செய்திகள் - 15.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், சைப்ரஸ் அரசுத்தலைவர் சந்திப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆப்ரிக்காவில் அமைதி நிலவச் செபிப்போம்
3. பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பேராயர் நிக்கோல்ஸ் கண்டனம்
4. ”ஏழைகளின் திருஅவையாக உண்மையிலேயேச் செயல்பட” : இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தின் செய்தி
5. “கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு” நூல் வெளியீடு
6. தென் சூடானில் ஒட்டுமொத்த சமுதாயமும் பசியினால் வாடுகின்றது, தலத்திருஅவை
7. சீனாவில் கடலுக்கடியில் மிக நீளமான சுரங்கப்பாதை
8. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 2 இலட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், சைப்ரஸ் அரசுத்தலைவர் சந்திப்பு
பிப்.15,2014. சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து இருபது நிமிடங்கள் தனியே பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் சைப்ரஸ் அரசுத்தலைவர் Nicos Anastasiades.
திருப்பீடத்துக்கும், சைப்ரஸ் குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் சமயத்தின் பங்கு, சமய சுதந்திர உரிமை பாதுகாக்கப்படல் உட்பட பல்வேறு தலைப்புகள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.
சைப்ரஸ் தீவின் தற்போதைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பற்றிய பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அண்மை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலையற்றதன்மை, அப்பகுதியில்
கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவையும் இச்சந்திப்புக்களில்
இடம்பெற்றன என திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் தன்னோடு வந்திருந்த
12 பிரதிநிதிகளையும் திருத்தந்தையிடம் அறிமுகப்படுத்தினார் சைப்ரஸ்
அரசுத்தலைவர் Anastasiades. மேலும்,
சைப்ரசின் பாதுகாவலராகிய புனித அந்திரேயாவின் திருவுருவத்தையும்
திருத்தந்தையிடம் கொடுத்ததோடு சைப்ரசுக்கும் இப்புனிதருக்கும் இடையேயான
தொடர்பையும் விளக்கினார் சைப்ரஸ் அரசுத்தலைவர். புனித பேதுருவின் சகோதரரான
புனித அந்திரேயா சைப்ரசில் அடைக்கலம் தேடியிருந்தார் என்பது வரலாறு.
கிழக்கு மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவு, துருக்கிக்குத் தெற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆப்ரிக்காவில் அமைதி நிலவச் செபிப்போம்
பிப்.15,2014. ஆப்ரிக்காவில், குறிப்பாக மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும், தென்சூடானிலும் அமைதி நிலவச் செபிப்போம்; உலகின் அமைதிக்காகச் செபிப்போம் என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற 22ம் தேதி புதிய கர்தினால்களை உருவாக்கும் Consistory என்ற கர்தினால்கள் அவை நிகழ்வை நடத்தவிருப்பதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகத்தைக் கொண்ட தபால்தலை ஒன்றை வெளியிடவுள்ளது இத்தாலிய அஞ்சல் துறை.
இத்தாலிய அஞ்சல் துறை வெளியிடவிருக்கும் 70 சென்ட் தபால்தலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினாலின் தலையில் சிவப்புத் தொப்பியை வைப்பதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தபால்தலை வெளியீட்டு ஆவணத்தில், திருப்பீடச்
செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களின் ஒரு கட்டுரையும்
இடம்பெற்றிருக்கும் எனவும் இத்தாலிய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இத்தாலிய
அஞ்சல் துறை ஏற்கனவே ஒருதடவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகம்
கொண்ட தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி/ANSA
3. பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பேராயர் நிக்கோல்ஸ் கண்டனம்
பிப்.15,2014. பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகள், பசிபட்டினி
மற்றும் ஆதரவற்ற நிலைக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
என்பதால் அரசின் இந்நடவடிக்கைகள் வெட்கத்துக்குரியன என்று குறை
கூறியுள்ளார் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
Telegraph தினத்தாளுக்கு அளித்த பேட்டியில், பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராயர் நிக்கோல்ஸ் அவர்கள், பிரிட்டனில் செலவினங்களைக் குறைக்க வேண்டுமென்ற தேவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் , அரசின் சீர்திருத்தங்கள் அடிப்படை பாதுகாப்பு அமைப்பையே அழிப்பதாக உள்ளன எனக் கூறியுள்ளார்.
பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளுக்கு, அரசின் இச்சிக்கன நடவடிக்கைகள் அவமானமாக உள்ளன என்றும் தெரிவித்த பேராயர் நிக்கோல்ஸ் அவர்கள், பொதுவான செலவினங்களில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
இம்மாதம் 22ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் Consistoryயில் பேராயர் நிக்கோல்ஸ் அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : ICN
4. ”ஏழைகளின் திருஅவையாக உண்மையிலேயேச் செயல்பட” : இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தின் செய்தி
பிப்.15,2014. ஊழலும் வன்முறையும் நிறைந்த ஒரு சமூகத்தில், எளிமை, ஒளிவுமறைவற்ற ஒருநிலை, நீதி, கருணை ஆகிய பண்புகளின் எடுத்துக்காட்டாய் வாழ்வதற்கு இந்தியத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ஆயர்கள் கூறினர்.
கேரளாவின்
பாலாய் நகரில் இம்மாதம் 5 முதல் 13 வரை நடந்த இந்திய ஆயர் பேரவையின் 31வது
நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் செய்தி வெளியிட்டுள்ள ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பின்பற்றி, இந்தியத் திருஅவையும் ஏழைகளின் திருஅவையாக உண்மையிலேயேச் செயல்பட வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியத் திருஅவை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கண்ணோட்டத்தின்படி வாழ முனைகின்றது என்பதை உறுதி செய்துள்ள ஆயர்கள், மனிதரை மதித்தல், ஒருமைப்பாடு, உரையாடல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், துன்புறும் மனிதரின் போராட்டங்களில் திருஅவை ஈடுபட்டு வாழ விரும்புகின்றது என்றும் கூறியுள்ளனர்.
187 ஆயர்கள் மற்றும் பணிக்குழுக்களின் செயலர்கள் கலந்து கொண்ட 31வது நிறையமர்வுக் கூட்டம், “ஒரு புதுப்பிக்கப்பட்ட சமூகத்துக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட திருஅவை” என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஆதாரம் : Fides
5. “கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு” நூல் வெளியீடு
பிப்.15,2014. இந்திய ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வுக் கூட்டத்தில், கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு என்ற தலைப்பில் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல், மனித மாண்பு குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளின் தொகுப்பாக இல்லாவிடினும், மனித மாண்பு குறித்த விவிலியக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை
13ம் சிங்கராயர் தொடங்கி திருத்தந்தை பிரான்சிஸ் வரை பல்வேறு
திருத்தந்தையர்களின் சமூகப் போதனைகளும் பரந்த அளவில் இந்நூலில்
விவாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
“கத்தோலிக்க சமூக எண்ணத்தில் மனித மாண்பு” என்ற இந்நூலை, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை, சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம், இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் உறுப்பினர் ஜெரால்டு அல்மெய்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ஆதாரம் : CBCI
6. தென் சூடானில் ஒட்டுமொத்த சமுதாயமும் பசியினால் வாடுகின்றது, தலத்திருஅவை
பிப்.15,2014. தென் சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் தவிர்த்து, அந்நாட்டில் சண்டை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஆயர் ஒருவர் கூறினார்.
தென் சூடானில் தற்போது இடம்பெற்றுவரும் சண்டை, சூடானின் 21 வருட உள்நாட்டுச் சண்டையைவிட மோசமானதாக உள்ளது எனக் கூறிய Malakal மறைமாவட்ட ஆயர் Roko Taban Mousa, தனது மறைமாவட்டத்தில் பெருவாரியான மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுகின்றது என்று கூறினார்.
Malakal மறைமாவட்டம் உள்ளடக்கிய பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டை குறித்து Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் Taban, அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள், குறிப்பாக உணவு உதவிகள் உடனடியாக அனுப்பப்படவில்லையெனில் அந்நாடு கடும் பஞ்சத்தை எதிர்நோக்கும் என எச்சரித்துள்ளார்.
கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மறைமாவட்டத்தில் குறைந்தது 30 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார் ஆயர் Taban.
ஆதாரம் : Zenit
7. சீனாவில் கடலுக்கடியில் மிக நீளமான சுரங்கப்பாதை
பிப்.15,2014. கடலுக்கடியில், உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துகளையும் தாண்டி, வர்த்தகப் பயன்பாட்டிற்காக, நீருக்கு அடியிலும் போக்குவரத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, போகாய் கடலில், உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை அமைக்கப் போவதாக, சீனா தெரிவித்துள்ளது.
லியோனிங் பகுதியிலிருந்து, ஷான்டாங் வரையிலான, 123 கி.மீ. தூரத்திற்கு, கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை, சரக்கு இரயில் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. கடலுக்கு அடியில், மணிக்கு, 220 கி.மீ., வேகத்தில் சரக்கு இரயில்கள் இயக்கப்பட உள்ளன. 2020ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : தினமலர்
8. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 2 இலட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது
பிப்.15,2014.
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன்
உணவுத் தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், இந்திய உணவுக் கழகத்திடம் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த இந்திய உணவு கழகம், கடந்த 8 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
வீணான
தானியங்களில் அரிசி முதலிடத்தில் உள்ளதாகவும் அதிகளவில் தானியங்களை
வீணடித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது
இந்திய உணவு கழகம்.
மேலும், இந்தியாவில் தினமும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் பசியோடு உறங்கச்செல்லும்வேளை, அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 44,000 கோடி ரூபாய் பெறுமான உணவுப்பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
No comments:
Post a Comment