்கின்றது, பரவித் தொற்றுகின்றது, அது தன்னையே நியாயப்படுத்துகின்றது என அதன் மூன்று குணங்களை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், சோதனைக்குத் துணை தேவைப்படுகின்றது, அது தொற்றக் கூடியது, நம்மைக் கொல்லக்கூடிய தொற்று அது, அதிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாத ஒரு சூழலில் அது நம்மைச் சிறைப்படுத்துகின்றது என்றும் விளக்கினார்.
நாம் சோதிக்கப்படும்பொழுது இறைவார்த்தையைக் கேட்பதில்லை, அதற்குச் செவிமடுப்பதில்லை, அதை நாம் புரிந்துகொள்வதில்லை என்றும், நாம் சோதிக்கப்படும்பொழுது இறைவார்த்தை மட்டுமே நமக்கு விடுதலையளிக்கின்றது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. செபிப்பதற்கும், மன்னிப்பதற்கும் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வோம்,  திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.18,2014. செபிப்பதற்கும், மன்னிப்பதற்கும், அமைதியை விதைப்பதற்கும், தேவையில் இருப்போரின் அருகில் இருப்பதற்கும் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வோம் என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தாயகமான அர்ஜென்டினா நாட்டு கடவுச்சீட்டையும், அடையாள அட்டையையும் புதுப்பித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அர்ஜென்டினா நாட்டு உள்துறை அமைச்சகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணங்கள் மேற்கொள்ளும்போது திருப்பீடத் தூதரக கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் அர்ஜென்டினா நாட்டுக் கடவுச்சீட்டையேப் பயன்படுத்துவார் என்று கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தற்போதைய வெள்ளை ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அக்கடவுட்சீட்டில் உள்ளது. 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வழங்கப்பட்டுள்ள இதன் காலவரையறை 2024ம் ஆண்டில் நிறைவடையும் என்றும் அர்ஜென்டினா நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AGI

3. திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைப்பு செய்வது குறித்த கர்தினால்கள் அவையின் மூன்றாவது கூட்டம்

பிப்.18,2014. திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளைச் சீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக்கும் எட்டு கர்தினால்கள் அவையின் மூன்றாவது கூட்டம் இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குகொள்ளும் இக்கூட்டம் பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி, ஏறக்குறைய எட்டு மாதங்களாக இக்கர்தினால்கள் அவை வேலை செய்து வருகிறது என்றும், முதல் வரைவுத் தொகுப்புகளை அல்லது ஆலோசனைகளை அல்லது பரிந்துரைகளை இவ்வவை முன்வைத்திருக்கலாம், ஆனால் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லையெனக் கூறினார்.
மேலும், வத்திக்கான் வங்கியைச் சீரமைப்பு செய்வது குறித்து ஆராய்ந்துவரும் மற்றொரு குழுவுடன், இச்செவ்வாய் காலை திருத்தந்தையும், இந்த எட்டு கர்தினால்கள் அவையும் கூட்டம் நடத்தியது.
இப்புதன் மாலையில் 15 கர்தினால்கள் கொண்ட அவையையும் இந்த எட்டு கர்தினால்கள் அவை சந்திக்கும் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வேட்பாளர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும், இந்திய ஆயர்கள்
பிப்.18,2014. இந்திய கத்தோலிக்கத் திருஅவை எந்தவோர் அரசியல் கட்சியையும் சார்ந்து இருக்காது எனக் கூறியுள்ள அதேவேளை, வருகின்ற பொதுத் தேர்தல்களில், ஓட்டளிப்பதற்கான தங்களின் உரிமைகளை உதறிவிடாமல், கவனமுடனும், விவேகத்துடனும் வாக்களிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
மக்களின் ஏக்கங்களைப் புரிந்து செயல்படும் வேட்பாளர்களுக்கு கத்தோலிக்கர் ஓட்டளிக்குமாறும் கேட்டுள்ள ஆயர்கள், நாடு செல்லவேண்டிய பாதையும், அதன் முன்னேற்றமும், மக்களின் அன்றாட வாழ்வும் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளைப் பொறுத்தே உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
கடந்த வாரத்தில் கேரளாவின் பாலாய் நகரில் 31வது நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திய இந்திய ஆயர்கள், வருகின்ற கோடையில் இந்தியாவில் நடைபெறவுள்ள  பொதுத் தேர்தல்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து தங்கள் அறிக்கையையும் வெளியிட்டனர்.
தொழில்நுட்பம், அறிவியல், ஊடகத்தொடர்பு ஆகியவற்றில் நாடு முன்னேறியிருந்தாலும், இன்னும் நாடு அக்கறை காட்டவேண்டிய பல்வேறு துறைகள் உள்ளன என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இந்த 31வது நிறையமர்வுக் கூட்டத்தில் இந்தியாவின் 187 ஆயர்கள் மற்றும் பணிக்குழுக்களின் செயலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : Fides                         

5. கொரியத் திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்

பிப்.18,2014. தென் கொரியாவில் தாய்-சேய் நலவாழ்வுச் சட்டம் இரத்து செய்யப்படுவதற்காக, "மனித வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்" என்ற தலைப்பில் செபமாலை தொடர்ந்து செபிக்கும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது தலத்திருஅவை.
செயோல் Myeongdong பேராலயத்தில் "மனித வாழ்வுக்கு ஆதரவாக இம்மாதம் 10ம் தேதி நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், "மனித வாழ்வுக்கு ஆதரவான தவக்காலச் செபம்" குறித்து அறிவிக்கப்பட்டது.
வருகிற மார்ச் 5ம் தேதி திருநீற்றுப் புதனன்று தொடங்கப்படும் மனித வாழ்வுக்கு ஆதரவான செபமாலை பக்தி முயற்சி தவக்காலத்தின் 40 நாள்களுக்கும் தொடர்ந்து செபிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருப்பலியை நிறைவேற்றிய கொரிய ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவான பணிக்குழுத் தலைவர் ஆயர் Lino Lee Seong- hyo, இக்காலத்திய இளையோர் சமூகத் தொடர்பு ஊடகங்களின் தாக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனித வாழ்வைப் புறக்கணிக்கின்றனர் என்று கூறினார்.
உலகில் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. தென் கொரியாவின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.05 % என்ற அளவில் உள்ளது.

ஆதாரம் :Asianews

6. நைஜீரிய அரசு குடிமக்களைப் பாதுகாக்கவில்லை, ஆயர் பேரவைத் தலைவர் கவலை

பிப்.18,2014. நைஜீரியாவில் போக்கோ ஹாராம் இஸ்லாம் தீவிரவாதக் குழு, இனப்படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது, அதேநேரம் அரசு குடிமக்களைப் பாதுகாக்கவில்லை என்று குறை கூறியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama .
நைஜீரியாவின் வட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைகள் தனக்கு வியப்பைத் தரவில்லையென பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள பேராயர் Kaigama, மக்களைப் பயமுறுத்தும் நடவடிக்கைகளை போக்கோ ஹாராம் குழு தொடர்ந்து செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதாக அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பேராயர் கூறினார்.
போக்கோ ஹாராம் தீவிரவாதக் குழுவுடன் இராணுவம் சண்டையிட்டுவரும் வட நைஜீரியாவின் மாநிலங்கள் ஒன்றில் Izghe என்ற கிராமத்தில் குறைந்தது 100 குடிமக்கள் அண்மையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CWN                        

7. பிரேசிலில் மனித வியாபாரத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான துறவியர்

பிப்.18,2014. பிரேசிலில் உலக கால்பந்து கோப்பைப் போட்டி நடைபெறவிருக்கும் அனைத்து நகரங்களிலும் மனித வியாபாரம் மற்றும் பாலியலுக்கு மனிதரைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அருள்சகோதரிகள், ஏறக்குறைய 8,000 அருள்பணியாளர்கள் மற்றும் 2,700 அருள்சகோதரர்கள் பெரும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கவுள்ளனர்.
"வாழ்வுக்கு ஆதரவாக விளையாடுங்கள்" என்ற தலைப்பில் வருகிற மே 18ம் தேதியன்று இப்புதிய நடவடிக்கை தொடங்கப்படவிருக்கின்றது.
பிரேசில் துறவு சபைகள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Eurides de Oliveira பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள தகவலில், மனித வாழ்வைக் காப்பதற்கு அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் அந்நாள்களில் கடுமையாய் உழைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மனித வியாபாரமும், பாலியல் பயன்பாடும் பல சிறார், இளையோர் மற்றும் வயது வந்தோரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளவேளை, FIFA உலக கால்பந்து கோப்பை போன்ற பன்னாட்டு விளையாட்டுகள் இடம்பெறும் இடங்கள், இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அருள்சகோதரி Oliveira தெரிவித்தார்.
"வாழ்வுக்கு ஆதரவாக விளையாடுங்கள்" என்ற நடவடிக்கை, பிரேசிலின் நீதி அமைச்சகம், அனைத்துலக காரித்தாஸ், சிறார்க்கான மேய்ப்புபணி அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : Fides

8. பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகம் மூன்றாவது இடம்

பிப்.18,2014. உலகம் முழுவதும், ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட, ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில், 801 பட்டியல்களை அளித்து, தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த வெள்ளி முதல் இத்திங்கள்வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கணக்கெடுப்பில், தனி நபர்கள், பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக்கணக்கெடுப்பின் இறுதி நாளான இத்திங்கள் மாலை நிலவரப்படி, நாடு முழுவதும், 1,054 வகையைச் சேர்ந்த பறவைகள் குறித்த 7,671 கணக்கெடுப்புப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பு குறித்த, 801 பட்டியல்களைச் சமர்ப்பித்து தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிக வகைப் பறவைகள் கணக்கெடுக்கப்பட்ட வகையில், 377 வகைகளுடன் தமிழகம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வீட்டுக் காகம், மாடப்புறா, குருவிகள் போன்றவையே ஊர்ப்புறப் பறவைகளாகக்  கருதப்படுகின்றன.
இவை போன்ற பறவைகளைப் பாதுகாப்பதற்கு, பொதுமக்கள் அவரவர் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளை உள்ளதை உள்ளபடியே விட்டு வைத்தாலே போதும். அதைப் பயன்படுத்தி, பறவைகள் வாழ்ந்துவிடும் என, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற, பறவை ஆர்வலரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனருமான பாலாஜி கூறினார்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...