Saturday, 1 February 2014

செய்திகள் - 29.01.14

 செய்திகள் - 29.01.14
-----------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அறிவு சார்ந்த பணி, திருஅவையின் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணி

2. கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே சிரியாவில் பணியாற்றும் அருள் பணியாளரின் மிக முக்கியப் பணியாக உள்ளது - கர்தினால் Leornardo Sandri

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் - கர்தினால் Sarah

4. Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமெரிக்க ஆயர்கள் செல்கின்றனர்

5. இஸ்ரேல் அரசு அமைக்கவிருக்கும் தடுப்புச்சுவர் முயற்சி நீதிக்குப் புறம்பானது - பன்னாட்டு ஆயர்கள் குழு

6. மனச் சுதந்திரத்துடன் மேற்கொள்ளப்படும் உரையாடல் மட்டுமே சிரியாவில் நிரந்த அமைதி தரும் - ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர்

7. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் வழிகளைத் தேடவேண்டும் - கிறிஸ்தவர்கள்

8. 107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : அறிவு சார்ந்த பணி, திருஅவையின் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணி

சன.29,2014. நம்பிக்கை என்பதை, அறிவுக்கண்கள் கொண்டு மட்டும் பார்ப்பது பொருத்தமல்ல, அதனை, மனக்கண்களாலும் காணவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் பெயரால் இயங்கும் அனைத்து கல்வி அமைப்புக்களும், சனவரி 28, இச்செவ்வாயன்று மாலை வத்திக்கானில் நடத்திய ஒரு  சிறப்புக் கூட்டத்திற்கு செய்தி அனுப்பியத் திருத்தந்தை அவர்கள், இவ்வாறு கூறினார்.
சனவரி 28ம் தேதி கொண்டாடப்பட்ட, இறையியல் மேதையான அக்குவினோ நகர் புனித தோமா அவர்களின் திருநாளையொட்டி, இக்கூட்டம் நடைபெறுவது குறித்து தன் மகிழ்வை தெரிவித்தத் திருத்தந்தை அவர்கள், புனித தோமா போன்று, இதயத்தால் உணரப்படும் நம்பிக்கையே நம்மைச் சரியாக வழிநடத்தும் என்றும் கூறினார்.
உண்மை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என்று, நாம் வாழும் காலத்தில், உருவாகிவரும் குறுகிய நிலையைத் தவிர்த்து, முழுமையான உண்மையைப் பின்பற்ற நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டார்.
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவரும், திருத்தந்தையின் பெயரால் இயங்கும் அனைத்து கல்வி அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளரும் ஆன கர்தினால் Gianfranco Ravasi அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் வழியாக, அறிவு சார்ந்த பணி, திருஅவையின் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணி என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இறையியல் மேதையான புனித தோமா அவர்களின் பெயரால், Alessandro Clemenzia, Maria Silvia Vaccarezza என்ற இரு பேராசிரியர்களுக்கு விருது வழங்குவதாகவும் திருத்தந்தை அவர்கள் தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே சிரியாவில் பணியாற்றும் அருள் பணியாளரின் மிக முக்கியப் பணியாக உள்ளது - கர்தினால் Leornardo Sandri

சன.29,2014. சிறிதும் தளராத உள்ளத்துடன், எதிர்நோக்கையும், நம்பிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகில் பரப்பிவருகிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Leornardo Sandri அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், கத்தோலிக்கத் திருஅவை மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்துவர்களுக்கு ஆற்றும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே அங்கு பணியாற்றும் அருள் பணியாளர்கள், ஆயர்கள், மற்றும் துறவியரின் மிக முக்கியப் பணியாக உள்ளது என்று கர்தினால் Sandri அவர்கள் கூறினார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், முதுபெரும் தந்தை Athenagoras அவர்களைச் சந்தித்த 50ம் ஆண்டு நிறைவுக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும் தந்தை Bartholomew அவர்களைச் சந்திக்கவிருப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்பினை வளர்க்கும் மற்றொரு மாபெரும் முயற்சியாக அமையும் என்றும் கர்தினால் Sandri அவர்கள் தன் பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் - கர்தினால் Sarah

சன.29,2014. குறிப்பிட்டத் தேதி ஒன்று வெளியிடப்படவில்லை எனினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருகை தருவார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, Haiyan என்ற பெயர் தாங்கிய கடுமையான சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியை, Cor Unum எனப்படும் திருத்தந்தையின் பிறரன்புப் பணி அவையின் தலைவர் கர்தினால் Robert Sarah அவர்கள், கடந்த சனிக்கிழமை முதல், இப்புதன் வரை பார்வையிடச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்செவ்வாயன்று திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Sarah அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களை எப்போதும் தன் மனதில் தாங்கி வருகிறார் என்றும், விரைவில் அவர்களைச் சந்திக்க வருவார் என்றும் தெரிவித்ததும், கூடியிருந்தோர் மிகுந்த மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர்.
Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Cor Unum அமைப்பின் வழியாக, திருத்தந்தை அவர்கள், 1,50,000 டாலர்கள், அதாவது, ஒரு கோடி ரூபாய் உடனடியாக அளித்தார் என்பதும், தற்போது, அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு துயர் துடைப்புப் பணிகளில் Cor Unum அமைப்பு ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : Zenit / UCAN

4. Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமெரிக்க ஆயர்கள் செல்கின்றனர்

சன.29,2014. வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, Haiyan சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமெரிக்க ஆயர்கள் செல்கின்றனர் என்று அந்நாட்டு ஆயர் அவை அறிவித்துள்ளது.
அமேரிக்கா ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளும், CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர்துடைப்பு பணிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து, அப்பகுதியின் தேவைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள இப்பயணத்தை மேற்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதிநிதிகள் குழுவுடன், அமெரிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Kurtz அவர்கள் செல்வார் என்றும், அவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களையும், அங்கு பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களையும், பிலிப்பின்ஸ் ஆயர்கள் பலரையும் சந்திப்பார் என்றும் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ஆயர்கள் பேரவையும், CRS அமைப்பும் இணைந்து மேற்கொண்ட நிதி திரட்டும் முயற்சியில் இதுவரை 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஆயர்கள் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இஸ்ரேல் அரசு அமைக்கவிருக்கும் தடுப்புச்சுவர் முயற்சி நீதிக்குப் புறம்பானது - பன்னாட்டு ஆயர்கள் குழு

சன.29,2014. இயேசுவின் பிறப்பிடமான பெத்லகேமுக்கு அருகில் உள்ள Cremisan பள்ளத்தாக்கில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமென்று பன்னாட்டு ஆயர்களின் குழுவொன்று விண்ணப்பித்துள்ளது.
Cremisan பள்ளத்தாக்கில் வாழும் 58 கிறிஸ்தவர்களின் இல்லங்களை இடித்துவிட்டு, அவ்வழியே இஸ்ரேல் அரசு அமைக்கவிருக்கும் தடுப்புச்சுவர் குறித்து, இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தில் இப்புதனன்று வழக்கு ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் அரசின் இம்முயற்சி நீதிக்குப் புறம்பானது என்ற கருத்துடன், பன்னாட்டு ஆயர்கள் குழு, இச்செவ்வாயன்று இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, தென் ஆப்ரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த விண்ணப்பத்தில், இஸ்ரேல் அரசு தன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசின் இம்முயற்சியால், பெத்லகேம் பகுதி, எருசலேமிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு, மூச்சடைத்துப் போகும் என்றும், இத்தகைய அநீத முயற்சிகளால் அப்பகுதியில் அமைதி திரும்புவது அரிதாகிப் போகும் என்றும், ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் அரசு, தடுப்புச் சுவர் எழுப்புவது தன் பாதுகாப்பிற்கென சொன்னாலும், அந்த முயற்சியால் அப்பாவி மக்களின் வாழ்வு பெருமளவு பாதிக்கப்படுவது அநீதியானது என்றும், நீதி தேடும் அம்மக்களுடன் தாங்களும் செபத்தால் இணைந்திருப்பதாகவும் ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Zenit

6. மனச் சுதந்திரத்துடன் மேற்கொள்ளப்படும் உரையாடல் மட்டுமே சிரியாவில் நிரந்த அமைதி தரும் - ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர்

சன.29,2014. சகிப்புத் தன்மையற்ற மனநிலையைக் களைந்து, மனச் சுதந்திரத்துடன், உடன்பிறந்தோர் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் உரையாடல் வழியாக மட்டுமே சிரியாவில் நிரந்த அமைதி திரும்பும் என்று இரு பெரும் கிறிஸ்தவத் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
மாஸ்கோ இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, Kirill அவர்களும், அந்தியோக்கு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, பத்தாம் Yohanna அவர்களும், இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
சிரியாவில் அமைதியை உருவாக்கும் ஒரு முயற்சியாக, கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாம் ஜெனீவா பேச்சு வார்த்தைகள், அரசியல் அடிப்படைவாதங்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்று இரு தலைவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
சிரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு ஆயர்களையும், டிசம்பரில் கடத்தப்பட்டுள்ள பெண் துறவிகளையும் விடுவிக்குமாறும் இந்த விண்ணப்பத்தில் முதுபெரும் தந்தையர் கேட்டுள்ளனர்.
சிரியாவில் உள்ள பழமை வாய்ந்த இடங்களைத் தாக்குவதை அனைவரும் உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும், இத்தகையத் தாக்குதல்களால், வருங்காலத்தினர் தங்கள் பாரம்பரியக் கருவூலங்களை இழக்கின்றனர் என்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides

7. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் வழிகளைத் தேடவேண்டும் - கிறிஸ்தவர்கள்

சன.29,2014. பாகிஸ்தானில் கிறிஸ்தவ சாட்சியம் வெளிப்பட வேண்டுமெனில், முதலில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் வழிகளைத் தேடவேண்டும் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென வேண்டுதல்களை எழுப்பும் வாரம் அண்மையில் நடைபெற்றதையொட்டி, பாகிஸ்தான், லாகூரில் நடைபெற்ற ஓர் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் இக்கருத்து வெளியானது.
வேறுபாடுகள் இருப்பது அழகுதான் என்றாலும், அந்த வேறுபாடுகள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் வழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அருள் பணியாளர் Moris Jalal அவர்கள் கூறினார்.
வாழ்வாலும், வார்த்தைகளாலும் இறை வார்த்தையை அறிவிக்கும் கடமையில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இணைந்து உழைக்க வேண்டும் என்பதை ஆங்கிலிக்கன் சபையின் முன்னாள் ஆயர் Manu Romal Shah அவர்கள் வலியுறுத்தினார்.
ஆதாரம் : Fides

8. 107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்

சன.29,2014. இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில், 107 ஆண்டுகளாக, எவ்வித குற்றங்களும் நடக்காத, குற்ற வழக்குகள் பதிவாகாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, பூல்ஜர் கிராமத்திலுள்ள காவல் நிலையத்திற்கு, கடந்த 107 ஆண்டுகளாக, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லையென்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூல்ஜர் கிராமத்தில் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வாழ்வதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை; பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்; யாரும் பலாத்காரம் செய்யப்பட்டது கிடையாது; திருடர்களின் பயம் அறியாததால், திருட்டு என்பதையே இக்கிராம மக்களுக்கு தெரியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.
தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள், கிராம அவைக்கு முன் வைக்கப்படுகிறது என்றும், அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் கிராம அவையின் முடிவை எதிர்த்து, இதுவரை காவல் நிலையம் சென்று புகார் அளித்தது கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோர்பா மாவட்ட காவல் துறை அதிகாரி பேசுகையில், பூல்ஜர் கிராம மக்கள், இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது; கோர்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அனைத்து கிராமங்களிலும், குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன; ஆனால், பூல்ஜர் கிராமமக்கள், விதிவிலக்காக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்காக, சத்தீஸ்கர் மாநில அரசு இக்கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து, விருது வழங்கியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...