Tuesday, 11 February 2014

செய்திகள் - 10.02.14

செய்திகள் - 10.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் திங்கள் காலை திருப்பலி மறையுரை

2. திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை

3. குருக்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு

4. முன்னாள் திருத்தந்தை பதவி விலகுவதாக அறிவித்ததன் ஓராண்டு நிறைவு

5. இந்தியத் திருஅவையில் 'குணமளிக்கும் திருப்பணி வாரம்'

6. இலங்கையில் ஆண்டுக்கு 2000 புதிய தொழு நோயாளிகள்

7. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் திங்கள் காலை திருப்பலி மறையுரை

பிப்.10,2014. புனிதத்துவம் மற்றும் கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னம் எனும் மறையுண்மைகளை திருப்பலியில் கண்டுகொள்வோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள், குருக்கள், திருவிலியம் ஆகியவை வழியாக, தன் மக்களுடன் பேசிய இறைவன், தன் பிரசன்னத்தின் மூலமும் உரையாடுகிறார், அதுவே திருப்பலியின்போது இடம்பெறுகிறது என்றார்.
திருப்பலி என்பது இறுதி இரவு உணவின் சாயல் அல்ல, மாறாக, உலகின் மீட்புக்காக தந்தைக்குத் தன்னையே கையளிக்கும் இயேசுவின் பிரசன்னம் என்ற திருத்தந்தை, இயேசுவின் குடில் மற்றும் சிலுவைப்பாதை போன்று ஒரு நிகழ்வின் மறுசாயல் அல்ல திருப்பலி, மாறாக உண்மை பிரசன்னம் எனவும் எடுத்துரைத்தார்.
திருப்பலிக்குச் செல்வது சுற்றுலாப்பயணம் போன்றதல்ல, அது ஒரு மறையுண்மைக்குள் நுழைவது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி கொண்டாட்டமென்பது, இறைவனின் மறையுண்மைக்குள் நுழையும் விருப்பத்தை உள்ளடக்கியதாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை

பிப்.10,2014. இயேசு எனும் ஒளியை அனைவ‌ருக்கும் எடுத்துச்செல்லும்பொருட்டு ஒவ்வொரு கிறிஸ்த‌வ‌ரும் அனணைந்துபோன‌ விள‌க்குக‌ளாக‌ இல்லாம‌ல், ஒளிர்விடும் விள‌க்குக‌ளாக‌ செய‌ல்ப‌ட‌வேண்டும் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார் திருத்த‌ந்தை பிரான்சிஸ்.
தன் சீடர்களை நோக்கி இயேசு 'நீங்களே உலகின் உப்பு, நீங்களே உலகின் ஒளி' என கூறியபோது, நீங்கள் ஏழையரின் உள்ளத்தோராய், கனிவுடையோராய், தூய்மையான உள்ளத்தோராய், இரக்கமுடையோராய் இருந்தால் நீங்கள் உலகின் ஒளியாகவும் உப்பாகவும் விளங்குவீர்கள் என்பதையே குறிப்பிட்டார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து மனிதகுலத்திற்கும் பணிபுரிவதற்கான அழைப்பைப் பெற்றுள்ள கிறிஸ்தவர்கள், இவ்வுலகில் வாழும் நற்செய்தியாக இருக்ககும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வாழ்வை நாம் மேற்கொள்வதன் மூலம் நம்மை சுற்றியிருப்பவற்றில் உப்பாகச் செயல்பட்டு அவற்றை கெடாமல் பாதுகாக்கமுடியும் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.
உண்மை பிறரன்பிற்கு நாம் சாட்சிகளாக விளங்குவதன் மூலம் உலகின் ஒளியாக விளங்கமுடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நமக்கு வழங்கியுள்ள ஒளியை மற்றவர்களுக்கும் வழங்குபவர்களாக செயல்படுவோம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், இச்செவ்வாயன்று உலக நோயாளர் நாள் சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டி, கிறிஸ்துவைப்போல் நாமும் நோயாளிகள் மீது அன்புடையவர்களாகச் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.
நோயாளிகளைக் கவனித்துவரும் நலப்பணியாளர்களுக்கும், குடும்பங்களுக்கும் தன் நன்றியை வெளியிட்டதோடு, செப உறுதியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. குருக்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு

பிப்.10,2014. 'தாராள மனதுடனும் வெளியில் அதிகம் அறியப்பாடாதவகையில் தியாகங்களுடனும் தங்கள் மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் நல்ல மற்றும் நம்பிக்கையுடைய அனைத்துக் குருக்களுக்காக அனைவரும் செபிப்போம்' என தன் திங்கள் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் ஒருவரி கருத்துக்களை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. முன்னாள் திருத்தந்தை பதவி விலகுவதாக அறிவித்ததன் ஓராண்டு நிறைவு

பிப்.10,2014. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன் பதவி விலகலை வெளியிட்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தொடர்ந்த செபங்களின் மூலம் திரு அவைக்கான தன் பங்களிப்பை வழங்கிவருவதாகக் கூறினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை அருட்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டதன் ஓராண்டு இந்த செவ்வாய்க்கிழமை நிறைவுறுவதையொட்டி பேட்டியளித்த திருப்பீடப்பேச்சாளர், ஒரே நேரத்தில் இரு திருத்தந்தையர்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தாதா என சிலர் அச்சத்தை வெளியிட்டதற்கு காரணம், அவர்கள் திருப்பீடத் தலைமைப் பொறுப்பை, அதிகாரமிக்கப் பதவியாக நோக்கியதேயாகும் எனக் கூறினார்.
இது அதிகாரத்தின் இடமல்ல, மாறாக பணிக்கான பதவி என்பதால், ஒருவர் விலகுவதும், மற்றவர் பதவியேற்பதும் எளிதாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார் இயேசுசபை அருட்தந்தை லொம்பார்தி.
இறைவனுக்கான பணியில் மக்களின் நலனை, கருத்தில் கொண்டு செயலாற்றும்போது அங்கு குழப்பங்கள் வர வாய்ப்பில்லை என்ற திருப்பீடப்பேச்சாளர், இரு திருத்தந்தையர்களும் சந்தித்துக்கொள்வதையும் தொடர்பிலிருப்பதையும் மேற்கோளாகக் காட்டினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், செபவாழ்விற்கென தன்னை அர்ப்பணித்து திரு அவைக்கான செபம் மூலமாக தன் பங்களிப்பை வழங்கிவருகிறார் எனவும் கூறினார் அருட்தந்தை லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இந்தியத் திருஅவையில் 'குணமளிக்கும் திருப்பணி வாரம்'

பிப்.10,2014. இந்தியாவின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடும் 'குணமளிக்கும் திருப்பணி வாரம்' இத்திங்கள் முதல் வரும் ஞாயிறுவரை சிறப்பிக்கப்படுகிறது.
இந்தியக் கிறிஸ்தவ மருத்துவக்கழகம், இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை மற்றும் கத்தோலிக்க நலஆதரவு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த குணமளிக்கும் திருப்பணி வாரத்திற்கு, 'பெண்கள் - குணமளிக்கும் திருப்பணியில் தலைவர்கள்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
குணப்படுத்தும் உன்னதப் பணியில் பெண்களின் பங்கை விவிலியம் தெளிவாக எடுத்துரைப்பதாக கிறிஸ்தவ சபைகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவரவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து கூட்டுச்செபங்களில் பங்குகொள்ள வாய்ப்பளிப்பது, நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்வது போன்றவை இவ்வாரத்தின் திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குதள அளவிலும் திருவழிபாட்டுக்கொண்டாட்டங்கள், நோயிற்பூசுதல், நல ஆதரவுக் கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11, இச்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் லூர்து நகர் புனித மரியன்னைத் திருவிழாவன்று, கத்தோலிக்க திருஅவையில், உலக நோயாளிகள் நாள் சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBCI

6. இலங்கையில் ஆண்டுக்கு 2000 புதிய தொழு நோயாளிகள்

பிப்.10,2014. 1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆண்டுக்கு 2000 புதிய தொழு நோயாளிகள் பதிவாவதாக அந்நாட்டின் நல அமைச்சகமும் தெரிவித்துள்ளது. 
2020ல் இந்த எண்ணிக்கையை, 1000ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில், 177 பேர் சிறார்கள் என்று அரசு தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.
இலங்கையில் தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொழுநோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழுநோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ மேலும் கூறினார்.

ஆதாரம் : BBC

7. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது

பிப்.10,2014. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர்களால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளது மற்றும் காயமடைந்துள்ளது கடந்த ஆண்டில் 14 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஐ.நா. நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு மோதல்கள் தொடர்பாக 2959பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5656 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறும் ஐ.நா. அறிக்கை, இறப்புகளை பொருத்தவரையில் 7 விழுக்காடும், காயமடைந்தவர்களை பொருத்தவரையில் 17 விழுக்காடும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
2009ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போரில் 14,064 பொதுமக்கள் தங்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...