Wednesday, 4 September 2013

செய்திகள் - 03.09.13

செய்திகள் - 03.09.13

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தீமையை வெல்வதற்கு இயேசுவுக்கு இராணுவங்கள் தேவையில்லை

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் நம் வாழ்வை மாற்றுகிறார்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : வார்த்தைகளால் பிறரை ஒருபொழுதும் கொலைசெய்யாதீர்கள்

4. வரும் அக்டோபரில் அசிசி செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள்

5. வத்திக்கானில் சிரியாவின் அமைதிக்கானச் செப வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு ஒரு முஸ்லிம் ஆன்மீகத் தலைவருக்கு விருப்பம்

6. கர்தினால் கிரேசியஸ் : இலட்சக்கணக்கான இந்தியச் சிறார் திருத்தந்தையோடு செபத்தில் இணைந்திருப்பர்

7. காப்டிக் முதுபெரும் தந்தை அலுவலகம் : கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் இராணுவத் தலையீட்டுக்கு யாராலும் நியாயம் சொல்ல முடியாது

8. தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கு ஐ.நா. அழைப்பு

9. வறுமை, மூளைத்திறனைப் பாதிக்கும், புதிய ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தீமையை வெல்வதற்கு இயேசுவுக்கு இராணுவங்கள் தேவையில்லை

செப்.,03,2013. இயேசு இருக்குமிடத்தில் எப்பொழுதும் தாழ்மையும் பணிவும் அன்பும் இருக்கும் என்று வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் இதயங்களில் பேசும் இயேசுவின் அமைதி ஒளிக்கும்’, நம்மை தற்பெருமையும் வீம்பும் உடையவர்களாக ஆக்கும் இவ்வுலகின் செயற்கை ஒளிக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து இத்திருப்பலி மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ தனித்தன்மை என்பது, இருளின் தனித்தன்மை அல்ல, ஆனால் அது ஒளியின் தனித்தன்மை என்றும், கிறிஸ்துவின் ஒளி, ஞானத்தின் ஒளி, அமைதியின் ஒளி, தாழ்மையின் ஒளி, இந்த ஒளி நமக்கு அமைதியை அளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
எனவே உண்மையான இயேசுவை அச்சமின்றி பின்பற்ற வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளின் நற்செய்தியில் இயேசு தீய ஆவியை விரட்டியது பற்றி விளக்கப்பட்டுள்ளது, தீய ஆவிகளை விரட்டுவதற்கு இயேசுவுக்கு இராணுவம் தேவையில்லை என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் நம் வாழ்வை மாற்றுகிறார்

செப்.,03,2013. இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் நம் வாழ்வை மாற்றுகிறார். கடவுளே அன்பு, அவர் வாக்குமாறாதவர், அவரே வாழ்வு, அவர் தம்மையே வழங்குபவர் என்பதை இயேசுவில் பார்க்கிறோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரபு உட்பட ஒன்பது ஐரோப்பிய மொழிகளில் தினமும் டுவிட்டரில் எழுதி வரும் திருத்தந்தை பிரான்சிஸ், பிரிவினைகள் மற்றும் சண்டையால் துண்டாடப்பட்டுள்ள நமது சமுதாயத்தில் நாம் அமைதியை விரும்புகிறோம் என்று இச்செவ்வாயன்று மற்றுமொரு செய்தியையும் எழுதியுள்ளார்.
மேலும், ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் அவை எவ்வளவு துன்பங்களை, எவ்வளவு அழிவுகளை, எவ்வளவு வேதனைகளை கொண்டுவருகின்றன என்று இத்திங்கள் மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், யூதர்களின் புத்தாண்டையொட்டி உலக யூதமத அவையினரை இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை, அனைத்து யூதர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதங்களுக்குள் உரையாடல் அதிகரிக்கவும், தீவிரவாதம் அகலவும் வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : வார்த்தைகளால் பிறரை ஒருபொழுதும் கொலைசெய்யாதீர்கள்

செப்.,03,2013. இறைவன் இருக்குமிடத்தில் வெறுப்போ, பொறாமையோ அல்லது எரிச்சலோ இருக்காது, அதோடு, பிறரைக் கொல்லும் புறணிப்பேச்சுக்கள் இருக்காது என்று இத்திங்கள் காலையில் கூறினார்   திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டு மாத கோடை கால இடைவெளிக்குப் பின்னர் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் தனது வழக்கமான திருப்பலியை இத்திங்கள் காலை மீண்டும் நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள, இயேசுவுக்கும், நாசரேத்தூர் மக்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை மையமாக வைத்து  மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அம்மக்களிடம் விசுவாசம் குறைபடுகின்றது என்று இயேசு சொல்லியதுபோது அவர்கள் கடுஞ்சினமுற்று அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர் என்றார்.
அச்சமயத்தில் இயேசுவின் அருள்மொழிகளைக் கேட்டு உருவாகிய வியப்புச்சூழல் குற்றத்தில் முடிந்தது, அவர்களின் பொறாமையும் எரிச்சலும் இயேசுவை அவர்கள் கொல்வதற்கு இட்டுச்சென்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நாம் புறணி பேசுவதற்குப் பழகியுள்ளோம், இதனால் நம் குழுக்களும், ஏன் நம் குடும்பங்களும் எத்தனை தடவைகள் நரகமாக மாறியிருக்கின்றன, அச்சமயங்களில் நம் வார்த்தைகளால் நம் சகோதரரைக் கொலைசெய்யும் குற்றவாளிகளாகிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு குடும்பமும், ஒரு குழுவும் பொறாமையால் அழிக்கப்படலாம், இந்தப் பொறாமை இதயத்தில் தீமையை விதைத்து அடுத்தவரைப் பற்றி மோசமாக பேசுவதற்குக் காரணமாகின்றது என்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வரும் அக்டோபரில் அசிசி செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள்

செப்.,03,2013. வருகிற அக்டோபர் 4ம் தேதி, இத்தாலியின் அசிசிக்கு ஒரு நாள் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அக்டோபர் 4ம் தேதி காலை 7.45 மணிக்கு கெலிகாப்டரில் அசிசி சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ், 8 மணிக்கு, நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிச் சிறாரைப் பராமரிக்கும் Serafico நிறுவனத்துக்குச் செல்வார்.
பின்னர் புனித பிரான்சிஸ் மனம்மாறக் காரணமான திருச்சிலுவை இருக்கும் புனித தமியான் ஆலயம் செல்லல், புனித பிரான்சிஸ் தனது ஆடைகளைக் கழற்றிக்கொடுத்த அறையைப் பார்வையிடுதல், அப்புனிதரின் கல்லறை இருக்கும் பசிலிக்காவில் செபித்தல், அவ்வளாகத்தில் திருப்பலி என புனித பிரான்சிஸ் அசிசியாருடன் தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்று செபிப்பார் திருத்தந்தை.
மாலையில் அப்பகுதி இளையோரைச் சந்தித்த பின்னர் உரோம் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வத்திக்கானில் சிரியாவின் அமைதிக்கானச் செப வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு ஒரு முஸ்லிம் ஆன்மீகத் தலைவருக்கு விருப்பம்

செப்.,03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாதம் 7ம் தேதி இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் சிரியாவின் அமைதிக்காக நடைபெறும் செப வழிபாட்டில் அனைத்துத் துறவியரும் கலந்து கொள்ளுமாறு திருப்பீட அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அனைத்து துறவு சபைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், இச்செப வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு, சிரியாவிலுள்ள சுன்னி இஸ்லாம் பிரிவின் ஆன்மீகத் தலைவர் Ahmad Badreddin Hassou கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலும் உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு   இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் உலகினர் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பு தன்னை மிகவும் ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் Hassou.
ஆயினும் தற்போதைய சூழலில் இது இயலுமா என்ற சந்தேகம் இருக்கும்வேளை, வருகிற சனிக்கிழமையன்று சிரியாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் அனைத்து முஸ்லிம்களும் இதே கருத்துக்காகத் திருத்தந்தையுடன் சேர்ந்து செபிக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். 
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசியலிலிருந்து விலகி உண்மையான ஆன்மீகத் தலைவராக, சிரியா மக்களின் நலனில் உண்மையாகவே அக்கறைகொண்டு பேசுகிறார் என சிரியா முஸ்லிம்கள் கருதுகின்றனர் என்று Fides              செய்தி நிறுவனம் கூறுகிறது.
மேலும், சிரியாவிலிருந்து 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : Fides        

6. கர்தினால் கிரேசியஸ் : இலட்சக்கணக்கான இந்தியச் சிறார் திருத்தந்தையோடு செபத்தில் இணைந்திருப்பர்

செப்.,03,2013. சிரியாவிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும், உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்துக்கு இணங்கி, இந்தியத் திருஅவை வருகிற சனிக்கிழமையன்று செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்கும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார்.
இந்தியாவின் ஏறக்குறைய 20 இலட்சம் கத்தோலிக்கரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தோழமையுணர்வு கொண்டு இம்மாதம் 7ம் தேதியை செபத்திலும் நோன்பிலும் செலவழிப்பார்கள் என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.
வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருவிழாவுக்குத் தயாரிப்பாக நவநாள் பக்தி முயற்சிகள் நடைபெற்றுவரும் இந்நாள்களில், இந்தியச் சிறார் சிறப்பாகச் செபித்து வருவதாகவும், வருகிற சனிக்கிழமையன்று இன்னும் சிறப்பாகச் செபிப்பார்கள் எனவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews

7. காப்டிக் முதுபெரும் தந்தை அலுவலகம் : கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் இராணுவத் தலையீட்டுக்கு யாராலும் நியாயம் சொல்ல முடியாது

செப்.,03,2013. கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கிறோம் என்று வீண்நியாயம் சொல்லிக்கொண்டு மத்திய கிழக்குப் பகுதியில் நடத்தப்படும் இராணுவத் தலையீட்டுக்கு யாராலும் நியாயம் சொல்ல முடியாது என்று அலெக்சாந்திரியாவின் காப்டிக் முதுபெரும் தந்தையின் அலுவலகம் கூறியது.
எகிப்து அனுபவித்த துன்பமான சூழலிலும், வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்துலக சமுதாயத்தின் உதவியைக் கேட்பது புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அவ்வலுவலகத்தின் செயலர் அருள்பணியாளர் Hani Bakhoum கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதுபோல, ஆயுதத் தலையீடு ஒருபொழுதும் உண்மையான அமைதிக்குப் பாதையைத் திறந்துவிடாது, மாறாக, சண்டை சண்டையையும், இரத்தம் இரத்தத்தையும் கொண்டுவரும் எனவும் அருள்பணியாளர் Bakhoum மேலும் கூறினார்.
இதற்கிடையே, சிரியா மீது பெரிய அளவில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Fides

8. தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கு ஐ.நா. அழைப்பு

செப்.,03,2013. உலகில் போதுமான நலவாழ்வு வசதியின்றி இருக்கும் 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான நலவாழ்வு வசதிகள் கிடைப்பதற்கு உதவும் எண்ணத்தில் தண்ணீர், சரியான முறையில் பயன்படுத்தப்படுமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
Stockholmல் இத்திங்களன்று தொடங்கியுள்ள உலகத் தண்ணீர் வாரக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய ஐ.நா. உதவி பொதுச்செயலர் Jan Eliasson, தண்ணீரைப் பயன்படுத்துவதில் புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மனிதக் குடியிருப்புகள் அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் 80 விழுக்காடு மாசடைந்து பெருங்கடல்களிலும் ஏரிகளிலும், ஆறுகளிலும் கலக்கின்றன என்றும்  Eliasson குறை கூறினார்.
தண்ணீரைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்றும் Eliasson வலியுறுத்தினார்.

ஆதாரம் : UN

9. வறுமை, மூளைத்திறனைப் பாதிக்கும், புதிய ஆய்வு

செப்.,03,2013. ஒருவரின் வறுமை அவரின் மூளைத்திறனைப் பாதிப்பதாக இந்தியாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவினர், தங்களின் ஆய்வின் ஒரு பகுதியாக இந்தியாவில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் இதழில் தங்களின் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
விவசாயிகளின் வருமானங்களுக்கு ஏற்ப அவர்களின் மூளைச் செயற்பாடுகள் மாறுபட்டிருந்ததை உறுதிசெய்துள்ளதாக பிரிட்டனின் Warwick பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்தி மணி கூறினார்.
கையில் பணம் இருந்த காலப்பகுதியில் நுண்ணறிவுத் திறன் பரிசோதனைகளில் விவசாயிகள் திறமைசாலிகளாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...