Wednesday 30 September 2020

மங்கிப்போகும் விமர்சனங்கள்

 இந்தியச் சிறுமிகள்


வாழ்க்கைப் பயணத்தில் நாம் தயாரிக்கவேண்டியவை, நம்மோடு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியவை மூன்று. ஒன்று. வெறுக்காத இதயம். இரண்டாவது வாடாத புன்னகை. மூன்றாவது அடுத்தவரை புண்படுத்தாத சொற்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு வீட்டில் சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு வருகிறவர்களிடம், மாமா, நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுக் கேட்டு, அவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு வந்தார். வளர்ந்த பிறகு, அந்தச் சிறுமிக்கு தன்னைப் பற்றி புரிய ஆரம்பித்தது. அப்போது, தான் சிறுவயதில் மற்றவரிடம் கேட்டு எழுதி வைத்திருந்த நோட்டை எடுத்துப் பார்த்தார் அவர். ஆனால், அந்த எழுத்துக்கள் எல்லாம் மங்கி இருந்தன. அப்போது அச்சிறுமியின் அருகிலிருந்த அப்பா சொன்னாராம் – மகளே, மற்றவர்களின் உன்னைப் பற்றிய கணிப்பு காலப்போக்கில் மங்கிவிடும். ஆனால், உனக்கு இருக்கும் உன்னைப் பற்றிய கணிப்புதான் நிலைத்திருக்கும் என்று.

அன்பு இதயங்களே, என்னைப் பற்றி மற்றவர் விமர்சித்து, மனதை அதிகம் புண்படுத்துகிறார்களே என்று, நம்மில் பலர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. ஓர் ஊருக்குச் செல்லவேண்டும் என்றால், அந்த ஊருக்குத் தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக்கொள்வோம். நாம் செல்லும் இடத்திற்கு இடம், நம் தயாரிப்பும் மாறுகின்றது. அதுபோல, வாழ்க்கைப் பயணத்தில் நாம் தயாரிக்கவேண்டியவை, நாம் நம்மோடு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டியவை மூன்று. ஒன்று. வெறுக்காத இதயம். இரண்டாவது வாடாத புன்னகை. மூன்றாவது அடுத்தவரை புண்படுத்தாத சொற்கள். இந்த மூன்றும் இருந்தால் வாழ்க்கையை நாம் மகிழ்வோடு கடந்துவந்து விடலாம். எவரது விமர்சனம் பற்றியும் கவலைப்பட அவசியமிருக்காது (நன்றி திருவாளர் அருள்பிரகாசம்)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...