செய்திகள் - 08.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்தில் இலங்கை மக்களுக்குத் சிறப்பான இடம்
2. அல்ஜீரியா மற்றும் கொரிய மறைசாட்சிகளின் வாழ்வுமுறைகள் அங்கீகரிப்பு
3. கிராக்கோவ் உலக இளையோர் தினத்துக்குத் திருத்தந்தை மீண்டும் அழைப்பு
4. வளர்ச்சித் திட்டங்களின் சலுகைகளை அனைத்து மனிதரும் பெற வேண்டும், பேராயர் சுள்ளிக்காட்
5. பிப்ரவரி 11 முதல் தமிழகத் தொலைக்காட்சிகளில் மாதா டி.வி.
6. அ.பணி செத்ரிக் பிரகாஷ் : குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு மறக்கப்படக் கூடாது
7. உலக அளவில் தட்டம்மை இறப்புக்கள் குறைந்துள்ளன, WHO நிறுவனம்
8. ஆராய்ச்சித் துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது இந்தியா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்தில் இலங்கை மக்களுக்குத் சிறப்பான இடம்
பிப்.08,2014. காயங்களைக் குணப்படுத்துவதும், நேற்றைய பகைவர்களோடு ஒத்துழைத்து நாளைய தினத்தை ஒன்றிணைந்து கட்டி எழுப்புவதும் என்பது எளிதானது அல்ல என்பதை தான் அறிந்துள்ளேன், எனினும், இந்தப் பாதை மட்டுமே, வருங்காலத்துக்கும், வளர்ச்சிக்கும் அமைதிக்கும் நம்பிக்கை அளிக்கின்றது என்று இலங்கை மக்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிவாழ்
இலங்கை மக்களை இச்சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வத்திக்கான் தூய
பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ், அண்மை ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்கள் பலரின் இறப்புக்களுக்கும் பெரும் சேதங்களுக்கும், பலர் கண்ணீர் சிந்தவும் காரணமாகியுள்ளதையும் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு அமைதி மற்றும் ஒப்புரவுக் கொடைகளை ஆண்டவர் வழங்கவும்,
இலங்கையில் வாழும் அனைவரும் நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு
எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஆண்டவர் உதவிசெய்யவும் வேண்டுமென
அவரிடம் செபிப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, தனது செபத்தில் இலங்கை மக்களுக்குச் சிறப்பான இடம் இருப்பதாகவும் உறுதி கூறினார்.
இலங்கை
நாட்டை அன்னைமரியிடம் அர்ப்பணித்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு
இச்சனிக்கிழமையன்று இத்தாலிவாழ் இலங்கை மக்கள் உரோம் நகருக்குத்
திருப்பயணம் மேற்கொண்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், தங்களின் தேவைகளுக்கு, குறிப்பாக, வாழ்வில் பிரச்சனைகள் நிறைந்து அதனைச் சுமையாய் உணரும்போது அன்னைமரியிடம் தயக்கமின்றி அண்டிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அழகு இவற்றால் அந்நாடு இந்தியப் பெருங்கடலின் முத்து என அழைக்கப்படுகிறது, இந்த முத்து சிப்பியின் கண்ணீரிலிருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது, ஆயினும், அண்மை ஆண்டுகளின் சண்டைகளால் பலர் கண்ணீர் வடித்துள்ளனர் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில், 1940ம் ஆண்டில் அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த கொழும்புப் பேராயர் Jean-Marie Masson அவர்கள், போரின் பாதிப்பின்றி இலங்கை காப்பாற்றப்பட்டால் அந்நாட்டில் அன்னைமரிக்கென ஒரு திருத்தலம் கட்டுவதாக உறுதியளித்தார், அதேபோல் இலங்கையும் காப்பாற்றப்பட்டது. அதற்கு நன்றியாக, அந்நாட்டின் Tewatteல்
இலங்கை அன்னைமரியா திருத்தலம் எழுப்பப்பட்டது. அவ்வாலயம் 40 ஆண்டுகளுக்கு
முன்னர் அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திருப்பயணிகள் கர்தினால் மால்கம்
இரஞ்சித் அவர்கள் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. அல்ஜீரியா மற்றும் கொரிய மறைசாட்சிகளின் வாழ்வுமுறைகள் அங்கீகரிப்பு
பிப்.08,2014.
அல்ஜீரியா மற்றும் கொரிய மறைசாட்சிகளின் வாழ்வுமுறை மற்றும் மூன்று
இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளை இவ்வெள்ளி மாலை
அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள் இவ்வெள்ளி மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில்
சந்தித்து இவ்விறையடியார்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.
திருத்தந்தையும் அவற்றை ஏற்றுக்கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் Sassariல் 1564ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ்கன் சபையின் இறையடியார் Francesco Zirano 1603ம் ஆண்டின் சனவரி 25ம் தேதி அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகரில் கொல்லப்பட்டார்.
பொதுநிலை விசுவாசியான Paolo Yun Ji-chung மற்றும் அவரோடு சேர்ந்த 123 பேரும் 1791ம் ஆண்டுக்கும் 1888ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டனர்.
இவர்களுடன், மெக்சிகோ நாட்டு Saltillo ஆயர் Gesù Maria Echavarría y Aguirre, இத்தாலியின் பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர் Faustino Ghilardi, இஸ்பெயினின் இறையன்பு சகோதரிகள் சபையை நிறுவிய Maria Rocío di Gesù Crocifisso ஆகிய மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கிராக்கோவ் உலக இளையோர் தினத்துக்குத் திருத்தந்தை மீண்டும் அழைப்பு
பிப்.08,2014. அருளடையாளங்கள், சிறப்பாக, ஒப்புரவு
மற்றும் திருநற்கருணை அருளடையாளங்கள் கிறிஸ்துவைச் சந்திப்பதற்குத்
தனிச்சிறப்பான இடங்களைக் கொண்டுள்ளன என்று இச்சனிக்கிழமையன்று
வெளியிட்டுள்ள Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், போலந்து நாடு கிறிஸ்தவத்தைத் தழுவியதன் 1050ம் ஆண்டை முன்னிட்டு, 2016ம்
ஆண்டில் அந்நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர்
தினத்துக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகைதருமாறு மீண்டும்
அழைப்புவிடுத்துள்ளனர் போலந்து ஆயர்கள்.
அட் லிமினாவையொட்டி இவ்வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalik, அந்நாட்டின் 44 மறைமாவட்டங்களின் அறிக்கையைச் சமர்ப்பித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் அந்நாட்டுக்கு அழைத்தார்.
போலந்தின் ஏறக்குறைய 3 கோடியே 80 இலட்சம் மக்களில் 93 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும், அந்நாட்டில் 10 இறையியல் பல்கலைக்கழகங்களும், 4,262 குருத்துவ மாணவர்களும், 501 புகுமுகத் துறவியரும் உள்ளனர் என்றும் திருத்தந்தையிடம் கூறினார் பேராயர் Michalik.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. வளர்ச்சித் திட்டங்களின் சலுகைகளை அனைத்து மனிதரும் பெற வேண்டும், பேராயர் சுள்ளிக்காட்
பிப்.08,2014. மனித வரலாற்றில் முன்பு இருந்ததைவிட இக்காலத்தில் மக்களுக்கு இடையேயும், மக்கள் மத்தியிலும் பொருளாதார சமத்துவமின்மை அதிக அளவில் காணப்படும்வேளை, உலகின்
வளர்ச்சித் திட்டங்களின் நன்மைகளை மனிதக் குடும்பத்தின் அனைத்து
உறுப்பினர்களும் பெறுவற்கு உறுதி செய்யப்பட வேண்டும் என வத்திக்கான் உயர்
அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட இலக்குகள் குறித்த ஐ.நா. கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், உறுதியான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சி மூன்று இன்றியமையாத் தூண்கள் மீது தனது அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன எனக் கூறினார்.
இந்த வளர்ச்சித் திட்டச் சலுகைகளில் எந்த மனிதரும் ஒதுக்கப்படக் கூடாது எனவும், உலகளாவிய சமத்துவமின்மை பொருளாதார அல்லது நீதித் துறைகளில் மட்டுமல்லாது, இது முழு மனிதக் குடும்பத்தையுமே நெருக்கடிக்கு உட்படுத்தியுள்ளது எனவும் எச்சரித்தார் பேராயர் சுள்ளிக்காட்.
மனித
மாண்பு மறுக்கப்படுகிறவர்களில் பெண்களும் சிறுமிகளும் முதலிடத்தில்
உள்ளனர் எனவும் ஐ.நா. கூட்டத்தில் உரைத்த பேராயர் சுள்ளிக்காட், வீட்டு வன்முறை, பாலியல் வன்செயல்கள், கட்டாயத் திருமணம், மனித வியாபாரம், பெண் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்படுவது, கல்வி மறுக்கப்படுவது போன்றவற்றையும் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. பிப்ரவரி 11 முதல் தமிழகத் தொலைக்காட்சிகளில் மாதா டி.வி.
பிப்.08,2014. கத்தோலிக்க விசுவாசத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து அவற்றை ஆழப்படுத்தும் நோக்கத்தில், லூர்து அன்னமரியா விழாவான வருகிற செவ்வாயன்று, முதல் கத்தோலிக்கத் தமிழ்த் தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொடங்குகிறது.
மாதா
டி.வி. என்ற பெயரில் செவ்வாய் இந்திய நேரம் காலை 5 மணிக்குத் தொடங்கும்
இந்தத் தொலைக்காட்சி உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்க் கத்தோலிக்கரை
இணைக்கும் பாலமாக அமைகின்றது.
இளையோருக்கு, குழந்தைகளுக்கு என, தனித்தனி நிகழ்ச்சிகளை வழங்கவிருப்பதுடன், அன்றையப் புனிதர், திருப்பாடல்கள், விழா நல்வாழ்த்துக்கள், இறையும் இயற்கையும், திருப்பலிகள், திருஅவை சட்டம், அருளடையாளங்கள், மரியன்னை
பற்றிய தெளிவுகள் என பல்வேறு தலைப்புகளில் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை
ஒளிபரப்புவதற்குத் திட்டமிட்டுள்ளனர் இதன் ஒருங்கிணைப்பாளர்கள்.
மாதா டி.வி.யில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை, www.madhaTV.in என்ற இணையதள முகவரியிலும் நேரடியாகக் காணலாம். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களை, சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்திற்கு அனுப்புமாறு நேயர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி, இந்தியப் பிரிவு
6. அ.பணி செத்ரிக் பிரகாஷ் : குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு மறக்கப்படக் கூடாது
பிப்.08,2014. 2014ம் ஆண்டின் பொதுத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அவர்கள் நிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுவரும்வேளை, 2002ம் ஆண்டின் படுகொலைகளில் மோடியின் பங்கு மறக்கப்படக் கூடாது என நினைவுபடுத்தியுள்ளார் இயேசு சபை அருள்பணி செத்ரிக் பிரகாஷ்.
நரேந்திர மோடி அவர்களின் செயல்களும் சொற்களும் பின்பற்றக்கூடியவை என, இந்து அடிப்படைவாதிகள் கூறிவரும்வேளை, மோடி குறித்த தனது எச்சரிப்புக்களை முன்வைத்துள்ளார் அகமதபாத் பிரசாந்த் மைய இயக்குனர் அருள்பணி செத்ரிக் பிரகாஷ்.
பலர் நரேந்திர மோடி அவர்களின் பொருளாதாரத் திறமையைப் பாராட்டி வருகின்றனர், மோடியின் குஜராத் மாநிலம், இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் ஒன்று என்றெல்லாம் அவரைப் பற்றிப் பேசப்படுகின்றது என்றுரைத்துள்ள அருள்பணி செத்ரிக் பிரகாஷ், 2002ம்
ஆண்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறைக் கலவரங்கள்
இடம்பெற்றபோது மோடியின் நிலைப்பாட்டை பலர் மன்னிக்க மாட்டார்கள் என்று
தெரிவித்துள்ளார்.
இயேசு சபையினரின் பிரசாந்த் மையம், மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதிக்கான மையமாகும்.
ஆதாரம் : AsiaNews
7. உலக அளவில் தட்டம்மை இறப்புக்கள் குறைந்துள்ளன, WHO நிறுவனம்
பிப்.08,2014. சிறாருக்குத் தட்டம்மை தடுப்பூசிகள் போடப்படுவதன்மூலம் உலக அளவில் தட்டம்மையினால் ஏற்படும் இறப்புக்கள் குறைந்துள்ளன என WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
2000மாம்
ஆண்டுக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில்
தட்டம்மையினால் ஏற்படும் இறப்புக்கள் 78 விழுக்காடு குறைந்துள்ளன, ஆயினும், இதே
காலக்கட்டத்தில் ஏறக்குறைய 1 கோடியே 38 இலட்சம் இறப்புக்களைத்
தடுத்திருக்க முடியும் என உலக நலவாழ்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
தட்டம்மையினால் ஏற்படும் இறப்புக்கள் 2000மாம் ஆண்டில் 5,62,000க்கு அதிகமாக இருந்தன, ஆனால் இவ்வெண்ணிக்கை, 2012ம் ஆண்டில் 1,22,000மாகக் குறைந்தது என WHO நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
தற்போது உலகின் 84 விழுக்காட்டுக் குழந்தைகளுக்கு, அவை
ஒரு வயதை எட்டுவதற்கு முன்னமே முதல்கட்ட தட்டம்மை தடுப்பூசிகள்
போடப்படுகின்றன. உலகின் 145 நாடுகள் இரண்டாம்கட்ட தட்டம்மை தடுப்பூசிகள்
போடவும் துவங்கியுள்ளன.
ஆதாரம் : BBC
8. ஆராய்ச்சித் துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது இந்தியா
பிப்.08,2014. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட தேசிய அறிவியல் மையம், 2010ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்காவின் பங்கு 4070 கோடி டாலர்களாகவும், 2011ம் ஆண்டில் 4240 கோடி டாலர்களாகவும் உயர்ந்து, தற்போது வரை அந்நாடு முதலிடத்தையே வகித்து வருகிறது எனக் கூறியது.
2011ம் ஆண்டில் சீனா 2080 கோடி டாலர்களை முதலீடு செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த முதலீடு அமெரிக்காவின் முதலீட்டில் பாதியாகும். மேலும், 1470 கோடி டாலர்களை முதலீடு செய்து ஜப்பான் மூன்றாமிடத்தில் உள்ளது. ஆல் இந்தியா, கடந்த 2007ம் ஆண்டில் 240 கோடி டாலர்களை முதலீடு செய்தது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது என தேசிய அறிவியல் மையம் கூறியது.
ஆதாரம் : தினமணி
No comments:
Post a Comment