Friday, 7 February 2014

செய்திகள் - 07.02.14

செய்திகள் - 07.02.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் போலந்து ஆயர்களிடம் : பிரிவினைகளை ஒதுக்கி ஒன்றிப்பையும் அமைதியையும் கட்டியெழுப்புங்கள்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : தாழ்ச்சியுடன் நற்செய்தி அறிவிக்க அழைப்பு

3. திருத்தந்தை : இறையன்பால் நிரப்பப்படும் வாழ்வில் சுவை மிகுந்திருக்கும்

4. புதிய பேராலயத்துக்கு நிலம் வழங்கியிருப்பதற்கு Bahrain அரசருக்கு திருத்தந்தை நன்றி

5. இந்திய ஆயர்களின் 31வது நிறையமர்வுக் கூட்டம்

6. லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அரசியல்வாதிகளுக்கு முதுபெரும் தந்தை வேண்டுகோள்

7. இத்தாலியில் குடியேற்றதாரர்கள் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர், இத்தாலிய காரித்தாஸ்

8. வளைகுடா நாட்டுச் சிறைகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

9. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வளர்ந்த நாடுகள் காரணம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் போலந்து ஆயர்களிடம் : பிரிவினைகளை ஒதுக்கி ஒன்றிப்பையும் அமைதியையும் கட்டியெழுப்புங்கள்

பிப்.07,2014. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தளமாக அமையும் குடும்பம், திருமணம், குறிப்பாக, இளையோரைத் திருமணத்துக்குத் தயாரித்தல், குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கான அழைப்பு போன்றவைகளில் போலந்து ஆயர்கள் தங்கள் மேய்ப்புப்பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்தித்து தங்களின் மேய்ப்புப்பணிகள் குறித்த விபரங்களை வழங்கும் அட் லிமினாவையொட்டி போலந்து நாட்டு ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்களுக்கு மத்தியில் ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணி ஒன்றிப்பு முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.
போலந்தின் கிராக்கோவ் நகரில் 2016ம் ஆண்டில் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகள், தொடர்புகளுக்குப் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன, அதேசமயம் மனிதர்களுக்கு இடையேயான நேரடி ஆள்-ஆள் உறவுகளைக் குறைக்கின்றன எனவும் கூறினார்.
எனினும், இளையோரின் மனங்களில் மிக ஆழமான தேடல் இருக்கின்றது, அதை நிறைவேற்றுவதற்குத் தலத்திருஅவை முயற்சிகள் எடுக்குமாறும், மறைக்கல்வி, அருளடையாளங்கள், பக்த இயக்கங்கள் போன்றவை வழியாக இளையோர் கிறிஸ்துவையும் இறையன்பையும் அறிவதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுமாறும்   கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான அழைத்தலிலும் அவர்களுக்கானப் பயிற்சியிலும் போலந்து ஆயர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், குருக்களிலும், துறவிகளிலும் மறைப்பணி ஆர்வம் அதிகரிக்க வேண்டுமென்றும், இப்பணியில் ஏழ்மை மற்றும் பிறரன்புக்குச் சாட்சிகளாக அவர்கள் வாழ வேண்டுமென்றும் கூறினார்.
போலந்து நாட்டில் தற்போது பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வேலையில்லாதவர், வீடற்றவர், நோயாளிகள், கைவிடப்பட்டவர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலாத குடும்பத்தினர் போன்றவரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் போலந்து திருஅவை இத்தகைய மக்களுடன் நெருக்கமாக இருந்து மேய்ப்புப்பணிகளை ஆற்றுமாறும் கூறினார் திருத்தந்தை.
வருகிற ஏப்ரல் 27ம் தேதியன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருப்பதையும், அவரது உயரிய வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : தாழ்ச்சியுடன் நற்செய்தி அறிவிக்க அழைப்பு

பிப்.07,2014. இயேசுவின் உண்மையுள்ள சீடர், தான் கிறிஸ்தவராக இருப்பதை ஒரு சலுகையாக உணராமால் இயேசுவைப் பின்சென்று அவரை அறிவிப்பார் என்று இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏரோது அரசர், தூய திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டிய நிகழ்வை  விவரிக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் தூய திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று கூறினார்
கடவுள் தம் மகனின் வழியைத் தயார் செய்வதற்கு அனுப்பிய மனிதரே திருமுழுக்கு யோவான் என்றும், ஊழலும் தீயொழுக்கங்களும் நிரம்பிய ஏரோதின் அரண்மனையில்  ஒவ்வொருவரும் மனமாற வேண்டுமென்று யோவான் அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தான் மெசியா எனச் சொல்வதற்கு, திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது, ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை எனவும், திருமுழுக்கு யோவான் உண்மையின் மனிதர் எனவும், இம்மனிதர் தனது துன்பங்களிலும், அவமானங்களிலும் இயேசுவைப் பின்பற்றினார் எனவும் கூறினார் திருத்தந்தை.
முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா போன்று திருமுழுக்கு யோவானுக்கும் இருளான தருணங்கள் இருந்தன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதன் சலுகையைப் பயன்படுத்தாமல் தாழ்ச்சியுடன் நற்செய்தி  அறிவிக்க வேண்டுமென்று மறையுரையில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : இறையன்பால் நிரப்பப்படும் வாழ்வில் சுவை மிகுந்திருக்கும்

பிப்.07,2014. நம் வாழ்வு இறையன்பால் நிரப்பப்படுவதற்கு நாம் அனுமதித்தால், அந்த வாழ்வில் நாம் எவ்வளவு சுவையைப் பெறுவோம் என்று இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட 17 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை, புனித வலண்டீன் விழாவான பிப்ரவரி 14, வருகிற வெள்ளிக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 14ம் தேதி காலை 12 மணிக்கு இவர்களைச் சந்தித்து உரையாற்றுவார் என்றும், திருத்தந்தையைச் சந்திப்பதற்கு முன்தயாரிப்பாக இவர்கள் அனைவரும் ஒரு மணிநேரம் செபம் மற்றும் தியானச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் திருப்பீட குடும்ப அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புதிய பேராலயத்துக்கு நிலம் வழங்கியிருப்பதற்கு Bahrain அரசருக்கு திருத்தந்தை நன்றி

பிப்.07,2014. Bahrain நாட்டில் கத்தோலிக்கப் பேராலயம் ஒன்றைக் கட்டுவதற்கு அந்நாட்டு அரசர் Hamad bin Isa Al Khalifa அவர்கள், நிலம் வழங்கியிருப்பதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தூதர் பேராயர் Petar Radjic அவர்கள், கடந்த செவ்வாயன்று Bahrain அரசரை நேரில் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய நன்றிக் கடிதத்தை சமர்ப்பித்தார்.
அராபியத் தீபகற்பத்தின் பாதுகாவலராகிய அராபிய அன்னைமரியாவுக்கு புதிய பேராலயம் அர்ப்பணிக்கப்படவிருக்கின்றது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்றிக் கடிதத்தைப் பெற்ற Bahrain அரசர், உலகில் சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் வளருவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் ஊக்கத்துக்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். 
அராபியத் தீபகற்பத்தில் கத்தோலிக்க ஆலயம் கட்டுவதற்கு அனுமதித்த முதல் நாடு Bahrain என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதி முதலில் 1939ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஆதாரம் : AsiaNews                               

5. இந்திய ஆயர்களின் 31வது நிறையமர்வுக் கூட்டம்

பிப்.07,2014. இந்திய ஆயர்களின் 31வது நிறையமர்வுக் கூட்டம் கேரளாவின் பாலாய் நகரில் இச்செவ்வாய் முதல் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள் தலைமையில் திருப்பலியுடன் தொடங்கிய இக்கூட்டத்தில் இந்தியத் திருஅவை மற்றும் இந்தியச் சமுதாயத்தைப் புதுப்பிப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும் இன்னும் அதிக விசுவாசமாக இருக்கும் வழிகளில் இந்தியத் திருஅவை தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தனது மறையுரையில் வலியுறுத்தினார் பேராயர் பென்னாக்கியோ.
பேராயர்கள், ஆயர்கள், இந்திய ஆயர் பேரவைப் பணிக்குழுக்களின் செயலர்கள் என ஏறக்குறைய 185 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
165 மறைமாநிலங்களைக் கொண்ட இந்திய ஆயர் பேரவை உலகில் நான்காவது பெரிய ஆயர் பேரவையாகும்.

ஆதாரம் : CBCI

6. லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அரசியல்வாதிகளுக்கு முதுபெரும் தந்தை வேண்டுகோள்

பிப்.07,2014. தனது வரலாற்றில் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் சென்றுகொண்டிருக்கும் லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகளுக்கு இக்காலம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அந்நாட்டு மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Al-Rahi கூறியுள்ளார்.
லெபனன் ஆயர்களின் மாதக் கூட்டத்தின் இறுதியில் அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கென பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, 1920ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கோட்பாடுகளின் வழியில் லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அரசியல்வாதிகளைக் கேட்டுள்ளார்.
லெபனன் நாடு தற்போது கட்டியெழுப்பப்பட வேண்டும், இல்லாவிடில் இந்நாடு ஒருபோதும் கட்டியெழுப்பப்படாது என்று எச்சரித்துள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, உலகின் கிழக்குக்கும் மேற்குக்குமான ஒப்புரவு, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியாக லெபனன் நாடு உள்ளது என்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனன் நாட்டைச் சுற்றியுள்ள பகுதியிலும், பன்னாட்டு அளவிலும் மோதல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு லெபனன் அரசியல்வாதிகளைக் கேட்டுள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, லெபனன், தனது நாட்டையும், தனது நாட்டின் எல்லைகளையும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய தேசியப் பாதுகாப்புக்கான யுக்திகளை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews                               

7. இத்தாலியில் குடியேற்றதாரர்கள் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர், இத்தாலிய காரித்தாஸ்

பிப்.07,2014. இத்தாலிக்கு வரும் குடியேற்றதாரர்கள் அந்நாட்டின் பல பகுதிகளில் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவும், இத்தாலிய காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அடக்குமுறைகளுக்கு அஞ்சியும், தரமான வாழ்வைத் தேடியும், நிறைந்த எதிர்பார்ப்புகளுடனும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறுகின்றனர், ஆனால் அவர்கள் குடியேறும் நாடுகளில் ஏமாற்றத்தை எதிர்நோக்கி மனித மாண்பையும் இழக்கின்றனர் என்று அவ்வறிக்கையை வெளியிட்ட  ஆயர் Giuseppe Merisi கூறினார்.
இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய, இத்தாலிய காரித்தாஸ் நிறுவனத்தின் குடியேற்றதாரர் அலுவலகத் தலைவர் Oliviero Forti, சுட்டெரிக்கும் வெயிலில் 300 கிலோ கிராம் தக்காளிப்பழங்களைச் சேகரிப்பதற்கு குடியேற்றதாரர் 3.5 யூரோக்களையும், ஆவணங்கள் இல்லாதவர்கள் 2.5 யூரோக்களையும் பெறுகின்றனர் என்று கூறினார்.
ஐ.நா.வின் கணிப்புப்படி, உலக அளவில் 2012ம் ஆண்டில் 23 கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் நாடுகளைவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்றனர், ஆனால் இவ்வெண்ணிக்கை 2000மாம் ஆண்டில் 17 கோடியே 50 இலட்சமாக இருந்தது எனத் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 45 இலட்சம் வெளிநாட்டவர் வாழ்ந்தனர். இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 8 விழுக்காடு அதிகம்.

ஆதாரம் : ICN                           

8. வளைகுடா நாட்டுச் சிறைகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

பிப்.07,2014.  பல்வேறு குற்றங்கள் புரிந்தது தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த மூவாயிரத்து 497 பேர் வளைகுடா நாட்டுச் சிறைகளில் துன்புற்று வருவதாக, இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் தெரிவித்தார். 
ஆயிரத்து நானூறு பேர் ரியாத் சிறையிலும், 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், 178 பேர், கத்தார் மற்றும் பக்ரைனில் சிறைகளிலும் உள்ளனர் என, அமைச்சர் வயலார் ரவி அறிவித்தார்.
வெளிநாடுவாழ் இந்தியர் தொடர்பாக எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வயலார் ரவி, இக்கைதிகளில் பெரும்பாலானவர்கள், நாடுகளில் தங்கும் அனுமதி, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல் போன்ற குற்றங்கள் தொடர்பாகச் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
இவர்களை மீட்க இந்தியா போதிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், இவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர்

9. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வளர்ந்த நாடுகள் காரணம்

பிப்.07,2014. வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசு, இந்தியாவிலும், சீனாவிலும் அதிகரித்துள்ளவேளை, இதைக் கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் கேட்டுக்கொண்டார்.
150 ஆண்டுகளுக்குமுன், வளர்ந்த நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சேதமே இப்போதைய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணம் என்பதால், இப்பாதிப்புக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோபி அன்னான் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
மேலும், உலகில் உள்ள 178 நாடுகளில் சுற்றுச்சூழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இந்தியாவின் நிலை படுபரிதாபமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் புகை மூலம் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பில் சீனாவின் பெய்ஜிங் நகரை டெல்லி முந்திச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Hindustan Times 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...