Monday, 6 May 2013

Catholic News in Tamil - 04/05/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : சாந்தம் மற்றும் மனத்தாழ்மையுடன் தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கம் : அன்னைமரியிடம் செபியுங்கள்

3. வன்முறைகள் நிறுத்தப்படுமாறு வெனெசுவேலா கர்தினால் வேண்டுகோள்

4. ஆர்த்தடாக்ஸ் பேராயர் Kawak : சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு துருக்கி உதவ வேண்டும்

5. புத்த மதத்தினருடன் உரையாடல் நடத்த Galle ஆயர் அழைப்பு

6. West Bankல் பிரிவினைச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு வேண்டுகோள்

7. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டங்கள் அடிப்படைக் காரணங்களைக் களையத் தவறியுள்ளன, ஐ.நா. வல்லுனர்

8. ஆப்கான் எல்லைக்கு அருகில் 13 ஆயிரம் பாகிஸ்தான் குடும்பங்கள்  புலம்பெயரக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : சாந்தம் மற்றும் மனத்தாழ்மையுடன் தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்

மே,04,2013. நாம் எப்பொழுதும் சாந்தம் மற்றும் மனத்தாழ்மையைக் கொண்டிருந்து, இவ்வுலகின் வெற்று வாக்குறுதிகளையும் வெறுப்பையும் எதிர்த்து வெல்ல வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில், கிறிஸ்துவின் அன்புக்கும், இவ்வுலகின் வெறுப்புக்கும் இடையேயான போராட்டம் குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகின் வெறுப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மனத்தாழ்மை, சாந்தம் ஆகிய ஆயுதங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இம்மறையுரையில் கூறிய திருத்தந்தை, இவ்வுலகம் உங்களை வெறுக்கும்போது பயப்பட வேண்டாம், ஏனெனில் அது என்னையும் வெறுத்தது என்று இயேசு கூறியதையும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர்களின் பாதை இயேசுவின் பாதை என்றும், இயேசுவை நாம் பின்பற்ற விரும்பினால் உலகின் வெறுப்பை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, உலகம் அதற்குரியதை அன்புசெய்யும் என்றும் கூறினார்.
சாத்தான் நாம் மீட்படைவதை வெறுக்கிறான், இதனாலேயே திருஅவை தொடக்கமுதல் இன்றுவரை வெறுப்பையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றது, முந்தையக் காலங்களைவிட இந்த நாளில், இந்த நேரத்தில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவ சமூகங்கள் பல உள்ளன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மனிதர் மத்தியில் உரையாடல் தேவைப்படுகின்றது, இது அமைதிக்கு அவசியமானது என்று கூறினார்.
திருப்பீட ஆயர்கள் பேராயச் செயலர் பேராயர் Lorenzo Baldisseri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து இச்சனிக்கிழமை காலையில் திருப்பலி நிகழ்த்தினார். இத்திருப்பலியில் சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களில் சிலர் கலந்து கொண்டனர். இத்திருப்பலியின் முடிவில் இவ்வீரர்களிடம் திருத்தந்தை, திருஅவை உங்களை அதிகம் அன்புசெய்கின்றது, அதேபோல் நானும் உங்களை அதிகம் அன்புசெய்கின்றேன் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கம் : அன்னைமரியிடம் செபியுங்கள்

மே,04,2013. நமது தினசரி வாழ்வில் நமது விசுவாசத்தை எப்படி வாழ்வது மற்றும் ஆண்டவருக்கு நம் வாழ்வில் அதிக இடம் எப்படி ஒதுக்குவது என்பது குறித்து நமக்குக் கற்றுத் தருமாறு நம் அன்னையிடம் கேட்போம்
இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பல பொதுநிலை பக்தசபைகளின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அனைத்து விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது திருத்தந்தை அவர்களின் இச்சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வன்முறைகள் நிறுத்தப்படுமாறு வெனெசுவேலா கர்தினால் வேண்டுகோள்

மே,04,2013. வெனெசுவேலாவில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அந்நாட்டினர் செவிமடுக்குமாறு கேட்டுள்ளார் தலைநகர் கரகாஸ் கர்தினால் Jorge Urosa Savino.
அண்மையில் அந்நாட்டின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Nicolas Maduro நிர்வாகத்துக்கும், எதிர்க்கட்சி வேட்பாளர் Henrique Caprilesவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சொற்போர்கள், அச்சுறுத்தல்கள் உட்பட வெனெசுவேலாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உரையாடலும் நன்மதிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Urosa.
வெனெசுவேலா மக்கள் தற்போது அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக உரைத்துள்ள கர்தினால் Urosa, இரு அரசியல் கட்சிகளுமே ஒன்றையொன்று அங்கீகரித்தால் மட்டுமே ஒரு சுமுகமான தீர்வை அடைய முடியும் என்ற அந்நாட்டின் ஆயர்களின் அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் சாலைகளில் அதிகரித்துவரும் பாதுகாப்பின்மை, அந்நாட்டின் 80 விழுக்காட்டு மக்களையும், திருஅவையையும் பாதித்துள்ளது எனவும், கரகாஸ் கர்தினால் Urosa ஒரு நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.   

ஆதாரம் : CNA                            

4. ஆர்த்தடாக்ஸ் பேராயர் Kawak : சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு துருக்கி உதவ வேண்டும்

மே,04,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள எமது இரண்டு ஆயர்கள் விடுதலை செய்யப்படுவதில் துருக்கிக்கு முக்கியமான பங்கு உள்ளது என்று சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரின் அலுவலகத்துக்குப் பொறுப்பான பேராயர் Jean Kawak கூறியுள்ளார்.
சிரியாவின் வட பகுதி முழுவதும் ஏதோ ஒருவகையில் தற்போது துருக்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடத்தப்பட்டுள்ள இவ்விரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு, கடத்தல்காரர்களுடன் துருக்கி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது என்று Fides செய்தி நிறுவனத்திடம்            கூறியுள்ளார் பேராயர் Kawak.
இவ்விரு ஆயர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு தூதரக மற்றும் மனிதாபிமான முயற்சிகளிலும் துருக்கி நாட்டின் தலைவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் Kawak.
சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் Gregorios Yohanna Ibrahim, சிரியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yazigi ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 22ம் தேதி மனிதாபிமானப் பணிகளை முடித்துத் திரும்பியபோது அலெப்போவுக்கு அருகில் கடத்தப்பட்டனர்.

ஆதாரம் : Fides                         

5. புத்த மதத்தினருடன் உரையாடல் நடத்த Galle ஆயர் அழைப்பு
மே,04,2013. இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் மிகவும் கவலைதரும்வேளை, நாட்டில் சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உரையாடலும் ஆர்வமும் அவசியம் என்று Galle ஆயர் Raymond Wickramasinghe கூறியுள்ளார்.
வேசாக் புத்தமத விழாவையொட்டி புத்தமதத்தினருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்திக்கு நன்றி தெரிவித்த ஆயர் Wickramasinghe, இலங்கையில் இடம்பெற்றுவரும் அனைத்து விதமான வன்முறைகளுக்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
புத்தமதத் தீவிரவாதிகளால் இடம்பெற்றுள்ள வன்முறைகள் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஆயர் Wickramasinghe, மக்கள் அனைவரும் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழவும், சமய, இனப் பாகுபாடின்றி ஒவ்வொருவரின் மனித மாண்பு மதிக்கப்படவும் இலங்கையின் சமயத் தலைவர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides

6. West Bankல் பிரிவினைச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு வேண்டுகோள்

மே,04,2013. பாலஸ்தீனாவின் West Bankல் பிரிவினைச் சுவரைக் கட்டுவது குறித்த இஸ்ரேலின் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் கேட்டுள்ளனர் பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள்.
பெத்லகேமுக்கு அருகிலுள்ள Beit Jala நகரின் கிறிஸ்தவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், நீதியும் அமைதியும் இன்னும் இயலக்கூடியதே என்ற தங்களது நம்பிக்கையைத் தொடர்ந்து உயிரூட்டம் பெறச்செய்வதற்கு உதவியாக திருத்தந்தையிடம் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக கூறப்பட்டுள்ளது.
எருசலேம் மற்றும் பிற புனித இடங்களிலிருந்து பெத்லகேமைப் பிரிக்கும் சுவரை, பாலஸ்தீனியப் பகுதியை ஆக்ரமித்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் ஏற்கனவே கட்டத் தொடங்கியுள்ளது எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
170 ஹெக்டேர் அளவுள்ள Cremisan பள்ளத்தாக்கு வழியாகப் பரிவினைச் சுவரைக் கட்டுவதற்கு ஆதரவாக கடந்த வாரத்தில் இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் நிலப்பகுதியிலும், அங்குள்ள திராட்சைத் தோட்டங்களிலும் Beit Jala நகரின் பல கிறிஸ்தவர்கள் வேலை செய்கின்றனர். 
இதற்கிடையே, பிரிவினைச் சுவர்களைக் கட்டுவது சட்டத்துக்கு முரணானது என்று 2004ம் ஆண்டில் அனைத்துலக நீதியியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டங்கள் அடிப்படைக் காரணங்களைக் களையத் தவறியுள்ளன, ஐ.நா. வல்லுனர்

மே,04,2013. இந்தியாவில் பாலியல் வன்செயலையும், மற்றும் பிற பாலியல் சார்ந்த குற்றங்களையும் தடுப்பதற்கும், அவை குறித்து வழக்குப் பதிவு செய்வதற்குமென அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள், அக்குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதுமானவைகளாக  இல்லை என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் குறை கூறியுள்ளார்.
இந்திய சமுதாயத்தில் காணப்படும் திட்டமிட்ட பாலியல் சமத்துவமற்றதன்மையை அகற்றுவதற்கு இச்சட்டங்கள் உதவவில்லை என்று, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஐ.நா. சிறப்புத் தொடர்பாளர் Rashida Manjoo கூறினார்.
இந்தியாவில் பத்து நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பியுள்ள Manjoo, பாலியல் வன்கொடுமைக்கு எதிரானச் சட்டங்களில் மாற்றம் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது எனினும், வர்மா குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை முழுவதுமாக இச்சட்டங்கள் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
வீடுகளில் வன்முறை, சாதி அடிப்படையில் பாகுபாடு, வரதட்சணை தொடர்புடைய மரணங்கள், பாலியல் பலாத்காரம், மாந்திரீகம் தொடர்புடைய செயல்கள், பாலியல் வன்முறையோடு தொடர்புடைய சண்டைகள், கட்டாயத் திருமணங்கள் உட்பட பல வகைகளில் இந்தியாவில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக வன்முறைகள் இடம்பெறுகின்றன என்று ஐ.நா.கூறியுள்ளது.

ஆதாரம் : UN                             

8. ஆப்கான் எல்லைக்கு அருகில் 13 ஆயிரம் பாகிஸ்தான் குடும்பங்கள்  புலம்பெயரக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை

மே,04,2013. ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள வட பாகிஸ்தானில் ஆயுதம் ஏந்திய புரட்சிக்குழுக்களுக்கு இடையே மோதல்களும், அரசின் இராணுவ அடக்குமுறைகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், மக்கள் புலம்பெயர்வது அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நா.வின் அவசரகால இடர்துடைப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
வட பாகிஸ்தானின் Tirah பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதத்தின் பாதியிலிருந்து ஏறக்குறைய 13 ஆயிரம் குடும்பங்களின் 76 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பேச்சாளர் Jens Laerke கூறினார்.
சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியிலிருந்து விரைவில் இன்னும் அதிகம் மக்கள் வெளியேறக்கூடும் எனவும், இதனால் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை எட்டக்கூடும் எனவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பழங்குடி இனத்தவர் வாழும் Tirah பள்ளத்தாக்கில் புரட்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

ஆதாரம் : UN                          

No comments:

Post a Comment