1. ஒவ்வொரு நாளும் 'இன்று தூய ஆவியார் எனக்குள் என்ன செயல்கள் ஆற்றினார்?' என்ற கேள்வியை எழுப்பவேண்டும் - திருத்தந்தை அழைப்பு
2. சுவிஸ் வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் திருத்தந்தையின் சிறப்பான நன்றி
3. திருத்தந்தையுடன் சுவிஸ் கூட்டாட்சி அமைப்பின் தலைவர் சந்திப்பு
4. திருத்தந்தை பிரான்சிஸ் - பக்தி முயற்சிகள் இயேசுவைச் சந்திக்கும் ஒரு சிறப்பான தளம்
5. திருத்தந்தையின் அல்லேலுயா வாழ்த்தோலி உரை
6. திருத்தந்தை : சுதந்திரம் என்பது, வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதைக் குறிப்பிடுகின்றது
7. கொலையுடன் தொடர்பற்ற 7 கிறிஸ்தவர்கள் நான்கரை ஆண்டுகளாக சிறையில்
8. மொரோக்கோவில் மதம் மாறுபவர்கள் கொல்லப்படும் அச்சம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஒவ்வொரு நாளும் 'இன்று தூய ஆவியார் எனக்குள் என்ன செயல்கள் ஆற்றினார்?' என்ற கேள்வியை எழுப்பவேண்டும் - திருத்தந்தை அழைப்பு
மே,06,2013. 'துணையாளர்' என்று இயேசு அழைத்த தூய ஆவியார் நம் ஒவ்வொருவருக்குள்ளும் தங்கி நம்மைக் காக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை, இன்றைய நாளின் வாசங்களை, சிறப்பாக நற்செய்தியில் கூறப்பட்டுள்ள தூய ஆவியாரை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலியில், இப்பேராலய முதன்மை குருவான கர்தினால் Angelo Comastri கலந்து கொண்டார்.
பவுல் அடியாரின் வார்த்தைகளைக் கேட்டு, தன் இதயத்தை தூய ஆவியாருக்குத் திறந்த லீதியா என்ற பெண்ணின் எடுத்துக்காட்டைக் கூறியத் திருத்தந்தை, இயேசுவையும், அவரது செய்தியையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள தூய ஆவியார் உதவுகிறார் என்பதையும் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 'இன்று தூய ஆவியார் எனக்குள் என்ன செயல்கள் ஆற்றினார்?' என்ற கேள்வியை எழுப்பி, ஓர் ஆன்ம ஆய்வில் ஈடுபடுவது பயனளிக்கும் என்று திருத்தந்தை அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இறைவனின்
அன்புக்கும் கருணைக்கும் சக்திவாய்ந்த ஒரு சாட்சியாக நம் வாழ்வின் அனைத்து
அம்சங்களும் அமையும்படி ஆண்டவரின் உதவியை மன்றாடுவோம் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சுவிஸ் வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் திருத்தந்தையின் சிறப்பான நன்றி
மே,06,2013. அர்ப்பண சிந்தையோடும், முழு ஈடுபாட்டுடனும் நீங்கள் செய்துவரும் சேவைகளை ஒவ்வொரு நாளும் நான் கண்டு வருகிறேன், உங்கள் தாராள உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மெய்காப்பாளர்களிடம் கூறினார்.
திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களாக பணியாற்றிவரும் சுவிஸ் வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் இத்திங்கள் நண்பகல் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அந்த வீரர்களை இப்பணிக்கு மகிழ்வுடன் அளித்த குடும்பத்தினருக்கும் தன் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.
1527ம் ஆண்டு மே 6ம் தேதி, உரோமையப் பேரரசர் 5ம் சார்ல்ஸ் படைவீரகளுக்கும், திருத்தந்தையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவிஸ் வீரகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், 147
சுவிஸ் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்தத் தியாகச் செயலின் நினைவைக்
கொண்டாடும் இத்திங்களன்று சுவிஸ் வீரகளைச் சந்தித்தத் திருத்தந்தை, இந்த வரலாற்று நிகழ்வை இன்னும் பெருமையுடன் எண்ணிப் பார்க்க முடிகிறது என்று கூறினார்.
இவ்வீரர்கள் தங்கள் இளமைப் பருவத்தை இத்தகைய உன்னதப் பணியில் செலவழிப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, திருமுழுக்கில்
அவர்கள் பெற்ற கொடையை இன்னும் ஆழப்படுத்த இந்தக் காவல் பணி இன்னும் பெரும்
உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.
இறைவன் அவர்களோடு என்றும் துணையாக நடக்கிறார் என்பதை தன் உரையில் இறுதியில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவிஸ் வீரகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையுடன் சுவிஸ் கூட்டாட்சி அமைப்பின் தலைவர் சந்திப்பு
மே,06,2013. சுவிஸ் கூட்டாட்சி அமைப்பின் தலைவர் Ueli Maurer, இத்திங்களன்று காலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தைக்கு மெய்க்காப்பாளர்களாகச் செயல்படும் சுவிஸ் காவல்படையினர் ஒவ்வோர் ஆண்டும் பதவிப்பிரமாணம் எடுக்கும் மே 6ம் தேதியான இத்திங்களன்று திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்சந்திப்பின் இறுதியில், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன்
உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி
ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் சுவிஸ்
கூட்டமைப்பின் தலைவர்,.
சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் ஆற்றிவரும் சிறப்புப்பணிகள், திருப்பீடத்திற்கும் சுவிஸ் நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவு, சுவிஸ் தலத்திருஅவைக்கும் அரசுக்கும் இடையே உள்ள நல்லுறவுகள் ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.
இருநாடுகளுக்கும் பொதுவான ஆர்வமுடய விடயங்களான மனித உரிமைகள், இளைஞர்களுக்கு பயிற்சியளித்து உருவாக்குதல், நீதி
அமைதியை ஊக்குவிக்கும் நோக்கிலான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும்
திருப்பீட அதிகாரிகளுடன் விவாதித்தார் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் Ueli Maurer என திருப்பீட பத்திரிகைத்துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் - பக்தி முயற்சிகள் இயேசுவைச் சந்திக்கும் ஒரு சிறப்பான தளம்
மே,06,2013. நற்செய்தியைப் பரப்புதல், திருஅவையாக வாழுதல், மறைபரப்புப் பணியில் ஈடுபடுதல் என்ற மூன்றையும் உங்களுக்கு முன் வைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தொடர்ந்து
பெய்த மழையிலும் இஞ்ஞாயிறன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் புனித
பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கலந்து கொண்ட திருப்பலியை முன்னின்று
நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் துணிவுடன் வந்திருக்கும் விசுவாசிகளைப் பாராட்டி, தன் மறையுரையைத் துவக்கினார்.
பல்வேறு நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் உருவாகி கடைபிடிக்கப்படும் பக்தி முயற்சிகளின் அமைப்புக்களை, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை, நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக வத்திக்கானுக்கு அழைத்திருந்தது.
இந்த
அழைப்பை ஏற்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த
விசுவாசிகளுக்கு திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பக்தி முயற்சிகள் இயேசுவைச் சந்திக்கும் ஒரு சிறப்பான தளம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த பக்தி முயற்சி அமைப்புக்களைக் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பேசுகையில், இவ்வமைப்பினரின் பணிகளாக, நற்செய்தி பரப்புதல், திருஅவையாக வாழ்தல் என்ற இரு அம்சங்களைக் குறிப்பிட்டார் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவதாக, மறைபரப்புப் பணியில் ஈடுபடுவதும் இவ்வமைப்பினரின் பணிகளில் ஒன்று என்று எடுத்துரைத்தார்.
குழந்தைகளுடன் திருத்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் அறிமுகப்படுத்தும் அற்புதமான நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பதை, திருத்தந்தை பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தையின் அல்லேலுயா வாழ்த்தோலி உரை
மே,06,2013.
ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி இஞ்ஞாயிறன்று கிறிஸ்து உயிர்ப்புப்
பெருவிழாவைச் சிறப்பித்த கீழைரீதி கிறிஸ்தவ சபைகளுக்கு தன் இஞ்ஞாயிறு
அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது தனிப்பட்ட வாழ்த்துக்களை வெளியிட்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற நற்செய்தியை அனைத்துக் கிறிஸ்தவ சபைகளோடும் என் முழு இதயத்தோடு இணைந்து அறிவிப்பதோடு, அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என தெரிவித்தார் பாப்பிறை.
அன்னைமரி மீதான பக்தி முயற்சிகள் குறித்தும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை, அன்னைமரி மீது நாம் கொண்டிருக்கும் அன்பு உயர்வானதாக மதிக்கப்பட்டு நன்முறையில் ஒருமுகப்படுத்தப்படவேண்டும் என்று கூறினார்.
அன்னை மரி குறித்து வத்திக்கான் சங்க ஏட்டின் ‘லூமன் ஜென்சியும்’ பகுதியில் கூறப்பட்டிருப்பவைகள் குறித்து ஆழ்ந்து தியானிக்குமாறும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை. இந்த நம்பிக்கை ஆண்டில், இயேசுவைப் பின்தொடர்வதில் நம் அனைவருக்கும் முன்னோடியாகச் செல்கிறார் அன்னை மரி எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தை : சுதந்திரம் என்பது, வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதைக் குறிப்பிடுகின்றது
மே,06,2013. சுதந்திரம் என்பதன் அர்த்தம் நமக்குத் தேவையில்லாததை எல்லாம் சன்னல் வழி தூக்கி எறிவதைக் குறிக்கவில்லை, மாறாக, வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதைக் குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்
நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் இம்மாதத்தின் முதல்
சனிக்கிழமையன்று விசுவாசிகளோடு இணைந்து ஜெபமாலை செபித்த திருத்தந்தை, அதன்பின் மக்களுக்கு ஆற்றிய உரையில், நாம் வளர்வதற்கும், வாழ்வை எதிர்கொள்வதற்கும், சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் நம் நல்ல அன்னையாம் மரியா உதவுவாராக என வேண்டினார்.
நம் நலத்திற்கு காவலராக இருக்கும் அன்னை மரியா, தன் குழந்தைகளின் நலன் குறித்து அக்கறையுள்ளவராகச் செயல்படுவதுடன், குணப்படுத்துவது குறித்தும் தெரிந்தவராக இருக்கிறார் என்றார் பாப்பிறை.
தன் குழந்தைகள் நன்முறையில் வளரவேண்டும் என்பதில் ஆர்வமுடைய அன்னை மரியா, நாம் சோம்பேறித்தனத்திற்கு நம்மை கையளிக்காமலும், எளிதான ஒரு சுக வாழ்வை நாடி ஓடாமலும், நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமையாகாமலும், நம் பொறுப்புணர்வுகளை உணர்ந்து செயல்பட உதவுகிறார் என்றார் திருத்தந்தை.
நம் வளர்ச்சியில் நம்மோடு துணைவரும் அன்னை மரியா, நாம் சுதந்திரமாக சில முடிவுகளை எடுப்பதற்கும் நமக்கு உதவுகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை
ஆதாரம் வத்திக்கான் வானொலி
7. கொலையுடன் தொடர்பற்ற 7 கிறிஸ்தவர்கள் நான்கரை ஆண்டுகளாக சிறையில்
மே,06,2013. ஒரிசாவில் இந்து மத தலைவர் லக்ஷ்மானந்தா 2008ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டதற்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள போதிலும், இக்கொலை
தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட ஏழு கிறிஸ்தவர்களும் விடுதலை
செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள்
கவலையை வெளியிட்டிடுள்ளனர்.
கடந்த
நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்த 7 கிறிஸ்தவர்கள் மீதான
விசாரணைகள் மீண்டும் ஒருமுறை இம்மாதம் 22ம் தேதிக்கென
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு
நாட்களும் விரைவு நீதிமன்றம் எனப்படும் சிறப்பு நீதிமன்றத்தில்
நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கு தற்போது வழக்கமான நீதிமன்றத்தின் கைகளில்
வழங்கப்பட்டுள்ளது, காலதாமதத்திற்கே வழிவகுக்கும் எனவும் கிறிஸ்தவத்தலைவர்கள் தங்கள் கவலையை மேலும் வெளியிட்டுள்ளனர்.
ஆதாரம் Asia News
8. மொரோக்கோவில் மதம் மாறுபவர்கள் கொல்லப்படும் அச்சம்
மே,06,2013. இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குச் செல்பவர்கள் கொலைசெய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மொரோக்கோ நாட்டு கிறிஸ்தவர்களிடையே அச்சம் நிலவிவருவதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறிய பலர் அச்சத்திலேயே வாழ்வதாகவும், காவல்துறையினர் தங்களைப் பின்தொடர்வதை அவர்கள் தற்போது பெரிய அளவில் உணர்வதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிலிருந்து
வேறு மதத்திற்குச் செல்பவர்கள் கொல்லப்படவேண்டும் என இஸ்லாமிய
தீவிரவாதக்குழுக்கள் தங்களுக்குள்ளேயே சட்டம் இயற்றியிருப்பது, நாட்டில் சனநாயகமும் சுதந்திரமும் இல்லை என்பதையே காண்பிக்கிறது என உரைக்கும் மொரோக்கோ கிறிஸ்தவர்கள், எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் ANS
No comments:
Post a Comment