இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய மங்கள்யான் 1½ கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மங்கள்யான் என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5–ந்திகதி விண்ணில் செலுத்தியது.
சுமார் ஒரு ஆண்டு பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும் வகையில் அந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இயங்கி வரும் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் ஆகிறது. இந்த 3 மாதத்தில் அந்த விண்கலம் சுமார் 1½ கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உள்ளது.தொடர்ந்து அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அந்த விண்கலம் அனுப்பும் சிக்னல்கள் 48 வினாடிகளில் இஸ்ரோவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேருகிறது. இன்னும் 233 நாட்களுக்கு மங்கள்யான் விண்கலம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 24–ந்தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும்.
அதன் பிறகு அதை குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த பணிதான் மிகவும் சிக்கலானது என்று கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய 3 நாடுகள்தான் செவ்வாய் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment