Tuesday, 11 February 2014

செய்திகள் - 11.02.14

செய்திகள் - 11.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

2. முன்னாள் திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து அவரின் அந்தரங்கச் செயலர்

3. இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் - கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்

4. கொரிய மறைசாட்சிகள் கொரிய வரலாற்றில் முக்கியமான அங்கம் வகித்தவர்கள்,  செயோல் பேராயர்

5. தேர்தல்களில் மிகுந்த கவனத்துடன் ஓட்டளிக்குமாறு தென்னாப்ரிக்க ஆயர்கள் வேண்டுகோள்

6. சமயத்தை அரசியலில் நுழைக்க வேண்டாம், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்கள்

7. உலகெங்கும் 2,50,000 சிறார் படைவீரர்கள்

8. இலங்கையில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கையில் யாழ் மாவட்டம் முதலிடம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

பிப்.11,2014. 'நோயாளிகள் மற்றும் துன்புறுவோர் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து உங்களோடு இருக்கிறார், அவரை விடாது பற்றிக்கொள்ளுங்கள்'. என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 11, இச்செவ்வாய்க்கிழமையன்று லூர்து அன்னை திருவிழாவோடு இணைந்து  கத்தோலிக்க திருஅவையில் 'உலக நோயாளர் தினம்' சிறப்பிக்கப்பட்டதையொட்டி இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் பதவி விலகலை அறிவித்ததன் ஓராண்டு இச்செவ்வாய்க்கிழமை நிறைவுற்றதையொட்டி பிறிதொரு டுவிட்டரையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'தாழ்ச்சியும் மனவுறுதியும் கொண்ட திருத்தந்தை16ம் பெனடிக்ட் அவர்களுக்காக என்னோடு இணைந்து செபிக்குமாறு உங்களனைவருக்கும் இன்று அழைப்பு விடுக்கிறேன்' என அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. முன்னாள் திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து அவரின் அந்தரங்கச் செயலர்

பிப்.11,2014. கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகலை அறிவித்தது, வருத்தம் மற்றும் நன்றியுணர்வை வழங்கிய ஒரு முக்கிய நாளாக இருந்தது என அறிவித்துள்ளார் முன்னாள் திருத்தந்தையின் அந்தரங்கச் செயலர் பேராயர் Georg Gänswein.
வத்திக்கான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்முகத்தில் இதனைக் குறிப்பிட்ட பேராயர் Gänswein அவர்கள், அந்த காலக்கட்டத்தில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு துணிகர மற்றும் புரட்சி முடிவாக அது இருந்தது என்றார்.
திருஅவையை வழிநடத்தும் வலிமை தனக்கு தற்போது இல்லை என பதவி விலகி, தன்னைவிட வலிமையுடைய ஒருவருக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழியமைத்துக் கொடுத்தது, இறைவன் மீதும், திருஅவை மீதும் விசுவாசிகள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடேயாகும் எனவும் கூறினார் பேராயர் Gänswein.
தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையிலும் அகில உலகிலும் ஏற்படுத்திவரும் நல்மாற்றங்கள், முன்னாள் திருத்தந்தையின் பதவி விலகலிலிருந்து ஊக்கம்பெற்றவை என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Gänswein அவர்கள், பதவி விலகல் என்ற எதிர்பாராத மாற்றம், ஏனைய மாற்றங்களுக்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளது என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் - கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்

பிப்.11,2014. CBCI எனும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதியத் தலைவராக சீரோ மலங்கரா வழிபாட்டு முறையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும், இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவராகவும் பணியாற்றிவந்த கர்தினால் கிளீமிஸ் அவர்கள், கேரளாவில் இடம்பெறும் இந்திய ஆயர் பேரவைக்கூட்டத்தில் இச்செவ்வாயன்று தலைவராகத் தேர்வுச்செய்யப்பட்டார்.
கடந்த நான்காண்டுகளாக இந்திய ஆயர் பேரவையின் தலைவராக, பம்பாய் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் அவர்கள் செயல்பட்டு வந்தார்.
இந்திய ஆயர்பேரவைக் கூட்டத்தைத் துவக்கிவைத்து உரையாற்றிய இந்தியாவிற்கான திருப்பீடத்தூதர், பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள், திருஅவைக்கு உள்ளேயும், கிறிஸ்தவ சபைகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்குமாறு அழைப்பு விடுத்தார். 
இம்மாதம் 5ம் தேதி துவங்கிய இந்திய ஆயர்பேரவையின் 8 நாள் கூட்டம், இப்புதனன்று நிறைவுக்கு வருகின்றது.

ஆதாரம் : Malayala Manorama

4. கொரிய மறைசாட்சிகள் கொரிய வரலாற்றில் முக்கியமான அங்கம் வகித்தவர்கள்,  செயோல் பேராயர்

பிப்.11,2014. கொரிய மறைசாட்சிகளை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தும் நிகழ்வு, அந்நாட்டுத்தலத்திரு அவைக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி எனவும், இதற்கு திருப்பீடத்துக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார், செயோல் பேராயரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான  Andrew Yeom Soo-jung.
கொரிய மறைசாட்சிகள் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு உழைத்த, மற்றும் உருக்கமாகச் செபித்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய பேராயர் Yeom Soo-jung அவர்கள், இந்நிகழ்வு, இக்காலக் கொரியத் திருஅவைக்கு மாபெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி எனவும் தெரிவித்தார். 
வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது கொரிய மறைசாட்சிகள், தூயவாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாய் உள்ளனர் என்றும், இன, சமூக, சமயப் பாகுபாடுகளைக் கடந்து தங்களின் அயலாரை அன்பு செய்தவர்கள், மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தோடு கொரிய வரலாற்றில் முக்கியமான அங்கம் வகித்தவர்கள் என்றும் கூறினார் செயோல் பேராயர் Yeom Soo-jung. 
கொரியப் பொதுநிலை விசுவாசியான Paul Yun Ji-chungம், அவரோடு சேர்ந்த 123 தோழர்களும் 1791ம் ஆண்டுக்கும், 1888ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
  
ஆதாரம் : Fides

5. தேர்தல்களில் மிகுந்த கவனத்துடன் ஓட்டளிக்குமாறு தென்னாப்ரிக்க ஆயர்கள் வேண்டுகோள்

பிப்.11,2014. தென்னாப்ரிக்காவில் பொதுத் தேர்தல்கள் அண்மித்துவரும் வேளையில், எவ்வாறு ஓட்டளிக்க வேண்டுமென்பதில் கத்தோலிக்கர் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள். 
தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற ஊடகங்கள் வழியாக அரசியல்வாதிகள் கத்தோலிக்கரின் ஆதரவைக் கேட்டுவரும் இவ்வேளையில், அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கவனமுடன் கேட்டு தமது ஓட்டுக்களைக் கவனமுடன் அளிக்குமாறு கூறியுள்ளனர் ஆயர்கள். 
தென்னாப்ரிக்காவில் வருகிற மே மாதம் 7ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள், மனிதவாழ்வின் புனிதத்தையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வையும் மதிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 
உண்மையிலேயே மக்களை, குறிப்பாக ஏழைகளையும் சமுதாயத்தில் நலிந்தவர்களையும் மதித்து பொதுநலனுக்காக உழைக்கும் அரசியல்கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுக்குமாறும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கேட்டுள்ளனர். 
தேர்தல் முடிந்து அதன் வெற்றிகள் அறிவிக்கப்படும்வரை, கத்தோலிக்கர்கள் உருக்கமாகத் திருப்பலிகளிலும் பிற வழிபாடுகளிலும் செபிக்குமாறு கேட்டுள்ள ஆயர்கள், தேர்தல்களில்  கத்தோலிக்கர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.   

ஆதாரம் :Fides

6. சமயத்தை அரசியலில் நுழைக்க வேண்டாம், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்கள்

பிப்.11,2014. முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ள மோதல்களில் சமயத்தை நுழைக்க வேண்டாம் என மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் சமயத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. 
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் கத்தோலிக்கப் பேராயர் Dieudonné Nzapalainga, இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் தலைவர் பாஸ்டர் Nicolas Guerékoyame Gbangou, அந்நாட்டின் முஸ்லிம் சமூகத் தலைவர் Oumar Kobine Layama ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர். 
எப்பொழுதும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சமயப் போரைத் திணிப்பதற்கு விரும்புகின்றனர் எனவும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், 10 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் 10 விழுக்காட்டினர் இயற்கையை வழிபடுபவர்கள் என்பதை நினைவுபடுபத்த விரும்புவதாகவும் Bangui பேராயர் Nzapalainga அக்கூட்டத்தில் தெரிவித்தார். 
மேலும், முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் இடம்பெறும் தற்போதைய சண்டையில் சமயத்தை நுழைப்பதற்குக் காரணமே கிடையாது என்று முஸ்லிம் குரு Layama கூறினார். 
பெரும் குழப்ப நிலையிலுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், கடந்த ஞாயிறன்று கூட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் :Fides

7. உலகெங்கும் 2,50,000 சிறார் படைவீரர்கள்

பிப்.11,2014. உலகெங்கும் 2,50,000 சிறார் மற்றும் இளம்பருவப் படைவீரர்கள் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
சிறார் படைவீரர்க்கெதிரான அனைத்துலக நாள் பிப்ரவரி 12, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடகச் செய்தி ஒன்றில், இன்று உலகில் 153 நாடுகள்  சிறார் படைவீரர்க்கெதிரான அனைத்துலக உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. 
சண்டை இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மட்டும் ஏறக்குறைய 6,000  சிறார் படைவீரர் உள்ளனர்.  
2002ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் படைவீரர்க்கெதிரான உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறார் படைப்பிரிவுக்கு சேர்க்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: AGR 

8. இலங்கையில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கையில் யாழ் மாவட்டம் முதலிடம்

பிப்.11,2014. யாழ் மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும், இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 43 விழுக்காட்டினரும், கொழும்பு மாவட்டத்தில் 39 விழுக்காட்டினரும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை நலத்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Tamil Win

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...