செய்திகள் - 04.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ மீண்டும் ஒருமுறை அழைப்பு
2. San Marino குடியரசின் ஆட்சியாளர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
3.
செப்.07ம் நாளன்று உலகில் அமைதி நிலவச் சிறப்பாகச் செபிக்குமாறு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்தைச் செயல்படுத்த, கிறிஸ்தவத் தலைவர்கள் ஆர்வம்
4. சிரியாவில் அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக ஓட்டளிப்பதற்கு ஆயர்கள் வலியுறுத்தல்
5. சிரியாவின் அமைதிக்காகத் திருத்தந்தை அவர்களுடன் சேர்ந்து செபிக்க முஸ்லிம் அறிவாளர் அழைப்பு
6. ஜி20 நாடுகள் ஏழைகளுக்குச் செய்துள்ள சேவைகள் குறித்துப் பரிசீலிக்குமாறு உதவி நிறுவனங்கள் வேண்டுகோள்
7. இலங்கை, படுகொலைகளின் பூமி - நவநீதம்பிள்ளை
8. கடந்த இருபது ஆண்டுகளில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, யுனெஸ்கோ
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ மீண்டும் ஒருமுறை அழைப்பு
செப்.04,2013. சிரியாவில் அமைதி நிலவ மீண்டும் ஒருமுறை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதன் பொது மறைபோதகத்தை மீண்டும் இப்புதனன்று தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சிரியாவில் அமைதி நிலவச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும்
அமைதி நிலவ செப்டம்பர் 7ம் நாளை செபம் மற்றும் நோன்பு நாளாகக்
கடைப்பிடிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகள் மற்றும் அனைத்து
மதங்களின் உறுப்பினர்களுக்கும், நன்மனம்கொண்ட எல்லாருக்கும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அகிலத் திருஅவையும் இந்நாளை மிகுந்த உருக்கத்துடன் அனுசரிக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தத் தனது சொந்த முயற்சியில் கலந்து கொள்வதற்கு பிற கிறிஸ்தவ சபைகளின் சகோதரர்களும், பிற மதத்தினரும், நன்மனம்கொண்ட எல்லாரும் இசைவு தெரிவித்திருப்பதற்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
வருகிற சனிக்கிழமை இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் தொடங்கும் அமைதிக்கானச் செப வழிபாட்டில் உரோம் விசுவாசிகளும், திருப்பயணிகளும் சிறப்பாக கலந்துகொண்டு அமைதி எனும் பெரிய கொடையை ஆண்டவரிடம் கேட்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதியின் வல்லமைமிக்க அழுகுரல் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வதாக எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. San Marino குடியரசின் ஆட்சியாளர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
செப்.04,2013. San Marino குடியரசின் தலைவர் Antonella Mularoni, அக்குடியரசின் அரசுத் தலைவர் Denis Amici ஆகிய இருவரையும் இப்புதன் பொது மறைபோதகத்துக்குப் பின்னர் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தனர் San Marino குடியரசின் ஆட்சியாளர்கள்.
San Marino குடியரசுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே இடம்பெறும் நல்லுறவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்ட அதேவேளை, மத்திய கிழக்குப் பகுதியின் கவலைதரும் நிலை பற்றிக் குறிப்பிட்டு, அப்பகுதியில் அமைதியான தீர்வு காணப்படுவதற்கும், பாதுகாப்புக்கும் அனைத்து நாடுகளும் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டுமென்று இச்சந்திப்புகளில் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இத்தாலி நாட்டுக்குள் இருக்கும் San Marino குடியரசின் தலைவரும், அரசுத் தலைவரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்நாட்டின் பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3.
செப்.07ம் நாளன்று உலகில் அமைதி நிலவச் சிறப்பாகச் செபிக்குமாறு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்தைச் செயல்படுத்த, கிறிஸ்தவத் தலைவர்கள் ஆர்வம்
செப்.04,2013. சிரியாவிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ, செபம்
மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
விடுத்துள்ள அழைப்புக்கு இணங்கும்விதமாக உலகின் அனைத்து நாடுகளின்
திருஅவைகளும், பிற கிறிஸ்தவ சபையினரும், முஸ்லிம்கள் உட்பட பிற மதத்தவரும் செப்.07ம் நாளன்று உலகில் அமைதி நிலவ செபிக்கவுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிலிப்பீன்ஸ், இந்தியா, இலங்கை, கொரியா, இந்தோனேசியா உட்பட அனைத்து ஆயர்களும் வருகிற சனிக்கிழமை நோன்பிருந்து செபிக்கவுள்ளனர்.
சிரியாவின் அரசுத்தலைவர் Bashar Assad அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு சிந்தித்துவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதுபோல,
பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலம் சிரியாவின் நீண்டகாலப்
பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு நியுயார்க் பேராயர் கர்தினால் திமோத்தி
டோலன் மற்றும் Des Moines ஆயர் Richard E. Patesம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
மேலும்,
பிலிப்பீன்சிலுள்ள கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகங்கள் வருகிற
சனிக்கிழமையன்று செபம் மற்றும் நோன்பு அனுசரிக்கவுள்ளதாக மனிலா பேராயர்
கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே கூறினார்.
ஆதாரம் : CNS/Fides
4. சிரியாவில் அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக ஓட்டளிப்பதற்கு ஆயர்கள் வலியுறுத்தல்
செப்.04,2013.
சிரியாவில் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக அமெரிக்க ஐக்கிய
நாட்டு காங்கிரஸ் அவை ஓட்டளிப்பதற்குக் கத்தோலிக்கர் வலியுறுத்துமாறு
கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தோலிக்கர் தங்களின் காங்கிரஸ் அவைப் பிரதிநிதிகளிடம், சிரியாவில் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக ஓட்டளிப்பதற்கு வலியுறுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
மாறாக,
அனைத்துலக சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் சிரியாவில் உடனடியாக போர்
நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதற்கு அமெரிக்க
ஐக்கிய நாட்டு தலைமை ஆதரவளிக்க கத்தோலிக்கர் வலியுறுத்துமாறும்
கேட்டுள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
வேதிய ஆயுதத் தாக்குதலை, திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையும் கண்டித்துள்ள அதேவேளை, உரையாடல் ஒன்றே உயிர்களைக் காப்பாற்றி அமைதியைக் கொண்டுவர முடியும் எனவும் அமெரிக்க ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
ஆதாரம் : CWN
5. சிரியாவின் அமைதிக்காகத் திருத்தந்தை அவர்களுடன் சேர்ந்து செபிக்க முஸ்லிம் அறிவாளர் அழைப்பு
செப்.04,2013.
சிரியாவுக்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபிக்கவிருக்கும் நாள்
அமைதிக்கானத் தீர்வுக்குக் கதவைத் திறக்கும் நாளாக இருக்கின்றது என இஸ்லாம்
மத நிபுணரான Ridwan Al-Sayyid ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சிரியாவுக்கெதிரான இராணுவத் தாக்குதல், சிரியாவிலும், லெபனனிலும் மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கும் என்று கூறிய Ridwan Al-Sayyid, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அமைதிக்கு ஆதரவாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு லெபனன்
மக்கள் நன்றியுள்ளவர்களாய் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
சிரியாவின்
அசாத் ஆட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில்
அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் துன்புறுகின்றனர் என்றுரைத்த அவர், இதுவரை யாரும் தூதரக வழியில் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், வட
இஸ்ரேலில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சிரியாவுக்கெதிரான இராணுவத்
தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து பேரணி ஒன்றை நடத்தினர். இதில் எருசலேம்
துணை ஆயர் Giacinto-Boulos Marcuzzo அவர்களும் கலந்து கொண்டார்.
ஆதாரம் : AsiaNews / CWN
6. ஜி20 நாடுகள் ஏழைகளுக்குச் செய்துள்ள சேவைகள் குறித்துப் பரிசீலிக்குமாறு உதவி நிறுவனங்கள் வேண்டுகோள்
செப்.04,2013.
இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸபெர்கில் இவ்வியாழனன்று தொடங்கும் ஜி20
நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் உலகின் மிகவும்
வறிய நிலையில் வாழும் மக்களுக்குத் தாங்கள் செய்துள்ள சேவைகள் குறித்துப்
பரிசீலிக்குமாறு கேட்டுள்ளன கத்தோலிக்க உதவி நிறுவனங்கள்.
உலகின் பொருளாதாரத்தை நீதி நிறைந்ததாக ஆக்கவும், சுற்றுச்சூழலை
மேம்படுத்தவும் ஜி20 நாடுகள் ஆற்றியுள்ள பணிகளைச் சீர்தூக்கிப்
பார்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் உட்பட கத்தோலிக்க உதவி
நிறுவனங்கள் கேட்டுள்ளன.
செப்டம்பர் 5,6 தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இரஷ்யா சென்றுள்ளார்.
ஆதாரம் : ICN
7. இலங்கை, படுகொலைகளின் பூமி - நவநீதம்பிள்ளை
செப்.04,2013. ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைக்கான அண்மைச் சுற்றுப்பயணம், இலங்கை, படுகொலைகளின் பூமி என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை ஆராய்வதற்காக இப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த நவநீதம்பிள்ளை, யாரையும் விமர்சிக்க இங்கு தான் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று போரில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும், மற்றும் பிற மக்களையும் சந்தித்துப் பேசியுள்ள நவநீதம்பிள்ளை, இம்மக்களுக்கு ஒரு தீர்வைத் தேடி தருவேன் என்ற நம்பிக்கையையும் அளித்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நவநீதம்பிள்ளை
வன்னிப் பகுதிகளில் இருந்து திருகோணமலை சென்றதுமே முகாம்களுக்குள்ளே
இருந்த இராணுவம் பழையபடியே வந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : Tamilwin
8. கடந்த இருபது ஆண்டுகளில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, யுனெஸ்கோ
செப்.04,2013. எழுத்தறிவு மனித வளர்ச்சிக்கு இன்றியமையாத உந்து சக்தியாக இருக்கும்வேளை, இவ்வுலகில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா கூறியுள்ளார்.
செப்டம்பர் 8, வருகிற ஞாயிறன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள போக்கோவா, 1990ம் ஆண்டில் உலகில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 76 விழுக்காடாக இருந்தது, இது தற்போது 84 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேறுவதற்கு அனைத்துலக அளவில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளே இதற்குக் காரணம் எனச் சொல்லியுள்ள போக்கோவா, இன்னும் 20 ஆண்டுகளில் உலகில் எழுத்தறிவில்லாதவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலுள்ள
77 கோடியே 40 இலட்சம் வயதுவந்த எழுத்தறிவில்லாதவர்களில் மூன்றில் இரண்டு
பகுதியினர் பெண்கள் எனவும் அவரின் செய்தி கூறுகின்றது.
‘21ம் நூற்றாண்டுக்கு எழுத்தறிவு’ என்ற தலைப்பில் இவ்வாண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment