1. திருத்தந்தை பிரான்சிஸ் : நல்ல கிறிஸ்தவர்கள், தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறைகூறாமல் ஏற்க வேண்டும்
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண நிகழ்வுகள்
3. திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதப் பாதையில் விடாஉறுதியுடன் நடங்கள்
4. கர்தினால் கிரேசியஸ் : சமய சுதந்திரமின்றி இந்தியா வளர முடியாது
5. மியான்மாரில் அமைதிக்கும் அன்புக்கும் யாங்கூன் பேராயர் வேண்டுகோள்
6. டான்சானியா : ஆலயம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூட்டம் நடத்துவதற்குத் திட்டம்
7. மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஒப்புரவுக்கு அழைப்பு
8. நேபாளத்தில் கத்தோலிக்கரும் இந்துக்களும் அன்னையர் தினத்தை ஒன்றுசேர்ந்து சிறப்பிக்கின்றனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நல்ல கிறிஸ்தவர்கள், தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறைகூறாமல் ஏற்க வேண்டும்
மே,07,2013. தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டே இருக்கும் கிறிஸ்தவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாய் இருப்பதிலிருந்து தவறுகின்றனர், அத்தகைய கிறிஸ்தவர்கள் குறைகூறும் கிறிஸ்தவர்களாய் மாறிவிடுகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நல்ல கிறிஸ்தவர்கள் தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறை சொல்லாமல் அமைதியாக ஏற்க வேண்டும், இவற்றைப் பொறுமையோடு ஏற்று கிறிஸ்துவின் மகிழ்வுக்குச் சாட்சி பகர வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இச்செவ்வாய்க்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இந்நாளின் முதல் வாசகத்தை (தி.ப.16,22-34) மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்திக்குச்
சாட்சி சொல்வதற்காகத் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பவுல் மற்றும்
சீலா போன்று கிறிஸ்தவர்கள் நிறைவான மகிழ்வோடு இருக்க வேண்டும், ஒருபோதும் வருத்தமாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பவுலும் சீலாவும் இயேசுவின் துன்பங்களின் பாதையைப் பின்சென்றனர், அதனால் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று கூறிய திருத்தந்தை, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இயேசு நமக்குப் போதிக்கிறார், பொறுமையாய் இருப்பதென்பது வருத்தமாக இருப்பதல்ல, ஆனால் நமது இன்னல்களையும் கஷ்டங்களையும் நமது தோளில் ஏற்பதாகும், பல மறைசாட்சிகள் மகிழ்வோடு இருந்தனர் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண நிகழ்வுகள்
மே,07,2013.
வருகிற ஜூலை 22 முதல் 29 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
மேற்கொள்ளவிருக்கும் பிரேசில் நாட்டுக்கானத் திருப்பயண நிகழ்வுகள் குறித்த
விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் 28வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டுக்கு எட்டு நாள்கள் கொண்ட திருப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற ஜூலை 22ம் தேதி உரோம் நேரம் காலை 8.45 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ்,
ரியோ டி ஜெனிரோவை மாலை 4 மணிக்குச் சென்றடைவார். மாலை 5 மணிக்கு வரவேற்பு
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் பிரேசில் அரசுத்தலைவரை மரியாதை
நிமித்தம் சந்திப்பார்.
24ம் தேதி புதன்கிழமையிலிருந்து மீண்டும் திருப்பயண நிகழ்வுகள் தொடங்கும். அன்று Aparecida அமலமரி அன்னைமரியா திருத்தலம் சென்று திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை.
25ம் தேதி மாலை 6 மணியளவில் இளையோர் தின நிகழ்வுகள் தொடங்கும்.
26ம் தேதி சில இளையோர், திருத்தந்தையிடம் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவர். அன்று இளையோருடன் மதிய உணவு அருந்துதல், மாலையில் அவர்களுடன் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் கலந்து கொள்ளல் உட்பட சில நிகழ்வுகள் இந்நாளின் திருப்பயணத் திட்டத்தில் உள்ளன.
27ம் தேதி ஆயர்களுடன் திருப்பலி நிகழ்த்துதல், தொழிலதிபர்களைச் சந்தித்தல், இளையோருடன் திருவிழிப்புச் செப வழிபாட்டில் பங்கு பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்வுகள் திருப்பயணத் திட்டத்தில் உள்ளன.
28ம் தேதி காலை 10 மணியளவில், 28வது அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தின நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ், அன்று மாலை உரோமைக்குப் புறப்படுவார். 29ம் தேதி திங்கள் காலை 11.30 மணியளவில் அவர் உரோம் வந்துசேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதப் பாதையில் விடாஉறுதியுடன் நடங்கள்
மே,07,2013. “அரைகுறை கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள், புனிதப் பாதையில் விடாஉறுதியுடன் நடங்கள்” என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் Piemonte மாநில ஆயர்களை அட் லிமினாவையொட்டி சந்தித்த திருத்தந்தை, இன்னல்களில் இருக்கும் குடும்பங்களுக்கு இறைவனின் கருணையைக் காட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
வயதான மற்றும் நோயாளிக் குருக்களின் நிலைமை, இறையழைத்தல் பற்றாக்குறை, இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை குறித்தும் Piemonte ஆயர்களிடம் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கர்தினால் கிரேசியஸ் : சமய சுதந்திரமின்றி இந்தியா வளர முடியாது
மே,07,2013.
இந்திய அரசியல் அமைப்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதி
வழங்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசு நிறுவனங்களும்
சட்ட அமைப்பாளர்களும் நடைமுறைச் செயல்திட்டங்களை எடுக்குமாறு இந்திய ஆயர்
பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக அளவில் சமய சுதந்திரம் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்யும் USCIRF என்ற
அமெரிக்க் ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவும்
இடம்பெற்றுள்ளது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த
கர்தினால் கிரேசியஸ், சமய சுதந்திரமின்றி இந்தியா வளர முடியாது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சமய சுதந்திரம் மீறப்படுவது குறித்து தான் வருத்தம் அடைவதாகவும், மக்களின் உரிமைகள் எவ்விதத்திலும் மீறப்படாமல் இருப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கூறிய கர்தினால் கிரேசியஸ், இதன் மூலம் சிறுபான்மையினர் தங்களது மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
உலகில் சமய சுதந்திரம் மீறப்படுவது அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜான், கியூபா, இந்தோனேசியா, கஜகஸ்தான், லாவோஸ், இரஷ்யா ஆகிய நாடுகளும் USCIRF நிறுவன அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆதாரம் : AsiaNews
5. மியான்மாரில் அமைதிக்கும் அன்புக்கும் யாங்கூன் பேராயர் வேண்டுகோள்
மே,07,2013.
மியான்மாரில் முஸ்லீம்களுக்கும் புத்தமதத்தினருக்கும் இடையே இடம்பெறும்
வன்முறை நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது என்று சொல்லி, நாட்டில் அமைதியும் அன்பும் கடைப்பிடிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கத்தோலிக்கரையும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மாரின் வடபகுதியை இவ்வன்முறை முதன்முறையாகப் பாதித்துள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கவலை தெரிவித்தார் பேராயர் Charles Bo.
அன்புச்
சமூகமாக வாழ வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில்
விடுத்த அழைப்பு மியான்மார் மக்களுக்கும் பொருந்தும் என்றுரைத்த பேராயர் Charles Bo, அந்நாட்டில் இடம்பெறும் இனவாத வன்முறைக்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
இவ்வன்முறைகளில் 37 வழிபாட்டுத்தலங்களும் 1,227 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வழிபாட்டுத்தலங்களில் பெரும்பாலானவை மசூதிகள்.
இதற்கிடையே,
வட மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் முஸ்லீம்களின் வியாபாரத்தைச்
சேதப்படுத்திய வன்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இரு
புத்தமதத்தினரைக் கைது செய்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள்.
ஆதாரம் : AsiaNews
6. டான்சானியா : ஆலயம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூட்டம் நடத்துவதற்குத் திட்டம்
மே,07,2013.
கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய டான்சானியாவில் இஞ்ஞாயிறன்று கத்தோலிக்க ஆலயம்
ஒன்று குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்டுள்ள
பதட்டநிலைகளைக் களையும் நோக்கத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத்
தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர்.
டான்சானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள அருஷா (Arusha) என்ற நகரத்தில், இஞ்ஞாயிறன்று
புனித வளன் புதிய ஆலயத் திறப்பு விழாவுக்கெனத் திருப்பலி தொடங்கவிருந்த
நேரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பெண் இறந்துள்ளார் மற்றும் 60
பேர் காயமடைந்துள்ளனர்.
இதுமாதிரியான வன்முறை டான்சானியா நாட்டில் இதுவரை இடம்பெற்றதில்லை என்றுரைத்த அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனச் செயலர் Joachim Wangabo, இவ்வன்முறை, முஸ்லீம் பயங்கரவாதிகளோடு தொடர்புடையது என்று அரசு கூறுவதாகவும் தெரிவித்தார்.
டான்சானியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Francisco Montecillo Padilla, அருஷா மறைமாவட்ட ஆயர் Josaphat Lebulu, இன்னும் பல அருள்பணியாளர்களுடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தவிருந்த சமயத்தில் திடீரெனக் குண்டு வெடித்துள்ளது.
இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் காவல்துறை கூறியுள்ளது.
அருஷா நகரம் கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் பகுதியான கிளிமாஞ்ஜாரோ மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : ICN, CNA
7. மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஒப்புரவுக்கு அழைப்பு
மே,07,2013. மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் Barisan கூட்டணி, 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளவேளை, அந்நாட்டின்
அரசியல் ஆதாயங்களுக்காக மத விவகாரங்களை அரசு பயன்படுத்தாது என்ற தனது
நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அருள்பணி லாரன்ஸ் ஆன்ட்ரூ.
சீர்திருத்தம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, நீதி, ஒளிவுமறைவின்மை போன்ற பாதையில் அரசு செயல்படத் தொடங்க வேண்டும், அப்போதுதான் நாட்டில் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் நிலைநிறுத்த முடியும் என்று அக்குரு Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதற்கிடையே, மலேசியாவின் இன மற்றும மதவாதப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய ஒப்புரவின் புதிய பாதையில் அனைவரும் நடப்பதே நாட்டுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள Najib Razak .
ஆதாரம் : Fides
8. நேபாளத்தில் கத்தோலிக்கரும் இந்துக்களும் அன்னையர் தினத்தை ஒன்றுசேர்ந்து சிறப்பிக்கின்றனர்
மே,07,2013.
நேபாளத்தில் கத்தோலிக்கரும் இந்துக்களும் ஒரே நாளில் அன்னையர் தினத்தைக்
கடைப்பிடிப்பது அவ்விரு மதத்தவருக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும்
நிலவுவதற்கு சான்று சொல்வதாய் இருக்கின்றது என ஆசியச் செய்தி நிறுவனம்
கூறியது.
மே 09, வருகிற
வியாழக்கிழமை சிறப்பிக்கப்படும் இவ்வன்னையர் தினத்தைமுன்னிட்டு
கத்தோலிக்கச் சிறார் தங்களது பெற்றோருடன் ஓர் ஆன்மீகப் பயணத்தைத்
தொடங்கியுள்ளனர் என்று அருள்பணி ராபின் ராய் கூறினார்.
இதே நாளில் இந்துக்களும் அன்னையர் தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளனர்.
நேபாளத்தில் கத்தோலிக்கருக்கும் இந்துக்களுக்கும் இடையே அடிக்கடி திருமணங்கள் இடம்பெறுவதாகவும், இந்நிகழ்வுகளில் இவ்விரு மதத்தவருமே கலந்து கொள்வதாகவும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
ஆதாரம் : AsiaNews
No comments:
Post a Comment