பொதுநலவாய அரச தலைவர்களுக்கு ஒரு திறந்த மடல்
பொதுநலவாய நாடுகளில் உறுப்புரிமை வகிக்கும் பல நாடுகளில் மக்களாட்சி உயிர் பிழைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் சிறீலங்காவில் கூட உள்ளீர்கள்.
சட்டத்தின் மாட்சி மற்றும் நல்லாட்சி கோட்பாடுகள் உறுப்பு நாடுகளது மேன்மைவாய்ந்த சிறப்பியல்புகளாக இப்போது இல்லை. தன்னிச்சை ஆட்சி மலிந்து போய்விட்டது. பொதுநலவாய அமைப்பு அழியாது தொடர்வதே கேள்விக் குறியாகிவிட்டது.
சிறீலங்காவின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் நாட்டின் இயற்கையான அழகையும் வரவேற்பின் சிறப்பையும் காட்டுவதற்கு செலவழிக்கப்படுகிறது.
1948 இல் சிறீலங்கா (அப்போது இலங்கை) சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பதவிக்கு வந்த அரசுகள் சமூக நீதியின் சுவடுகளை எல்லாம் படிப்படியாக அழித்து விட்டன.
மனநிறைவுள்ள சமூகங்கள் இல்லாவிடில் (நாட்டில்) உறுதித்தன்மையைக் காணமுடியாது. சிறீலங்கா ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், சமயங்கள், பண்பாடுகள், வரலாறுகள் மற்றும் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களது ‘தாயகம்’ ஆக இருந்து வந்துள்ளது. பவுத்தம், இந்துமதம், இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள்.
இந்த மக்கள் – இவர்கள் எல்லோரும் சேர்ந்து சிறீலங்காவின் மக்கள் என அழைக்கப்படுகிறார்கள் – தங்களது மொழியை வளர்க்கவும் தங்களது சமயத்தைப் பின்பற்றவும் அவர்களுக்குச் சொந்தமான பண்பாட்டை மேம்படுத்தவும் வளர்க்கவும் அவர்களது வரலாற்றைப் பாதுகாக்கவும் அரச அதிகாரத்தில் தங்களுக்குரிய பங்கை – அரசின் அமைப்புகளில் பிரதிநித்துவம் பெறும் உரிமை உட்பட – சிறீலங்காவுக்குப் பொதுவான அடையாளத்தை பலவீனப்படுத்தாத முறையில் – அனுபவிக்க உரித்துடையவர்கள் ஆவர்.
தன்னிச்சை மற்றும் அரச அதிகாரங்களை வரன்முறையற்றுப் பயன்படுத்துவதைத் தடுக்க 17 ஆவது திருத்தச் சட்டம் – யாப்புக்கு மக்களது முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒரேயொரு சட்டம் – 2001 ஆம் ஆண்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. யாப்பு அவை மற்றும் சுதந்திரமான ஆணையங்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து முக்கிய நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டது குறைக்கப்பட்டது.
நல்லாட்சி நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஆனால் வருத்தப்படும் வகையில் 2005 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதியால் 17 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட யாப்பு விதிகள் மீறப்பட்டன. இதனால் அரச நிறுவனங்கள் எல்லாம் முன் எப்போதும் இல்லாதவாறு அரசியல் மயப்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பிறகு 17 ஆவது சட்ட திருத்தம் வஞ்சகமாக நீக்கப்பட்டது. 18 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதிக்கு எல்லையில்லாத அதிகாரம் வழங்கப்பட்டது. வருத்தப்படும் வகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தன்னிச்சை கோட்பாட்டை எங்களது நாட்டில் நிறுவனமயப்படுத்தி விட்டார்கள்.
கட்டற்ற தன்னிச்சைப் போக்குக்கு இருக்கும் ஒரே தடைக்கல் நீதித்துறையாகும். மேல்நீதி மன்றங்களின் தெளிவான தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு முதன்மை நீதியரசர் சடுதியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது இடத்தில் அரசியல் முலாம் பூசப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டார். நீதித்துறை இப்போது நடைமுறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. எந்தவித கருத்து முரண்பாடும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி படுவேகத்தில் அடக்கப்படுகிறது. வருந்தத்தக்க மாதிரி நல்லாட்சி என்பது வரலாற்றுக் குப்பைத் தொட்டிக்குள் தள்ளப்பட்டுவிட்டது.
இப்போது காணப்படும் பயங்கரப் போக்கு எப்படி மறுபக்கம் திருப்பப்பட்டு பொதுநலவாய நாடுகளது கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்பதற்கு உங்களது கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுக் கரிசனையோடு ஆராயப்படும் என நம்புகிறேன்.
எழுதியவர்: எல்மோ பெரேரா
தமிழாக்கம்: நக்கீரன்
No comments:
Post a Comment