Wednesday 30 September 2020

ஜார்கண்டில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

 கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அமைதி வழியில் எதிர்ப்பு

பசுவைக் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் தலை மொட்டையடிக்கப்பட்டு, இந்து கடவுளரின் புகழ்பாடும்படி கட்டாயப்படுத்தபட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள் 

பசுவைக் கொன்றார்கள் என்ற பொய்க் குற்றசாட்டுடன், ஜார்கண்ட் மாநிலத்தின் Bherikudar என்ற ஊரில், பூர்வீக இன கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், Simdega ஆயர் Vincent Barwa.

இத்தாக்குதல், மனித மாண்பை, குறைத்து மதிப்பிடும் காட்டுமிராண்டித்தனமான செயல் என, கண்டனம் தெரிவித்துள்ள ஆயர் பார்வா அவர்கள், நாகரீகமுள்ள ஒரு ஜனநாயக நாட்டில், இத்தகைய வன்முறைகளை எவரும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறினார்.

அண்மையில் Bherikudar என்ற கிராமத்திற்குள் கம்புகள், மற்றும், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த அறுபதுக்கும் மேற்பட்ட இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் தலையை மொட்டையடித்து, இந்து கடவுளரின் புகழ் பாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பூர்விக இன குடிமக்கள் மற்றும் தலித் மக்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில், இத்தாக்குதல் தொடர்பாக, ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக உரைத்த காவல்துறை, கிறிஸ்தவர்கள் பசுவைக் கொன்றார்கள் என்பதற்கு, எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோல், அண்மையில், இராஞ்சி மாவட்டத்தில், கிறிஸ்தவ குடும்பம் ஒன்று, பசுவைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட, அவர்கள், பசுவைக் கொன்றார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால், பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் மாநில ஆட்சியை இழந்துள்ள பி.ஜே.பி. கட்சி, ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில், இந்து, கிறிஸ்தவ பிரிவினையை வளர்க்க எடுக்கும் முயற்சிகளே இவை என, பல சமுதாயத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் 3 கோடியே 30 இலட்சம் மக்கள் தொகையில், 15 இலட்சம் பேர், அதாவது, 4.5 விழுக்காட்டினர், கிறிஸ்தவர்கள். (UCAN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...