Friday, 14 February 2014

செய்திகள் - 14.02.14

செய்திகள் - 14.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், திருமணம் நிச்சயம் செய்துள்ள தம்பதியரிடம் : தனது வாழ்க்கைத் துணைவர் கடவுளின் கொடை என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரின் ஆழமான தேடல்களுக்குப் பதில் சொல்வதாய் மேய்ப்புப்பணித் திட்டங்கள் இருக்க வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் இன்னல்கள் கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியோடு எப்பொழுதும் நடக்க வேண்டும்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரமாணிக்கமும், பயனும் நிறைந்த திருமணம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்

5. 2,50,000 ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்கு உதவுவதற்கு நிதி சேகரிக்குமாறு மனிலா கர்தினால் வேண்டுகோள்

6. சிறார்க் கருணைக்கொலைக்கு ஆதரவான நடவடிக்கை குறித்து பெல்ஜிய ஆயர்கள் கவலை

7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் அகற்றப்பட வேண்டும், பாங்குய் பேராயர்

8. ஆப்ரிக்கக் கிராமங்களில் முதலீடுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்,ILO

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், திருமணம் நிச்சயம் செய்துள்ள தம்பதியரிடம் : தனது வாழ்க்கைத் துணைவர் கடவுளின் கொடை என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

பிப்.14,2014. அன்பு உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் இருந்தால், அதன்மீது உறுதியான எதையும் கட்டமுடியாது, மாறாக, அன்பு என்பது ஓர் உண்மையான உறவு, அது, தனியாக அல்ல, நாம் ஒன்றிணைந்து ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணத்துக்கு நிச்சயம் செய்துள்ள, 30 நாடுகளின் ஏறக்குறைய முப்பதாயிரம் தம்பதியரை, காதலர்கள் தினமான இவ்வெள்ளி நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து அவர்களின் மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ், உணர்ச்சிகள் என்ற மண்மீது கட்டப்படும் அன்பு, வரும் போகும், ஆனால்  கடவுளிடமிருந்து வரும் உண்மையான அன்பு பாறைமீதான அன்பு போன்றது என்று கூறினார்.
ஆண்டவரிடம் எவ்வளவுக்கு அதிகமாக அர்ப்பணித்து வாழ்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்கள் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பாக இருக்கும், இவ்வன்பு தன்னையே புதுப்பித்துக் கொள்ளவும், ஒவ்வொரு துன்பத்தையும் மேற்கொள்ளவும் உதவும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
என்றென்றும் சேர்ந்து வாழ்வதில் பயம், திருமண வாழ்வுமுறை, திருமணக் கொண்டாட்ட முறை ஆகிய மூன்று தலைப்புக்களில் கேட்கப்பட்ட  கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ், சேர்ந்து வாழ்வது ஒரு கலை, அது பொறுமையான, அழகான மற்றும் வியப்புகலந்த பயணம் என்றும் கூறினார். 
திருமணத்தின் தரம் முக்கியமானது என்றும், தயவுசெய்து, நன்றி, மன்னியுங்கள் ஆகிய வார்த்தைகளை, திருமணம் செய்துகொள்ளப்போகும் இந்தத் தம்பதியர் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆம் என என்றென்றும் சொல்வதன் மகிழ்ச்சி என்ற தலைப்பில் நடந்த இச்சந்திப்பை, திருப்பீட குடும்ப அவை ஏற்பாடு செய்திருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரின் ஆழமான தேடல்களுக்குப் பதில் சொல்வதாய் மேய்ப்புப்பணித் திட்டங்கள் இருக்க வேண்டும்

பிப்.14,2014. செபத்தில் நிலைத்திருந்து, தம் மக்களுக்குச் சேவை செய்வதில் தாராளமனத்தை வெளிப்படுத்தி இறைவார்த்தையை அறிவிப்பதில் ஆர்வமுடன் செயல்படுமாறு Czech குடியரசு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் 'ad Limina' நிகழ்வையொட்டி Czech குடியரசு ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களின் முக்கிய ஒத்துழைப்பாளர்களாகிய அருள்பணியாளர்களிடம் தந்தைக்குரிய அன்புடன் நடந்துகொள்ளுமாறும் கூறினார்.
மக்கள் மத்தியில் நம்பிக்கையும் மனஅமைதியும் ஏற்படுவதற்கு உதவியாக மேய்ப்புப்பணித் திட்டங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த மேய்ப்புப்பணித் திட்டங்கள் பரந்துபட்டதாய், இறையழைத்தலை ஊக்குவிப்பதாய், இளையோரின் ஆழமான தேடல்களுக்குப் பதில்சொல்வதாய் அமைய வேண்டுமெனவும் கூறினார்.
அருளடையாளங்கள் மற்றும் திருவழிபாடுகளில் விசுவாசிகள் உயிர்த்துடிப்புடன் கலந்து கொள்வதற்கு உதவும் தகுந்த முயற்சிகள் எடுக்குமாறும் கூறிய திருத்தந்தை, சமூக வாழ்வின் முதுகெலும்பாகிய குடும்பங்கள் மீது கவனம் செலுத்தவும் பரிந்துரைத்தார்.
ஆயர்கள் மத்தியில் ஒன்றிப்பும் ஒருமைப்பாடும் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்தே இருக்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் சொத்துக்களைக் கவனத்துடனும் ஒளிவுமறைவின்றியும் நிர்வகித்து, நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான ஆள்களின் உதவியுடன் அவற்றைப் பாதுகாக்குமாறும் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் இன்னல்கள் கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியோடு எப்பொழுதும் நடக்க வேண்டும்

பிப்.14,2014. கிறிஸ்தவர்கள், பிறருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்வதில் இன்னல்கள் கண்டு பயப்படாமல், இன்னல்கள் மத்தியில் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு, முன்னோக்கி நடக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவின் இணைப் பாதுகாவலர்களான புனிதர்கள் சிரில், மெத்தோடியசின் விழாவான இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவின் சீடர்கள் எப்படி வாழவேண்டும் என்பது பற்றி   மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவத் தனித்துவம் பற்றியும், கிறிஸ்தவர்கள் என்றால் அனுப்பப்படுகிறவர்கள் என்பது பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, நம் ஆண்டவர் சீடர்களை அனுப்பியபோது முன்னோக்கிச் செல்லுங்கள் என்று கூறினார், எனவே கிறிஸ்தவர் என்பவர் பயணங்கள் செய்யும், முன்னோக்கிச் செல்லும் ஆண்டவரின் சீடர் என்று விளக்கினார்.
கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆடுகளாக இருக்க வேண்டுமென்பது கிறிஸ்தவத் தனித்துவத்தின் இரண்டாவது கூறு என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர் எப்பொழுதும் ஆடாக இருக்கிறார், இந்தத் தனித்துவத்தை காத்துக்கொள்ள வேண்டும், நம் ஆண்டவர் ஓநாய்கள் மத்தியில் ஆடுகள் போல் நம்மை அனுப்புகிறார்  என்றும் கூறினார்.
மகிழ்ச்சியாக இருப்பது கிறிஸ்தவத் தனித்துவத்தின் மூன்றாவது கூறு, ஏனெனில்  கிறிஸ்தவர்கள் ஆண்டவரை அறிந்துள்ளனர் மற்றும் ஆண்டவரை பிறருக்குக் கொண்டு செல்கின்றனர், எனவே மகிழ்ச்சியில்லாத கிறிஸ்தவராக ஒருநாளும் நடக்க முடியாது என்று விளக்கினார் திருத்தந்தை.
புனிதர்கள் சிரில், மெத்தோடியசின் விழாவைச் சிறப்பிக்கும் இன்று கிறிஸ்தவத் தனித்துவம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவர் ஒரே இடத்தில் இருப்பவர் அல்ல, அவர் இன்னல்களையும் கடந்து நடப்பவர் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : பிரமாணிக்கமும், பயனும் நிறைந்த திருமணம் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்

பிப்.14,2014.  அன்பு இளையோரே, திருமணம் செய்துகொள்ள அஞ்ச வேண்டாம், பிரமாணிக்கமுள்ள மற்றும் பயனுள்ள திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று இவ்வெள்ளியன்று தனது Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அமெரிக்க யூதமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க யூதச் சமுதாயத்தின் பல்சமய விவகாரத்துறை இயக்குனர் ராபி David Rosen அவர்கள், தங்களது இச்சந்திப்பு, குடும்பச் சந்திப்பு போன்று இருந்ததாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூத சமூகத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருப்பதை இச்சந்திப்பில் உணர முடிந்ததாகவும் ராபி David Rosen தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 2,50,000 ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்கு உதவுவதற்கு நிதி சேகரிக்குமாறு மனிலா கர்தினால் வேண்டுகோள்

பிப்.14,2014. திருநீற்றுப் புதனன்று நன்கொடைகள் கொடுப்பதற்காக, குறிப்பாக, ஹையான் சூறாவளிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இப்போதிருந்தே மக்கள் பணத்தைச் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார் பிலிப்பின்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.
பிலிப்பின்சில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தது 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறாருக்கு உதவுவதற்கென அந்நாட்டுக் கர்தினால் Gaudencio Rosales அவர்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கையைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பின்ஸ் மக்களின் சேமிப்புப் பண்பை ஊக்குவித்துள்ளார்.
கத்தோலிக்கர் உண்ணாநோன்பு அனுசரிக்கும் திருநீற்றுப் புதனன்று ஏழைச் சிறாருக்கு  உணவு வாங்குவதற்கு உதவியாக, பிலிப்பின்ஸ் மக்கள் பணம் சேமிக்கத் தொடங்குமாறு கேட்டுள்ளார் கர்தினால் தாக்லே.
Pondo ng Pinoy என்ற பிறரன்பு அமைப்பின் மூலம் வறுமையில் வாடும் சிறாருக்கு உதவுவதற்கு முயற்சித்து வருகிறார் கர்தினால் Gaudencio Rosales. இவ்வமைப்பு 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.  

ஆதாரம் : CBCP                       

6. சிறார்க் கருணைக்கொலைக்கு ஆதரவான நடவடிக்கை குறித்து பெல்ஜிய ஆயர்கள் கவலை

பிப்.14,2014. பெல்ஜிய நாடாளுமன்றம் சிறார்க் கருணைக்கொலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளவேளை, நாடாளுமன்றத்தின் இச்செயலால் தாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.
பெல்ஜிய செனட் அவையால் கடந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இம்மசோதாவுக்கு ஆதரவாக, தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இதன்மூலம் தீராத நோய் மற்றும் கடும் வேதனையால் துன்புறும் சிறார் இறக்க விரும்பினால் அவர்களைக் கொலை செய்வதற்கு மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிறார் தாங்கள் கேட்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் பெற்றோர் அதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் இம்மசோதா கூறுகிறது.
பெல்ஜியத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்மசோதா, வருங்காலத்தில் மாற்றுத்திறனாளிகள், மன நோயாளிகள் போன்றோரிடமும் செயல்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
பெல்ஜியத்தில் 2012ம் ஆண்டில், 1432 கருணைக்கொலைகள் நடத்தப்பட்டன. இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டைவிட 25 விழுக்காடு அதிகம்.     

ஆதாரம் : CWN

7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் அகற்றப்பட வேண்டும், பாங்குய் பேராயர்

பிப்.14,2014. வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் மிகுந்துள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மக்களின் நரம்பு நாளங்கள்வரை காழ்ப்புணர்வு நுழைந்துள்ளது என்று கவலை தெரிவித்தார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த Bangui பேராயர் Dieudonnè Nzapalainga, தான் அண்மையில் சென்ற ஒரு கிராமத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இனப்படுகொலை இடம்பெறக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Nzapalainga, இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.
இந்நாட்டின் தீயவனின் கரங்களைப் பிடித்துத் தள்ளுவதற்கு யாரும் இல்லையெனில், தீயவன் தனது இலக்கை அடைவான் என்றும் எச்சரித்த பேராயர், அந்நாட்டில் இரத்தம் சிந்துதல் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றது என்றும் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆதாரம் : ACN                         

8. ஆப்ரிக்கக் கிராமங்களில் முதலீடுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்,ILO

பிப்.14,2014. ஆப்ரிக்காவின் வளமைக்கு கிராமப்புற முன்னேற்றம் இன்றியமையாததாக இருக்கும்வேளை, இதனை, அரசுகளும், கடன் கொடுக்கும் பன்னாட்டு அமைப்புகளும் குறைத்து மதிப்பிடுகின்றன என்று ILO எனும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.
வேளாண்தொழிலை ஊக்குவித்து அதைச் சார்ந்து உறுதியான பொருளாதாரத்தை அமைப்பது ஆப்ரிக்காவின் வளமைக்கு மிக முக்கியம் என்றுரைக்கும் ILO நிறுவனத்தின் அதிகாரி Gilbert Houngbo, ஆப்ரிக்காவில் சரியான நேரத்தில் முதலீடுகள் செய்வதன்மூலம் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் மற்றும் அக்கண்டத்தில் உணவுப்பாதுகாப்பும், சமூக-அரசியல் அமைதியும், நலவாழ்வும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
ஆப்ரிக்காவில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கடும் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்றும், அவர்களில் பலர் நகரங்களுக்குச் சென்றுவிட்டனர் என்றும் கூறிய Houngbo, சமூகப் பாதுகாப்பும், அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதும், தொழிலில் பாதுகாப்பும் அவசியம் என்றும் கூறினார்.

ஆதாரம் : UN                             

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...