செய்திகள் - 13.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - அசைக்கமுடியாத நம்பிக்கையால் இயேசுவின் பாராட்டைப் பெற்ற வேற்று மதப் பெண்
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா நாட்டு ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
3. திருத்தந்தை பிரான்சிஸ் - கத்தோலிக்கக் கல்வி தரக்கூடிய ஒரு முக்கியமான கோடை, முழுமனித உருவாக்கம்
4. திருத்தந்தை பிரான்சிஸ் - இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்த உலகமாக மாற்றும் முயற்சிகளில் கத்தோலிக்கர்களும், யூதர்களும் இணையவேண்டும்
5. "நான் திருத்தந்தைக்காகச் செபிக்கிறேன்" (#IPrayforthePope) என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்தியாவுக்கு வரும்படி சிறப்பான அழைப்பை விடுப்பேன் - கர்தினால் Cleemis Thottunkal
7. வானொலிப் பணியில் மூத்த நிறுவனமான வத்திக்கான் வானொலியில், உலக வானொலி நாள் கொண்டாட்டம்
8. 'போலியோ' நோயிலிருந்து இந்தியா முற்றிலும் விடுதலை பெற்றுள்ளது - உலக நலவாழ்வு நிறுவனம் (WHO)
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - அசைக்கமுடியாத நம்பிக்கையால் இயேசுவின் பாராட்டைப் பெற்ற வேற்று மதப் பெண்
பிப்.13,2014. தாழ்ச்சியான உள்ளத்துடன் இறைவாக்கினை ஏற்கும்போது, அந்த மனநிலை, கடவுள் நம்பிக்கையற்றவரை இறைவனிடம் அழைத்துவரும் அதே வேளையில், ஒருவர் தன் ஆசைகளுக்கு அதிக இடம்கொடுத்தால், அவர் கடவுள் நம்பிக்கையை இழக்கும் ஆபத்தும் உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆசைகளில் மூழ்கி கடவுளை இழந்த சாலமோனையும், தன் அசைக்கமுடியாத நம்பிக்கையால் இயேசுவின் பாராட்டைப் பெற்ற வேற்று மதப் பெண்ணையும் ஒப்புமைப்படுத்தி மறையுரையாற்றினார்.
குழந்தைகளுக்கு உரிய உணவை, நாய்குட்டிகளுக்குக் கொடுக்கக்கூடாது என்று இயேசு கூறுவதற்கு, தன் அறிவுத் திறமையால் அல்ல, மாறாக, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அந்த அன்னை தந்த பதில், இயேசுவை வியக்கவைத்தது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
தங்கள் வாழ்வு முழுவதையும் பணயம் வைத்து, ஒவ்வொரு
நாளும் அமைதியுடன் இறைவனைத் தேடிவரும் பல்லாயிரம் மக்களின் பிரதிநிதியாக
இந்த அன்னை அமைந்துள்ளார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இதற்கு நேர்மாறாக, உலகிலேயே மிக உயர்ந்த அறிவாளி என்று போற்றப்பட்ட மன்னன் சாலமோன், தவறான வழிகளில் தன் மனதைச் செலுத்தியதால், போலியான தெய்வங்களுக்கு இடம் அளித்தார் என்று திருத்தந்தை கூறினார்.
மன்னர்களான தாவீதும், சாலமோனும் குற்றங்கள் புரிந்தனர் என்றாலும், தாவீது, தாழ்ச்சியுடன் மீண்டும் இறைவனிடம் திரும்பியதால் அவர் குற்றங்கள் மன்னிக்கப்பட்டன என்றும், சாலமோனோ தன் மமதையால் இறைவனிடம் திரும்ப வராமல், வேற்று தெய்வங்களை நாடிச் சென்றதால், அவர் தன் கடவுள் நம்பிக்கையை இழந்தார் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் ஒப்புமைப்படுத்திப் பேசினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா நாட்டு ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை
பிப்.13,2014. பல்கேரியா நாட்டில், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆட்சி செலுத்தியபோது, அவர்கள் கலாச்சார வெற்றிடங்களை உருவாக்கிச் சென்றிருந்தாலும், அவற்றைச் சவாலாக ஏற்று, வெற்றிடங்களை நிறைவுசெய்த தலத் திருஅவையைத் தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஆயர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' எனப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த சில நாட்களாக வத்திக்கான் வந்திருந்த பல்கேரியா நாட்டு ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் மகிழ்வை எடுத்துரைத்தார்.
பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடன் இணைந்து, கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டில் ஆற்றிவரும் பணிகளுக்குத் தன் பாராட்டுக்களைக் கூறியத் திருத்தந்தை, அந்நாட்டின் பல்வேறு வழிபாட்டு முறை சபைகளின் பிரதிநிதிகளும், ஏப்ரல் 27ம் தேதி, முன்னாள்
திருத்தந்தையர் இருவருக்கு நடைபெறவிருக்கும் புனிதர் நிலைத்
திருச்சடங்கில் கலந்துகொள்வர் என்பது தனக்கு மகிழ்வைத் தருகிறது என்றும்
குறிப்பிட்டார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் பல்கேரியா நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியதையும், ஸ்லாவிய
இனத்திலிருந்து முதல்முறையாக ஒருவர் திருத்தந்தையானதை இரண்டாம் ஜான்பால்
அவர்கள் நமக்கு உணர்த்துகிறார் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
சிறப்பாகக் கூறினார்.
கத்தோலிக்க திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இன்னும் நெருக்கமான உறவுகள் வளரவேண்டுமென்ற வாழ்த்துக்களோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த பல்கேரிய ஆயர்களுக்குத் தன் செபங்களையும் ஆசீரையும் வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் - கத்தோலிக்கக் கல்வி தரக்கூடிய ஒரு முக்கியமான கோடை, முழுமனித உருவாக்கம்
பிப்.13,2014. தொடர்ந்து மாறிவரும் இன்றையக் கலாச்சாரச் சூழலில், இளையோருக்குக் கத்தோலிக்கக் கல்வி அளிப்பது, திருஅவை சந்திக்கும் ஒரு முக்கியமான சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்கக் கல்வி பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கக் கல்வி குறித்து மூன்று எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
கத்தோலிக்கக் கல்வியில் இருக்கவேண்டிய உரையாடலின் மதிப்பு, தரம் வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்குதல், உலகிலிருந்து தன்னையே வேறுபடுத்தாத கல்வி நிறுவனங்கள் என்ற மூன்று எண்ணங்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்கள், வேற்று மதத்தினர், மத நம்பிக்கையற்றவர் என்று பல பின்னணிகளிலிருந்து வரும் இளையோருக்கு கத்தோலிக்கக் கல்வி தரக்கூடிய ஒரு முக்கியமான கோடை, முழுமனித உருவாக்கம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
இத்தகைய உருவாக்கத்தில் ஈடுபடும் கல்வியாளர்கள், தங்கள் பணியை ஓர் அன்புப் பணியாக, வாழ்வு தரும் பணியாக மேற்கொண்டு, தங்களிடம் உள்ள மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
புதிய வழிகளில் நற்செய்தியைப் பரப்பும் எண்ணங்களை அண்மைக் காலங்களில் நாம் சிந்திக்கும்போது, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள், புது வழிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கு இன்னும் தீவிர அர்ப்பணத்துடன் உழைக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய அர்ப்பணத்தில் ஈடுபடுவோருக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் கூறினார்.
பிப்ரவரி 12, இப்புதன் முதல், இவ்வெள்ளிக்கிழமை முடிய கத்தோலிக்க கல்வி பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் உரோம் நகரில் நடைபெறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் - இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்த உலகமாக மாற்றும் முயற்சிகளில் கத்தோலிக்கர்களும், யூதர்களும் இணையவேண்டும்
பிப்.13,2014. கத்தோலிக்கர்களும், யூதர்களும் இறைவனிடம் கொண்டுள்ள உறவு நம்மிடையே வளரவேண்டிய உறவுக்கு அடிப்படை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அமெரிக்காவில் வாழும் யூதர் சமுதாயத்திலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த 55 பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்க யூத சமுதாயங்களுக்கிடையே நிலவி வரும் உரையாடல் இன்னும் தீவிரமாகவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இரு மதத்தவருக்கும் இடையே உரையாடல்கள் வளர்வது மட்டுமல்ல, இவ்விரு
சமுதாயத்தினரும் இவ்வுலகை இன்னும் நீதி நிறைந்த உலகமாக மாற்றும்
முயற்சிகளிலும் இணைந்து ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு
விடுத்தார்.
கிறிஸ்தவமல்லா மறைகளோடு திருஅவைக்குள்ள உறவு என்ற மையக்கருத்துடன், "நம் காலத்தில்" என்று பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு வெளியான 50ம் ஆண்டை அடுத்த ஆண்டு சிறப்பிக்க உள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை, கத்தோலிக்க மறையின் 'மூத்த உடன்பிறப்புக்களாகிய' யூதர்களோடு மேற்கொள்ளப்படும் உரையாடல் இன்னும் உறுதி பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்னும் சில மாதங்களில் தான் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தில், அனைவரும் செபத்தில் தன்னோடு ஒருங்கிணையுமாறு திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. "நான் திருத்தந்தைக்காகச் செபிக்கிறேன்" (#IPrayforthePope) என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது
பிப்.13,2014. அருள் பணியாளர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுத்து, அவரைத் துணிவோடும், மகிழ்வோடும் பின்பற்ற வேண்டுமென்று, அவர்களுக்காக மன்றாடுவோம் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டார்.
அனைத்துலக அளவில் உருவாக்கப்படும் முன்னேற்றங்களின் பயன்களில் அனைவரும் சம நிலையில் பங்கேற்கும்விதமாக, ஏற்றத் தாழ்வுகளை அழிக்க முன்வருவோம் என்ற Twitter செய்தியை, ஐ.நா.அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்களின் பெயரால், திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
மேலும், "நான் திருத்தந்தைக்காகச் செபிக்கிறேன்" (#IPrayforthePope) என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்கள் முன், முதன்முறையாகத் தோன்றியபோது, "எனக்காகச் செபியுங்கள்" என்று விண்ணப்பித்ததை அடிப்படையாகக் கொண்டு, இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று Zenit கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற முதலாண்டு நெருங்கிவரும் வேளையில், "நான் திருத்தந்தைக்காகச் செபிக்கிறேன்" என்ற இந்த முகநூல் பக்கம், ஆங்கிலம், போர்த்துகீசியம், இத்தாலியம், பிரெஞ்ச், ஸ்பானியம், ஜெர்மன், ஹங்கேரி ஆகிய ஏழு மொழிகளில் வெகு வேகமாகப் பரவி வருகிறது என்றும் Zenit செய்தி கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்தியாவுக்கு வரும்படி சிறப்பான அழைப்பை விடுப்பேன் - கர்தினால் Cleemis Thottunkal
பிப்.13,2014. தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்திக்கும்போது, அவரை இந்தியாவுக்கு வரும்படி சிறப்பான அழைப்பை விடுப்பேன் என்று இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் கர்தினால் Mar Baselios Cleemis Thottunkal அவர்கள் கூறினார்.
சில நாட்களுக்கு முன், இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர் கர்தினால் Thottunkal அவர்கள், ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், தான் அடுத்த சில மாதங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல் திட்டங்களை விளக்கினார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், இந்திய
நாட்டிற்கும் தகுந்த வழிகளில் பணியாற்ற உருவாக்கப்பட்டுள்ள இந்திய ஆயர்
பேரவையை அடுத்த சில ஆண்டுகள் வழிநடத்த தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப்
பொறுப்பை முழுமனதுடன் ஆற்றவிருப்பதாகக் கூறினார் கர்தினால் Thottunkal.
கிறிஸ்தவ மறை துவக்கத்திலிருந்தே இந்தியாவில் வேரூன்றியது என்பது நமக்குக் கிடைத்த ஓர் அரியக் கோடை என்று கூறிய கர்தினால் Thottunkal அவர்கள், பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்பது நம் தலையாயக் கடமை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவில், வறுமையில் சிக்குண்டிருப்போருக்கு சிறப்பானப் பணிகள் ஆற்ற கத்தோலிக்கத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும், வறியோரையும், மக்களையும் மனதில் கொண்டு, வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிக்க திருஅவை தேவையான முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் கர்தினால் Thottunkal அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : AsiaNews
7. வானொலிப் பணியில் மூத்த நிறுவனமான வத்திக்கான் வானொலியில், உலக வானொலி நாள் கொண்டாட்டம்
உலகின் வானொலி நிலையங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக விளங்கும் வத்திக்கான் வானொலி, பிப்ரவரி 12ம் தேதி, நள்ளிரவு தாண்டி, பிப்ரவரி 13ம் தேதி துவங்கிய முதல் நொடியில், உலக வானொலி நாள் கொண்டாட்டத்தைத் துவக்கியது.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனமான UNESCO, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 13ம் தேதியை, உலக வானொலி நாளாகக் கொண்டாடிவருகிறது.
வானொலி அலைகளின் சக்தியைக் கண்டுபிடித்த குலியெல்மொ மார்கோனி அவர்களால், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் வேண்டுகோளின்படி, 1931ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி நிறுவப்பட்டு, கடந்த 83 ஆண்டுகளாக அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிவரும் மூத்த நிறுவனமான வத்திக்கான் வானொலி, உலக வானொலி நாளைக் கொண்டாடும் வகையில், இவ்வியாழன் புலர்ந்த முதல் மணித்துளிகளில், தன் கொண்டாட்டத்தை, இசையுடன் துவங்கியது.
2014ம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக வானொலி நாள், இத்துறையில் பணியாற்றும் பெண்களைச் சிறப்பிக்கும் நாளாகக் கொண்டாடப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. 'போலியோ' நோயிலிருந்து இந்தியா முற்றிலும் விடுதலை பெற்றுள்ளது - உலக நலவாழ்வு நிறுவனம் (WHO)
பிப்.13,2014. உலக நோயாளிகளுக்குச் செபிக்கும் நாளென்று கத்தோலிக்கத் திருஅவை அறிவித்துள்ள பிப்ரவரி 11ம் தேதியன்று, இந்தியா, 'போலியோ' எனப்படும் முடக்குவாத நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றதென்று உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களும் இந்தியாவில் நலவாழ்வுப் பணிகளில் மேற்கொண்ட அயராத உழைப்பிற்குக் கிடைத்த தகுதியான வெகுமதி, இந்த அறிவிப்பு என்று CHAI எனப்படும் இந்திய கத்தோலிக்க நலக் கழகத்தின் தலைவர், அருள் பணியாளர், Tomi Thomas அவர்கள் கூறினார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில், புது டில்லியில் பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில், உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியிடப்பட்டதாக, கத்தோலிக்கச் செய்திகள் கூறுகின்றன.
127 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில், 2009ம் ஆண்டு, 741 பேர் 'போலியோ' நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும், கடந்த மூன்று ஆடுகளாக, புதிதாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர் எவரும் இல்லை என்றும் WHO அறிக்கை கூறுகிறது.
இந்நோய் இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டாலும், இது மீண்டும் நம் நாட்டைத் தாக்காமல் இருப்பதற்கு, நாம் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று CHAI தலைவர் அருள் பணியாளர் Thomas அவர்கள் கூறினார்.
ஆதாரம் : The Catholic Register
No comments:
Post a Comment