Thursday, 13 February 2014

செய்திகள் - 12.02.14

செய்திகள் - 12.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள 20,000 தம்பதியர், காதலர்கள் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

2. ஓராண்டுக்கு முன் தான் எடுத்த முடிவைக் குறித்து எவ்வித வருத்தமுமின்றி முன்னாள் திருத்தந்தை வாழ்கிறார் - மூத்த சகோதரர்

3. திருப்பீடத்திற்கும், ஹங்கேரி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவு பரிமாற்றங்கள்

4. நோயுற்றோர் உலக நாளையொட்டி, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு மணிலாவில் சிறப்பு நிகழ்ச்சி

5. "வயதில் முதிர்தலும், உடல் குறைபாடுகளும்" - உரோம் நகரில் கருத்தரங்கு

6. ஈராக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் - முதுபெரும் தந்தை Luis Sako

7. வறியோர், செல்வந்தர் பிரிவுகளைத் தீர்ப்பதில் முயற்சிகள் தீவிரமாக வேண்டும் - உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர்

8. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் தூதரகங்களுக்கு Valentine வாழ்த்து அட்டைகள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள 20,000 தம்பதியர், காதலர்கள் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு

பிப்.12,2014.  பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமையன்று, காதலர்கள் நாள் என்று உலகெங்கும் கொண்டாடப்படும் Valentine நாளன்று, திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள 20,000 தம்பதியரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து ஆசீர் அளிப்பார் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள் கூறினார்.
அடுத்த சில மாதங்களில் தங்கள் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் இத்தம்பதியர், 28 நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் இச்சந்திப்பு, வத்திக்கான் தொலைக்காட்சி வழியே நேரடி ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்தார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில், முதல் ஒரு மணி நேரம், பாடல்கள், செபங்கள், அன்பு பரிமாற்றம் நிகழ்ந்த சாட்சியங்கள் இடம்பெறும் என்றும், 12 மணிக்கு வளாகத்திற்கு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கேள்வி பதில் நேரம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான இளையோர் ஆர்வம் காட்டியுள்ளது மிகவும் நல்லதோர் அடையாளம் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், திருமண உறவுகள் நிரந்தரம் அல்ல என்று இவ்வுலகம் கூறிவரும் கருத்துக்களுக்கு மாற்றுஅடையாளமாக, 20,000த்துக்கும் அதிகமான இளம் தம்பதியர், தங்கள் உறவு நிலைத்து நிற்கும் என்று உலகிற்கு வெளிப்படுத்த, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடிவருவது நம்பிக்கை தரும் நிகழ்ச்சி என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஓராண்டுக்கு முன் தான் எடுத்த முடிவைக் குறித்து எவ்வித வருத்தமுமின்றி முன்னாள் திருத்தந்தை வாழ்கிறார் - மூத்த சகோதரர்

பிப்.12,2014.  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குக் கீழ் பல ஆண்டுகள் பணியாற்றியதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் 7 மாத தலைமைப் பணி காலத்தில் அவருடன் பணியாற்றியதும் மன நிறைவு தரும் அனுபவம் என்று முன்னாள் திருப்பீடச் செயலரான கர்தினால் Tarcisio Bertone அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப் பணியைத் துறந்து ஓராண்டு காலம் நிறைவுறும் இவ்வேளையில், Tgcom24 என்ற இத்தாலியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கர்தினால் Bertone அவர்கள் இவ்வாறு கூறினார்.
முன்னாள் திருத்தந்தையை தான் அவ்வப்போது சந்தித்து வருவதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகவும் கூறிய கர்தினால் Bertone அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இன்னும் மிகத் தெளிவானச் சிந்தனையோடும், நல்ல ஞாபகச் சக்தியோடும் உரையாடுவதைக் காண்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறினார்.
இதற்கிடையே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள் பணியாளர் Georg Ratzinger அவர்கள், "La Razon" என்ற இஸ்பானிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஓராண்டுக்கு முன் தான் எடுத்த அந்த முடிவைக் குறித்து எவ்வித குழப்பமோ, வருத்தமோ இன்றி தன் சகோதரர் வாழ்வதாகக் கூறினார்.
தன் சகோதரர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும், தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொள்ளும் பலருக்கு பதில் சொல்வதிலும், அவருக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கான பியானோ வாசிப்பதிலும் அவர் மகிழ்வுடன் தன் நேரத்தைச் செலவிடுகிறார் என்றும் அருள் பணியாளர் Georg Ratzinger அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit

3. திருப்பீடத்திற்கும், ஹங்கேரி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவு பரிமாற்றங்கள்

பிப்.12,2014.  திருப்பீடத்திற்கும், ஹங்கேரி நாட்டிற்கும் இடையே அரசியல் உறவுகளை உறுதி செய்யும் பரிமாற்றங்கள், ஹங்கேரியின் தலைநகரமான Budapestல் நிகழ்ந்தன.
திருப்பீடத்தின் சார்பில், ஹங்கேரியின் திருப்பீடத் தூதர் பேராயர் Alberto Bottari de Castello அவர்களும், Esztergom-Budapest பேராயர், கர்தினால் Peter Erdo அவர்களும், ஹங்கேரி அரசின் சார்பில், மனிதவளத் துறையின் அமைச்சர் Zoltán Balog அவர்களும், இந்தப் பரிமாற்றங்களில் கலந்துகொண்டனர்.
மேலும், நம்மிடையே வளர்ந்துவரும் சமமற்ற நிலை, வெறும் வறுமையை மட்டும் வளர்க்கவில்லை, மாறாக, நமது சமுதாயத்தின் ஆணிவேரையே அழிக்கின்றது என்று திருப்பீடத்தின் சார்பில், ஐ.நா.அலுவலகங்களில் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்களின் பெயரால், இப்புதன் வெளியிடப்பட்டுள்ள Twitter செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நோயுற்றோர் உலக நாளையொட்டி, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு மணிலாவில் சிறப்பு நிகழ்ச்சி

பிப்.12,2014.  லூர்து நகர் மரியன்னையின் திருநாளான பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட 22வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு மணிலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை மணிலா பேராயர் கர்தினால் Louis Antonio Tagle அவர்கள், தலைமையேற்று நடத்தினார்.
1992ம் ஆண்டு, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கப்பட்ட இச்சிறப்பு நாளின் 22வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு, "நம்பிக்கையும், பிறரன்பும்: நாமும் நம் சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்வைக் கையளிப்போம்" என்பது மையக்கருத்தாக இருந்தது.
"துன்புறும் உங்கள் வழியாக, துன்புறும் கிறிஸ்துவை, திருஅவை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகிறது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளுக்கென வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியின் நகல்கள், இச்சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், மணிலாவில் உள்ள தூய ஆவியார் ஆலயத்தில், மணிலாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Rosales அவர்கள், இச்செவ்வாயன்று, நோயுற்றோருக்கென சிறப்புத் திருப்பலி ஆற்றினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews

5. "வயதில் முதிர்தலும், உடல் குறைபாடுகளும்" - உரோம் நகரில் கருத்தரங்கு

பிப்.12,2014.  வாழ்வுக்கான திருப்பீடக் கழகம் "வயதில் முதிர்தலும், உடல் குறைபாடுகளும்" என்ற தலைப்பில் பிப்ரவரி 19, வருகிற புதன்கிழமை முதல் வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.
உரோம் நகரில் உள்ள Augustinianum நிறுவனத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், வயது முதிர்ச்சி, உடல் குறைபாடுகள் என்ற இரு கோணங்களிலும் உருவாகும் பிரச்சனைகள், சமுதாய, நன்னெறி ஆகிய அடிப்படைகளில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1994ம் ஆண்டு உருவாக்கிய, வாழ்வுக்கான திருப்பீடக் கழகம், தன் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நலவாழ்வுப் பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இந்நிகழ்வின் நிறையமர்வுக் கூட்டத்தை, தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஈராக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் - முதுபெரும் தந்தை Luis Sako

பிப்.12,2014.  ஈராக் நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்கும் ஒரு முயற்சியாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Raphael Luis Sako அவர்களுக்கும், இஸ்லாமிய மதத் தலைவர், Rafi Taha Al-Rifai அவர்களுக்கும் இடையே அண்மையில் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.
ஒப்புரவு, உரையாடல், ஒருவரை மற்றவர் புரிந்து, ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட இரு மதத்தவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து இக்கூட்டத்தில் பேசப்பட்டதென்று கல்தேய வழிபாட்டு முறை ஆயர் அலுவலகம் கூறியுள்ளது.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிப்பதும், புதிய வழிகளில் தங்கள் மதக் கருத்துக்களை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபடுவதும், இவ்விரு குழுக்களும் இன்னும் நெருங்கி வருவதற்கு வாய்ப்பாக அமையும் என்று முதுபெரும் தந்தை, Sako அவர்கள் எடுத்துரைத்தார்.
அடிப்படை மதச் சுதந்திரத்துடன் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து வாழும் வழிகளைத் தேடவேண்டும் என்றும், அடிப்படைவாதக் கருத்துக்களை வளர்க்கும் வன்முறைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் இஸ்லாமியத் தலைவர் Al-Rifai அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. வறியோர், செல்வந்தர் பிரிவுகளைத் தீர்ப்பதில் முயற்சிகள் தீவிரமாக வேண்டும் - உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர்

பிப்.12,2014.  அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட, அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்து, மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர வேண்டும் என்று உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர், முனைவர் Olav Fykse Tveit அவர்கள் கூறினார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் Bossey எனும் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமொன்றில் பேசிய முனைவர் Tveit அவர்கள், தென் கொரியாவின் Busan நகரில் நடைபெற்ற பொது அவையில் வெளியிடப்பட்ட முடிவுகளைச் செயலாற்ற இது சரியான தருணம் என்று கூறினார்.
அமைதியை நிலைநாட்ட அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து வரமுடியும் என்ற நம்பிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்த முனைவர் Tveit அவர்கள், அனைத்துச் சபைகளும் இணைந்து நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் உலகப் பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தென் சூடான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் துன்பங்களையும், வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள பிரிவுகளையும் தீர்ப்பதில் முயற்சிகள் தீவிரமாக வேண்டும் என்றும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர் Tveit அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் தூதரகங்களுக்கு Valentine வாழ்த்து அட்டைகள்

பிப்.12,2014.  இலண்டன் மாநகரில் செயலாற்றும் பல்வேறு தூதரகங்களில், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின் தூதரகங்களுக்கு, இவ்வியாழனன்று Valentine வாழ்த்து அட்டைகளை வழங்க, கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
அன்பையும், காதலையும் அடிப்படையாகக் கொண்டு, பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் Valentine நாளையொட்டியும், மனித சமுதாயத்தின் மீது அணு ஆயுதங்களின் தாக்கம் என்ற மையக் கருத்துடன், மெக்சிகோ நகரில், பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கையொட்டியும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கிறிஸ்தவ அமைதி ஆர்வலகள் அமைப்பு அறிவித்துள்ளது.
மெக்சிகோ, நார்வே, நியூசிலாந்து, ஆஸ்திரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க முடியும் என்பதைக் கூறிவரும் நாடுகள் என்பதால், அந்நாடுகளுக்கு எங்கள் நன்றிகளைக் கூற அவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்குகிறோம் என்று கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
சென்ற ஆண்டு நார்வே நாட்டில் Oslo நகரில் நடைபெற்ற கருத்தரங்கை, அணு ஆயுதங்கள் அதிகமுள்ள பல நாடுகள் புறக்கணித்தாலும், 127 நாடுகள் பங்கேற்றன என்றும், இவ்வாண்டு, மெக்சிகோவில் நடைபெறும் கருத்தரங்கில் 140 நாடுகள் பங்கேற்க உள்ளன என்றும் கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : ICN

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...