செய்திகள் - 06.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - மலிவான விலைகளுக்கு இவ்வுலகம் விற்பனை செய்யும் மகிழ்வைவிட கிறிஸ்து வழங்கும் மகிழ்வு சிறந்தது
2. திருத்தந்தையின் மறையுரை - நமது வாழ்வை நம்பிக்கையுடன் இறைவன் கரங்களில் ஒப்படைப்பது மிக உயர்ந்ததொரு கொடை
3. அர்ஜண்டீனா தீவிபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுதாபத் தந்தி
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson ஏலம்
5. இத்தாலியின் வெனிஸ் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய வறியோர் இல்லம் திறப்பு
6.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
ஐ.நா.வின் சிறப்புக் குழு சரிவர புரிந்துகொள்ளவில்லை - பேராயர் Tomasi
7. மருந்துகள் திரட்டும் நாளுக்கு பேராயர் Zygmunt Zimowski வெளியிட்டுள்ள செய்தி
8. புனித யோசேப்பு காலனியைத் தீயிட்டவர்களுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - மலிவான விலைகளுக்கு இவ்வுலகம் விற்பனை செய்யும் மகிழ்வைவிட கிறிஸ்து வழங்கும் மகிழ்வு சிறந்தது
பிப்.06,2014. 'பேறுபெற்றோர்' என்று இயேசு மலைப்பொழிவில் வழங்கிய உண்மைகளை தன் வாழ்வில் கடைபிடித்தார்; இவ்வுலகம்
காட்டிய வழிகளுக்கு எதிர் சாட்சியாய் வாழ்ந்த அவரைப் போல் வாழ்வது நமக்கு
முன் உள்ள சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் 13ம் தேதி, குருத்து ஞாயிறன்று கொண்டாடப்படும் 29வது உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பெயரால் முதன்முதலாக வெளியிட்டுள்ள இளையோர் நாள் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த
ஆண்டு ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற உலக
இளையோர் நாள் நிகழ்வுகளை மீண்டும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு, 'பேறுபெற்றோர்' என்று ஆரம்பித்து, இயேசு கூறிய மூன்று உண்மைகளை தன் செய்திகளின் மையக்கருத்தாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்பது இவ்வாண்டுக்கான கருத்து என்றும், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” என்பது, 2015ம் ஆண்டுக்கான கருத்து என்றும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, 2016ம் ஆண்டு போலந்து நாட்டின் Krakow நகரில் நடைபெறும் இளையோர் நாளன்று “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்பது மையக்கருத்தாக அமையும் என்று தன் செய்தியில் அறிவித்துள்ளார்.
மலிவான விலைகளுக்கு இவ்வுலகம் விற்பனை செய்யும் மகிழ்வை, ஒரு விற்பனைப் பொருளாகப் பெறுவதற்குப் பதில், பரந்து விரிந்த உள்ளத்துடன் வாழ்வதால் நாம் அடையக்கூடிய மகிழ்வை, கிறிஸ்துவின் மழைப்பொழிவு நமக்குத் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்று கடந்த இளையோர் நாள் கொண்டாடிய மையக் கருத்தும், கிறிஸ்து அளிக்கும் 'பேறுபெற்றோர்' கருத்துக்களும் கொண்டுள்ள தொடர்பை திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், ஏப்ரல் மாதம் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இளையோருக்கு ஒரு சிலுவையை அளித்து, இளையோர் நாளைத் துவக்கிவைத்தார் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் நினைவுறுத்தி, இவ்வாண்டு திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வில், அவரை, இளையோர்
நாள் நிகழ்வுகளுக்குப் பாதுகாவலாராகவும் நாம் கொண்டாடுவோம் என்ற
வார்த்தைகளுடன் திருத்தந்தை தன் 2014ம் ஆண்டு இளையோர் நாள் செய்தியை நிறைவு
செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையின் மறையுரை - நமது வாழ்வை நம்பிக்கையுடன் இறைவன் கரங்களில் ஒப்படைப்பது மிக உயர்ந்ததொரு கொடை
பிப்.06,2014. திருஅவையின் உறுப்பினராக இறப்பது, நம்பிக்கையோடு இறப்பது, மற்றும்
கிறிஸ்தவ சாட்சியாக இறப்பது என்ற மூன்று கருத்துக்களை திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் தன் திருப்பலி மறையுரையாக
வழங்கினார்.
மன்னன் தாவீதின் இறப்பைக் குறிப்பிடும் இன்றைய முதல் வாசகத்தை மையப்படுத்தி புனித மார்த்தா இல்லத்தில் வழங்கிய மறையுரையில், தன் மக்களுக்கு மத்தியில் தாவீது இறந்ததையும், தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தாலும், நம்பிக்கையோடு இறைவனடி சேர்ந்ததையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
மரணத்திற்குப்
பின் நமது தந்தை நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் என்ற உணர்வுடன் நமது
வாழ்வை நம்பிக்கையுடன் அவர் கரங்களில் ஒப்படைப்பது மிக உயர்ந்ததொரு கொடை
என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அத்தகையக் கொடைக்காக மன்றாடுவோம் என்று கூறினார்.
ஒவ்வொருவரும் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, மக்களை விட்டுச் செல்லுதல், ஒரு மரத்தை நடுதல், ஒரு
புத்தகத்தை எழுதி விட்டுச் செல்லுதல் என்று தன் நினைவாக எதையாவது விட்டுச்
செல்ல முயல்கிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தாவீது தனக்குப் பின், அறிவு நிறைந்த, இறைவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு மகனை விட்டுச் சென்றார் என்று கூறினார்.
மன்னன் தாவீதின் பரிந்துரை மூலம், நாம் திருஅவையில் இறப்பது, நம்பிக்கையோடு இறப்பது, நல்லதொரு நினைவை விட்டுச் செல்வது என்ற மூன்று வரங்களை வேண்டுவோம் என்று தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அர்ஜண்டீனா தீவிபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுதாபத் தந்தி
பிப்.06,2014. அர்ஜண்டீனா நாட்டில் Buenos Aires மாநகரின் Barracas பகுதியில்
இப்புதன் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தன்
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் தந்தி ஒன்றை
அனுப்பியுள்ளார்.
Buenos Aires பேராயர் Aurelio Mario Poli அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை, திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்கள் அனுப்பியுள்ளார்.
Barracas பகுதியில் அமைந்துள்ள வங்கி விவரங்கள் சேகரிக்கும் அலுவலகம் ஒன்றில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களும், உதவிகள்
செய்யச் சென்றிருந்த தன்னார்வத் தொண்டர்களும் அடங்கிய குழுவின் ஒன்பது
பேர் இத்தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தங்கள்
கடமைகளை நிறைவேற்றிய நேரத்தில் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டவர்களை
நாம் நன்றியோடும் பெருமையோடும் எண்ணிப் பார்ப்போம் என்றும், இவர்களின்
பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு நம் ஆதரவை வழங்குவோம் என்றும்
திருத்தந்தை தன் அனுதாபத் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson ஏலம்
பிப்.06,2014. அண்மையில் இத்தாலியில் பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள Tuscany, Latium ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டு, அவர்களுக்குத் தன் தனிப்பட்ட செபங்களை அர்ப்பணித்தார்.
அதேபோல், நிலவிவந்த கடுமையான குளிர் மற்றும் மழை காரணமாக புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு வரமுடியாமல், திருத்தந்தை ஆறாம் பவுல் மன்றத்தில் கூடி, தன் மறையுரைக்குச் செவிமடுத்துவரும் நோயுற்றோருக்கு தன் செபங்கலையும், ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson நிறுவனத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகனம் ஒன்று, பிப்ரவரி 6, இவ்வியாழனன்று பிரான்ஸ் நாட்டில் ஏலத்தில் விடப்பட்டு, அந்தத் தொகை உரோம் நகரில் திருத்தந்தையின் பெயரால் நிகழும் பிறரன்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வுலகம், நம்மைப் பற்றியும், நமது உடைமைகள், நமது ஆசைகள் பற்றியும் நம் கவனத்தை ஈர்க்கின்றது; நற்செய்தியோ, அடுத்தவர்களை, குறிப்பாக ஏழைகளை நோக்கி நம் மனங்களைத் திருப்ப அழைப்பு விடுக்கிறது என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இத்தாலியின் வெனிஸ் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய வறியோர் இல்லம் திறப்பு
பிப்.06,2014.
இறைவனின் மக்களுக்கு மத்தியில் வறியோருக்கு பெருமைக்குரிய ஓர் இடத்தை
உருவாக்கியிருக்கும் அவரது பராமரிப்புக்கு நன்றி என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியின் வெனிஸ் பகுதியில், Marghera என்ற ஊரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய ஒரு வறியோர் இல்லத்தை, திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்கள் பிப்ரவரி 5, இப்புதன் மாலை திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெனிஸ் நகர் பேராயர் Francesco Moraglia அவர்கள் வழியே வழங்கியச் செய்தியை, திருப்பீடச் செயலர் இத்தருணத்தில் வாசித்தார்.
புனித
யோசேப்பு அவர்களின் பாதுகாவலில் அமைந்துள்ள இந்த வறியோர் இல்லத்திற்கு தன்
பெயரை வழங்கியுள்ளதற்காக தன் நன்றியைத் தெரிவித்தத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்திற்குள் வரவேற்கப்படும் ஒவ்வொரு மனிதர் வடிவிலும் கிறிஸ்துவே வரவேற்கப்படுகிறார் என்று கூறினார்.
பல்லாயிரம் எளிய மனிதர்களும், கைம்பெண்களும், ஓய்வுபெற்றுள்ள
மனிதர்களும் பங்குகளில் அளிக்கும் நிதி உதவியுடன் இத்தகைய இல்லங்கள்
எழுப்படுகின்றன என்பதை நன்றியோடு நினைவில் கொள்வோம் என்று திருப்பீடச்
செயலர் தன் உரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
ஐ.நா.வின் சிறப்புக் குழு சரிவர புரிந்துகொள்ளவில்லை - பேராயர் Tomasi
பிப்.06,2014. சிறுவர் சிறுமியருக்கு எதிராக திருஅவை பணியாளர்களால ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகளைக் களைவதற்கு, திருஅவை தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும், இத்தகையக்
கொடுமைகள் மீண்டும் நிகழாதவண்ணம் ஒழுங்கு முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன
என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொண்ட ஐ.நா.வின் சிறப்புக் குழு ஒன்று, தன் 65வது அமர்வுக்கு இறுதியில், அறிக்கையொன்றை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் காங்கோ, ஜெர்மனி, போர்த்துகல், இரஷ்யா, ஏமன் ஆகிய நாடுகளிலும் வத்திக்கானிலும் குழந்தைகள் உரிமைகள் எந்நிலையில் உள்ளதென்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைக்குப் பதில் அளிக்கும்வண்ணம், திருப்பீடத்தின் சார்பில், ஐ.நா.வின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Silvano Maria Tomasi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வறிக்கை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறினார்.
திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வேறு எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்றும் பேராயர் Tomasi அவர்கள் தெரிவித்தார்.
குழந்தைகள் உரிமைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட இந்த ஐ.நா. குழு, கருத்தடை, ஒரே பாலின உறவு ஆகியவற்றில் திருஅவையின் நிலைப்பாடு குறித்து இவ்வறிக்கையில் கேள்விகள் எழுப்பியிருப்பது, வருத்தத்திற்குரியது மற்றும் தேவையற்றது என்று பேராயர் Tomasi அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின்
குழு வெளியிட்டுள்ள இவ்வறிக்கைக்குப் பதில்தரும் வகையில் திருப்பீடமும்
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்
அனைத்து முயற்சிகளையும் திருஅவை தளராமல், தீவிரமாக மேற்கொள்ளும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மருந்துகள் திரட்டும் நாளுக்கு பேராயர் Zygmunt Zimowski வெளியிட்டுள்ள செய்தி
பிப்.06,2014. மக்களுக்கு, குறிப்பாக, வறியோருக்குத் தேவையான அடிப்படை மருந்துகளைத் திரட்டவும், அவற்றை அவர்களுக்கு வழங்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று சிறப்பிக்கப்படும் நோயுற்றோருக்கான உலக நாளையொட்டி, பிப்ரவரி 8, இச்சனிக்கிழமை மருந்துகள் திரட்டும் நாளென கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாளையொட்டி, நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியில், தேவையானாவர்களுக்கு மருந்துகள் வழங்கும்படி விண்ணப்பித்துள்ளார்.
தேவையான உடல் நலக் கண்காணிப்பும், தேவையான மருந்துகளும் உரிய நேரத்தில் வறியோரைச் சென்றடைவது பல உயிர்களைக் காக்கும் என்று பேராயர் Zimowski அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
8. புனித யோசேப்பு காலனியைத் தீயிட்டவர்களுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
பிப்.06,2014. பாகிஸ்தான், லாகூர்
நகரில் சென்ற ஆண்டு புனித யோசேப்பின் பெயர் தாங்கிய காலனி ஒன்று
தீயிடப்பட்ட வன்முறையில் ஈடுபட்டோருக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன்
அளிக்க மறுத்துள்ளது.
2013ம் ஆண்டு சவன் மாசி (Savan Masih) என்பவர் தேவ நிந்தனை செய்தார் என்ற போய் குற்றம் சுமத்தப்பட்டதால், அவர் வாழ்ந்த புனித யோசேப்பு காலனி, மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இந்த வன்முறையில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 36 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 47 பேர் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவர்களுக்கு ஜாமீன் மறுத்து, லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வன்முறையால் பாகிஸ்தான், உலக மக்கள் முன் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், சிறுபான்மையினர்
பாகிஸ்தானில் வாழமுடியாது என்ற கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த
வன்முறை நிகழ்ந்துள்ளது என்றும் லாகூர் உயர் நீதி மன்றம் தன் தீர்ப்பில்
கூறியுள்ளது.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டுள்ள Savan Masih அவர்கள், எவ்வித விசாரணையும் இன்றி, கடந்த ஓராண்டளவாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment