Monday, 17 February 2014

செய்திகள் - 17.02.14

செய்திகள் - 17.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : துன்பங்களையும் தாங்கி உறுதியுடன் நிற்பதே பொறுமை

2. திருத்தந்தை பிரான்சிஸ் - புறணி பேசுவது, மனிதரைக் கொல்லும் வலிமையுடையது

3. திருத்தந்தை : அன்பிருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனப்போக்கும் இருக்கிறதா என சிந்திப்போம்

4. திருத்தந்தை : 'துன்பங்களை அனுபவிக்கும் வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள்'

5. வெனிசுவேலாவில் இடம்பெற்ற திருட்டு முயற்சியில், வயதான இரு சலேசிய துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்

6. இலங்கையில் போர்க்குற்ற அனைத்துலக விசாரணை வேண்டும்: நவி பிள்ளை

7. இலங்கையில் புற்றுநோயால் கடந்த ஆண்டில் 14,000 பேர் உயிரிழப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : துன்பங்களையும் தாங்கி உறுதியுடன் நிற்பதே பொறுமை

பிப்.17,2014. விசுவாசத்தில் உறுதியாக நிற்கும் இறைமக்கள், தங்கள் தினசரி வாழ்வின் சோதனைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வதே அவர்களை முன்னோக்கி நடந்துசெல்ல உதவுகின்றது என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, பொறுமை என்பது ஒரு பிரச்சனையிலிருந்து ஒதுங்கியிருப்பதல்ல, மாறாக, துன்பங்களையும் தாங்கி உறுதியுடன் நிற்பதைக் குறிக்கின்றது என்றார்.
குழந்தைகள்போல் பொறுமையற்றவர்களாகவோ, இயேசுவின் காலத்து பரிசேயர்கள்போல் வானிலிருந்து உடனடி அடயாளங்கள் வேண்டுபவர்களாகவோ இல்லாமல், நம்மோடு பொறுமையுடன் நடைபோடும் இறைவனைப்போல் நாம் செயல்படவேண்டும் எனவும் தன் மறையுரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் எண்ணற்ற சித்ரவதைகளை அனுபவித்தாலும், அவர்கள் இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கைவைத்து பொறுமையுடன் செயல்பட்டனர் என்ற கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் எத்தனையோ குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளான குழந்தைகளுடன் இறைநம்பிக்கையோடு பொறுமையுடன் செயல்பட்டுவருவதை குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் - புறணி பேசுவது, மனிதரைக் கொல்லும் வலிமையுடையது

பிப்.17,2014. சட்டங்களைக் கடைபிடிக்கிறோமா என்பதைமட்டும் கடவுள் பார்ப்பதில்லை, மாறாக, விசுவாசிகளின் இதயத்தையும் அவர் உற்று நோக்குகிறார் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யூதச் சட்டங்களை இயேசு எவ்விதம் அணுகினார் என்பதுபற்றி தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை அவர்கள், "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
மோசே வழியாக இறைவன் வழங்கிய கட்டளைகளை முழுமையாக்கவே கிறிஸ்து வந்தார் என எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 'தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்" என்று இயேசு கூறியதைச் சுட்டிக்காட்டி, வார்த்தைகளும் மனிதரைக் கொல்லும் வலிமையுடையன என்று கூறினார்.
மற்றவரைக் குறித்து புறணி பேசுவதையும், தவறான கருத்துக்களைப் பரப்புவதையும் ஒவ்வொருவரும் நிறுத்தவேண்டும், ஏனெனில், இத்தகைய நஞ்சு கலந்த வார்த்தைகள், மனிதரைக் கொல்லும் சக்திபடைத்தவை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
தன் சகோதர, சகோதரிகளோடு சமாதானமாகப் போக முடியாதவர் இறைவனோடு கொண்டிருக்கும் உறவிலும் உண்மையுள்ளவராக இருக்கமுடியாது என்பதையும் திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : அன்பிருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனப்போக்கும் இருக்கிறதா என சிந்திப்போம்

பிப்.17,2014. பசியுற்றிருந்த தன் சீடர்கள், தானியக் கதிர்களைக் கைகளில் கசக்கி அதனை உண்டது, யூதர்களின் ஓய்வுநாள் சட்டங்களுக்கு எதிரானது என சிலர் குற்றஞ்சாட்டியதற்கு இயேசு வழங்கிய பதிலுரை குறித்து இஞ்ஞாயிறு மறையுரையில் விளக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமின் ஆயர் என்ற முறையில் இன்ஃபெர்னெத்தோ என்ற பங்குதளத்தைச் சந்தித்து நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெளியிலிருந்து உட்செல்பவை அல்ல, மாறாக இதயத்திலிருந்து வெளிப்படுபவையே அசுத்தமானவைகளாக உள்ளன என இயேசு கூறியதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாமும் நம் இதயத்திற்குள் என்ன சேர்த்துவைத்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்போம், ஏனெனில் நம் இதயத்திற்குள் மறைந்திருப்பது நமக்கு மட்டுமே தெரியும் என்றார்.
நம் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கான அன்பு நம் இதயத்தில் இருக்கலாம், ஆனால் நம் பகைவர்களையும் மன்னிக்கும் இயல்பும், அவர்களுக்காகச் செபிக்கும் மனப்போக்கும் நம் இதயத்திற்குள் இருக்கின்றதா என்பதைச் சிந்திக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : 'துன்பங்களை அனுபவிக்கும் வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள்'

பிப்.17,2014. 'நோயுற்றிருப்போர் அனைவரும், குறிப்பாக அதிக துன்பங்களை அனுபவிக்கும் வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள். இயேசு கிறிஸ்து உங்கள் அருகில் உள்ளார்' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த வாரம் லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினத்தன்றும், நோயுற்றோருக்கான சிறப்பான செபங்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், இஞ்ஞாயிறு உரோமை பங்குதள சந்திப்பின்போதும் மாற்றுத்திறனாளிகளையும், நோயுற்றோரையும் தனியாகச் சந்தித்து உரைவழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. வெனிசுவேலாவில் இடம்பெற்ற திருட்டு முயற்சியில், வயதான இரு சலேசிய துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்

பிப்.17,2014. வெனிசுவேலாவின் Valencia நகர், தொன் போஸ்கோ கல்லூரியில்  கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற திருட்டு முயற்சியில், இரு சலேசிய துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
80 வயதான அருள் பணியாளர் Jesus Plaza அவர்களும், 84 வயதான, Luis Sanchez அவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 64 வயதான அருள் சகோதரர், David Marin என்பவர், கத்திக்குத்துக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இவ்விரு சலேசிய சபைத் துறவிகளையும் கொலை செய்துள்ளவர்கள், 13 மற்றும், 15 வயதுடைய இரு சிறார்கள் என்றும், இத்துறவிகளின் அறைகளிலிருந்த கணனிகள், பணம், கைப்பேசி மற்றும் திருப்பலிக்கென பயன்படுத்தப்படும் பொருள்களையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : CNA

6. இலங்கையில் போர்க்குற்ற அனைத்துலக விசாரணை வேண்டும்: நவி பிள்ளை

பிப்.17,2014. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று ஜெனீவாவில் மார்ச் மாதம் நடக்கவுள்ள மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் பரிந்துரைக்கவுள்ளார் என இலங்கையில் சண்டே டைம்ஸ்பத்திரிகை எழுதியுள்ளது.
இலங்கை அரசு பதில்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக, நவநீதம் பிள்ளை, ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் நகல் ஒன்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அப்படி வழங்கப்பட்ட அறிக்கையை தாங்கள் காண நேர்ந்ததாகவும் சண்டே டைம்ஸ் கூறுகிறது.
இலங்கையில் புதிதாக, சாட்சிகள் பாதுகாப்பு சட்டமும் வழிமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளை அவர்கள், பொறுப்பேற்றல் தொடர்பான உள்நாட்டளவிலான வழிமுறைகள் இதுவரை பலன் அளிக்காதது உண்மையையும், நீதியையும் நிலைநாட்டுவதில் இலங்கையிடம் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதையே காட்டுவதாகவும் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றது என்றும் அதற்கான தமது பதிலை இலங்கை அரசு வழங்கியுள்ளது என்றும் ஜெனீவாவிலுள்ள ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் :  BBC

7. இலங்கையில் புற்றுநோயால் கடந்த ஆண்டில் 14,000 பேர் உயிரிழப்பு

பிப்.17,2014. இலங்கையில் புற்றுநோய்கள் காரணமாக 14,000 பேர் 2013ம் ஆண்டில் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2,500 பேர் வாய்ப்புற்று நோயால் மரணமடைந்திருப்பதாகவும் இலங்கை நல அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் வாய்ப் புற்றுநோய், தொண்டைக் குழி புற்றுநோய், மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்ற புற்றுநோய்களாலேயே மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இவற்றில் மூன்று வகையான புற்றுநோய்களுக்கு வெற்றிலை மெல்லுதல், மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் :  நெருப்பு
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...